Wednesday, May 11, 2011

என் கவிதைகள் ...நன்றி - www.koodu.com / www.thamizhstudio.com

சதுர பூதம்


யாழினி முனுசாமி  

பெண்களின் ருசி கொண்டலைகிறது
சதுர பூதம்
மனித ராசியின் ஓய்வு நேரத்தை
அபத்தங்களால் நிறைத்த வண்ணம்
நாலாதிசையும் வளர்கிறது
வண்ண வண்ணமாய்
அறையுடை வெண் தோல் பருவச்சிகள்
குதறுகின்றன ஆன்மாவை .
குட்டி யாழ்களும்
இன்னதெனத் தெரியாமலே மீட்டுகின்றன
சதுர பூதம் தரும் விசப்பாக்களை
ஏதுமில்லா குகைகளுக்கு
தேவன் ஒரு நாள் பரிசளித்தான் சதுர பூதங்களை
இனிப் பசியற்றுக் கிடக்கும் மானுடம்
----------------------------------------------------------------------------------------------------------
பொய்
யார் சொல்லியிருக்கக்கூடும்
முதல் பொய்யை ?
ஏவாளிடம் ஆதாம் சொல்லியிருப்பானோ?
தெரிந்திலோம் .
மெக்கானிக் தொழில் கற்க
விட்டு வந்த இரண்டாவது வாரத்தில்
வயிற்றுவலி என வீடு சேர்ந்தது
நினைவிலிருக்கும் முதல் பொய் .
பள்ளி நாட்களில்
விடுப்புகளுக்காக
வராத காய்ச்சலும் தலைவலியும்
வந்ததாய்ச் சொன்னபோது
பொய்கள் வளர்ந்தன.
பனையுச்சியில் ஏறமுடியாமல்
தேளிருப்பதாய்ப் பொய்த்துவிட்டுத்
தரைமீண்டது
நுங்காசைப் பொய்த்துப்போன
சென்னை நண்பனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோழைத்தனத்தின் மறுபெயர் பொய்
எச்சூழலிலும் பொய்ச்சொல்லாதவன்
தூய வீரன்.
என்ன செய்ய ?
இப்போதும்
பொய்யைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது
பேராசிரியரான பிறகும்
அவசர விடுப்புக்கு!
------------------------------------------------------------------------------------------------------
எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்
நாம் நம் வேலையைச் செய்வோம்
மிகக் கவனமாகச் செய்வோம் .
இப்போதைக்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்
ஏதேனும் ஒரு கரம் கிடைத்தால் பற்றிக் கொள்வோம்
கரத்திலிருந்து கரத்திற்கு
கரத்திலிருந்து கரத்திற்கு என மாறிக் கொள்வோம்
கைதூக்கிவிட்ட கிளையே எனினும்
மிதித்து மிதித்து மேல் செல்வோம்
எதனெதன் உதவியையோ பெற்று
இலக்கடைந்து
புகழடைந்து
தனிமனிதனாய்ச் சாதித்து விட்டதாய்
மேடையில் முழங்குவோம்
உதவிகளைப் பெறுகையில்
துண்டு நிலம் இல்லாதவனைப்போல்
பணிவு காட்டுவோம்
பின் பண்ணையார்போல்
நெஞ்சு நிமிர்வோம்
காரியம் சாதிக்க எதால் அந்த ஏமாளிகளை
வீழ்த்தலாமென்று பார்ப்போம்
கொள்கை, இலக்கியம் ,
அரசியல், சாதி...
ஏதேனும் ஒரு கண்ணியில்
சிக்காமலாப் போய்விடுவார்கள்
கிரீடம் கிடைக்கும்வரை காத்திருப்போம்
பின் காலில் இடரும் சருகென அவர்களைக்
கடந்து செல்வோம்
நமக்குத் தேவை
இலட்சியத்தை அடைதல்
அதற்காக எந்த அரிதாரத்தையும்
அவர்கள் நம்பும்படியாகப்
பூசிக்கொள்வோம்
அவர்கள் நம்மை அடையாளம் காணும்போது
இன்னொருவன் கிடைக்காமலாப் போய்விடுவான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கனவுடன் அலைபவள்
முன்பொருமுறை
வெள்ளுடை தரித்த தேவதைகளில்
ஒருத்தியாக இருந்தவள்
பிறகு
இளவரசியின்
நூற்றுக்கணக்கான தோழிகளில்
ஒருத்தியாக மாறினாள்.
அவ்வப்போது அவள்
இப்படி
உருமாறிக் கொண்டிருக்கிறாள்
தேவைகளின் பொருட்டு
அடுக்ககத்தில்
தன் உடுப்புகளையும்
களைந்து கொண்டிருக்கிறாள்
இளவரசியாகும் கனவுடன் .
---------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, May 10, 2011

என் கவிதை - “இல்லை “குறித்தான உரையாடல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

ல்லை குறித்தான உரையாடல்
தொடர்ந்தபடியே இருக்கிறது
இல்லை என்பதை
இல்லை என்றுதானே சொல்லமுடியும்
உமக்கேன் அத்தனைக் கோபமும் எரிச்சலும்?
காணாத ஒன்றை
எப்படி நான் நம்புவது ?

உணரத்தான் முடியும் என்கிறீர்
கரண்ட் என்கிறீர்
காற்று என்கிறீர்

கரண்ட் விஞ்ஞானம்
காற்று இயற்கை என்றால்
எல்லாம் அதுதான் என்கிறீர்

நீ சொல்வதைத் தீண்டினால்
செத்துப்போவோமா?
குறைந்தபட்சம்
' ஷாக்'காவது அடிக்குமா?

காற்று
குளிர்ச்சியை உணர்த்துகிறது
வெப்பத்தை உணர்த்துகிறது
புழுக்கத்தை உணர்த்துகிறது
' இல்லை ' எதை உணர்த்துகிறது?

எல்லாம் மாயை எனில்
அதுவும் மாயைதானே ?
'அது வேறு இது வேறு ' என்கிறீர்

பேரழிவு ஏனென்று கேட்டால்
பாவத்தின் பலன் என்கிறீர்
மடிந்தவரெல்லாம் பாவிகளோ?
பெரும் பாவம் செய்தவர்களெல்லாம்
பெரும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்றால்
அரசியல் பேசுகிறேன் என்கிறீர்

என்னிடம் பேசாதே !
போ ...
அவனிடம் போ .
குறைந்தபட்சம் அவனை எனக்கு
உணர்த்தவாவது செய்யச் சொல்
அதுவரை நான்
சாத்தானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .
- யாழினி முனுசாமி yazhinimunusamy@gmail.com

nandri: www.keetru.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்



Bookmark and Share

Monday, May 9, 2011

முனுசாமிகளும் எழுதுகிறார்கள்....


