Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர் - முருக சிவகுமார்



லை இலக்கியவாதிகளிடையேயும் புதிய தலைமுறை இளைஞர்களிடையையேயும் இன்று ஆதிக்கம் செலுத்தி வரும் கலை, குறும்படமாகும். குறைவான செலவில் ஒரு குறும்படத்தை எடுத்துவிடக்கூடிய வாய்ப்பு கூடியிருப்பதும் அதற்கொரு காரணமாகும். எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் தூய அழகியல் சார்ந்தும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்தும் பேசும் இரு போக்குகள் காணப்படுவது போல் குறும்படத்துறையிலும் இவ்விரு போக்குகள் நிலவுகின்றன. பெரும்பாலும் அழகியல் சார்ந்தவற்றைக் குறும்படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணப்படங்களும் பேசுகின்றன. உண்மையை உண்மையாக வெளிப்படுத்த இவ்வடிவம் கைக்கொடுக்கிறது.

'ஒரு நதியின் மரணம்' எனும் ஆவணப்படத்தின் மூலம் தாமிரபரணி படுகொலையை வெளியுலகிற்குக் கொண்டுவந்து ஆவணப் படத்தின் வலிமையை தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் ஆர்.ஆர்.சீனிவாசன். அவ்வரிசையில் தமிழில் ஒரு சில முக்கியமான ஆவணப்படங்கள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. அப்படி ஒரு ஆவணப்படத்தின் மூலம் கவனம் பெற்றிருப்பவர் முருகசிவகுமார். அந்த ஆவணப்படம் - 'விடுதீ '.

கிராமப்புறங்களிலிலுந்து வந்து சென்னையில் அரசு ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நரகச் சூழலைச் சித்தரிக்கும் ஆவணப்படம் இது. சில விருதுகளையும் பரவலான வரவேற்பையும் பெற்றது இப்படம்.

'விடுதீ ' ஆவணப்படம்... (நிமிடம்:29 ஆண்டு 2005)

சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நரக நிலையை பேசும் படம் 'விடுதீ' .

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னைக்கும் படிக்க வரும் ஏழ்மையான தலித் மாணவர்கள் பலருக்கு அடைக்கலம் தருபவை இராயபுரம், வில்லிவாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் விடுதிகள். இவ்விடுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி மாணவர்கள் படும் இன்னல்களை அவர்களின் வாயிலாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இத்தகைய விடுதிகளில் கொடுக்கப்படும் உணவுகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. தண்ணீர் கூட சுகாதார மற்றதாய் இருக்கிறது. இதனால் பலருக்கு டைபாய்டு, அல்சர் போன்ற வியாதிகள் வருவதாக விரக்தியுடன் பேட்டியளிக்கின்றனர் மாணவர்கள். பாசி படிந்த கழிவறைகள், கழிவறைக்கு அருகிலேயே மாணவர்களின் அறை, வெட்டவெளிகுளியல், உடல்களை அடைத்து வைத்ததைப் போல் ஒரே அறையில் பலர், ஈக்கள் மொய்க்கும் குப்பைத் தொட்டி, சுத்தம் செய்யப்படாத சுற்றுப்புறம் என 'விடுதீ' யின் காட்சிகள் விரிந்து செல்கின்றன.

இத்தகைய சூழலில் படிப்பது சாத்தியமா எனும் கேள்வியை எழுப்புகிறது இவ்விரணப் படம்.

"சாப்பாட்டில் கை வைக்கும் போது சுண்ணாம்பில் கை வைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார் ஒரு மாணவர்". "சாப்பிடணும்னு தோணும் ஆனா சாப்பிட முடியாது" என்கிறார், விடுதி மாணவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் முருகசிவகுமார், மாணவர்களில் சிலர் நல்ல உணவுக்காக திருமண மண்டபங்களில் சர்வர் வேலை செய்வதையும் இப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. விடுதிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் கெஸ்ட்டாக தங்கும் சூழ்நிலையில் அனைவருக்கும் பரிமாறப்பட்ட பிறகே மீதமுள்ள உணவு இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் கிடைக்காமல் போய் விடுவதை ஒரு மாணவி குறிப்பிடும்போது பார்வையாளர்களை ஒரு வித சோகம் அழுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருடைய நேர்காணல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.யு.ளு., இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜி.செல்வா, இந்தியா டுடே ராதிகா, துடி பாரதி பிரபு ஆகியோரது நேர் காணல்களும் இடம் பெற்றுள்ளன.

"ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இது போதாது, உணவுக்கான முழுத்தொகையும் வழங்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்துதாஸ் காந்தியும், "அரசே தலித்மாணவர்கள் மீது செலுத்தும் வன்முறை இது" என்று பாரதிபிரபுவும், "பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள் நன்றாகப் பரமாரிக்கப் படுகின்றன. ஆனால், தலித் மாணவர் விடுதிகள் மோசமாக இருக்கின்றன அரசே இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது" என்று ராதிகாவும் இப்படத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

"தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி 500 கோடி ரூபாயை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது அதிகாரிகளின் சாதி மனோபாவத்தை காட்டுகிறது. விடுதிகளின் இத்தகைய அவலநிலை மாற, போராட்டம் தான் தீர்வு கொடுக்கும். மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்." என்கிறார் ஜ ப்.செல்வா. "மாணவர்கள் ஒன்றிணைவது எப்போது? இப்பிரச்சினையை உணர்ந்த உங்கள் பங்கு என்ன? போராட்டம் எப்போது?" எனும் கேள்விகளுடன் முடிகிறது 'விடுதீ' .

சக மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் முருகசிவகுமாரின் பணி பாராட்டுக்குரியதாகும்.

இயக்குநர் முருகசிவகுமார் பற்றி ...

தற்போது 26 வயதாகும் முருகசிவகுமார் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முனைவர் ஜார்ஜ் அவர்களிடம் நவீன நாடக வரலாறு எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வரும் இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இனி அவருடன் :

இப்படி ஒரு ஆவணப்படத்தை இயக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?


"விடுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் முதல் காரணம். சென்னை புதுக்கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியப் படித்த போது இராயபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இடம் கிடைக்காமல் விருந்தினராக (கெஸ்ட்) தங்கியிருக்க நேர்ந்தது. ஐந்து பேருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கூடுதலாக பதினைந்து பேர் சேர்ந்து இருபது பேர் தங்கியிருந்தோம். எல்லா அறைகளிலும் இப்படித்தான் மிகுந்த நெருக்கடியுடன் தங்கியிருப்பார்கள். காலையில் டாய்லெட் செல்ல வரிசையில் காத்துகிடக்க வேண்டும். டாய்லெட்டின் உள்ளே இருப்பவனை சீக்கிரம் வரச் சொல்லி வெளியே காத்திருப்பவர்கள் கதவை தட்டுவார்கள். குளிப்பதற்கும் இப்படித்தான் நெருக்கடி. ஐந்து பேருக்கான உணவையே இருபது பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் தட்டு தூக்குகிறவனுக்கு தான் உணவு கிடைக்கும் என்கிற நிலை. சிலருக்கு உணவு கிடைக்காது இரண்டு மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் பல மாணவர்கள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சர்வர் வேலைக்கு செல்வார்கள். உணவுக்கு உணவும் கிடைக்கும் கை செலவுக்கு காசும் கிடைக்கும். இத்தகைய சூழலில் படித்தால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும். அரசு வேலைக்கு மற்ற மாணவர்களுடன் எப்படி போட்டி போட முடியும். இந்தக் கொடுமையை வெளி உலகிற்கு உணர்த்த வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த ஆவணப்படத்தை இயக்கினேன்."

இத்தகைய சூழலிலிருந்து உங்களால் எப்படிப் பணம் செலவு செய்து படம் எடுக்க முடிந்தது?

"சென்னையில் திபீகா என்றொரு நிறுவனம் அதன் குறும்பட விழாக்களிலும் திரையிடல் நிகழ்வுகளிலும் பல குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றி ஜெயச்சந்திரன் எனும் நண்பரின் தூண்டுதலாலும் உதவியாலும் தான் இப்படம் எடுக்க முடிந்தது. கேமரா, எடிட்டிங் பணம் என எல்லாவிதத்திலும் உதவினார். அவரின்றி இப்படம் எடுத்திருக்க இயலாது. நானும் என் சக மாணவர்களும் அனுபவித்த இன்னல்களும் வேதனைகளும் இப்படத்திற்கு உயிர் தந்தது".

ஆவணப் படத்துறை நோக்கி வந்த உங்கள் பாதை குறித்து?

"நான் தருமபுரி மாவட்டத்துக்காரன். திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ.தமிழிலக்கியம் படித்தபோது, வறுமையின் காரணமாக பேராசிரியரும் கவிஞருமான வே.நெடுஞ்செழியன் வீட்டில் தங்கிப் படித்தேன். அவரது வழிகாட்டுதலில்தான் என் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. 'சுட்டுவிரல்' எனும் தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தினார். அதில் வெளியான என் சிறுகதை ஒன்றைப் படித்து விட்டு மிகவும் பாராட்டினார். அவர் நடத்திய நாடகத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் சென்னைக்கு இலக்கியத்திலும் நாடகத்திலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன். இலக்கியக் கூட்டங்களுக்கு அலைந்தேன். பாரதிபிரபுவின் 'கனல்' கலைக் குழவில் சேர்ந்து பல மேடைகளில் 'வர்ணாசிரமம்' நாடகத்தில் நடித்தேன். அதன்பிறகு குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உந்துதலே என்னையும் ஆவணப் படத்திற்கு அழைத்து வந்து சேர்த்தது. எனது இந்தப் பயணத்தில் அக்கறை கொண்டவர்களாக பாரதிபிரபு, அரங்க மல்லிகா, ஞாநி, கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஜெயசந்திரன் ஆகியோரை இனம்கண்டு மனதில் பதித்து வைத்திருக்கிறேன்.

அரசு விடுதியில் இருந்து கொண்டு உங்களால் எப்படி இந்த ஆவணப்படத்தை எடுக்க முடிந்தது?

"பல சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்து தான் இந்த ஆவணப் படத்தை எடுக்க முடிந்தது. பாதிக்கப்படும் மாணவர்களே பேசவும் பேட்டிதரவும் தயங்கினார்கள், பயந்தார்கள். மாணவர்கள், சமையல்காரர்கள், வார்டன் என எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டியிருந்தது. நந்தனம் விடுதியின் வார்டன் கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார், போராடித்தான் திரும்பப் பெற்றேன்".

உங்களைப் பாதித்த குறும்படங்கள், குறும்பட இயக்குநர்கள்?

"ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நரியின் மரணம்' 'Untouchable Country' என்னை மிகவும் பாதித்த படங்கள். சவால்களை எதிர்கொண்டு சமூகப் பிரச்சினைகளை எடுக்கும் ஆர்.ஆர்.சீனிவாசன் எனக்குப் பிடித்தமானவர். அம்ஷன் குமார், பி.லெனின், டி.அருள் எழிலன் ஆகியோரும் பிடிக்கும்.

இன்றைய தமிழ்க் குறும்பட சூழல் குறித்து?

"வணிகத் திரைப் படங்களில் சொல்லப்படாதவற்றை இதில் சொல்ல முடியும். நாடகத்துறையில் சமூக மாற்றத்திற்கான அரங்கை 'மாற்று அரங்கு ' என்பார்கள். அதன் தரை வடிவம் தான் ஆவணப்படம். அத்தகைய வலிமை வாய்ந்த குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான 'விசிட்டிங் கார்டு ' ஆகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் குறும்படங்களில் மக்கள் விரோதக் கருத்துக்களையும் திணிக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பேசும் குறும்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும்."

உங்களின் அடுத்த திட்டம்?

" நிலா முற்றம் எனும் என் கவிதையைக் குறும்படமாக்கவுள்ளேன். விடுதீ க்கு ஜெயச்சந்திரன் உதவியதைப் போல் யாராவது உதவினால் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச விரும்புகிறேன். பொருளாதாரச் சூழல் தான் என்னை அந்நியமாக வைத்துள்ளது."

'விடுதீ' க்குப் பிறகு விடுதிகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டனவா? இப்பிரச்சினைகள் தீர வழி என்ன?

"மிஸோராம் ஆளுநர் ஏ.பத்மனாபன் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை தலைமைச் செயலருக்கும் இந்த ஆவணப்படம் தனியாகத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகு சில விடுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்கள் தாம் இங்கு தங்கிப் படிக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சரியாகப் படிக்க விடாமல் வீட்டுக்கே திருப்பி அனுப்புகின்றன இந்த விடுதிகள். இந்த மோசமான சூழலில் படிப்பதால் தலித் மாணவர்களால் பிற மாணவர்களுடன் வேலை வாய்ப்பில் போட்டி போட முடியவில்லை. திறமையான மாணவர்கள் பலர் இந்த விடுதிகளில் இருக்கிறார்கள். கிராமத்திலிருந்து படிக்க வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் நல்ல விடுதிகளில் தங்கிப் படிக்க அரசு தான் வழிசெய்ய வேண்டும்."

நம்பிக்கையை சுமந்த மனசுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் முருக சிவகுமார்.
nandri : www.andhimazhai.com
- யாழினி முனுசாமி

இயக்குநர் - வ.கௌதமன்

யாழினி முனுசாமி
நன்றி--www.andhimazhai.com

யக்குநர் வ.கௌதமன் 'சினிமாவுக்குப் போன சித்தாளு', 'நீலபத்மனாபனின் எழுத்துச்சித்திரங்கள்', 'பூ', 'மலை', 'ஏரி', 'பனை' ஆகிய குறும்படங்களை இயக்கியிருக்கிறார். வ.கௌதமன் அடிப்படையில் ஒரு திரைப்பட இயக்குநர். 1999ல் "கனவே கலையாதே" எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். “மகிழ்ச்சி ”எனும் திரைப்படத்தையும் தற்போது இயக்கி இருக்கிறார். 'நீலபத்மனாபனின் எழுத்துச்சித்திரங்கள்' எனும் ஆவணப்படத்தை, சாகித்ய அகாதெமிக்காக இயக்கினார். சாகித்ய அகாதெமி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இதுவரை பல குறும்படங்களையும் விவரணப் படங்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றில் நீலபத்மனாபனைப்பற்றி 2004இல் வெளிவந்த இந்த விவரணப் படமே சிறந்த படமாக சாகித்ய அகாதெமிக்காரர்களால் பாரட்டப்படுவதாகப் பெருமிதம் கொள்கிறார் வ.கௌதமன்.

35 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இவர் மக்கள் தொலைக்காட்சிக்காக இயக்கிய பூ, மலை, ஏரி, பனை குறும்படங்கள் பெறும் வரவேற்பைப் பெற்றன.