த்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். கணித ஆசிரியர் வகுப்பு மாணவர்களை இரண்டாகப் பிரித்து வைத்திருந்தார். ‘தேறும் கேஸ்கள்’ , ‘தேறாத கேஸ்கள்’ என்று. என்னையும் என் நண்பர்கள் சிலரையும் தேறாத கேசில் சேர்த்துவிட்டார். அன்று மாலை பற்றி முடித்து வீட்டிற்குப் போகும் போது வழியில் அழுது கொண்டே போனேன். எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பக்கத்து ஊரில் டியூசன் எடுப்பதைக் கேள்விப்பட்டு நானும் என் நண்பர்களும் போய்ச் சேர்ந்தோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சரவணன் எனும் அண்ணன் ஏசுநாதர் ஆலயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஓலைக் குடிசையில் டியூசன் எடுத்தார்.
அவர் தான் முதன் முதலில் எனக்குக் கவிதையை அறிமுகப்படுத்தினார். இரண்டு நோட்டுகள் நிறைய கவிதைகள் எழுதிவைத்திருந்தார். அவரைப் பார்த்து நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். அவரைவிட அதிகமாக எழுதினேன். எல்லாம் ஓசை...... ஓசை...... ஆதிக்கம் கொண்ட கவிதைகள். அவற்றில் ஒன்றுகூடத் தேறவில்லை. கிருத்துவரான அவர் மூலம் ஏசுநாதர் கீர்த்தனைகளும் பைபிளும் அறிமுகமாகின. அதனுடைய கவிதை நயத்துக்காக ஏசுநாதர் பாடல்களை விரும்பிப் பாடுவேன்.
ஏற்கனவே பாட்டி சொன்ன கதைகள் அடித்தளமாக இருந்தன. இயலாமைப் பொழுதுகளில் அம்மா வைத்த ஒப்பாரிப் பாடல்களின் துயரம் என்னை வெகுவாகப் பாதித்துவிடும். இந்தத் தருணங்களையெல்லாம்தான் கவிதைகள் என் நிலத்திலும் சொட்டு சொட்டாக இறங்கிய தருணங்களாக நினைக்கிறேன்.
கல்லூரி சேர்வதற்கு முன்பு ‘போலச் செய்தல்’ கவிதைகளை எழுதிக் குவித்து வைத்திருந்தேன் அவை குப்பை என்று பிறகுதான் தெரிந்தது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குப் புதுக் கவிதைகள் அறிமுகமாயின. கவிஞர் மு. மேத்தாவின் ‘கண்ணீர் பூக்கள்’ தொகுப்பு குறித்து அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் சி. என். குமாரசாமி வகுப்பில் பேசினார். அன்றைய சூழலில் எனக்கு மேத்தாவின் கவிதைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. கவிஞரும் பேராசிரியருமான முனைவர் பா. உதயகுமார், முனைவர் மங்கையர்க்கரசி, பேரா. மா. உத்திராபதி போன்றோர் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். சக மாணவர் கவிஞர். இரத்ன. அமல்ராஜ் நண்பராக அமைந்தார். இருவரும் கவிதைகள் குறித்து சண்டை போட்டுக் கொள்வோம். மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த வேறு துறை மாணவர் ஒருவர் அவரது கவிதை நூலை கல்லூரியின் எதிரில் வெளியிட்டார். அந்த மாணவர் வேறு யாருமில்லை...... ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத். அந்த நூல் வெளியீட்டு விழாவில் த.மு.எ.ச.வைச் சேர்ந்த கவிஞர். சோலை பழனி, இன்குலாபின் ‘மனுசங்கடா நாங்க மனுசங்க’ பாடலைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போதுதான் எனக்கு முதன் முதலாக முற்போக்கு இலக்கியத்தின் கதவு திறந்தது.
பிறகு, மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. தமிழிலக்கியம் படித்தபோது முற்போக்குத் தோழர்களின் அறிமுகம் கிடைத்தது. ‘மாணவர் முன்னோடி’, ‘மக்கள் பண்பாடு’ இதழ்களில் ‘பாரதீயன்’ எனும் புனை பெயரில் ஒரு சில கவிதைகள் எழுதினேன். கவிஞர் பச்சியப்பன், பொன். எழிலரசு, நான் மூவரும் சேர்ந்து ‘உளி’ என்கிற கையெழுத்துப் பிரதியை மு. மேத்தாவின் கையால் வகுப்பறையில் வெளியிட்டோம். ஒரே இதழோடு நின்று போனது. மாநிலக் கல்லூரியில் அறிமுகமாகி ஒன்று சேர்ந்த நண்பர்கள் பச்சியப்பன், கங்காதரன், பொன். எழிலரசு, தி. பரமேஸ்வரி, அமல்ராஜ், கஜேந்திரன், சாரோன் ஆகியோர் இன்றும் என் இலக்கியப் பயணத்தில் துணை நிற்கிறார்கள்.
குமுதம் இதழில் பணியாற்றியபோது குமுதம் இணையதளத்திலும் இதழிலும் கவிதைகள் எழுதினேன் என்றாலும் புத்தகம் போடும் அளவுக்கு அப்போது கவிதைகள் இல்லை. பிறகு, ‘கல்கி’, ‘புதிய பார்வை’ போன்ற வெகுசன இதழ்களிலும் ‘கல்வெட்டு பேசுகிறது’ போன்ற சிற்றிதழ்களிலும் எழுதினேன். சிற்றிதழ், தீவிர இடதுசாரி இதழ், வெகுசன இதழ், இணைய இதழ் எனப் பல தளங்களிலும் எழுதினேன் என்றாலும் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் என்னால் அக்கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர முடிந்தது.
என்னோடு பயின்ற நண்பர்கள் இலக்கியத்திலும் ஊடகத்திலும் பரவலாக அறியப்படுகின்ற _ பேசப்படுகின்ற ஆளுமைகளாக பரிணமித்திருந்தபோது நான் அடையாளமற்றிருந்தது பெரும் அவஸ்தையாகவே இருந்தது.
பெரிதாகப் பதிப்பகங்களின் படிகளை ஏறியிறங்கவில்லை. நண்பர்கள் கவிஞர். பச்சியப்பன், பா. ரவிக்குமார் உதவியுடன் ‘மித்ர’ பதிப்பகத்தை அணுகினேன். எழுத்தாளர் எஸ்.பொ. வும் அவரது புதல்வர் ‘இந்ர’வும் என் முதல் கவிதை நூலை வெளியிட ஒப்புக் கொண்டனர். கவிதைகளின் ஒழுங்கமைவில் பச்சியப்பன் _ தி. பரமேஸ்வரி _ ச. விசயலட்சுமி மற்றும் என் துணைவியார் மேரி வசந்தி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ‘உதிரும் இலை’ எனும் அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்கள் என் துணைவியார் மேரி வசந்தியும் தோழி ச. விசயலட்சுமியும். கவிஞர். கனிமொழி சமகாலக் கவிதைகள் குறித்த ஒரு பொதுவான அணிந்துரையை ‘உதிரும் இலைக்கு’ வழங்கினார்.
குமுதம் இதழில் வேலை பார்த்த சமயம், குமுதத்திற்கு கவிதை கொடுத்தபோது பொறுப்பிலிருந்த ஒருவர், “கவிதை நன்றாக இருக்கிறது. பெயர்தான் பாமரத்தனமாக இருக்கு. பெயரை மாத்திக்கங்க’’ என்றார். ‘நான் பட்டிக்காட்டில் பிறந்தவன்தானே, பாரீஸில் பிறந்தவனா?’ என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றவில்லை. ‘முனுசாமிகளும் எழுதுகிறார்கள்’ என்று தெரியட்டும் என்பதற்காக விட்டுவிட்டேன். தொகுப்பாக வரும்போது ‘ஜெ’ எனும் கிரந்த எழுத்து உறுத்தியதால் என் குழந்தை ‘யாழினி’ இணைத்துக் கொண்டு ‘யாழினி முனுசாமி’யாகி விட்டேன்.
‘உங்கள் நூலகம்’, ‘புத்தகம் பேசுது’, ‘கவிதாசரண்’, ‘நடவு’ உள்ளிட்ட ஏறக்குறைய இருபது இதழ்களில் மதிப்புரை விமர்சனம் அறிமுகம் வெளிவந்தன. பழமலய், கோசின்ரா, லதா ராமகிருஷ்ணன், வே. எழிலரசு போன்ற பலர் எழுதியிருந்தார்கள். அந்த விமர்சனங்களைத் தொகுத்து ‘உதிரும் இலையும் உதிரா பதிவுகளும்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளேன். என் முதல் பிரவேசமான ‘உதிரும் இலைக்கு’க் கிடைத்த வரவேற்பே என்னை நம்பிக்கையுடனும் வேகமாகவும் தொடர்ந்து இயங்க வைத்திருக்கிறது என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி்- புதிய புத்தகம் பேசுது
www.keetru.com

என் கவிதை - உலகம(ப)யம்


உலகம(ப)யம்


ளர்ச்சி முகமூடி தரித்து
வலம் வரும் இப்பேய்
சொற்பமாய் விண்ணுயர்த்தி
லட்சமாய் காவு கொள்கிறது
பூர்வ குடிகளின் நில ரத்தம் உறிந்து
வளம் சுரண்டி
மண்ணுயிர் வற்றச் செய்கிறது
நிலம் புசித்து
உழவனின் உயிர்குடித்து
நரதாகம் தணிகிறது
அரசுத் துறைகளை நசித்து
இடஒதுக்கீட்டிற்குக் குழிபறித்து
விஷம் வைத்து
விளிம்பு நிலை மக்களை
வீதிக்குத் துரத்துகிறது
ஆங்கிலமே ஆளுமைமொழி
அறிவுமொழியெனப் பசப்பி
தாய்மொழி பேசுபவரைத்
தாழ்வு கொள்ள வைக்கிறது.
மதர்த்த பணத்தை மண்ணில் கொட்டி
வீடற்றவர்களாக்குகிறது
மேல்நாட்டு டாலருடன் மண்ணில் பண்பாட்டை
வன்புணர்ச்சி செய்கிறது
இத்தனைக்குப் பிறகும்
சிவப்புக் கம்பளம் விரித்து
வரவேற்றபடியிருக்கின்றனர்
மக்களின் காவலர்கள்.

Saturday, May 7, 2011

தும்பிகள் மரணமுறும் காலம்
யாழினி முனுசாமி

இளம் தலைமுறைக் கவிஞர்களில் கிராமம் சார்ந்த வாழ்வியலைப் பதிவுசெய்பவர்களில் முன்னணியிலிருப்பவர் கவிஞர் பச்சியப்பன். அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளிலும் கிராமத்தின் இழப்புகள், சிதைவுகள். அதன் உருமாற்றம் குறித்த பதிவுகளே இடம்பெற்றிருப்பினும் இந்தக் கட்டுரை நூல் ஊடாகவும் முழுக்க முழுக்கக் கிராமத்தையே பேசுகிறார். வடதமிழகத்தின் - குறிப்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்களையும் அம்மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்களையும் அதிகம் தாங்கி வந்திருக்கும் கட்டுரை நூல் இது. அம்மக்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்வியலைக் காட்சிப் படுத்துகிறது இந்நூல், என்றாலும், அனைத்துக் கிராமங்களையும் இந்தக் கட்டுரை நூலின் வழியாகக் காணலாம்.

Pachiappan மீண்டெழுதலை நோக்கமாகக் கொண்டு, வாழ்ந்த கதைகளையும் இழந்த கதைகளையும் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகச் சொல்லிச் செல்கிறார் பச்சியப்பன். வாசக மனதைச் சுண்டியிழுக்கும் எழுத்து நுட்பத்தைக் கைவரப் பெற்றவர் என்பதை அவரது கவிதைகளுடன் அறிமுக முள்ளவர்கள் நன்கு அறிவர். இந்த உரைநடை நூலின் மூலமாகப் புதிய வாசகர்கள் பலர் அந்த அனுபவத்தை அடைவர் என்பதை உறுதியாக நம்பலாம்.

ஒரு நிகழ்வை நாம் நேரில் பார்க்கும்போது ஏற்படும் தாக்கத்தை விட அதைக் கலை வடிவில் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாகிவிடுகிறது. கிராமத்தை நாம் நேரில் பார்ப்பதற்கும் அதைப் பச்சியப்பனின் எழுத்தில் காண்பதற்குமான வேறுபாட்டில் அந்தத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

கட்டுரை நூலை ‘படைப்பு’ என்று சொல்லலாமா என்றால், இந்நூலைப் பொறுத்தமட்டில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்நூலின் நடை அப்படி. கதைக்கும் கட்டுரைக்குமான இடைப்பட்ட, கதைக்கு மிகவும் நெருக்கமான நடையில் இந்நூல் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரக் கூடும். இத்தகையக் கட்டுரைகளைக் ‘கதைக்கட்டுரை’ எனும் புதிய வகைமையாகக் கூடக் கொள்ளலாம். இருபத்தைந்து கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ‘இது கிராமத்து உன்னதங்களின் வீழ்ச்சி குறித்த மனப்பதிவு’ என இந்நூலை வெளியிட்டுள்ள பொன்னி பதிப்பகம் அறிமுகப்படுத்துகிறது.

காலங்காலமாகக் குடியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபட முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கிராமத்தின் ஆன்மா. குடிப்பது நம் மரபு எனக் குடியைப் போற்றும் அறிவாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், குடிக்குத் தன் கணவனையோ, மகனையோ, அப்பாவையோ, சகோதரனையோ பலி கொடுத்தவர்களுக்குத் தானே தெரியும் குடியின் மகத்துவம்? இன்றும் நம் தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பது இந்தக் குடிதானே? முதல் கட்டுரையே இந்தக் குடியின் கொடூரத்தைப் பற்றித்தான். குடியால் கலகலத்துச் சிதைந்துபோன ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை காணாமல்போன ஈச்சங்கூடைகளைப் பற்றியும் கூடைப் பின்னி பிழைப்பு நடத்தியவர்களைப் பற்றியும் பேசுகிறது. இப்படித்தான் எல்லாக் கட்டுரைகளும் கிராமத்தின் ஏதோவொன்றைப் பற்றிப் பேசுகின்றன. நிலத்தடி நீரைப் பற்றி, வரப்புச் சண்டையைப் பற்றி, இயற்கை உரத்தைப் பற்றி, மரங்கள் பற்றி...

இன்னும் நிறைய சொல்லிச் செல்கிறார். அத்தனைக் கட்டுரைகளும் முந்தைய செழிப்பையும் இன்றைய அழிவையும் ஒப்பிட்டுச் சொல்லி வாசகர்களைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

“ வெட்டுக் குத்துனுதான் அலைவார்கள். ஆனால் ஆபத்து என்றால் ஒருத்தனுக்கு ஒருத்தன் கைகோத்துக் கொள்வார்கள். எதிரி கழனியென்றாலும் மாடுமேய பார்க்க மாட்டார்கள். ஓட்டிவிட்டுதான் மறுவேலை, குழந்தை அழுதால் சொல்லி விடுவார்கள்” (ப. 43) எனவும், “ ஆடோ மாடோ தன் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்க்கும் குடும்பங்கள் இருந்தன. விளைச்சலில் கூடு கட்டி இருந்தால் சுற்றியிருக்கும் கதிர்களை அறுக்காமல் விட்டுவிட்டு வருகிற மனசைக் கொண்டவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

உருட்டிவிட்டுப் போன பூனையை அடித்தால் பாவம்டா விட்டுர்றா என்பார்கள். அதனதன் வாழ்க்கையை அங்கிகரித்த பாசம் அவர்களுடைய தாக இருந்தது” (ப. 79) எனவும் கிராமத்து மனிதர்களின் இயல்புகளை அழகாகச் சொல்லிச் செல்கிறார். எருமையில் சவாரி செய்யும் சிறுவர்களும் ‘வாடா அண்ணா’ என்றழைக்கும் தம்பிகளும் சண்டைக்காகப் பிள்ளை பெற்று வளர்க்கும் பெற்றோர்களும் இந்நூல் நெருக உலவிக் கொண்டிருக்கின்றனர்.

கெடை, ஒணத்தி, சத்தமடித்தல், சுளுவு, மோழி, தரூசி, பெண்ணம்பெரிய, கமலைசால், தோட்டாவண்டி, சேடை, ந்தே... எனத் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிக்குரிய பல வட்டார வழக்குச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது. இது போன்ற வட்டாரச் சொற்களுக்கான பொருளை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். ஏனென்றால் ‘தும்பி’ என்பதே எல்லா மாவட்டத்துக்காரர்களுக்கும் புரியும் என்று சொல்ல முடியாது. தும்பியை ‘தட்டான்’ எனவும் ‘புட்டான்’ எனவும் வழங்குகின்றனர்.