வ.கௌதமன் இயக்கிய குறும்படங்கள் பற்றி...

'சினிமாவுக்குப் போன சித்தாளு'

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' குறுநாவலை ஒரு அழகான குறும்படமாக்கியிருக்கிறார். நடிகர்களின் மீதான கவர்ச்சி மோகத்தால் சீரழியும் ஒரு குடும்பத்தின் கதை இது. பணத்துக்காகவும் புகழுக்காகவும் நினைக்கும் ரசிகனை அடித்து நொறுக்கும் குறும்படம் இது.

கணவன் பகலில் வாடகை ரிக்ஷா ஓட்டுபவன். இரவில் தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பவர். அவர் மனைவியோ சித்தாள் வேலை செய்பவள். என்றாலும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளை அன்பு கொண்டவர்கள். தன்னைவிட தன் தலைவன் (நடிகன்) மீது மனைவி அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் அவன் நடித்தப் படத்திற்குப் போக அனுமதி மறுக்கிறான் கணவன். கணவனுக்குத் தெரியாமல் தன் கணவனின் முதலாளியுடன் (ரிக்ஷா உரிமையாளன்) சினிமாவுக்குச் செல்கிறாள். அவனோ அவளை மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கெடுத்துவிடுகிறான். தன் மீது பாசம் கொண்ட கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டதால் விபச்சார விடுதியிலேயே தங்கி விடுகிறாள். என்றாலும் எந்த ஆணையும் தன்னிடம் சேர்ப்பதில்லை. கணவன் வீட்டிற்கு அழைத்தும், போக மறுக்கிறாள். பிறகொரு நாள் மன உளைச்சலில் பைத்தியமாகிவிடுகிறாள். வீதியோரத்தில் நான்கு பேர் அவளை வண்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒரு கொடூர சூழலில் கணவன் மீண்டும் அவளை பார்க்க நேரிடுகிறது. கதறுகிறான். அவளோ தன்னை பலாத்காரம் செய்த தன் கணவனின் முதலாளியை பழிவாங்கப் போவதாகவும் தன் அன்பான கணவனுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அரற்றிக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய ரிக்ஷாவிலேயே அவளை கை கால்களைக் கட்டி அழைத்துச் செல்வதுடன் கதை முடிவடைகிறது. பார்வையாளர்களைக் கலங்கச் செய்யும் அற்புதமான படைப்பு இது.

தலைவாசல் விஜய் (கணவன்) ஐஸ்வர்யா (மனைவி) தலுக்கான சங்கர் (முதலாளி), பசிசத்யா நடித்திருக்கும் இக்குறும்படம் தமிழிலக்கியவாதிகளிடம் குறும்பட ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இசை : அரவிந்த், ஒளிப்பதிவு : சிவக்குமார், எடிட்டிங் : பி.லெனின்-வி.டி.விஜயன், வசனம் : த.ஜெயகாந்தன், வ.கௌதமன்.

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக கவிஞர், பச்சியப்பனின் பூ, மலை, ஏரி ஆகிய மூன்று கவிதைகளையும் பாவலர் வையவனின் 'பனை' கவிதைகளையும் அழகிய குறும்படங்களாக்கி மிகுந்த வரவேற்பைப் பெற்றார். வாழ்க்கையில் எப்போதுமே சிரிக்காத பாட்டி, புகைப்படத்தில் மட்டும் எப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லும் குறும்படம் பூ.
ஒரு காலத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கான இடமாக இருந்து பிறகு கல் குவாரி முதலாளிகளால் வெடிவைத்துத் தகர்க்கப்படும் மலையைக் காட்சிப் படுத்தும் குறும்படம் 'மலை', ஏரிகள் வீடுகளாவதை 'ஏரி' குறும்படமாகவும் எடுத்திருக்கிறார். நேர்த்தியாகவும் அதே நேரத்தில் பார்வையாளர்களின் மனதில் குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தி விடுகின்றன இக் குறும்படங்கள்.

'பனை' கவிதையின் மூலம் மட்டும் பாவலர் வையவனுடையது எனினும் கவிதையாக்கம் செய்தவர் பச்சியப்பன். 'பனை'யின் அருமைப் பெருமைகளைப் பட்டியலிடும் குறும்படம் இது.

இனி அவருடன்.....

கே : குறும்படங்கள் குறித்து உங்கள் கருத்து?


குறும்படம் என்பது ஒரு அற்புதமான விசயம். முழுநீளத் திரைப்படங்களை விடத் தாக்கம் உண்டாக்கும். இன்றைய சூழலில் உலக அளவில் முக்கிய இடம் வகிக்கின்றன குறும்படங்கள். இப்போது நிறைய பேர் குறும்படம் எடுக்க வருகிறார்கள். இதற்கென்று பெரிதாகத் திரைப்பட வடிவமோ, பெரிய நடிகர்களோ, தொழில் நுட்ப வல்லுநர்களோ தேவையில்லை. சாதரண வீடியோ கேமராக்களிலும் கூடச் சமூகச் சிந்தனையுள்ள குறும்படங்களையும் விவரணப் படங்களையும் தரமுடியும் என்பதே இதற்குக் காரணம். கூழ் காய்ச்சிக் குடிப்பதைக் கூட ஒரு அழகான குறும்படமாக எடுக்கலாம். மூளையை கசக்கி யோசித்துத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அவை மனதை நெகிழச் செய்வதாக இருக்க வேண்டும்.

கே : குறும்படத்திற்கான கருவை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

வாழ்க்கையைப் பிரதிபலிப்பது தான் கலை. எனது அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன். எந்த 'தியரி'யும் படித்துவிட்டு நான் இதைச் சொல்லவில்லை. நான் உணர்ந்த வாழ்க்கையைத் தான் பச்சியப்பனின் பூ, மலை, ஏரி கவிதைகளில் செய்தேன். பார்வையாளனின் ஏற்பு தான் வெற்றி. பார்வையாளன் தான் வெற்றியை நிர்ணயிப்பவன். வாழ்க்கையிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் இத்தகைய படங்கள் எடுக்கப்பட வேண்டும். தாகூர் சொன்ன ஒரு கருத்து மிக முக்கியமானது. "அற்புதத்தையும் அழகையும் தேடி உலகம் முழுக்க அலைந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. களைத்து வீட்டுக் கூடத்தில் விழுந்தேன். குக்லையில் விழித்த போது, புல் நுனியிலிருந்த பனித்துளியில் கண்டேன்" எனும் தாகூரின் இச்சிந்தனை, படைப்பை நம்மைச் சுற்றித் தேட வேண்டும் என்கிறது. இது தான் எனது கொள்கை.

கே : விவரணப் படங்களுக்குக் கலை நேர்த்தி தேவையா?

விவரணப் படத்திற்கு அழகும் நேர்த்தியும் முக்கியம் தான். ஆனால், கட்டாயமில்லை செல்போனில் எடுத்த சதாமின் மரணதண்டனைக் காட்சி தான் இன்றைக்கு முக்கியமான பதிவாக ,ஆவணமாக இருக்கிறது. சமூக அநியாயங்களை எல்லோரும் இதுபோல் கிடைக்கின்ற கருவிகளைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். தகவல்களை வரிசைப்படுத்தித் தர வேண்டும். தெரிந்த செய்திகளாக இருந்தாலும் எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் அது அடுத்த தலைமுறைக்கான ஆவணம்.

கே : இன்றைய தமிழ்க்குறும்பட விவரணப்பட இயக்குநர்களின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தமிழன் தன் நிலை மறந்து மயக்கத்தில் இருக்கிறான். சூடு, சுரணையற்று மயங்கிக்கிடக்கிறான். ஐம்பதுக்கும் மேற்பட்ட சேனல்கள் இங்குதான் இருக்கின்றன. குடும்பப் பெண்கள் வீட்டிற்கான பொருட்களை ரிமோட்டில் தேடுகிறார்கள். விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்கி கணவனின் பணத்தை அழிக்கிறார்கள். ஆண்கள் லஞ்சம் வாங்க இத்தகை பெண்களின் ஆசை தான் காரணம். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், பெரும் பத்திரிக்கைகள் இந்தச் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சீரழிவுகளையெல்லாம் குறும்பட இயக்குநர்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

கே : பொதுவாகப் படைப்பாளிகள் சமூக உணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்களே?

சமூகப் பிரச்சனைகளைப் பேசாத படைப்பாளிகள், படைப்பாளிகளே அல்ல. அவர்கள் தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம். இவர்களெல்லாம் சோரம் போன படைப்பாளிகள். முழுக்க முழுக்க குறும்படமாக, பிரச்சாரப் படமாக எடுக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு சிறு விசயத்தையாவது செய்ய வேண்டும். சமூகச் சீர்கேட்டின் மீது சிறு கோபத்தையாவது வெளிப்படுத்த வேண்டும்.

"கெட்ட விஷயங்கள் நாட்டில் நடக்கிறது அதனால் படமாக எடுக்கிறேன்" என்பவன், "என் வீட்டில் நடந்தது" என்று சொல்ல வேண்டியதுதானே? ஏன் சமூகத்தின் மீதே பழிபோட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

கே : நீங்கள் திரைப்பட இயக்குநராகவும் இருப்பதால் இக்கேள்வி... இன்றைய தமிழ்த் திரைப்படச் சூழல் பற்றி....?

மைக்கேல் மூர் என்பவர் இயக்கிய ஃபாரன் ஹீட் 9/11 எனும் படம் உலகை உலுக்கியது. இதில் அவன் ஜார்ஜ்புஷ்ஷை அம்பலப்படுத்தியிருக்கிறான். இதற்காக அவனது காலை கூடத் தொட்டுக் கும்பிடலாம். தமிழ்த்திரைப்பட இயக்குநர்களோ இன்னும் ஆம்லெட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கருத்து ரீதியாக மாறுபாடு இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக மணிரத்னம், தரமாக எடுக்கிறார். அடுத்து சேரன், தற்போது இலக்கியம் படிக்கும் இளைஞர்கள் திரைப்படத் துறைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்கால தமிழ் சினிமா உலகத்தரத்திலிருக்கும். உலக அரங்கில் பேசப்படும்.

கே : இளந்தலைமுறை படைப்பாளிகளுக்கு குறும்பட இயக்குநர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது?

படைப்பாளிகளும் தமது பொறுப்பிலிருந்து விலகி தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இதை இளம் படைப்பாளர்கள் தான் மாற்ற வேண்டும். அவர்களும் தவறு செய்தால் பூஜ்யத்தில் தான் வந்து நிற்கும்.

கே : உங்களுக்குப் பிடித்த குறும்பட இயக்குநர்கள்?

நல்ல சிறுகதைகளைக் குறும்படமாக்கிய பாலு மகேந்திரா, "நாக் அவுட்" எனும் சிறந்த படத்தை இயக்கிய எடிட்டர் பி.லெனின், ராமைய்யாவின் "குடிசை" ஆவணப் படத்தை இயக்கிய பாரதிகிருஷ்ணகுமார்.




 
                                        

குறும்பட இயக்குநர்கள் - புதிய தொடர்

தினகரன் ஜெய்....

ழுத்து, ஓவியம், இசை போன்ற நுண் கலைகளைவிடக் காட்சி ஊடகமான குறும்படக் கலை இன்றைய சூழலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் சினிமாவுக்கான நுழைவுச் சீட்டாக இக்கலை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட மறுபுறம் சமூகச் செயல்பாடாகவும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அழகியல் நேர்த்தியுடன் சிலரது சிறுகதைகளும், கவிதைகளும், குறும்படமாக்கப்பட்டுள்ளன.சமூகப்பிரச்சினைகளையும் பலர் விவரணப் படங்களாக்கிச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த வண்ணமிருக்கின்றனர். அத்தகைய இயக்குநர்களைப் பற்றியும் அவர்களின் குறும்பட அனுபவங்கள் பற்றியும் இத்தொடரில் காணலாம் முதல் அறிமுகமாக தினகரன் ஜெய்.

விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்ட வீரத்தமிழர்களான சின்னமருது, பெரியமருது சகோதரர்களைப் பற்றி "மருதிருவர்" எனும் விவரணப்படத்தையும், குற்றப் பழங்குடிகள் சட்டம் பற்றி "ரேகை" எனும் விவரணப்படத்தையும் எடுத்து சமூகச் சிந்தனையாளர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறார் தினகரன் ஜெய். இவர் இயக்கிய "ரேகை" விவரணப் படம் அண்மையில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வரவேற்பு இவரை மக்கள் தொலைக்காட்சிக்காக 52வாரங்கள் 52விவரணப்படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்திருக்கிறது. அனைத்தும் தென்னிந்திய வரலாறு தொடர்பானவை என்பதுதான் நமக்குச் சிறப்புச் செய்தி.

தினகரன் ஜெய் இயக்கிய குறும்படங்களைப் பற்றி...

இவர் இயக்கிய இரண்டு விவரணப்படங்களுடன் தென்னிந்திய குறிப்பாக தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவை. இவர் இயக்கிய முதல் விவரணப்படம் "மருதிருவர்" மருது சகோதர்களான சின்னமருது, பெரியமருது ஆகியோரின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அவர்கள் கோயில்களுக்கு ஆற்றிய திருப்பணியையும் ஓவியங்களின் மூலமாகவும் ஆவணங்களின் ஊடாகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மருதிருவரின் வீரத்தையும் திருப்பணிகளையும் நினைவுகூறவும் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் இப்படம் பயன்படக்கூடும். அடுத்து இவர் இயக்கிய "ரேகை" வீரஞ்செறிந்த இந்திய மக்களை ஒடுக்க பிரிட்டீஷ் அரசு கொண்டுவந்த ரேகை சட்டத்தின் கொடூரத்தைப் பேசுகிறது இப்படம். "ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் ஆணவத்தையும் அதனால் சிதைந்த இந்திய மக்கள் அவலத்தையும் இப்படம் முன் வைக்கிறது எனும் அறிவிப்புடன் தொடங்கும் இவ்விவரணப்படம் நம்மை நம் வீரஞ்செறிந்த வரலாற்று காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. சாதியும் மதமும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தன. எனவே ஏகாதிபத்தியம் அவர்களை ஒடுக்க முடிவு செய்தது. பிரான்சில் பிரெஞ்சுபரட்சி நடந்த போது பழங்குடியினரின் பங்களிப்பு அதில் அதிகமிருந்தது. எனவே அவர்களை ஒடுக்க முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைப்போலவே இந்தியப் பழங்குடி இனத்தவரை ஒடுக்க குற்றப் பழங்குடிகள் சட்டத்தைக் கொண்டுவந்து கொடுமை படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டம் (1911) பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் எதிரொலித்தது. நான்கு முறை இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தை கையகப்படுத்த இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பஞ்சாப், மும்பை, கல்கத்தா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது. கள்ளர் மறவர் அகமுடையவர் என 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். பிறமலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் அதிகமாக கொடுமைபடுத்தப்பட்டனர். இதில் 15,000 பேர் கண்காணிக்கப்பட்டு 33 பேர் குற்றவாளிகளாக தண்டனை பெற்றனர் என இச்சட்டத்தின் கொடூரத்தை உணர்த்துகிறது இப்படம்.