‘மூழ்கி மரித்த கதை’, ‘நண்டு நாற்காலி ஏறுமா?’, ‘பொண்ணு பிடிச்சிருக்கா ராசா’, ‘இன்றிரவு நடத்தப்படும் நாடகம் யாதெனில்’, ‘மருந்து’ போன்ற கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். ‘தும்பிகள் மரணமுறும் காலம்’ என்பது கவிதை நூலுக்கான தலைப்பாக இருக்கிறது. ‘மரம்போல்வர் எம்மக்கள்’ எனும் கட்டுரைத் தலைப்பையே இந்நூலுக்கும் தலைப்பாக வைத்திருக்கலாம்.

கருத்து ரீதியாகச் சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. சிறுநிலவுடைமைச் சமூகப் பிரதிநிதியின் குரலாகப் பச்சியப்பன் குரல் ஒரு சில கட்டுரைகளில் ஒலிக்கிறது.

ஆட்டுக்கிடை மடக்குவதன் மூலம் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொண்டு, ‘கிடை’ மடக்கியவர்கள் கூலியாகக் குண்டான் நிறைய கூழ், சோறு, வெத்தலை, பொயலை, சுருட்டு, ஒரு ரூபாயோ காசு பெற்றுக் கொள்வதைச் சிலாகித்து எழுதுகிறார் (ப. 34). கூலி கேட்காமல் கூழ் குடித்துவிட்டுக் கொடுப்பதை வாங்கிக் கொண்டுபோனால் மகிழும் நிலக்கிழார் மனசு இதில் வெளிப்படுகிறது. வேறோர் இடத்திலோ கூலி கேட்டால் சலித்துக் கொள்கிறார்.

“வெள்ளம் காய்ச்ச ஆலை ஆடுவது என்றால் நாய் படாத பாடு. மாட்டுக்குச் சோகை வேண்டும் என்பதற்காக நிறைய பேர் கருப்பு வெட்ட வருவார்கள். அவர்களை வைத்தே கழனியிலிருந்து கரும்பை ஆலைகரைக்குத் தூக்கிவந்து விடலாம். இது மாடுகள் நிறைந்திருந்த காலத்தில் நடந்தவை. இப்பொழுதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் கூலி.” (ப. 57), “சரி, கரும்பு வேண்டாம். வாழைக்கு வருவோம். குழி எடுக்கக் கூலி. கன்று தோண்டக் கூலி. கன்றுக்குக் கூலி (ப. 57) என விவசாயக் கூலிகளுக்குக் கூலி கொடுக்கச் சலித்துக் கொள்ளும் மனம் இதில் வெளிப்படுகிறது.

சோறு போடவும் கூழ் ஊத்தவும் எல்லோருக்கும் மனம் வரும். ஆனால் கூலி கொடுக்கத்தான் மனம் வராது போலும். விவசாய வேலைகளுக்குக் கூலி கொடுக்கவும் புலம்ப வேண்டும்; கிராமத்து ஆட்கள் வேலை தேடி நகரை அடைந்தாலும் ‘அய்யோ! கிராமம் காலியாகிவிடுகிறதே’ என்று புலம்ப வேண்டும். நல்ல கிராமப் பற்று!

சமீபத்தில் கடலூரில் நடந்த உழவுத் தொழிலாளர்கள் மாநில மாநாட்டில் தோழர் ஆர். நல்லகண்ணு குறிப்பிட்ட சில செய்திகளை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “நவீன வேளாண்மை தொடங்கப்பட்டு அறுவை இயந்திரம் வந்துவிட்டது. நிலம் இல்லாத உழவர்கள் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... தமிழ்நாட்டில் ஆறுகோடி மக்கள் தொகையில் ஒரு கோடி பேர் உழவுத் தொழிலாளர்கள். இவர்களில் பாதிபேர் ஆதிதிராவிடர்கள்” (தமிழ் ஓசை, 2. 9. 07) என்கிறார் நல்லகண்ணு.

அறுவை இயந்திரத்தால் விவசாயக் கூலிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அவர்களின் வாழ்வாதார உரிமை பறிக்கப்படுகிறது. ஆனால், பச்சியப்பனோ, “ஏக்கர் கணக்கில் என்றால் அறுவை இயந்திரம் கொண்டு அறுக்கலாம்” (ப. 58) என அறுவை இயந்திரத்தை வரவேற்கிறார். அறுவடைக்கு ஆள்வருவதில்லை என்பதைக் காரணமாகச் சொன்னால், ஏன் வருவதில்லை என்ற கேள்விதான் எழுகிறது. பச்சியப்பனின் மொழியில் சொல்வதென்றால், கூலிப் பிரச்சினையன்றி வேறு என்னவாக இருந்துவிட முடியும்?

இந்நூல் கிராமத்தைப் பற்றிப் பேசினாலும் கிராமத்துச் சிக்கல்களை அரசியல் புரிதலுடன், விரிவாகவும் நுட்பமாகவும் பேசவில்லை. வாசகர்களின் மேலோட்டமான உணர்வுகளைக் குறிவைத்து எழுதப்பட்டிருக்கின்றது. இந்திய சாதிய அமைப்பைக் கிராமங்கள் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் சமூகப் பேராசிரியர்கள். சாதியம் பற்றியோ தலித் மக்களின் கலையான ‘பறை’ யின் அழிவு பற்றியோ இந்நூலில் எவையும் பதிவுகள் இல்லை.

இது கிராமத்து இனிய அனுபவங்களை அசைபோட நினைப்பவர்களுக்கான புத்தகம். கிராமத்து வாசகர்களுக்கான புத்தகம். அந்த அளவில் இந்தப் புத்தகம் ஒரு வெற்றிகரமான புத்தகம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தும்பிகள் மரணமுறும் காலம்
ஆசிரியர் : இரா. பச்சியப்பன்,
வெளியீடு: பொன்னி பதிப்பகம்,
2/1758, சாரதி நகர்,
என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம்,
சென்னை - 91, விலை : ரூ. 60.
 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

Previous post
Next post

பம்பைக் கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்




தமிழர் பண்பாட்டில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. திருவிழாக்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழர்களின் தொன்மைக் கருவியான “பறை” க்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப் படும் இசைக் கருவி பம்பை. பம்பைக் கருவியின் சிறப்புகள் குறித்தும் இன்றைய நிலையில் பம்பைக் கலைஞர்களின் வாழ்நிலை குறித்தும், பம்பை கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்........

1.வணக்கம். பம்பையின் சிறப்பினைப் பற்றிக் கூறுங்களேன்.
வணக்கம். பம்பை ஒரு மிக சிறந்த கருவி. இந்தக் கருவி சைவக் கடவுள்களுக்கு வாசிக்கும் ஒரு அருமையான இசைக் கருவி. பெரும்பாலும் நிங்கள் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பம்பை அடிப்பதைப் பார்க்கலாம்.

2.மற்ற தோல் கருவிகளுக்கும்; பம்பைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மற்ற தோல் கருவிகள் நல்லது கெட்டது என எல்லாவற்றிற்கும் உப யோகப்படுத்துவார்கள் ஆனால் பம்பையைத் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். அது மட்டுமல்ல; மற்ற கருவிகளை எந்தத் தோலில் வேண்டுமானலும் செய்வார்கள். ஆனால் பம்பையை ஆட்டின் தோலில்தான் செய்வோம்.

3.பம்பையின் துணைக் கருவிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
முதலில் உடுக்கைதான். அதனுடைய துணைக் கருவிதான் பம்பையும்; சிலம்பும். இந்த மூன்றையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு அருமையான இசை தோன்றும். அந்த இசையில் இறைவனே மயங்கி மனிதர்கள் மேலே ஆடி வருவார்.

4.பம்பை ஆட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக்க் கூறுங்கள்?
இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டாகும்.

தீப்பந்தாட்டம்:-
வாயில் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கையில் திப்பந்தம் வைத்து ஊதுவர்.

தண்ணீர்க்குடம்:-
ஒரு குடம் நிறைய தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அந்தக் குடத்தில் ரூபாய் நோட்டை வைப்பர். அந்தக் குடத்தைத் தனது வாயினால் தூக்கி தண்ணீரைத் தன் மேல் ஊற்றிக் கொள்வோம். பிறகு அந்த ரூபாய் நோட்டை எடுத்துப்போம்.

சோடாபாட்டில்:-
சோடா பாட்டிலைத் திறக்காமல் வைப்பர். அதை நாங்கள் வாயினால் திறந்து சோடாவைக் குடிக்குவிட்டுப் பிறகு அதை மூடிவிடுவோம் ஆனால் அந்த பாட்டிலைத் திறக்கக் கையைப் பயன்படுத்தக் கூடாது. கஷ்டமாக இருக்கும்.

கண்ணினால் ஊசியை எடுப்போம்; நெற்றியினால் செங்கல்லை உடைப்போம். இவற்றை யெல்லாம் செய்யும்போது எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் தான் மக்கள் ஒசிப்பார்கள். வெறுமனே பம்பை மட்டும் அடித்துக் கொண்டு போனால் ஒசிக்க மாட்டார்கள்.

5.உங்களுக்கு பம்பை செய்யத் தெரியுமா?
எனக்கு முழுமையாக செய்யத் தெரியாது.

6.எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் பம்பை அடிக்கிறார்களா? இல்லை வேறுபாடுகள் உண்டா?
கண்டிப்பாக வேறுபாடுகள் இருக்குது. இத்தொழிலை பரம்பரையாக, புர்விகமாக செய்பவரின் இசை ஒரே மாதிரி தான் இருக்கும். இடையில் வந்தவர்களால் சிறு வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு மலையனுரில் அடிப்பவர்கள் மீனவர்கள், அவர்களின் இசை வேற மாதிரியாக இருக்கும். அவர்கள் அடிக்கும் விதம் வேறு மாதிரியானது.

7.சென்ற தலை முறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் உள்ள ஒசனை எப்படி இருக்கிறது?
சென்ற தலைமுறையில் தான் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருந்த்து. முன்பு இருந்த ஒசனை வேறு, இப்போது இருக்கும் ஒசனை வேறு. அதனால் பம்பைக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டு தான் வருகிறது.

8.உங்களுடைய அடுத்த தலைமுறையினர் பம்பைக் கலையைப் பின்பற்றுவார்களா?
கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள். நான் என் சொல்றேன்னா, எனது தாத்தாவின் கலையை நான் பின்பற்றினேன். எனது கலையை எனது மகன் பின்பற்றுவான்.

9.பம்பையைக் கற்றுக் கொடுக்க ஏதேனும் பள்ளிகள் நிறுவனங்கள் இருக்கின்றனவா?
இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் எந்த நிறுவனமும் இல்லை. இனிவரும் காலங்களில் வரலாம் என நம்புகிறேன்.

10.பெண்கள் பம்பை அடிக்கிறார்களா?
இல்லை.

11.இனிவரும் காலங்களில் பெண்கள் பம்பை அடிக்க நேர்ந்தால் நிங்கள் ஏற்பீற்களா?
கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம்.

12.குறிப்பிட்ட சாதியினர் தான் பம்பை அடிக்க வேண்டுமா? அல்லது யார் வேண்டு மானாலும் அடிக்கலாமா?
முன்பு கோவில் புசாரி மட்டும் தான் பம்பை அடித்தனர். காலம் மாறும் போது இக்கலையின் மீது உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால், ஆனிசயால் வேறு சில இனத்தவரும் இக்கலையைக் கற்று இத்தொழிலை செய்கின்றனர்.

13.உங்கள் பிள்ளைகள் விரும்பினால் இந்தத் தொழில் செய்ய நிங்கள் அனுமதிப்பிர்களா?
அனுமதிப்பேன். அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்தால்; அவன் நல்வழியில் சென்றால் கண்டிப்பாக அனுமதிப்பேன். காலங்காலமாக இந்தக் கலை வாழவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பம்பைக் கலைஞர்களுக்கும் இந்தக் கலைக்கும் அங்கீகாரமும் மதிப்பும் கொடுத்து காக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்த்தின் கையில்தான் இருக்கிறது.

14.பம்பைக் கலைஞர்களுக்கும், பம்பை கலை வளர்ச்சிக்கும் தமிழக அரசு எத்தகைய திட்டங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறிர்கள்?
இக்கலை வளர எங்களுக்கு என்று ஒரு தனிச் சங்கம் அமைக்க வேண்டும். அதில் உறுப்பினராக எல்லாப் பம்பைக் கலைஞர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். பம்பைக் கலைஞர்களுக்கென்று தனி வாரியம் அரசு அமைக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசு இசைக் கல்லூரிகளிலாவது பம்பையை ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

15.ஆர்வமுடைய இளைஞர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால் பம்பை இசைக் கருவியை வாசிக்கக் கற்றுத் தருவீர்களா?
உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும் அதுவே இக்கலை மீது ஈடுபாட்டை உண்டாக்கும். நிங்கள் கற்றுக் கொள்ளத் தயராக இருந்தால் நான் சொல்லிக் கொடுக்கத் தயாராக இருக்கேன்.

16.எல்லா கோவில்களிலும் பம்பை அடிப்பீர்களா?
இந்து மதக் கடவுள் அனைவருக்கும் இதை வாசிப்போம். அம்மன்; சிவன்; முருகன்; காவல் தெய்வங்கள் போன்றவர்க்கு இசைப்போம். வைணவக் கோயில்களில் இசைக்க மாட்டோம்.

17.எத்தனைத் தலைமுறையாகப் பம்பை அடிக்கிறீர்கள்?
இது ஒரு நகைச்சுவையான கேள்வி, எங்களது பரம்பரை தொழிலே இது தான்.

18.எப்படி இந்தக் கலையில் ஆர்வம் வந்தது.?
இந்த ஆர்வம் பிறப்பிலிருந்துதே இருந்த்து. எனது தந்தை, தாத்தா போன்ற முன்னோர்களின் இசையைக் கேட்டு கேட்டு எனக்கும் ஆர்வம் தானாகவே வந்துவிட்டது.

19.வருமானம் எப்படி இருக்கிறது?
வருமானம் கிடைக்கிறது. ஆனால் அன்று கிடைப்பது அன்றே செலவாகிவிடும். மறு நாள் வேறு ஏதாவது வேலைக்குச் சென்றால் தான் எங்களது பிழைப்பு நடக்கும். அந்த அளவில்தான் இப்போதைக்கு இந்தத் தொழில் உள்ளது.

20.முழு நேரத் தொழிலாக இதைச் செய்ய முடியாதா?
செய்ய முடியாது. இத்தொழிக்கு என்று ஒரு சீசன் உண்டு, ஆடி, மாசி, சித்திரை போன்ற மாதங்களில் வேலை தொடர்சியாக இருக்கும். மற்ற மாதத்தில் ஒன்றோ இரண்டோ தான் வரும்.

கிராமங்கள் இருக்கும்; மக்கள் இருப்பார்கள்;
கோயில்கள் இருக்கும்; மதம் இருக்கும்;
வழிபாடும் இருக்கும்;
ஆனால்..........
இந்தக் கலை இருக்குமா?
காலந்தான் பதில்சொல்ல வேண்டும்
நன்றி. வணக்கம்
நேர்காணல் உதவி; சுகுமார்

nandri : thadagam.com
இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
யாழினி முனுசாமி

சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல்.

மனித குல வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் உலகந் தழுவிய வளர்ச்சியின் காரணமாக பல புதிய துறைகள் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, ஒப்பாய்வு, இலக்கிய ஒப்பீடு அல்லது ஒப்பிலக்கியம் என்றும் ஆய்வு முறையைத் தொடங்கி வைத்தவர் பேராசிரியர் சாட்விக் என்பர். பிரான்சு நாட்டின் சிந்தனை மரபில் தோன்றியது. இன்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளிலும் பரவி தனித்துறையாக நிலை பெற்றுள்ளது. இத்துறை ஆய்வுகள் தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வரிசையில் அ.அ. மணவாளன் ‘இலக்கிய ஒப்பாய்வு: காப்பியங்கள் எனும் ஒப்பாய்வு நூல் முக்கியமானது.