1920 மார்ச் 20இல் பெருங்காமநல்லூர் கள்ளர் இன பெரியவர்கள் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தை தங்கள் மீது நடைமுறைபடுத்தக்கூடாது என முறையிட்டனர். ஆனால், போல்சோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்க தூண்டி விட்டது. பிறமலை கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும். போலீசுக்கு பிடிக்காதவர்களும் இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1920 மார்ச் கடைசியில் ரேகை போலீஸ் உத்தரவிட்டது.

1920 ஏப்ரல் 3இல் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெருங்காமநல்லூர் கலவரம் செய்தனர். இதை அறிந்த இங்கிலாந்து அரசு மக்களை கொடுமையாக ஒடுக்க முடிவு செய்தது. கிளர்ச்சி செய்த மக்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர். இதைக் கண்டித்து படையாச்சி, ஆதிதிராவிடர் என பல சாதியினரும் போராட்டம் செய்தனர். 'கட்டைவிரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப் போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே!' என முத்துராமலிங்கத் தேவர் போராட்டம் செய்தார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை ஒழிப்பு சட்ட போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு இரத்தம் சிந்தி பெறப்பட்ட சுதந்திரத்தை சாதியும் மதமும் சேர்ந்து இன்னொரு அடிமைதனத்துக்குள் சிறைப்படுத்தப் போகிறது என்பதை மறுக்கமுடியாது என எச்சரிக்கை செய்கிறது இப்படம். குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை வரலாற்றில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சமூகப் பொறுப்புடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


இனி அவருடன்.....

கே : நீங்கள் குறும்படதுறைக்கு வரக்காரணியாக இருந்தது எது?

அடிப்படையில் நானொரு சிறுகதை எழுத்தாளன். 1997-இல் தாமரை இதழில் எனது முதல் சிறுகதையான 'அந்நியன்' வெளிவந்தது. சொல்புதிது, பன்முகம் போன்ற இதழ்களிலும் எனது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. புதியகாற்று, நிழல் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். புதியகாற்று இதழில் சுதந்திர பத்திரிகையாளனாக ( கசநந டயன்உநச) பணியாற்றியபோது 'தேசியத்தின் தற்கொலை' எனும் தலைப்பில் கட்டுரை எழுதும் தயாரிப்பிலிருந்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. தமிழக விடுதலை வரலாற்றுக்கும் இந்திய விடுதலை வரலாற்றுக்கும் முரண்பாடுகள் நிறைய உள்ளன. 1857இல் நடந்த சிப்பாய் புரட்சியைத் தான் முதல் சுதந்திரப் போராக இந்திய தேசிய கல்வி இலாகா பாடப்புத்தகங்களில் கற்பித்து வருகிறது. அதற்கு முன்பாக 1801இல் திப்புசுல்தான், தீரன்சின்னமலை, மருது சகோதரர்கள் போன்றோர் வெள்ளையரை எதிர்த்து நடத்திய புரட்சியை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் மறைத்து வருகின்றனர். புலித்தேவன், சுந்தரலிங்கம், வீரபாண்டியகட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றோரது போராட்டங்களும் தியாகங்களும் தேசிய அரங்கில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதை பொதுமக்களிடம் கொண்டு செல்லவே தென்னிந்திய விடுதலைப் போராட்டங்களை மையப்படுத்தி விவரணப்படங்களை இயக்கத் தொடங்கினேன். ஜெகமதி கல்வி அறக்கட்டளை சார்பாக தீனதயாள பாண்டியன் தென்னிந்திய வரலாற்றை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் எனபதற்காக நான் இயக்கிய 'மருதிருவர்', 'ரேகை' என்கிற இரண்டு படங்களைத் தயாரித்தார். இப்படியாகத் தான் நான் குறும்படத்துறைக்கு வந்தேன்.

கே : குறும்படம் இயக்குவதற்கான நோக்கம்?

வரலாறுகள் ஒரு தேசத்திற்கு மிக முக்கியம். அவை விருப்பு வெறுப்பின்றி சாதி மத இன வேறுபாடுகள் இல்லாமல் முறையாகவும் சரியாகவும் போதிக்கப்பட வேண்டும் என்பதால் நான் குறும்படங்களை இயக்கி அவற்றைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறேன். இதனூடாக சிறுபகுதியினரிடமாவது விழிப்புணர்வை உண்டாக்க முடியும் என்று நம்புகிறேன்.

கே : எதிர்கால திட்டம் என்ன?

இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். பொருளாதார ரீதியாக அச்சமிருக்கு. போதிய உதவிகள் கிடைத்தால் உலக அளவிலான படமாக அதை எடுப்பேன். இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் அதில் வரும். ஆனால், விடுதலைப்புலிகள் பற்றிய விவாதம் அதில் இடம் பெறாது. அதே நேரத்தில் தமிழ்மக்கள் புறக்கணிக்கப்பட்டது பற்றிய வரலாறு அதில் முக்கிய பங்கு வகிக்கும்.

கே : இன்றைய தமிழ்க் குறும்பட /ஆவணப்படச் சூழல் குறித்து உங்கள் கருத்து?

ஆவணப்படங்கள் தமிழில் நிறைய வரவேண்டும். ஆரோக்கியமான பார்வையாளர்களை குறும்பட இயக்குனர்கள் உருவாக்க வேண்டும். இளைஞர்களின் பங்களிப்பு இத்துறைக்கு மிகுதியாகத்தேவை.

கே : சினிமாவில் நுழைவதற்காக 'விசிட்டிங்கார்டாக' குறும்படங்கள் பயன்படுத்துவது குறித்து?

தமிழக சூழலில் சினிமாவில் நுழைவதற்கான ஒரு விசிடிங்கார்டாக தான் குறும்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். பார்வையாளர்களும் குறைவு. சீரியஸான விஷயத்தையும் பாமர மக்களுக்கும் புரியும்படியாக எடுக்க வேண்டும். குறும்படத்திற்கான சந்தையையும் உருவாக்க வேண்டும். ஐந்து, பத்து பேர்தான் தற்போது குறும்பட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக இயங்கக்கூடிய இன்னும் நிறைய பேர் இத்துறைக்கு வரவேண்டும்.

கே : குறும்படங்களாலும் ஆவணப்படங்களாலும் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

குறும்பட மற்றும் ஆவணப்படங்களின் மூலமாக இந்தச் சமூகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்க முடியும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் தான் நானும் இத்துறைக்கு வந்திருக்கிறேன். ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்,

என்று கூறும் தினகரன் ஜெய் அடுத்த விவரணப்படங்கள் எடுப்பதற்கான முனைப்பில் தீவிரமாக இருக்கிறார்.
nandri:  www.andhimazhai.com
- யாழினி முனுசாமி  



 

Tuesday, May 31, 2011

பெரியாருக்கு வாய்த்திருக்கிறது

அ.பெரியாரின் “தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர்மாற்றமும்” நூல் மதிப்புரை
சமூகத்தின் ஒவ்வோர் அசைவிற்குப் பின்னாலும் வரலாறு களும் போராட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அசைவுகளின் பின்னால் போய்ப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்கள் பலருக்கு இது வாய்க்கவில்லை. 25 நூற்றாண்டுகளாக இலக்கண இலக்கியங்களில் காட்டுகிற அக்கறையைத் தமிழர்கள் வரலாற்றில் காட்டுவதில்லை. அண்மைக்காலத்து அசைவுகளுக்கும் இதே கதிதான். அண்மைப் படைப்பாளிகளின் படைப்புகளை அறியும் நமக்கு அவர்கள் வரலாறு புதிராகவே தெரிகிறது. பாரதி, பாரதிதாசன் ஆகியோர் வாழ்க்கை வரலாறுகளில் காணப்படும் வேறுபட்ட, முரண்பட்ட செய்திகள் இதற்குச் சாந்தியைப் பாரதி சந்தித்த நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளில் முரண்பட்ட குறிப்புகள் உண்டு. பாரதிதாசன் பிறந்த நாள் குறித்தே குழப்பம் உண்டு. இதுதான் நம் நிலை. ஆனந்தரங்கம் பிள்ளையையும் உ.வே.சா. அவர்களையும் வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவர்களின் பதிவு ஆர்வத்திற்குப் பாராட்டலாம்.

தமிழ்நாடு மொழி வாரியாகத் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட போது அதன் எல்லைகள் குறித்து எழுந்த சிக்கல்களையும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுவதில் எழுந்த சிக்கல்களையும் பேராசிரியர் பெரியார் இந்நூலில் ஆவணப் படுத்தியிருக்கிறார். குறிப்பாக, இச்சிக்கல்கள் குறித்துச் சட்டமன்றத்தில் நிகழ்ந்த உரைப்போர்களைக் கொண்டு - அவற்றிடையே காணும் இடைவெளிகளைக் கொண்டு - இதன் பின்புலத்தில் செயல்பட்ட மொழியினவுணர்வு அக்கறை, அக்கறை இன்மைகளைக் கொண்டு தமிழ்த் தேசிய உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார்.

தமிழினம் மிகத் தொன்மையானது என்பதும் தமிழ்மொழி மூத்தது என்பதும் தமிழ் வழங்கிய தமிழகப் பரப்பு பரந்தது என்பதும் வெறும் தகவல்கள் மாத்திரம் அல்ல இனத்துக்கும் மொழிக்கும் நிகழ்கால எதிர்காலத் தமிழ் வாழ்விற்கும் வலுச் சேர்க்கிற ஒரு வரலாறு. 3.5. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா (PANGEA) என்ற பெயரில் ஒன்றாக இருந்த நிலபரப்பு 2.5 பில்லியன் ஆண்டளவில் லாரேசியா (LARESIA), கோண்ட்வானா (GONDWANA) என்ற பெயர் தென்னிந்தியாவில் வாழ்ந்த கோண்ட் இனத்தின் பெயரால் உருவானது என்பது நம் கவனத்திற்குரியது. தமிழகத்தின் பழமையை உணருவதற்கு இப்பெயரே போதுமானது எனலாம்.

கி.மு. 70,000 முதல் 50,000 வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் ஆயுதங்கள் தமிழகப் பகுதிகளில் கிடைத்துள்ளன. தொல்லுயிர் எச்சங்களும் மண்டை ஒடுகளும் தமிழர்களின் தொன்மை இருப்பை உறுதிப்படுத்துகின்றன. கடல் தாழ்ந்திருந்த காரணத்தால் இலங்கை தமிழகத்துடன் குறுகிய நிலப்பரப்பு வழியே தொடர்பு உடையதாக இருந்தது. தமிழகத்தின் ஆதிக்குடிகளே இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு. அதன் ஆதிக்குடிகளான வேட்டுவர்கள் முருகனை வணங்கியவர்கள். தமிழ் நிலப்பரப்பு மூன்று கடல்கோள்களால் இலங்கையிடமிருந்து பிரிக்கப்பட்டு பரப்பு சுருங்கியது.

இலங்கை தமிழருக்குரிய நிலப்பகுதி என்பதைப் பாரதிதாசன் அழுத்தம் திருத்தமாக கவிதையில் குறிப்பிடுகிறார்.

“முந்தாநாள் தோன்றிய சிங்கள மூடர்
செந்தமி ழர்தம் சிறிய திட்டைத்
தமதென்று சொல்லித் தலைதுள்ளுகின்றனர்
குமரி நாட்டின் குளிர்தமிழ் நாட்டின்
சிறிய திட்டே அந்தத் திட்டெனக்
கவிஞர் எடுத்துக் காட்ட வேண்டும்”
என்பது அவர் புலப்படுத்தும் தமிழுணர்வின் அடையாளம்.

தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தற்போதைய கேரளாவையும் உள்ளடக்கிய பகுதி தமிழகமாக இருந்தது. தொல்காப்பியப் பாயிரம் இதைச் சுட்டுகிறது. நன்னூல் காலத்தில் மேற்கே குடகுநாடு உருவாகித் தமிழக எல்லை சுருங்கியதை அதன் பாயிரம் உணர்த்துகிறது.

தமிழ்மொழி 2500 ஆண்டுகளுக்கு முன்பே வரிவடிவம் பெற்ற இலக்கிய மொழியாக இருந்திருக்கிறது. சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழ்ப் பிராமி வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது என்பதற்குச் செம்பியன் கண்டியூரில் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட கைக்கோடரியில் காணப்படும் எழுத்து சான்றாக உள்ளது. பானை ஒடுகளில் காணும் எழுத்துகளும் இதையே உணர்த்து கின்றன. அசோகர் காலத்திற்கு முந்திய கல்வெட்டுகள் தமிழ்கத்தில் காணப்படுவதும் வரிவடிவத் தொன்மைப் பயன்பாட்டை உணர்த்து கின்றன. இவற்றின் வழியே தமிழ், இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் சாராதது என்பதும் திராவிட மொழிக்குடும்பம் சார்ந்தது என்பதும் உறுதிப்பட்டிருக்கிறது.

இத்தகைய தொன்மைமிக்க இன்த்தின் - மொழியின் வாரிசுகளான நாம் சுருங்கிய போயிருப்பது வேதனைக்குரியது. தமிழகத்தின் எல்லை சுருங்கவும் மொழியின் மேன்மை மங்கவும் நாமே காரணமாகிறோம். கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் தமிழின் உதரத்தில் உதித்தவை என்பதை அம்மொழிகளைப் பேசுபவர்கள் மறுத்துப் பொய் வரலாறுகளை எழுதுகிறார்கள். நாம் இதபற்றி அக்கறையில்லாமல் இருக்கிறோம். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டு தனக்கேயுரிய இலக்கியங்களைக் கொண்ட மொழி செம்மொழி என்பதை அடிப்படையில் தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்டது. 1000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு இணையான பழமை கொண்டன வெனப் பொய்யுரைத்துச் செம்மொழித் தகுதி கேட்டுப் பெறுவதை மறுக்காமல் அக்கறையின்றி இருக்கிறோம். கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்கள் பகுதியில் உருவாகி தமிழகத்தில் வருகிற ஆறுகளைத் தடுத்து உரிமை கொண்டாடுகிறார்கள். இது பற்றியும் நமக்கு எந்தச் சுரணையும் இல்லை.