288 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ தொடங்கி, ‘தமிழ்க் காப்பிய மரபில் கவியோகி சுத்தானந்தரின் இடம்’ கட்டுரை வரை 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலிலிருக்கும் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ எனும் முதல் கட்டுரையில், காப்பிய இலக்கணம் குறித்தும் தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் குறித்தும் வடமொழி காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம், கிரேக்கக் காப்பியங்களான இலியதம் (LLiad) ஒடிசி (Odyssey) இலத்தின் காப்பியமான ‘ஈனிட்’ ஆகிய முதற்காப்பியங்களின் பாவிகம் (கருத்து, குறிக்கோள்) மற்றும் தலைமைப் பாத்திரங்களின் பண்பு பயன் குறித்தும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி பிறமொழி முதற்காப்பியங்களின் மையக் கருத்தை நம்மால் உய்த்துணர முடிகிறது. அக்காப்பியங்களைப் படிக்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனையே ஒப்பாய்வின் வெற்றியாகக் கொள்ள முடியும்.

வெவ்வேறு மொழிப் பண்பாட்டு காப்பியங்களின் கதைச் சுருக்கங்களும் தலைமைப் பாத்திரங்களின் குணநலன்களை ஒப்பிடும் வாசிப்பில் விறுவிறுப்பும் கூட்டுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இந்நூலுக்குப் பெரிதும் வழிகோலியிருக்கிறது. அவ்வகையில், கம்பராமாயணத்தை மில்டனின் ‘இழந்த சுவர்க்கம் மீண்ட சுவர்க்கம்’ காப்பியங்களுடன் ஒப்பாய்வு செய்திருப்பதை முக்கியமானதாகக் கூறலாம். கி.மு. (70-19)வில் வாழ்ந்த வெர்ஜில் இயற்றிய இலத்தின் மொழியின் ஆதி காவிய ஏனதம் (AENEID). இக்காப்பியத்தின் நாயகன் ஏனியஸ். இவனுடன் இராமனை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார். தனக்கு நேரடி எதிரியல்லாத வாலியை மறைந்திருந்து கொன்றதால் ஏற்பட்ட இக்கட்டான நிலைபோல ஏனியாஸீக்கும் ஏற்பட்டிருப்பதை விளக்குகிறார். ஒப்பற்ற ரோம் நகரை உருவாக்கும் ஏனியஸின் குறிக்கோளுக்கு உதவிய டர்னஸ் என்பவனை கொன்றுவிடும் இக்கட்டான சூழலை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார்.

‘சிலப்பதிகாரம் ஒரு பெண்ணிய நோக்கு’ கட்டுரையில் சிலப்பதிகார ஆணாதிக்கக் சொற்களை வெளிக்காட்டியிருக்கிறார்.

‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே / காசறு விரையே கரும்பே தேனே’ - எனவும் இன்னபிறவுமாய்க் கோவலன் கண்ணகியைப் பாராட்டுவது, பெண்ணை ஆணுக்குரிய நுகர்பொருளாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார். இப்படிச் சிலம்பை மறுவாசிப்பு செய்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள், அமெரிக்காவிலுள்ள இந்தியானா, கொலம்பியா பல்கலைக் கழகங்களில் நிகழ்ந்த கருத்தரங்குகள் ஆய்வரங்குகள், பணிப் பட்டறைகள் போன்றவற்றில் படித்தளித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கும், டாக்டர் அ.அ. மணவாளன் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் இலக்கியங்களிலும் புலமை உடையவர் என்பதால் தமிழ், வடமொழி, ஆங்கிலக் காப்பியங்களைத் திறம்பட ஒப்பாய்வு செய்ய முடிந்திருக்கிறது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் காணப்படும் மகாபாரதச் செய்திகளையும் ஆய்ந்திருக்கிறார். மகாபாரதப் போரில் இருசார் வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்த வள்ளல் என்று சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியதை பின்வரும்
‘ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் / பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!’ - எனும் புறநானூற்றுப் பாடல்வழி எடுத்துக் காட்டியுள்ளார். இப்படிச் சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல் இது.

இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
ஆசிரியர் : அ.அ. மணவாளன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098, விலை : ரூ. 100.00.


 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

புத்தக விமர்சனம் - குரலற்றவனின் குரல் ( தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதைகள் )


ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலம்



கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா - பாட்டிகளின வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரலர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ என்னவோ! நமக்கு ஓரளவிற்கு வாய்த்திருந்த்து ஆனால். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தாத்தாவோ பாட்டியோ தன் பேரப்பிள்ளைகளுக்கு. தான் சாதி ரீதியாக அனுபவித்த கொடுமைகளைக் கதைகளாகவேனும் சொல்லியிருப்பார்களா? இது நமக்கு மூத்த தலைமுறை வரையிலாக தொக்கி நின்ற கேள்வி. துன்பத்தைக் கதைகளாகக்கூட வெளிப்படுத்த முடியாத சூழலைத்தான் அற்றைச்சமூகம் அவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆயினும், தற்போது பெருகி வருகிற தலித்திய படைப்புகளும், சிந்தனைகளும் அனறைய தாத்தாக்களின் நிலை இன்றைய பேரர்களுக்கு இல்லை என்பதை ஓரளவிற்கு உணர்த்துகின்றன.

கேள்வி அனுபவத்திலிருந்து எழுதகிறேன் என்றில்லாமல், பட்ட பாடத்திலிருந்து படைப்புகள் உருவாகின்றன என்ற தலித்திய எழுத்தாளர்களின் இன்றைக்குமான வாக்குமூலங்கள் நாகரிக சமூகத்தின்(!) முகத்தில் உமிழ்வதாகத்தான் இருக்கிறது. பட்டனுபவம் நல்லவற்றிற்கு இருக்கலாம், சமூக அவலங்களுக்கு இருக்கக்கூடாது. ஆனாலும் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகக்கூட பேசப்பட முடியாத தங்கள் முன்னோர்களின் அவலங்களை, நிகழ்கால நடப்புகளை, பதிவுகளாக்கி படைப்புகளாகத் தரும் தற்காலச் சூழல் தலித்திய மறுமலர்ச்சியாகவே தோன்றுகிறது.

தலித்தியம் சார்ந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. தலித்திய ஆய்வுகளும் தம் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளன. என்.டி.ராஜ்குமார், அழகிய பெரியவன், விழி.ப. இதயவேந்தன, ரவிக்குமார், சிவகாசி போன்ற பலர் தங்கள் படைப்புகளில் தலித்தியத்தை ஆழமாகவே பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், தலித்திய படைப்புகள் ஏதேனும் ஒரு பொருண்மையில் தொகுப்பாக வெளிவந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக சிறுகதைகள். இச்சூழலில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறந்த தலித்திய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் யாழினி முனுசாமி. “குரலற்றவனின் குரல்” தேவையான, வரவேற்கத்தக்க சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 31 சிறுகதைகள் 31 எழுத்தாளர்களால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டு, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. கவிதைகளையோ சிறுகதைகளையோ தொகுப்பவர்கள் தங்களுகென்று ஓர் அரசியலைக் கொண்டிருப்பர். ஆனால், “சிறந்த தலித்திய சிறுகதைகள்” என்ற அரசியலை மட்டுமே கையாண்டு இத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர். படைப்பாளர்களுள் பலரை முன்பின் அறியாவிட்டாலும், கதைகளின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்பட்டிருப்பது தொகுப்பின் பலம். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமன்றி, இலங்கை, டென்மார்க், மலேசியா, ஜெர்மனி, மும்பை என நாட்டின், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இயங்கும் எழுத்தாதளர்களின் தலித்தியம் சார்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தொகுப்பின் பரந்த நோக்கினைக் காட்டுகிறது. கதைகளைப் படிக்கும்போது, உலகெங்கிலும் எது இருக்கிறதோ இல்லையோ சாதியக் கொடுமை என்ற அவலம் இருப்பதை வேதனையோடு உணர முடிகிறது.