இந்தச் சுரணையின்மை தமிழ்நாட்டு எல்லைகளைக் காப்பதிலும் தமிழ்நாடு எனப் பெயர் வைப்பதிலும் எப்படிச் செயல்பட்டது என்பதைப் பெரியாரின் இந்த நூல் உணர்த்துகிறது. சென்னை, திருப்பதி, திருத்தணி, சித்தூர்ப் பகுதிகள் என இருந்த தமிழ் எல்லைப் பகுதிகளை ஆந்திரர்கள் விழுங்க முயன்று ஒரளவு வெற்றி பெற்றதும், தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை ஆகியவற்றை மலையாளிகள் விழுங்க முயன்று வெற்றி பெற்றதும் இந்நூலில் பதிவு பெற்றிருக்கின்றன. மொழிவாரி மாநிலப் பிரிவினை நியாயமாக அமைய வேண்டுமெனப் போராடிய தமிழர்கள் சிலரை, நாட்டின் ஒருமைப்பாடு தேசியம் என்ற பெயரால், தேசிய உணர்ச்சியைக் கொலை செய்பவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் முத்திரை குத்திய இனப்பற்றின்மையை இந்நூல் வெளிப்படுத்தியிருக்கிறது.

1959 - ஆம் ஆண்டில் பாரதிதாசன் எழுதிய கவிதை தமிழ்த்தாயின் கூற்றாக இதனைப் பதிவு செய்கிறது.

“தமிழ்நாட்டைச் சென்னை என்று சாற்றி எவர்க்கும்
அமையப் பொதுமகள் போல் ஆக்கினார் என்மகனே”

என்று எழுதினார் பாரதிதாசன்.

ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்று தமிழகம் அழைக்கப் பட்ட நிலையில் ஆந்திரம், கன்னடம், கேரளம் என்று அண்டை மாநிலங்கள் பெயர் சூடிக் கொண்ட நிகழ்வுகூட நம்மவர்க்குச் சுரணை தரவில்லை என்பது தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குக் காட்டிய தொடர்ந்த எதிர்ப்பின் வழியே வெளிப்படுவதை இந்நூல் புலப்படுத்தியிருக்கிறது. தமிழில் சென்னை மாநிலம் என்றும் என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் வழங்கலாம் என்பதைத் தாண்டி சிந்திக்க அன்றைய ஆளும் கட்சியான பேராயக் கட்சியால் இயலவில்லை. கட்சியின் தேசியத்தன்மை மாசு படுமென்று கவலைப்பட்டார்களே ஒழியத் தமிழ் மாசுபடுவது பற்றக் கவலைப்படவில்லை.

பாரதிதாசன் கவிதையில் தமிழகப் பரப்பு குறித்த பதிவு நம் ஆழ்ந்த உணர்வுக்கும் கவனத்திற்கும் உரியது. மலையாளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய பகுதிகள் தமிழ்த்தாயின் உடற்பகுதிகள் உடற்பகுதிகள் என்றும் அவற்றை வெட்டுவது தாயின் உடலை வெட்டுவது போன்ற தென்றும் வருந்தியிருக்கிறார்.

“மலையாளம் என் உடம்பே மற்றதனை வெட்டிக்
கொலைகாரர் என்பகையாயக் கொண்டுவந்தார் என்மகனே
பலியானார் ஆந்திரரும் தில்லிப் பகைக்கே
எலியானார் என்பகைவர் ஆனாரோ என்மகனே
என் அடங்கற் பொன்னுடலே என்னை இழப்பதுண்டோ
கன்டைத்தைப் புய்த்த கதையறிவாய் என்மகனே”
என்பது நம் பதிவு கொள்ளப்பட வேண்டியது.

கட்சித் தன்னலத்திற்கு மொழியின மேன்மை பலியிடப் படுவது என்பது தொடர்ந்து நிகழ்ந்ததையே இந்தித் திணிப்பும் காட்டுகிறது.

தமிழினத்தைத் தாழ்த்துவதும், தமிழ்மொழியைக் கைவிடுவதுமே தேசிய நீரோட்டம் என்ற கருத்து பேராயக் கட்சிக்கு மையச் செயல்பாடாக இருப்பதைப் பெரியாரின் இந்நூல் உணர்த்து கிறது. 1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போர் ஏற்படுத்திய அரசியல் மாற்றத்திற்குப் பேராயக் கடசியின் தொடர்ந்த அக்கறையின்மையே காரணம் என்பதும் இந்நூலில் உணர்த்தப்பட்டிருக்கிறது. இன்றும்கூடத் தமிழீழ விடுதலையில் பேராயக் கட்சி காட்டுகிற தன்னலப் போக்கு இனத்தை அடகு வைப்பதாகவே இருக்கிறது. நதிகனை இழந்ததற்கும் நிலப்பகுதிகளை இழந்ததற்கும் நேற்று வந்த மொழிகளும் தமிழுக்கிணையாக்கப்பட்டுத் தமிழ்மொழி தாழ்வதற்கும் இந்த அக்கறையின்மையே அடிப்படை. இனி வரப்போகிற மொழியின இழப்புகளுக்கும் இந்தப் போக்கே காரணமாக இருக்கும்.

தமிழக எல்லைக்கும் மொழிக்கும் இனத்திற்கும் நெருக்கடிகள் வருகின்ற கட்டங்களில் எதிர்வினைகைள் இல்லாமலில்லை. தமிழகம் பிற இனத்தாரிடம் அடிமைப்பட்டிருந்த ஒரு காலக்கட்டத்தில்தான் சிலப்பதிகாரம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆழ்ந்து பார்ப்பவர்களுக்குப் புலப்படும். கண்ணகி கதை என்பது இளங்கோ அடிகளுக்கு ஒரு சரடுதான். அவர் தொகுத்துக் கொடுப்பது தமிழ்த் தேசிய உணர்வு. முந்நாடு, மூவேந்தர், முத்தமிழ் என்றெல்லாம் கூறுவதும் தமிழ்ப் பண்பாடுகளையும் கலைகளையும் மரபுகளையும் ஆவணப்படுத்துவதும் தமிழகத்தை ஒரே பரப்பாகப் பார்ப்பதும் தமிழ்ப்படை வடவருக்கு எதிராகத் திரள்வதாகச் சொல்வதும் இந்த உணர்வின் காரணமாகத்தான். தமிழருக்கே உரிய அக மரபுகளைப் பேணுவதும் தமிழரின் புற மரபுகளைப் பேணுவதும் தமிழ் வீரத்தை உயர்த்துவதும் இந்த உணர்வின் காரணமாகத்தான். அவர் காலத்து மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் பெயர் சீத்தலைச்சாத்தனார் என்று வெளிப்பட்டிருக்க, இளங்கே அடிகளின் இயற்பெயர் மறைக்கப்பட்டதற்குப் பகைச் சூழலும் அவரால் சொல்லப்பட்ட தமிழ்த் தேசியமும் காரணமாக இருக்கலாம். இந்தக் கட்டத்தை அடுத்து எழுந்த முத்தொள்ளாயிரத்திலும் இந்திலையையே காணகிறோம். பகையரசர் போற்றப்பட்ட காலத்தில், தமிழருக்கும் மூவேந்தரை நினைவூட்டுவதாக நூல் அமைந்திருக்கிறது. முத்தொள்ளாயிரத்தின் பல பகுதிகள் மறைந்ததற்கும் ஆசிரியர் பெயரே தெரியாமற் போனதற்கும் இத்தேசிய உணர்வே காரணமாக இருக்கலாம். இதே கட்டத்தில் படைக்கப்பட்ட முப்பேட்டுச் செய்யுள் என்ற நூலும் மூவேந்தரைப் போற்றுவதாக அமைந்தது. இதன் சில பாடல்கள் தவிர ஏனையவை மறைந்து போனதும் அன்றைய வேற்றுச் சூழலை வலியறுத்துவதாக உள்ளது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரின் இன உணர்வு குறித்து இங்குக் குதிப்பிடாமல் விடமுடியாது. அடியார்க்கு நல்லார் தமிழக எல்லைகள் குறித்து எழுதுவதும் தமிழக இலக்கண மரபுகளைப் போற்றுவதும் வடமொழி சாராத தனித்த தன்மை உடையது முத்தமிழ் என்று தமிழைப் போற்றுவதும் அவருடைய இன மொழிப் பற்றுக்குச் சான்றுகள். புராணங்களும் வடமொழிக் கதைகளும் மலிந்திருந்த காலக்கட்டத்தில் உரை எழுதிய அவர் இராமாயணம், பாரதம் போன்ற வடமொழிக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுத் தராமல் விடுவதும் குறள் போன்ற நூல்களையே காட்டுவதும் அலரது பற்றை உணர்த்துவன. தமிழ்நாடு அன்று பல அரசர்களின் கீழ் நாடுகளாகப் பிரிந்திருந்தாலும், அடியார்க்கு நல்லார் தமிழ்ப்பூமி என்றே ஒன்றாகத் தமிழ்நாட்டைக் குறிய பிடுவது நம் கவனத்திற்குரியது. ஜரோப்பியர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ்விடு தூதுவும் தமிழின் மேன்மையை உணர்த்த எழுந்த்தே. இதன் ஆசிரியரின் பெயரும் தெரியாமற் போனதற்கு தமிழ்த் தேசிய உணர்வே காரணமெனலாம் இத்தகைய படைப்பாளர்களின் தமிழ்த் தேசிய முயற்சிகள் வேற்றினத்தார் ஆண்ட நிலையில் உருவானவை.

தமிழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலக்கட்டத்திலேயே மொழியின உணர்வுகளுக்கு எதிராகத் தோன்றிய செயல் அவலத்தைச் சொல்வது பெரியாரின் இந்நூல். முந்தைய தமிழ்த் தேசியப் படைப்பாளிகளின் வரிசையில் ஆய்வாளர் பெரியாரையும் சேர்த்துக் கொள்ளலாம். மாணவப் பருவத்தலிருந்தே எப்பொழுதும் மொழியினப் பற்றோடும் பகுத்தறிவோடும் இயங்கும் அ. பெரியார் தமிழகச் சட்டமன்றத்தில் நிகழ்ந்த கருத்துப் போரைக் கொண்டு தமிழக எல்லை, தமிழ்நாடு பொயர் மாற்றம் ஆகியவற்றில் செயல்பட்ட எதிர் அரசியலை எடுத்துக் காட்டியுள்ளார். சட்டமன்றப் பதிவேட்டுப் பக்கங்களில் தோய்ந்தும் வரலாற்றில் வெளிப்படாமல் இருக்கிற தமிழ்த் மேசிய உணர்வுகளுக்கு எதிரான தேசிய உணர்வின் முரண்பாட்டைக் காட்டியிருக்கிறார்.

காலந்தோறும் இத்தகைய கருத்து வரவுகளினால்தான் தமிழ் இனத்தின் மேன்மைகள் நிலைநாட்டப்படுகின்றன. மொழி உணர்விலும், இன உணர்விலும், பெரியார், பெரியார் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. தமிழர்கள் பலருக்கு வாய்க்காத, அமைவு களைத் தாண்டிப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் பெரியாருக்கு வாய்த்திருக்கிறது.
nandri: www.thadagam.com

Monday, May 30, 2011

நூல் அறிமுகம் - தி. பரமேசுவரியின் ஓசை புதையும் வெளி

கவிஞர் தி.பரமேஸ்வரியின் இரண்டாவது கவிதை நூல் இது.
 முந்தைய தொகுப்பைவிட மொழி நடையும் அகம் சார்ந்த கவிதைகளும் 
பிரமிப்பை ஏற்படுத்துகிறது .பிறகு விரிவாக எழுதுகிறேன் . இப்போதைக்கு மூன்று கவிதைகளைப்  படிக்கத் தருகிறேன்...

குரலெனும் புயல் 

ஓசை காட்டி 
அழைக்கிறது மழை 
ஓடிப் பிடிக்க யத்தனிக்கையில்
எங்கேயோ உரத்து ஒலிக்கும் குரல்கள் 
கடும்புயலை நினைவூட்ட 
மனசுக்குள் மழை மறைந்து 
இறுக்கம் பரவுகிறது மெல்ல .
------------------------------------------------------------
துளிகளால் நனையும் பூமி 

அனைத்தையும் விட்டொழித்துத் 
திசைவெளிஎங்கும் பரவுகிறேன் 
மென்காற்றாய் 
மலை முகடுகளில் அலைகிறேன் 
மேகமாய் உருமாறுகிறேன் 
மெல்லக் கரைகிறேன் 
துளிகளால் நனைகிறது பூமி .
-----------------------------------------------------

மனப்பாறையில் சிதறும் பரல்கள் 

மண் மகள் அறியா
வண்ணச்சீரடிப் பாவை 
நிலம் அதிர நடக்கிறாள் 
ஒற்றைச் சிலம்புடன் .
அரண்மனைச் சீற்றப் பயணத்தில் 
மணப்பாறை அடுக்குப் பதிவுகள் 
விட்டுப் பிரிந்ததும் 
நேரவளைக் கலவியதும் 
குலப்பெருமை இழந்ததும் 
செல்வம் தொலைத்ததும் 
நடத்தி நடத்தி மதுரை கொணர்ந்ததும் 
திருட்டுப் பழியால் வுயிர் தொலைத்ததும் 
எண்ணும் பொழுதில் 
கசியும் குருதி 
நெஞ்சின் குமுறல் 
வெடித்தது பரல்களாய் .
விட்டெறிந்த ஒற்றை முலை 
பட்டுத் தெறித்தது பிணத்தில்,
எரிந்தது மதுரையும் ! 
------------------------------------------------------------------------------

 

Wednesday, May 25, 2011

என் கவிதை - மௌனம்

நீ மௌனமாயிருக்கிறாய் 
  என்பதைத் தவிர 
வேறொன்றையும் 
புரிந்து கொள்ள முடியவில்லை 
உன் மௌனத்திலிருந்து .

Tuesday, May 24, 2011

ஆனந்த விகடன் இதழில் (27 -04 -2011) வெளியான என் கவிதை - பாராட்டு விழா



து எதுக்கு 
யார் யார் 
யார் யாருக்கு நடத்தலாம்

சாதனையாளர்க்கோ
சமூகத் தொண்டர்க்கோ 
வீரர்க்கோ என்றில்லை 
யார் யார்க்கு வேண்டுமானாலும்
எதற்கு வேண்டுமானாலும் 
நடத்திக்கொள்ளலாம் 

அதிகம் கொலை செய்தவர்க்கு 
கொலைக்குத் துணை நின்றவர்க்கு 
கொலை செய்யப்பட்டவருக்கு 
பயன் பெற்றதற்கு
பயன் பெறுவதற்கு 
பிரபலமாவதற்கு 
விழா நடத்துவதற்கு 
மனத்தில் இடம் பிடிப்பதற்கு 
சும்மா பாராட்டுவதற்கு 
பாராட்டு விழா நடத்தியதற்கு 
சிலரைப் புறக்கணிப்பதற்கு 

பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை
பிறர் பெயரில் 
நாமேகூட நடத்திக்கொள்ளலாம் 
அல்லது 
பிறரைத் தூண்டி 
நடத்திக்கொள்ளலாம் 

பாராட்டு விழாக்கள் 
பாராட்டுவதற்காக மட்டும் 
நடத்தப்படுவதில்லை !

நன்றி : ஆனந்த விகடன்  ( 27 - 04 - 2011 )












Wednesday, May 11, 2011

என் கவிதைகள் ...நன்றி - www.koodu.com / www.thamizhstudio.com

சதுர பூதம்


யாழினி முனுசாமி  

பெண்களின் ருசி கொண்டலைகிறது
சதுர பூதம்
மனித ராசியின் ஓய்வு நேரத்தை
அபத்தங்களால் நிறைத்த வண்ணம்
நாலாதிசையும் வளர்கிறது
வண்ண வண்ணமாய்
அறையுடை வெண் தோல் பருவச்சிகள்
குதறுகின்றன ஆன்மாவை .
குட்டி யாழ்களும்
இன்னதெனத் தெரியாமலே மீட்டுகின்றன
சதுர பூதம் தரும் விசப்பாக்களை
ஏதுமில்லா குகைகளுக்கு
தேவன் ஒரு நாள் பரிசளித்தான் சதுர பூதங்களை
இனிப் பசியற்றுக் கிடக்கும் மானுடம்
----------------------------------------------------------------------------------------------------------
பொய்
யார் சொல்லியிருக்கக்கூடும்
முதல் பொய்யை ?
ஏவாளிடம் ஆதாம் சொல்லியிருப்பானோ?
தெரிந்திலோம் .
மெக்கானிக் தொழில் கற்க
விட்டு வந்த இரண்டாவது வாரத்தில்
வயிற்றுவலி என வீடு சேர்ந்தது
நினைவிலிருக்கும் முதல் பொய் .
பள்ளி நாட்களில்
விடுப்புகளுக்காக
வராத காய்ச்சலும் தலைவலியும்
வந்ததாய்ச் சொன்னபோது
பொய்கள் வளர்ந்தன.
பனையுச்சியில் ஏறமுடியாமல்
தேளிருப்பதாய்ப் பொய்த்துவிட்டுத்
தரைமீண்டது
நுங்காசைப் பொய்த்துப்போன
சென்னை நண்பனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோழைத்தனத்தின் மறுபெயர் பொய்
எச்சூழலிலும் பொய்ச்சொல்லாதவன்
தூய வீரன்.
என்ன செய்ய ?
இப்போதும்
பொய்யைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது
பேராசிரியரான பிறகும்
அவசர விடுப்புக்கு!
------------------------------------------------------------------------------------------------------
எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்
நாம் நம் வேலையைச் செய்வோம்
மிகக் கவனமாகச் செய்வோம் .
இப்போதைக்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்
ஏதேனும் ஒரு கரம் கிடைத்தால் பற்றிக் கொள்வோம்
கரத்திலிருந்து கரத்திற்கு
கரத்திலிருந்து கரத்திற்கு என மாறிக் கொள்வோம்
கைதூக்கிவிட்ட கிளையே எனினும்
மிதித்து மிதித்து மேல் செல்வோம்
எதனெதன் உதவியையோ பெற்று
இலக்கடைந்து
புகழடைந்து
தனிமனிதனாய்ச் சாதித்து விட்டதாய்
மேடையில் முழங்குவோம்
உதவிகளைப் பெறுகையில்
துண்டு நிலம் இல்லாதவனைப்போல்
பணிவு காட்டுவோம்
பின் பண்ணையார்போல்
நெஞ்சு நிமிர்வோம்
காரியம் சாதிக்க எதால் அந்த ஏமாளிகளை
வீழ்த்தலாமென்று பார்ப்போம்
கொள்கை, இலக்கியம் ,
அரசியல், சாதி...
ஏதேனும் ஒரு கண்ணியில்
சிக்காமலாப் போய்விடுவார்கள்
கிரீடம் கிடைக்கும்வரை காத்திருப்போம்
பின் காலில் இடரும் சருகென அவர்களைக்
கடந்து செல்வோம்
நமக்குத் தேவை
இலட்சியத்தை அடைதல்
அதற்காக எந்த அரிதாரத்தையும்
அவர்கள் நம்பும்படியாகப்
பூசிக்கொள்வோம்
அவர்கள் நம்மை அடையாளம் காணும்போது
இன்னொருவன் கிடைக்காமலாப் போய்விடுவான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கனவுடன் அலைபவள்
முன்பொருமுறை
வெள்ளுடை தரித்த தேவதைகளில்
ஒருத்தியாக இருந்தவள்
பிறகு
இளவரசியின்
நூற்றுக்கணக்கான தோழிகளில்
ஒருத்தியாக மாறினாள்.
அவ்வப்போது அவள்
இப்படி
உருமாறிக் கொண்டிருக்கிறாள்
தேவைகளின் பொருட்டு
அடுக்ககத்தில்
தன் உடுப்புகளையும்
களைந்து கொண்டிருக்கிறாள்
இளவரசியாகும் கனவுடன் .
---------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, May 10, 2011

என் கவிதை - “இல்லை “குறித்தான உரையாடல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

ல்லை குறித்தான உரையாடல்
தொடர்ந்தபடியே இருக்கிறது
இல்லை என்பதை
இல்லை என்றுதானே சொல்லமுடியும்
உமக்கேன் அத்தனைக் கோபமும் எரிச்சலும்?
காணாத ஒன்றை
எப்படி நான் நம்புவது ?

உணரத்தான் முடியும் என்கிறீர்
கரண்ட் என்கிறீர்
காற்று என்கிறீர்

கரண்ட் விஞ்ஞானம்
காற்று இயற்கை என்றால்
எல்லாம் அதுதான் என்கிறீர்

நீ சொல்வதைத் தீண்டினால்
செத்துப்போவோமா?
குறைந்தபட்சம்
' ஷாக்'காவது அடிக்குமா?

காற்று
குளிர்ச்சியை உணர்த்துகிறது
வெப்பத்தை உணர்த்துகிறது
புழுக்கத்தை உணர்த்துகிறது
' இல்லை ' எதை உணர்த்துகிறது?

எல்லாம் மாயை எனில்
அதுவும் மாயைதானே ?
'அது வேறு இது வேறு ' என்கிறீர்

பேரழிவு ஏனென்று கேட்டால்
பாவத்தின் பலன் என்கிறீர்
மடிந்தவரெல்லாம் பாவிகளோ?
பெரும் பாவம் செய்தவர்களெல்லாம்
பெரும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்றால்
அரசியல் பேசுகிறேன் என்கிறீர்

என்னிடம் பேசாதே !
போ ...
அவனிடம் போ .
குறைந்தபட்சம் அவனை எனக்கு
உணர்த்தவாவது செய்யச் சொல்
அதுவரை நான்
சாத்தானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .
- யாழினி முனுசாமி yazhinimunusamy@gmail.com

nandri: www.keetru.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்



Bookmark and Share

Monday, May 9, 2011

முனுசாமிகளும் எழுதுகிறார்கள்....


த்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். கணித ஆசிரியர் வகுப்பு மாணவர்களை இரண்டாகப் பிரித்து வைத்திருந்தார். ‘தேறும் கேஸ்கள்’ , ‘தேறாத கேஸ்கள்’ என்று. என்னையும் என் நண்பர்கள் சிலரையும் தேறாத கேசில் சேர்த்துவிட்டார். அன்று மாலை பற்றி முடித்து வீட்டிற்குப் போகும் போது வழியில் அழுது கொண்டே போனேன். எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பக்கத்து ஊரில் டியூசன் எடுப்பதைக் கேள்விப்பட்டு நானும் என் நண்பர்களும் போய்ச் சேர்ந்தோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சரவணன் எனும் அண்ணன் ஏசுநாதர் ஆலயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஓலைக் குடிசையில் டியூசன் எடுத்தார்.
அவர் தான் முதன் முதலில் எனக்குக் கவிதையை அறிமுகப்படுத்தினார். இரண்டு நோட்டுகள் நிறைய கவிதைகள் எழுதிவைத்திருந்தார். அவரைப் பார்த்து நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். அவரைவிட அதிகமாக எழுதினேன். எல்லாம் ஓசை...... ஓசை...... ஆதிக்கம் கொண்ட கவிதைகள். அவற்றில் ஒன்றுகூடத் தேறவில்லை. கிருத்துவரான அவர் மூலம் ஏசுநாதர் கீர்த்தனைகளும் பைபிளும் அறிமுகமாகின. அதனுடைய கவிதை நயத்துக்காக ஏசுநாதர் பாடல்களை விரும்பிப் பாடுவேன்.
ஏற்கனவே பாட்டி சொன்ன கதைகள் அடித்தளமாக இருந்தன. இயலாமைப் பொழுதுகளில் அம்மா வைத்த ஒப்பாரிப் பாடல்களின் துயரம் என்னை வெகுவாகப் பாதித்துவிடும். இந்தத் தருணங்களையெல்லாம்தான் கவிதைகள் என் நிலத்திலும் சொட்டு சொட்டாக இறங்கிய தருணங்களாக நினைக்கிறேன்.
கல்லூரி சேர்வதற்கு முன்பு ‘போலச் செய்தல்’ கவிதைகளை எழுதிக் குவித்து வைத்திருந்தேன் அவை குப்பை என்று பிறகுதான் தெரிந்தது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குப் புதுக் கவிதைகள் அறிமுகமாயின. கவிஞர் மு. மேத்தாவின் ‘கண்ணீர் பூக்கள்’ தொகுப்பு குறித்து அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் சி. என். குமாரசாமி வகுப்பில் பேசினார். அன்றைய சூழலில் எனக்கு மேத்தாவின் கவிதைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. கவிஞரும் பேராசிரியருமான முனைவர் பா. உதயகுமார், முனைவர் மங்கையர்க்கரசி, பேரா. மா. உத்திராபதி போன்றோர் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். சக மாணவர் கவிஞர். இரத்ன. அமல்ராஜ் நண்பராக அமைந்தார். இருவரும் கவிதைகள் குறித்து சண்டை போட்டுக் கொள்வோம். மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த வேறு துறை மாணவர் ஒருவர் அவரது கவிதை நூலை கல்லூரியின் எதிரில் வெளியிட்டார். அந்த மாணவர் வேறு யாருமில்லை...... ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத். அந்த நூல் வெளியீட்டு விழாவில் த.மு.எ.ச.வைச் சேர்ந்த கவிஞர். சோலை பழனி, இன்குலாபின் ‘மனுசங்கடா நாங்க மனுசங்க’ பாடலைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போதுதான் எனக்கு முதன் முதலாக முற்போக்கு இலக்கியத்தின் கதவு திறந்தது.
பிறகு, மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. தமிழிலக்கியம் படித்தபோது முற்போக்குத் தோழர்களின் அறிமுகம் கிடைத்தது. ‘மாணவர் முன்னோடி’, ‘மக்கள் பண்பாடு’ இதழ்களில் ‘பாரதீயன்’ எனும் புனை பெயரில் ஒரு சில கவிதைகள் எழுதினேன். கவிஞர் பச்சியப்பன், பொன். எழிலரசு, நான் மூவரும் சேர்ந்து ‘உளி’ என்கிற கையெழுத்துப் பிரதியை மு. மேத்தாவின் கையால் வகுப்பறையில் வெளியிட்டோம். ஒரே இதழோடு நின்று போனது. மாநிலக் கல்லூரியில் அறிமுகமாகி ஒன்று சேர்ந்த நண்பர்கள் பச்சியப்பன், கங்காதரன், பொன். எழிலரசு, தி. பரமேஸ்வரி, அமல்ராஜ், கஜேந்திரன், சாரோன் ஆகியோர் இன்றும் என் இலக்கியப் பயணத்தில் துணை நிற்கிறார்கள்.
குமுதம் இதழில் பணியாற்றியபோது குமுதம் இணையதளத்திலும் இதழிலும் கவிதைகள் எழுதினேன் என்றாலும் புத்தகம் போடும் அளவுக்கு அப்போது கவிதைகள் இல்லை. பிறகு, ‘கல்கி’, ‘புதிய பார்வை’ போன்ற வெகுசன இதழ்களிலும் ‘கல்வெட்டு பேசுகிறது’ போன்ற சிற்றிதழ்களிலும் எழுதினேன். சிற்றிதழ், தீவிர இடதுசாரி இதழ், வெகுசன இதழ், இணைய இதழ் எனப் பல தளங்களிலும் எழுதினேன் என்றாலும் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் என்னால் அக்கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர முடிந்தது.
என்னோடு பயின்ற நண்பர்கள் இலக்கியத்திலும் ஊடகத்திலும் பரவலாக அறியப்படுகின்ற _ பேசப்படுகின்ற ஆளுமைகளாக பரிணமித்திருந்தபோது நான் அடையாளமற்றிருந்தது பெரும் அவஸ்தையாகவே இருந்தது.
பெரிதாகப் பதிப்பகங்களின் படிகளை ஏறியிறங்கவில்லை. நண்பர்கள் கவிஞர். பச்சியப்பன், பா. ரவிக்குமார் உதவியுடன் ‘மித்ர’ பதிப்பகத்தை அணுகினேன். எழுத்தாளர் எஸ்.பொ. வும் அவரது புதல்வர் ‘இந்ர’வும் என் முதல் கவிதை நூலை வெளியிட ஒப்புக் கொண்டனர். கவிதைகளின் ஒழுங்கமைவில் பச்சியப்பன் _ தி. பரமேஸ்வரி _ ச. விசயலட்சுமி மற்றும் என் துணைவியார் மேரி வசந்தி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ‘உதிரும் இலை’ எனும் அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்கள் என் துணைவியார் மேரி வசந்தியும் தோழி ச. விசயலட்சுமியும். கவிஞர். கனிமொழி சமகாலக் கவிதைகள் குறித்த ஒரு பொதுவான அணிந்துரையை ‘உதிரும் இலைக்கு’ வழங்கினார்.
குமுதம் இதழில் வேலை பார்த்த சமயம், குமுதத்திற்கு கவிதை கொடுத்தபோது பொறுப்பிலிருந்த ஒருவர், “கவிதை நன்றாக இருக்கிறது. பெயர்தான் பாமரத்தனமாக இருக்கு. பெயரை மாத்திக்கங்க’’ என்றார். ‘நான் பட்டிக்காட்டில் பிறந்தவன்தானே, பாரீஸில் பிறந்தவனா?’ என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றவில்லை. ‘முனுசாமிகளும் எழுதுகிறார்கள்’ என்று தெரியட்டும் என்பதற்காக விட்டுவிட்டேன். தொகுப்பாக வரும்போது ‘ஜெ’ எனும் கிரந்த எழுத்து உறுத்தியதால் என் குழந்தை ‘யாழினி’ இணைத்துக் கொண்டு ‘யாழினி முனுசாமி’யாகி விட்டேன்.
‘உங்கள் நூலகம்’, ‘புத்தகம் பேசுது’, ‘கவிதாசரண்’, ‘நடவு’ உள்ளிட்ட ஏறக்குறைய இருபது இதழ்களில் மதிப்புரை விமர்சனம் அறிமுகம் வெளிவந்தன. பழமலய், கோசின்ரா, லதா ராமகிருஷ்ணன், வே. எழிலரசு போன்ற பலர் எழுதியிருந்தார்கள். அந்த விமர்சனங்களைத் தொகுத்து ‘உதிரும் இலையும் உதிரா பதிவுகளும்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளேன். என் முதல் பிரவேசமான ‘உதிரும் இலைக்கு’க் கிடைத்த வரவேற்பே என்னை நம்பிக்கையுடனும் வேகமாகவும் தொடர்ந்து இயங்க வைத்திருக்கிறது என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி்- புதிய புத்தகம் பேசுது
www.keetru.com

என் கவிதை - உலகம(ப)யம்


உலகம(ப)யம்


ளர்ச்சி முகமூடி தரித்து
வலம் வரும் இப்பேய்
சொற்பமாய் விண்ணுயர்த்தி
லட்சமாய் காவு கொள்கிறது
பூர்வ குடிகளின் நில ரத்தம் உறிந்து
வளம் சுரண்டி
மண்ணுயிர் வற்றச் செய்கிறது
நிலம் புசித்து
உழவனின் உயிர்குடித்து
நரதாகம் தணிகிறது
அரசுத் துறைகளை நசித்து
இடஒதுக்கீட்டிற்குக் குழிபறித்து
விஷம் வைத்து
விளிம்பு நிலை மக்களை
வீதிக்குத் துரத்துகிறது
ஆங்கிலமே ஆளுமைமொழி
அறிவுமொழியெனப் பசப்பி
தாய்மொழி பேசுபவரைத்
தாழ்வு கொள்ள வைக்கிறது.
மதர்த்த பணத்தை மண்ணில் கொட்டி
வீடற்றவர்களாக்குகிறது
மேல்நாட்டு டாலருடன் மண்ணில் பண்பாட்டை
வன்புணர்ச்சி செய்கிறது
இத்தனைக்குப் பிறகும்
சிவப்புக் கம்பளம் விரித்து
வரவேற்றபடியிருக்கின்றனர்
மக்களின் காவலர்கள்.

Saturday, May 7, 2011

தும்பிகள் மரணமுறும் காலம்
யாழினி முனுசாமி

இளம் தலைமுறைக் கவிஞர்களில் கிராமம் சார்ந்த வாழ்வியலைப் பதிவுசெய்பவர்களில் முன்னணியிலிருப்பவர் கவிஞர் பச்சியப்பன். அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளிலும் கிராமத்தின் இழப்புகள், சிதைவுகள். அதன் உருமாற்றம் குறித்த பதிவுகளே இடம்பெற்றிருப்பினும் இந்தக் கட்டுரை நூல் ஊடாகவும் முழுக்க முழுக்கக் கிராமத்தையே பேசுகிறார். வடதமிழகத்தின் - குறிப்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்களையும் அம்மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்களையும் அதிகம் தாங்கி வந்திருக்கும் கட்டுரை நூல் இது. அம்மக்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்வியலைக் காட்சிப் படுத்துகிறது இந்நூல், என்றாலும், அனைத்துக் கிராமங்களையும் இந்தக் கட்டுரை நூலின் வழியாகக் காணலாம்.

Pachiappan மீண்டெழுதலை நோக்கமாகக் கொண்டு, வாழ்ந்த கதைகளையும் இழந்த கதைகளையும் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகச் சொல்லிச் செல்கிறார் பச்சியப்பன். வாசக மனதைச் சுண்டியிழுக்கும் எழுத்து நுட்பத்தைக் கைவரப் பெற்றவர் என்பதை அவரது கவிதைகளுடன் அறிமுக முள்ளவர்கள் நன்கு அறிவர். இந்த உரைநடை நூலின் மூலமாகப் புதிய வாசகர்கள் பலர் அந்த அனுபவத்தை அடைவர் என்பதை உறுதியாக நம்பலாம்.

ஒரு நிகழ்வை நாம் நேரில் பார்க்கும்போது ஏற்படும் தாக்கத்தை விட அதைக் கலை வடிவில் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாகிவிடுகிறது. கிராமத்தை நாம் நேரில் பார்ப்பதற்கும் அதைப் பச்சியப்பனின் எழுத்தில் காண்பதற்குமான வேறுபாட்டில் அந்தத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

கட்டுரை நூலை ‘படைப்பு’ என்று சொல்லலாமா என்றால், இந்நூலைப் பொறுத்தமட்டில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்நூலின் நடை அப்படி. கதைக்கும் கட்டுரைக்குமான இடைப்பட்ட, கதைக்கு மிகவும் நெருக்கமான நடையில் இந்நூல் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரக் கூடும். இத்தகையக் கட்டுரைகளைக் ‘கதைக்கட்டுரை’ எனும் புதிய வகைமையாகக் கூடக் கொள்ளலாம். இருபத்தைந்து கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ‘இது கிராமத்து உன்னதங்களின் வீழ்ச்சி குறித்த மனப்பதிவு’ என இந்நூலை வெளியிட்டுள்ள பொன்னி பதிப்பகம் அறிமுகப்படுத்துகிறது.

காலங்காலமாகக் குடியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபட முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கிராமத்தின் ஆன்மா. குடிப்பது நம் மரபு எனக் குடியைப் போற்றும் அறிவாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், குடிக்குத் தன் கணவனையோ, மகனையோ, அப்பாவையோ, சகோதரனையோ பலி கொடுத்தவர்களுக்குத் தானே தெரியும் குடியின் மகத்துவம்? இன்றும் நம் தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பது இந்தக் குடிதானே? முதல் கட்டுரையே இந்தக் குடியின் கொடூரத்தைப் பற்றித்தான். குடியால் கலகலத்துச் சிதைந்துபோன ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை காணாமல்போன ஈச்சங்கூடைகளைப் பற்றியும் கூடைப் பின்னி பிழைப்பு நடத்தியவர்களைப் பற்றியும் பேசுகிறது. இப்படித்தான் எல்லாக் கட்டுரைகளும் கிராமத்தின் ஏதோவொன்றைப் பற்றிப் பேசுகின்றன. நிலத்தடி நீரைப் பற்றி, வரப்புச் சண்டையைப் பற்றி, இயற்கை உரத்தைப் பற்றி, மரங்கள் பற்றி...

இன்னும் நிறைய சொல்லிச் செல்கிறார். அத்தனைக் கட்டுரைகளும் முந்தைய செழிப்பையும் இன்றைய அழிவையும் ஒப்பிட்டுச் சொல்லி வாசகர்களைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

“ வெட்டுக் குத்துனுதான் அலைவார்கள். ஆனால் ஆபத்து என்றால் ஒருத்தனுக்கு ஒருத்தன் கைகோத்துக் கொள்வார்கள். எதிரி கழனியென்றாலும் மாடுமேய பார்க்க மாட்டார்கள். ஓட்டிவிட்டுதான் மறுவேலை, குழந்தை அழுதால் சொல்லி விடுவார்கள்” (ப. 43) எனவும், “ ஆடோ மாடோ தன் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்க்கும் குடும்பங்கள் இருந்தன. விளைச்சலில் கூடு கட்டி இருந்தால் சுற்றியிருக்கும் கதிர்களை அறுக்காமல் விட்டுவிட்டு வருகிற மனசைக் கொண்டவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

உருட்டிவிட்டுப் போன பூனையை அடித்தால் பாவம்டா விட்டுர்றா என்பார்கள். அதனதன் வாழ்க்கையை அங்கிகரித்த பாசம் அவர்களுடைய தாக இருந்தது” (ப. 79) எனவும் கிராமத்து மனிதர்களின் இயல்புகளை அழகாகச் சொல்லிச் செல்கிறார். எருமையில் சவாரி செய்யும் சிறுவர்களும் ‘வாடா அண்ணா’ என்றழைக்கும் தம்பிகளும் சண்டைக்காகப் பிள்ளை பெற்று வளர்க்கும் பெற்றோர்களும் இந்நூல் நெருக உலவிக் கொண்டிருக்கின்றனர்.

கெடை, ஒணத்தி, சத்தமடித்தல், சுளுவு, மோழி, தரூசி, பெண்ணம்பெரிய, கமலைசால், தோட்டாவண்டி, சேடை, ந்தே... எனத் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிக்குரிய பல வட்டார வழக்குச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது. இது போன்ற வட்டாரச் சொற்களுக்கான பொருளை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். ஏனென்றால் ‘தும்பி’ என்பதே எல்லா மாவட்டத்துக்காரர்களுக்கும் புரியும் என்று சொல்ல முடியாது. தும்பியை ‘தட்டான்’ எனவும் ‘புட்டான்’ எனவும் வழங்குகின்றனர்.

‘மூழ்கி மரித்த கதை’, ‘நண்டு நாற்காலி ஏறுமா?’, ‘பொண்ணு பிடிச்சிருக்கா ராசா’, ‘இன்றிரவு நடத்தப்படும் நாடகம் யாதெனில்’, ‘மருந்து’ போன்ற கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். ‘தும்பிகள் மரணமுறும் காலம்’ என்பது கவிதை நூலுக்கான தலைப்பாக இருக்கிறது. ‘மரம்போல்வர் எம்மக்கள்’ எனும் கட்டுரைத் தலைப்பையே இந்நூலுக்கும் தலைப்பாக வைத்திருக்கலாம்.

கருத்து ரீதியாகச் சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. சிறுநிலவுடைமைச் சமூகப் பிரதிநிதியின் குரலாகப் பச்சியப்பன் குரல் ஒரு சில கட்டுரைகளில் ஒலிக்கிறது.

ஆட்டுக்கிடை மடக்குவதன் மூலம் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொண்டு, ‘கிடை’ மடக்கியவர்கள் கூலியாகக் குண்டான் நிறைய கூழ், சோறு, வெத்தலை, பொயலை, சுருட்டு, ஒரு ரூபாயோ காசு பெற்றுக் கொள்வதைச் சிலாகித்து எழுதுகிறார் (ப. 34). கூலி கேட்காமல் கூழ் குடித்துவிட்டுக் கொடுப்பதை வாங்கிக் கொண்டுபோனால் மகிழும் நிலக்கிழார் மனசு இதில் வெளிப்படுகிறது. வேறோர் இடத்திலோ கூலி கேட்டால் சலித்துக் கொள்கிறார்.

“வெள்ளம் காய்ச்ச ஆலை ஆடுவது என்றால் நாய் படாத பாடு. மாட்டுக்குச் சோகை வேண்டும் என்பதற்காக நிறைய பேர் கருப்பு வெட்ட வருவார்கள். அவர்களை வைத்தே கழனியிலிருந்து கரும்பை ஆலைகரைக்குத் தூக்கிவந்து விடலாம். இது மாடுகள் நிறைந்திருந்த காலத்தில் நடந்தவை. இப்பொழுதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் கூலி.” (ப. 57), “சரி, கரும்பு வேண்டாம். வாழைக்கு வருவோம். குழி எடுக்கக் கூலி. கன்று தோண்டக் கூலி. கன்றுக்குக் கூலி (ப. 57) என விவசாயக் கூலிகளுக்குக் கூலி கொடுக்கச் சலித்துக் கொள்ளும் மனம் இதில் வெளிப்படுகிறது.

சோறு போடவும் கூழ் ஊத்தவும் எல்லோருக்கும் மனம் வரும். ஆனால் கூலி கொடுக்கத்தான் மனம் வராது போலும். விவசாய வேலைகளுக்குக் கூலி கொடுக்கவும் புலம்ப வேண்டும்; கிராமத்து ஆட்கள் வேலை தேடி நகரை அடைந்தாலும் ‘அய்யோ! கிராமம் காலியாகிவிடுகிறதே’ என்று புலம்ப வேண்டும். நல்ல கிராமப் பற்று!

சமீபத்தில் கடலூரில் நடந்த உழவுத் தொழிலாளர்கள் மாநில மாநாட்டில் தோழர் ஆர். நல்லகண்ணு குறிப்பிட்ட சில செய்திகளை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “நவீன வேளாண்மை தொடங்கப்பட்டு அறுவை இயந்திரம் வந்துவிட்டது. நிலம் இல்லாத உழவர்கள் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... தமிழ்நாட்டில் ஆறுகோடி மக்கள் தொகையில் ஒரு கோடி பேர் உழவுத் தொழிலாளர்கள். இவர்களில் பாதிபேர் ஆதிதிராவிடர்கள்” (தமிழ் ஓசை, 2. 9. 07) என்கிறார் நல்லகண்ணு.

அறுவை இயந்திரத்தால் விவசாயக் கூலிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அவர்களின் வாழ்வாதார உரிமை பறிக்கப்படுகிறது. ஆனால், பச்சியப்பனோ, “ஏக்கர் கணக்கில் என்றால் அறுவை இயந்திரம் கொண்டு அறுக்கலாம்” (ப. 58) என அறுவை இயந்திரத்தை வரவேற்கிறார். அறுவடைக்கு ஆள்வருவதில்லை என்பதைக் காரணமாகச் சொன்னால், ஏன் வருவதில்லை என்ற கேள்விதான் எழுகிறது. பச்சியப்பனின் மொழியில் சொல்வதென்றால், கூலிப் பிரச்சினையன்றி வேறு என்னவாக இருந்துவிட முடியும்?

இந்நூல் கிராமத்தைப் பற்றிப் பேசினாலும் கிராமத்துச் சிக்கல்களை அரசியல் புரிதலுடன், விரிவாகவும் நுட்பமாகவும் பேசவில்லை. வாசகர்களின் மேலோட்டமான உணர்வுகளைக் குறிவைத்து எழுதப்பட்டிருக்கின்றது. இந்திய சாதிய அமைப்பைக் கிராமங்கள் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் சமூகப் பேராசிரியர்கள். சாதியம் பற்றியோ தலித் மக்களின் கலையான ‘பறை’ யின் அழிவு பற்றியோ இந்நூலில் எவையும் பதிவுகள் இல்லை.

இது கிராமத்து இனிய அனுபவங்களை அசைபோட நினைப்பவர்களுக்கான புத்தகம். கிராமத்து வாசகர்களுக்கான புத்தகம். அந்த அளவில் இந்தப் புத்தகம் ஒரு வெற்றிகரமான புத்தகம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தும்பிகள் மரணமுறும் காலம்
ஆசிரியர் : இரா. பச்சியப்பன்,
வெளியீடு: பொன்னி பதிப்பகம்,
2/1758, சாரதி நகர்,
என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம்,
சென்னை - 91, விலை : ரூ. 60.
 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

Previous post
Next post

பம்பைக் கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்




தமிழர் பண்பாட்டில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. திருவிழாக்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழர்களின் தொன்மைக் கருவியான “பறை” க்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப் படும் இசைக் கருவி பம்பை. பம்பைக் கருவியின் சிறப்புகள் குறித்தும் இன்றைய நிலையில் பம்பைக் கலைஞர்களின் வாழ்நிலை குறித்தும், பம்பை கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்........

1.வணக்கம். பம்பையின் சிறப்பினைப் பற்றிக் கூறுங்களேன்.
வணக்கம். பம்பை ஒரு மிக சிறந்த கருவி. இந்தக் கருவி சைவக் கடவுள்களுக்கு வாசிக்கும் ஒரு அருமையான இசைக் கருவி. பெரும்பாலும் நிங்கள் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பம்பை அடிப்பதைப் பார்க்கலாம்.

2.மற்ற தோல் கருவிகளுக்கும்; பம்பைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மற்ற தோல் கருவிகள் நல்லது கெட்டது என எல்லாவற்றிற்கும் உப யோகப்படுத்துவார்கள் ஆனால் பம்பையைத் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். அது மட்டுமல்ல; மற்ற கருவிகளை எந்தத் தோலில் வேண்டுமானலும் செய்வார்கள். ஆனால் பம்பையை ஆட்டின் தோலில்தான் செய்வோம்.

3.பம்பையின் துணைக் கருவிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
முதலில் உடுக்கைதான். அதனுடைய துணைக் கருவிதான் பம்பையும்; சிலம்பும். இந்த மூன்றையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு அருமையான இசை தோன்றும். அந்த இசையில் இறைவனே மயங்கி மனிதர்கள் மேலே ஆடி வருவார்.

4.பம்பை ஆட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக்க் கூறுங்கள்?
இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டாகும்.

தீப்பந்தாட்டம்:-
வாயில் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கையில் திப்பந்தம் வைத்து ஊதுவர்.

தண்ணீர்க்குடம்:-
ஒரு குடம் நிறைய தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அந்தக் குடத்தில் ரூபாய் நோட்டை வைப்பர். அந்தக் குடத்தைத் தனது வாயினால் தூக்கி தண்ணீரைத் தன் மேல் ஊற்றிக் கொள்வோம். பிறகு அந்த ரூபாய் நோட்டை எடுத்துப்போம்.

சோடாபாட்டில்:-
சோடா பாட்டிலைத் திறக்காமல் வைப்பர். அதை நாங்கள் வாயினால் திறந்து சோடாவைக் குடிக்குவிட்டுப் பிறகு அதை மூடிவிடுவோம் ஆனால் அந்த பாட்டிலைத் திறக்கக் கையைப் பயன்படுத்தக் கூடாது. கஷ்டமாக இருக்கும்.

கண்ணினால் ஊசியை எடுப்போம்; நெற்றியினால் செங்கல்லை உடைப்போம். இவற்றை யெல்லாம் செய்யும்போது எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் தான் மக்கள் ஒசிப்பார்கள். வெறுமனே பம்பை மட்டும் அடித்துக் கொண்டு போனால் ஒசிக்க மாட்டார்கள்.

5.உங்களுக்கு பம்பை செய்யத் தெரியுமா?
எனக்கு முழுமையாக செய்யத் தெரியாது.

6.எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் பம்பை அடிக்கிறார்களா? இல்லை வேறுபாடுகள் உண்டா?
கண்டிப்பாக வேறுபாடுகள் இருக்குது. இத்தொழிலை பரம்பரையாக, புர்விகமாக செய்பவரின் இசை ஒரே மாதிரி தான் இருக்கும். இடையில் வந்தவர்களால் சிறு வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு மலையனுரில் அடிப்பவர்கள் மீனவர்கள், அவர்களின் இசை வேற மாதிரியாக இருக்கும். அவர்கள் அடிக்கும் விதம் வேறு மாதிரியானது.

7.சென்ற தலை முறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் உள்ள ஒசனை எப்படி இருக்கிறது?
சென்ற தலைமுறையில் தான் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருந்த்து. முன்பு இருந்த ஒசனை வேறு, இப்போது இருக்கும் ஒசனை வேறு. அதனால் பம்பைக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டு தான் வருகிறது.

8.உங்களுடைய அடுத்த தலைமுறையினர் பம்பைக் கலையைப் பின்பற்றுவார்களா?
கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள். நான் என் சொல்றேன்னா, எனது தாத்தாவின் கலையை நான் பின்பற்றினேன். எனது கலையை எனது மகன் பின்பற்றுவான்.

9.பம்பையைக் கற்றுக் கொடுக்க ஏதேனும் பள்ளிகள் நிறுவனங்கள் இருக்கின்றனவா?
இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் எந்த நிறுவனமும் இல்லை. இனிவரும் காலங்களில் வரலாம் என நம்புகிறேன்.

10.பெண்கள் பம்பை அடிக்கிறார்களா?
இல்லை.

11.இனிவரும் காலங்களில் பெண்கள் பம்பை அடிக்க நேர்ந்தால் நிங்கள் ஏற்பீற்களா?
கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம்.

12.குறிப்பிட்ட சாதியினர் தான் பம்பை அடிக்க வேண்டுமா? அல்லது யார் வேண்டு மானாலும் அடிக்கலாமா?
முன்பு கோவில் புசாரி மட்டும் தான் பம்பை அடித்தனர். காலம் மாறும் போது இக்கலையின் மீது உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால், ஆனிசயால் வேறு சில இனத்தவரும் இக்கலையைக் கற்று இத்தொழிலை செய்கின்றனர்.

13.உங்கள் பிள்ளைகள் விரும்பினால் இந்தத் தொழில் செய்ய நிங்கள் அனுமதிப்பிர்களா?
அனுமதிப்பேன். அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்தால்; அவன் நல்வழியில் சென்றால் கண்டிப்பாக அனுமதிப்பேன். காலங்காலமாக இந்தக் கலை வாழவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பம்பைக் கலைஞர்களுக்கும் இந்தக் கலைக்கும் அங்கீகாரமும் மதிப்பும் கொடுத்து காக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்த்தின் கையில்தான் இருக்கிறது.

14.பம்பைக் கலைஞர்களுக்கும், பம்பை கலை வளர்ச்சிக்கும் தமிழக அரசு எத்தகைய திட்டங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறிர்கள்?
இக்கலை வளர எங்களுக்கு என்று ஒரு தனிச் சங்கம் அமைக்க வேண்டும். அதில் உறுப்பினராக எல்லாப் பம்பைக் கலைஞர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். பம்பைக் கலைஞர்களுக்கென்று தனி வாரியம் அரசு அமைக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசு இசைக் கல்லூரிகளிலாவது பம்பையை ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

15.ஆர்வமுடைய இளைஞர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால் பம்பை இசைக் கருவியை வாசிக்கக் கற்றுத் தருவீர்களா?
உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும் அதுவே இக்கலை மீது ஈடுபாட்டை உண்டாக்கும். நிங்கள் கற்றுக் கொள்ளத் தயராக இருந்தால் நான் சொல்லிக் கொடுக்கத் தயாராக இருக்கேன்.

16.எல்லா கோவில்களிலும் பம்பை அடிப்பீர்களா?
இந்து மதக் கடவுள் அனைவருக்கும் இதை வாசிப்போம். அம்மன்; சிவன்; முருகன்; காவல் தெய்வங்கள் போன்றவர்க்கு இசைப்போம். வைணவக் கோயில்களில் இசைக்க மாட்டோம்.

17.எத்தனைத் தலைமுறையாகப் பம்பை அடிக்கிறீர்கள்?
இது ஒரு நகைச்சுவையான கேள்வி, எங்களது பரம்பரை தொழிலே இது தான்.

18.எப்படி இந்தக் கலையில் ஆர்வம் வந்தது.?
இந்த ஆர்வம் பிறப்பிலிருந்துதே இருந்த்து. எனது தந்தை, தாத்தா போன்ற முன்னோர்களின் இசையைக் கேட்டு கேட்டு எனக்கும் ஆர்வம் தானாகவே வந்துவிட்டது.

19.வருமானம் எப்படி இருக்கிறது?
வருமானம் கிடைக்கிறது. ஆனால் அன்று கிடைப்பது அன்றே செலவாகிவிடும். மறு நாள் வேறு ஏதாவது வேலைக்குச் சென்றால் தான் எங்களது பிழைப்பு நடக்கும். அந்த அளவில்தான் இப்போதைக்கு இந்தத் தொழில் உள்ளது.

20.முழு நேரத் தொழிலாக இதைச் செய்ய முடியாதா?
செய்ய முடியாது. இத்தொழிக்கு என்று ஒரு சீசன் உண்டு, ஆடி, மாசி, சித்திரை போன்ற மாதங்களில் வேலை தொடர்சியாக இருக்கும். மற்ற மாதத்தில் ஒன்றோ இரண்டோ தான் வரும்.

கிராமங்கள் இருக்கும்; மக்கள் இருப்பார்கள்;
கோயில்கள் இருக்கும்; மதம் இருக்கும்;
வழிபாடும் இருக்கும்;
ஆனால்..........
இந்தக் கலை இருக்குமா?
காலந்தான் பதில்சொல்ல வேண்டும்
நன்றி. வணக்கம்
நேர்காணல் உதவி; சுகுமார்

nandri : thadagam.com
இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
யாழினி முனுசாமி

சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல்.

மனித குல வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் உலகந் தழுவிய வளர்ச்சியின் காரணமாக பல புதிய துறைகள் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, ஒப்பாய்வு, இலக்கிய ஒப்பீடு அல்லது ஒப்பிலக்கியம் என்றும் ஆய்வு முறையைத் தொடங்கி வைத்தவர் பேராசிரியர் சாட்விக் என்பர். பிரான்சு நாட்டின் சிந்தனை மரபில் தோன்றியது. இன்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளிலும் பரவி தனித்துறையாக நிலை பெற்றுள்ளது. இத்துறை ஆய்வுகள் தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வரிசையில் அ.அ. மணவாளன் ‘இலக்கிய ஒப்பாய்வு: காப்பியங்கள் எனும் ஒப்பாய்வு நூல் முக்கியமானது.

288 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ தொடங்கி, ‘தமிழ்க் காப்பிய மரபில் கவியோகி சுத்தானந்தரின் இடம்’ கட்டுரை வரை 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலிலிருக்கும் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ எனும் முதல் கட்டுரையில், காப்பிய இலக்கணம் குறித்தும் தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் குறித்தும் வடமொழி காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம், கிரேக்கக் காப்பியங்களான இலியதம் (LLiad) ஒடிசி (Odyssey) இலத்தின் காப்பியமான ‘ஈனிட்’ ஆகிய முதற்காப்பியங்களின் பாவிகம் (கருத்து, குறிக்கோள்) மற்றும் தலைமைப் பாத்திரங்களின் பண்பு பயன் குறித்தும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி பிறமொழி முதற்காப்பியங்களின் மையக் கருத்தை நம்மால் உய்த்துணர முடிகிறது. அக்காப்பியங்களைப் படிக்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனையே ஒப்பாய்வின் வெற்றியாகக் கொள்ள முடியும்.

வெவ்வேறு மொழிப் பண்பாட்டு காப்பியங்களின் கதைச் சுருக்கங்களும் தலைமைப் பாத்திரங்களின் குணநலன்களை ஒப்பிடும் வாசிப்பில் விறுவிறுப்பும் கூட்டுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இந்நூலுக்குப் பெரிதும் வழிகோலியிருக்கிறது. அவ்வகையில், கம்பராமாயணத்தை மில்டனின் ‘இழந்த சுவர்க்கம் மீண்ட சுவர்க்கம்’ காப்பியங்களுடன் ஒப்பாய்வு செய்திருப்பதை முக்கியமானதாகக் கூறலாம். கி.மு. (70-19)வில் வாழ்ந்த வெர்ஜில் இயற்றிய இலத்தின் மொழியின் ஆதி காவிய ஏனதம் (AENEID). இக்காப்பியத்தின் நாயகன் ஏனியஸ். இவனுடன் இராமனை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார். தனக்கு நேரடி எதிரியல்லாத வாலியை மறைந்திருந்து கொன்றதால் ஏற்பட்ட இக்கட்டான நிலைபோல ஏனியாஸீக்கும் ஏற்பட்டிருப்பதை விளக்குகிறார். ஒப்பற்ற ரோம் நகரை உருவாக்கும் ஏனியஸின் குறிக்கோளுக்கு உதவிய டர்னஸ் என்பவனை கொன்றுவிடும் இக்கட்டான சூழலை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார்.

‘சிலப்பதிகாரம் ஒரு பெண்ணிய நோக்கு’ கட்டுரையில் சிலப்பதிகார ஆணாதிக்கக் சொற்களை வெளிக்காட்டியிருக்கிறார்.

‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே / காசறு விரையே கரும்பே தேனே’ - எனவும் இன்னபிறவுமாய்க் கோவலன் கண்ணகியைப் பாராட்டுவது, பெண்ணை ஆணுக்குரிய நுகர்பொருளாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார். இப்படிச் சிலம்பை மறுவாசிப்பு செய்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள், அமெரிக்காவிலுள்ள இந்தியானா, கொலம்பியா பல்கலைக் கழகங்களில் நிகழ்ந்த கருத்தரங்குகள் ஆய்வரங்குகள், பணிப் பட்டறைகள் போன்றவற்றில் படித்தளித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கும், டாக்டர் அ.அ. மணவாளன் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் இலக்கியங்களிலும் புலமை உடையவர் என்பதால் தமிழ், வடமொழி, ஆங்கிலக் காப்பியங்களைத் திறம்பட ஒப்பாய்வு செய்ய முடிந்திருக்கிறது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் காணப்படும் மகாபாரதச் செய்திகளையும் ஆய்ந்திருக்கிறார். மகாபாரதப் போரில் இருசார் வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்த வள்ளல் என்று சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியதை பின்வரும்
‘ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் / பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!’ - எனும் புறநானூற்றுப் பாடல்வழி எடுத்துக் காட்டியுள்ளார். இப்படிச் சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல் இது.

இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
ஆசிரியர் : அ.அ. மணவாளன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098, விலை : ரூ. 100.00.


 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

புத்தக விமர்சனம் - குரலற்றவனின் குரல் ( தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதைகள் )


ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலம்



கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா - பாட்டிகளின வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரலர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ என்னவோ! நமக்கு ஓரளவிற்கு வாய்த்திருந்த்து ஆனால். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தாத்தாவோ பாட்டியோ தன் பேரப்பிள்ளைகளுக்கு. தான் சாதி ரீதியாக அனுபவித்த கொடுமைகளைக் கதைகளாகவேனும் சொல்லியிருப்பார்களா? இது நமக்கு மூத்த தலைமுறை வரையிலாக தொக்கி நின்ற கேள்வி. துன்பத்தைக் கதைகளாகக்கூட வெளிப்படுத்த முடியாத சூழலைத்தான் அற்றைச்சமூகம் அவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆயினும், தற்போது பெருகி வருகிற தலித்திய படைப்புகளும், சிந்தனைகளும் அனறைய தாத்தாக்களின் நிலை இன்றைய பேரர்களுக்கு இல்லை என்பதை ஓரளவிற்கு உணர்த்துகின்றன.

கேள்வி அனுபவத்திலிருந்து எழுதகிறேன் என்றில்லாமல், பட்ட பாடத்திலிருந்து படைப்புகள் உருவாகின்றன என்ற தலித்திய எழுத்தாளர்களின் இன்றைக்குமான வாக்குமூலங்கள் நாகரிக சமூகத்தின்(!) முகத்தில் உமிழ்வதாகத்தான் இருக்கிறது. பட்டனுபவம் நல்லவற்றிற்கு இருக்கலாம், சமூக அவலங்களுக்கு இருக்கக்கூடாது. ஆனாலும் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகக்கூட பேசப்பட முடியாத தங்கள் முன்னோர்களின் அவலங்களை, நிகழ்கால நடப்புகளை, பதிவுகளாக்கி படைப்புகளாகத் தரும் தற்காலச் சூழல் தலித்திய மறுமலர்ச்சியாகவே தோன்றுகிறது.

தலித்தியம் சார்ந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. தலித்திய ஆய்வுகளும் தம் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளன. என்.டி.ராஜ்குமார், அழகிய பெரியவன், விழி.ப. இதயவேந்தன, ரவிக்குமார், சிவகாசி போன்ற பலர் தங்கள் படைப்புகளில் தலித்தியத்தை ஆழமாகவே பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், தலித்திய படைப்புகள் ஏதேனும் ஒரு பொருண்மையில் தொகுப்பாக வெளிவந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக சிறுகதைகள். இச்சூழலில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறந்த தலித்திய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் யாழினி முனுசாமி. “குரலற்றவனின் குரல்” தேவையான, வரவேற்கத்தக்க சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 31 சிறுகதைகள் 31 எழுத்தாளர்களால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டு, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. கவிதைகளையோ சிறுகதைகளையோ தொகுப்பவர்கள் தங்களுகென்று ஓர் அரசியலைக் கொண்டிருப்பர். ஆனால், “சிறந்த தலித்திய சிறுகதைகள்” என்ற அரசியலை மட்டுமே கையாண்டு இத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர். படைப்பாளர்களுள் பலரை முன்பின் அறியாவிட்டாலும், கதைகளின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்பட்டிருப்பது தொகுப்பின் பலம். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமன்றி, இலங்கை, டென்மார்க், மலேசியா, ஜெர்மனி, மும்பை என நாட்டின், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இயங்கும் எழுத்தாதளர்களின் தலித்தியம் சார்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தொகுப்பின் பரந்த நோக்கினைக் காட்டுகிறது. கதைகளைப் படிக்கும்போது, உலகெங்கிலும் எது இருக்கிறதோ இல்லையோ சாதியக் கொடுமை என்ற அவலம் இருப்பதை வேதனையோடு உணர முடிகிறது.

மேல்நிலையாக்கத்தால் தன் அடையாளத்தை இழந்து உருமாறிப்போன சிறுதெய்வங்கள் பற்றிய பதிவை “அடையாளம்” சிறுகதை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மேல்நிலையாக்கம் என்பது தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமும் சந்தித்த சந்திக்கிற அடையாள அழிப்பு என்பதை உணர வேண்டும். இதேபோல, தேனீர் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கென இருந்த தனிக குவளை முறை, அதை எதிர்த்து நடந்த போராட்டம், பாரதி விரும்பிய சாதி ரீதியிலான சுதந்திரம், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் படிப்பைத் தொலைக்கும் பழங்குடியின மாணவர்கள், பல இன்னல்களுக்கு இடையில் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டு, படிப்பைப் பாதியில் இழக்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள், தேர்தல் கால சிக்கல்கள், உறவுசிலைச் சிக்கல்கள் போன்ற பல சமூக அவலங்களைத் தொகுப்பின் சிறுகதைகள் படம்பிடிக்கின்றன. ஒவ்வொரு சிறுகதைகள் ஒரு குறும்படக்கிற்கான கூறுகளோடு அமைந்துள்ளது சிறப்பு ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலத்தை அவனுடைய குரலிலேயே அச்சுபிசகாமல் பதிவு செய்திருக்கும் “குரலற்றவனின் குரல்” பல்கலைக்கழகங்களுக்குப் பாடமாக வைக்கும் எல்லா தகுதிகளோடும் வெளிவந்திருக்கிறது. சமூகச் சிந்தனையாளர்களும், தலித்திய ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வாங்கி படிக்கவேண்டிய, குறிப்பு நூலாகப் பாதுகாக்க வேண்டிய நல்ல தொகுப்பு.


நன்றி : தடாகம்.காம்

Wednesday, May 4, 2011

என் கவிதை - குழந்தைமையிடம் பொய்யுரைக்காதீர்

ரபலியிடும் சாமியாருக்குத் தெரியும் 
குழந்தைப்பேறு வேண்டிவரும் 
பேதைப் பெண்ணை வஞ்சித்துப் புணரும் 
சாமியாருக்குத் தெரியும் 
உண்டியல் பணத்தில்
பொய்க் கணக்கு காட்டும் 
குருக்களுக்குத் தெரியும்
கன்னியாஸ்திரியை வன்புணர்ச்சி செய்யும் 
பாதிரியாருக்குத் தெரியும் 
ஆசிரமத்தைக் காமச் சுரங்கமாக்கும் 
ஆனந்தாக்களுக்குத் தெரியும் 
தர்காவுக்கு வருபவர்களிடம் 
மந்திரித்துப் பணம் பறிப்பவருக்குத் தெரியும்
கருவறையில் காமுகனாக உருமாறும் 
அர்ச்சகருக்குத் தெரியும் 
'தொழில் ' சேவை புரியும் 
மாது அதிபர்களுக்குத் தெரியும்
நடிகையை பூஜித்தனுப்பும் 
இளந்துறவிக்குத் தெரியும் 
கணக்கு கேட்கும் நிர்வாகியின் 
' கணக்கை முடித்துவிடும் '
மடாதிபதிக்குத் தெரியும் 

...............................தெரியும்
.................................தெரியும்
..................................தெரியும் 

'தவறு செய்பவர்களின் கண்ணை 
சாமி குத்தாது' என்பது.
-------------------------------------------------------










Wednesday, April 27, 2011

ஏப்ரல் 23 : உலக புத்தக தினம் -எஸ் .வி. வேணுகோபாலன்

இல்லங்கள் தோறும் வாசிப்பின் கொடியை
உயர்த்திக் கட்டுவோம் 
                                                                                        - எஸ்.வி. வேணுகோபாலன் 

ரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு.  புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான - தொடர்வினை உருவாக்குகிற - தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது.

புத்தகங்கள், அவற்றை எழுதுபவரது  மனசாட்சி ஆக இருக்கலாம், ஆனால் அது வாசிப்பவரின் குரலில் கேட்கிற மாயாஜாலம் நிகழ்கிறது. கைகளால் விதைப்பாடு செய்வதைக் கண்களால் அறுவடை செய்கிறோம், அது என்ன என்று வழங்கும் குழந்தைகளுக்கான புதிர் சொல்வது போல நூதன அனுபவம் வாசிப்பு.  குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டிய சத்துணவு, வாசிப்பின் அருமை.  தங்களைப் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்கும் குழந்தைகள் செய்யத் துடிக்கும் முக்கிய வேலைகளில் இந்த வாசிப்பு இருப்பதை, 'தத்தக்கா புத்தக்கா' என குழந்தைகளின் மழலைச் சொல் கேட்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். 

நூலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற (சீர்காழி) எஸ் ஆர் ரங்கநாதன் (1892 -1972) அவர்கள் புத்தகங்களை மாட்டு வண்டியில் வைத்து சிற்றூர்களுக்கு எடுத்துப் போய் சாதாரண மக்களிடையே வாசிப்பின் இன்பத் திளைப்பை ஊட்டினாராம். தமது  புத்தகங்கள் மண்ணெண்ணையை விடவும், தீப்பெட்டிகளைவிடவும் மலிவான விலைக்கு மக்கள் கைக்குச் சென்று சேர வேண்டும் என்ற மகாகவி பாரதிக்கு, மக்களிடையே கனல் மூட்டும் நோக்கம் இருந்ததை இந்த வாக்கியம் விளக்குகிறது.  ஓர் அரிய அறிவுஜீவியோடு உரையாட நேர்ந்தால் அவர் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேள் என்கிறார் அறிஞர் எமர்சன்.  நம்பிக்கை உலகின் வாசல் திறப்பாகப் புத்தகங்கள் இருக்கின்றன.  இருளைப் போக்குவதாக மட்டுமல்ல, சோர்வின் உடைப்புக்கும், சோகத்தினின்று ஆறுதலுக்கும், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுக்கும்..... நூல்கள் எத்தனை எத்தனை வல்லமையைத் தேக்கிக் கொண்டு அடக்கமான கையிருப்பாக இருக்கின்றன. 

ஆன்மீக அன்பர்கள் வாசிக்க இலகுவான சிறு சிறு வாழ்த்துச் செய்யுள்கள், பதிகங்களை அச்சிட்டு குடும்ப நிகழ்வுகளின் போது வழங்கும் மரபு உள்ள நமது சமூகத்தில், அண்மைக் காலமாக வாசிக்கத் தக்க பல சிறு நூல்களை முற்போக்கு எண்ணம் கொண்டோர் பலர் தமது இல்ல நிகழ்ச்சிகளின் போது தாம்பூலப் பையில் வைத்தோ, அதுவே தாம்பூலமாகவோ அளித்து வரும் பாராட்டுக்குரிய நிகழ்வுகள் பெருகி வருகின்றன.  மிக அரிய விவாதப் பொருள்களைக் கூட எளிய எழுத்துக்களாய் மலிவான விலையில் நூலாக்கம் செய்து வரும் பாரதி புத்தகாலயத்தின் பங்களிப்பு இந்த முயற்சிகளுக்கு மிகப் பெரிய தூண்டுகோலாயிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.  திருவிழாக்களுக்குச் சென்று வருகிற உள்ளக் களிப்போடும், கம்பீரத்தோடும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடி வருவதும் களிப்புற வைக்கும் செய்திகளாகும்.  

உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினமான (நினைவு தினம் என்றும் கூறப்படுகிற) ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப் படுவது வாசிப்பின் கொடியை தமது வீடுகளில் உயர்த்திக் கட்டியிருப்பவர்களுக்கு உவகை ஊட்டுவதாகும்.  எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்லப்படுகிற இந்த ஏப்ரல் 23 , ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாநிலத்தில் புனித ஜார்ஜ் தினம் என்று அழைக்கப்படுவதாகும்.  அன்றைய தினம் காதலுக்கான அடையாளமாக நூல்கள் ரசவாதம் புரியும் அற்புதம் ஆண்டுதோறும் நிகழ்கிறது.  காதலன் வழங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களுக்கு ஈடாக, பதிலுக்குக் காதலிகள் நூல்களைப் பரிசளித்துத் தங்களது இதயத்தை அதோடு சேர்ந்து ஒப்படைத்து விடுவார்களாம்.  வீதிகள் எங்கும் ஆங்காங்கு தற்காலிகக் கடைகள் போட்டு புத்தக விற்பனையும், ரோஜா விற்பனையும் அமோகமாக நடக்குமாம்.  நாளின் முடிவில், நாற்பது லட்சம் பூக்களும் எட்டு லட்சம் புத்தகங்களும் கை மாறி இருக்குமாம்.  கையில் ரோஜா ஏந்திச் செல்லாத பெண்ணையே பார்க்க முடியாத அந்த நாளில், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் பாதி அளவு அந்த ஒரு நாளிலேயே நடந்திருக்குமாம். 

எந்தப் புத்தக தினத்தின் போதும் என்னால் மறக்க இயலாத ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.  அந்த மனிதரின் கதை போல் என்னை வாசிப்பை நோக்கி எப்போதும் ஈர்க்கத் தக்க இன்னொரு செய்தி இதுவரை கிடைக்கவும் இல்லை. டாக்டர் டார்செம் என்கிற அந்த அற்புத எழுத்தாளர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருபத்து நான்கு புத்தகங்களுக்கு மேல் எழுதியும் தொகுத்தும் வழங்கியிருப்பவர்.  உலக பஞ்சாபி எழுத்தாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ அபார வெற்றி பெற்று இயங்கியவர்.  இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாவட்டப் பொருளாளர்.  சாகித்திய அகாதமி குழுவில் பணியாற்றியவர்.  ஆனால், கண் பார்வை அற்றவர்! 

பிறவியில் இருந்தே படிப்படியாகக் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருந்ததைச் சிகிச்சைகள் பல மேற்கொண்டும் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்று உணர்ந்த பதினான்காம் வயதில் அவர் படித்துக் கொண்டிருந்தது, ரஷ்ய புத்தகம் ஒன்று.  'வீரம் விளைந்தது' என்ற மகத்தான அந்தப் புதினத்தைப் படைத்த  நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி அவர்களும் பார்வையற்றவர்தான்.  வேக வேகமாக வாசித்து முடித்த அந்த நூலில் இருந்து கிடைத்த பெரும் உத்வேகமும், தன்னம்பிக்கையும், வாழ்வின் ஒளியும் டார்செம் அவர்களை அதற்குப் பின்னர் பஞ்சாபி, இந்தி, உருது மூன்று மொழிகளிலும் முனைவர் பட்டம் பெற வைத்தது.  மூன்று மொழிகளிலும் எழுத்தாக்கன்களைப் புனைய வைத்தது.  கடந்த ஆண்டு, அவரது தன் வரலாற்றை "திருதராஷ்டிரன்" என்ற பெயரில் நூலாகவும் ஆக்க வைத்திருப்பது, இந்த வாசிப்பின் விளைச்சல் தான்!  

அடுத்தடுத்த தலைமுறைக்கும் வாசிப்பின் பெரும் பரிசை உணர்த்தும் இந்த உற்சாகச் செய்திகளோடு விடியட்டும், இந்த புத்தக தினமும்.  

************
நன்றி: புதிய ஆசிரியன்: ஏப்ரல் 2011