மேல்நிலையாக்கத்தால் தன் அடையாளத்தை இழந்து உருமாறிப்போன சிறுதெய்வங்கள் பற்றிய பதிவை “அடையாளம்” சிறுகதை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மேல்நிலையாக்கம் என்பது தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமும் சந்தித்த சந்திக்கிற அடையாள அழிப்பு என்பதை உணர வேண்டும். இதேபோல, தேனீர் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கென இருந்த தனிக குவளை முறை, அதை எதிர்த்து நடந்த போராட்டம், பாரதி விரும்பிய சாதி ரீதியிலான சுதந்திரம், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் படிப்பைத் தொலைக்கும் பழங்குடியின மாணவர்கள், பல இன்னல்களுக்கு இடையில் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டு, படிப்பைப் பாதியில் இழக்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள், தேர்தல் கால சிக்கல்கள், உறவுசிலைச் சிக்கல்கள் போன்ற பல சமூக அவலங்களைத் தொகுப்பின் சிறுகதைகள் படம்பிடிக்கின்றன. ஒவ்வொரு சிறுகதைகள் ஒரு குறும்படக்கிற்கான கூறுகளோடு அமைந்துள்ளது சிறப்பு ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலத்தை அவனுடைய குரலிலேயே அச்சுபிசகாமல் பதிவு செய்திருக்கும் “குரலற்றவனின் குரல்” பல்கலைக்கழகங்களுக்குப் பாடமாக வைக்கும் எல்லா தகுதிகளோடும் வெளிவந்திருக்கிறது. சமூகச் சிந்தனையாளர்களும், தலித்திய ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வாங்கி படிக்கவேண்டிய, குறிப்பு நூலாகப் பாதுகாக்க வேண்டிய நல்ல தொகுப்பு.


நன்றி : தடாகம்.காம்

Wednesday, May 4, 2011

என் கவிதை - குழந்தைமையிடம் பொய்யுரைக்காதீர்

ரபலியிடும் சாமியாருக்குத் தெரியும் 
குழந்தைப்பேறு வேண்டிவரும் 
பேதைப் பெண்ணை வஞ்சித்துப் புணரும் 
சாமியாருக்குத் தெரியும் 
உண்டியல் பணத்தில்
பொய்க் கணக்கு காட்டும் 
குருக்களுக்குத் தெரியும்
கன்னியாஸ்திரியை வன்புணர்ச்சி செய்யும் 
பாதிரியாருக்குத் தெரியும் 
ஆசிரமத்தைக் காமச் சுரங்கமாக்கும் 
ஆனந்தாக்களுக்குத் தெரியும் 
தர்காவுக்கு வருபவர்களிடம் 
மந்திரித்துப் பணம் பறிப்பவருக்குத் தெரியும்
கருவறையில் காமுகனாக உருமாறும் 
அர்ச்சகருக்குத் தெரியும் 
'தொழில் ' சேவை புரியும் 
மாது அதிபர்களுக்குத் தெரியும்
நடிகையை பூஜித்தனுப்பும் 
இளந்துறவிக்குத் தெரியும் 
கணக்கு கேட்கும் நிர்வாகியின் 
' கணக்கை முடித்துவிடும் '
மடாதிபதிக்குத் தெரியும் 

...............................தெரியும்
.................................தெரியும்
..................................தெரியும் 

'தவறு செய்பவர்களின் கண்ணை 
சாமி குத்தாது' என்பது.
-------------------------------------------------------










Wednesday, April 27, 2011

ஏப்ரல் 23 : உலக புத்தக தினம் -எஸ் .வி. வேணுகோபாலன்

இல்லங்கள் தோறும் வாசிப்பின் கொடியை
உயர்த்திக் கட்டுவோம் 
                                                                                        - எஸ்.வி. வேணுகோபாலன் 

ரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு.  புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான - தொடர்வினை உருவாக்குகிற - தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது.

புத்தகங்கள், அவற்றை எழுதுபவரது  மனசாட்சி ஆக இருக்கலாம், ஆனால் அது வாசிப்பவரின் குரலில் கேட்கிற மாயாஜாலம் நிகழ்கிறது. கைகளால் விதைப்பாடு செய்வதைக் கண்களால் அறுவடை செய்கிறோம், அது என்ன என்று வழங்கும் குழந்தைகளுக்கான புதிர் சொல்வது போல நூதன அனுபவம் வாசிப்பு.  குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டிய சத்துணவு, வாசிப்பின் அருமை.  தங்களைப் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்கும் குழந்தைகள் செய்யத் துடிக்கும் முக்கிய வேலைகளில் இந்த வாசிப்பு இருப்பதை, 'தத்தக்கா புத்தக்கா' என குழந்தைகளின் மழலைச் சொல் கேட்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். 

நூலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற (சீர்காழி) எஸ் ஆர் ரங்கநாதன் (1892 -1972) அவர்கள் புத்தகங்களை மாட்டு வண்டியில் வைத்து சிற்றூர்களுக்கு எடுத்துப் போய் சாதாரண மக்களிடையே வாசிப்பின் இன்பத் திளைப்பை ஊட்டினாராம். தமது  புத்தகங்கள் மண்ணெண்ணையை விடவும், தீப்பெட்டிகளைவிடவும் மலிவான விலைக்கு மக்கள் கைக்குச் சென்று சேர வேண்டும் என்ற மகாகவி பாரதிக்கு, மக்களிடையே கனல் மூட்டும் நோக்கம் இருந்ததை இந்த வாக்கியம் விளக்குகிறது.  ஓர் அரிய அறிவுஜீவியோடு உரையாட நேர்ந்தால் அவர் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேள் என்கிறார் அறிஞர் எமர்சன்.  நம்பிக்கை உலகின் வாசல் திறப்பாகப் புத்தகங்கள் இருக்கின்றன.  இருளைப் போக்குவதாக மட்டுமல்ல, சோர்வின் உடைப்புக்கும், சோகத்தினின்று ஆறுதலுக்கும், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுக்கும்..... நூல்கள் எத்தனை எத்தனை வல்லமையைத் தேக்கிக் கொண்டு அடக்கமான கையிருப்பாக இருக்கின்றன. 

ஆன்மீக அன்பர்கள் வாசிக்க இலகுவான சிறு சிறு வாழ்த்துச் செய்யுள்கள், பதிகங்களை அச்சிட்டு குடும்ப நிகழ்வுகளின் போது வழங்கும் மரபு உள்ள நமது சமூகத்தில், அண்மைக் காலமாக வாசிக்கத் தக்க பல சிறு நூல்களை முற்போக்கு எண்ணம் கொண்டோர் பலர் தமது இல்ல நிகழ்ச்சிகளின் போது தாம்பூலப் பையில் வைத்தோ, அதுவே தாம்பூலமாகவோ அளித்து வரும் பாராட்டுக்குரிய நிகழ்வுகள் பெருகி வருகின்றன.  மிக அரிய விவாதப் பொருள்களைக் கூட எளிய எழுத்துக்களாய் மலிவான விலையில் நூலாக்கம் செய்து வரும் பாரதி புத்தகாலயத்தின் பங்களிப்பு இந்த முயற்சிகளுக்கு மிகப் பெரிய தூண்டுகோலாயிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.  திருவிழாக்களுக்குச் சென்று வருகிற உள்ளக் களிப்போடும், கம்பீரத்தோடும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடி வருவதும் களிப்புற வைக்கும் செய்திகளாகும்.  

உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினமான (நினைவு தினம் என்றும் கூறப்படுகிற) ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப் படுவது வாசிப்பின் கொடியை தமது வீடுகளில் உயர்த்திக் கட்டியிருப்பவர்களுக்கு உவகை ஊட்டுவதாகும்.  எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்லப்படுகிற இந்த ஏப்ரல் 23 , ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாநிலத்தில் புனித ஜார்ஜ் தினம் என்று அழைக்கப்படுவதாகும்.  அன்றைய தினம் காதலுக்கான அடையாளமாக நூல்கள் ரசவாதம் புரியும் அற்புதம் ஆண்டுதோறும் நிகழ்கிறது.  காதலன் வழங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களுக்கு ஈடாக, பதிலுக்குக் காதலிகள் நூல்களைப் பரிசளித்துத் தங்களது இதயத்தை அதோடு சேர்ந்து ஒப்படைத்து விடுவார்களாம்.  வீதிகள் எங்கும் ஆங்காங்கு தற்காலிகக் கடைகள் போட்டு புத்தக விற்பனையும், ரோஜா விற்பனையும் அமோகமாக நடக்குமாம்.  நாளின் முடிவில், நாற்பது லட்சம் பூக்களும் எட்டு லட்சம் புத்தகங்களும் கை மாறி இருக்குமாம்.  கையில் ரோஜா ஏந்திச் செல்லாத பெண்ணையே பார்க்க முடியாத அந்த நாளில், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் பாதி அளவு அந்த ஒரு நாளிலேயே நடந்திருக்குமாம். 

எந்தப் புத்தக தினத்தின் போதும் என்னால் மறக்க இயலாத ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.  அந்த மனிதரின் கதை போல் என்னை வாசிப்பை நோக்கி எப்போதும் ஈர்க்கத் தக்க இன்னொரு செய்தி இதுவரை கிடைக்கவும் இல்லை. டாக்டர் டார்செம் என்கிற அந்த அற்புத எழுத்தாளர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருபத்து நான்கு புத்தகங்களுக்கு மேல் எழுதியும் தொகுத்தும் வழங்கியிருப்பவர்.  உலக பஞ்சாபி எழுத்தாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ அபார வெற்றி பெற்று இயங்கியவர்.  இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாவட்டப் பொருளாளர்.  சாகித்திய அகாதமி குழுவில் பணியாற்றியவர்.  ஆனால், கண் பார்வை அற்றவர்! 

பிறவியில் இருந்தே படிப்படியாகக் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருந்ததைச் சிகிச்சைகள் பல மேற்கொண்டும் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்று உணர்ந்த பதினான்காம் வயதில் அவர் படித்துக் கொண்டிருந்தது, ரஷ்ய புத்தகம் ஒன்று.  'வீரம் விளைந்தது' என்ற மகத்தான அந்தப் புதினத்தைப் படைத்த  நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி அவர்களும் பார்வையற்றவர்தான்.  வேக வேகமாக வாசித்து முடித்த அந்த நூலில் இருந்து கிடைத்த பெரும் உத்வேகமும், தன்னம்பிக்கையும், வாழ்வின் ஒளியும் டார்செம் அவர்களை அதற்குப் பின்னர் பஞ்சாபி, இந்தி, உருது மூன்று மொழிகளிலும் முனைவர் பட்டம் பெற வைத்தது.  மூன்று மொழிகளிலும் எழுத்தாக்கன்களைப் புனைய வைத்தது.  கடந்த ஆண்டு, அவரது தன் வரலாற்றை "திருதராஷ்டிரன்" என்ற பெயரில் நூலாகவும் ஆக்க வைத்திருப்பது, இந்த வாசிப்பின் விளைச்சல் தான்!  

அடுத்தடுத்த தலைமுறைக்கும் வாசிப்பின் பெரும் பரிசை உணர்த்தும் இந்த உற்சாகச் செய்திகளோடு விடியட்டும், இந்த புத்தக தினமும்.  

************
நன்றி: புதிய ஆசிரியன்: ஏப்ரல் 2011



Monday, April 11, 2011

book review : ‘உதிரும் இலை ’- பச்சியப்பன்



அளவில் சிறியதெனினும், நேசத்திற்குரிய உள்ளங்கை பற்றி மலைவழியில் இறங்கி நடப்பதான அனுபவம் தருகிற தொகுப்பு. பிறந்த ஊரின் நினைவு வேலைபார்க்கும் இடத்தின் எதிரொலி, குழந்தை, தன்னியல்பில் மாறிப்போன அம்மா, கரிசன மனைவி, உதிர்ந்த இலை, கல்குவாரிமலை, அலறி வீழ்ந்த பறவை, ரயில் அனுபவங்கள், சாலையோரத்தில் வீழ்ந்து கிடந்த குடிகாரன், குடியால் நிர்க்கதியாய் விட்டுப்போன அப்பா, விலைபோகாத கருப்புமாடு என நீளும் விதவிதமான கவிதைப் பாடுபொருள்களைக் கொண்டது இத்தொகுப்பு.

Yazhini Munusamy's book 'Uthirum Ilai' நேரடியாகவும் சில கவிதைகள் பேசுகின்றன, மறைமுகமாகவும் இயங்குகின்றன சில புலம்பலும் உண்டு. நம்பிக்கையும் உண்டு. எடுத்தெரியவும் செய்கிறார் கொண்டாடவும் செய்கிறார். ஜனத்திரளுக்கான அரசியலும் பேசுகிறார். திண்ணையில் நடைபெறும் நாலாந்தர பேச்சுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். காதல் உண்டு, நட்பு உண்டு. நிர்க்கதியாய் விட்டுப்போய் பல்லிளிக்கும் மனிதர்களும் கவிதைகளில் உண்டு. கடந்து வந்த பாதையில் தென்பட்ட அனைத்தையும் எழுத்தாக்கும் கலை முனுசாமிக்கு கைவந்திருக்கிறது. நவீன கவிதை என்பது நவீன வாழ்வை எதிர்கொள்வது? அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்தொகுப்பில் உள்ள ‘இதோ என் நோக்கியா’கவிதையைச் சொல்லலாம்.

பழக்கப்படுத்தப்பட்ட ஆண் தன்மையை குற்றவுணர்ச்சிக் குள்ளாக்குகிற கவிதை ‘தூக்கம் தளும்பும் உன்னை’ எனத் தொடங்கும் கவிதை. பிரிதொரு மனிதரில் நின்று கொண்டு தன்னை விமர்சனம் செய்து கொள்ளுகிற உத்தியை இந்தக் கவிதையில் கையாண்டிருக்கிறார். இதனுடைய கவிதை மொழி ‘இச்சைமொழிப் பேசி ஆழ்ந்துறங்கி’என செதுக்கிய சொற்களாலும் ஆனது, “லன்ச்”சும் கட்டிக் கொடுத்து என்கிற பாலிதீன் உறைகளாலும் ஆனது.

மழைக்கால மாலை நேரத்தில் மேய்ச்சல் காட்டில் கட்டறுந்து ஓடும் இளம்கன்றின் துள்ளலென தன்போக்கை தானே தீர்மானித்து ஓடும் கவிதை நடையை கவிஞர் கொண்டிருக்கிறார். எனக்கு இப்படித்தான் சொல்லத் தெரியும் என்பது போல. இதற்கு எல்லா கவிதைகளும் உதாரணம்.

சிலைசெய்து கடைசியில் கண்ணைத் திறப்பது போன்ற உத்தி சில கவிதைகளில் உண்டு. கல்லூரியைப் பற்றி அழகாகச் சித்திரித்து விட்டு கடைசியில் ‘எப்போதும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள் முதல்வர்கள் ஒருபோதும் வயதாவதேயில்லை வகுப்பறைகளுக்கு மட்டும்’என்று அக்கவிதை முடிகிறது. அதேபோல மலையைப் பற்றி அதன் சிதைவு பற்றி சொல்லி விட்டு கடைசி வரியில் ‘எரிமலைகளை யாரும் நெருங்குவதில்லை’என்று மற்றொரு கவிதை முடிகிறது. இப்படி கடைசி வரியில் சாவியை வைக்கிற உத்தியை நிறைய கவிதையில் கையாண்டிருக்கிறார். அந்த வரிகளிலிருந்து தொடங்குகிற ஆழமான பொருண்மையைப் பொதிந்து வைத்திருக்கிற நுட்பமான பணியையும் செய்கிறார்.

அதேபோல, நாற்று நடுவது மாதிரி தொடக்கமும் முடிவும் அர்த்தப்படுத்தி செய்யப்பட்டுருக்கிற கவிதைகளும் உண்டு. எல்லா மூளையிலும் ஒரே மாதிரியாக பச்சை கட்டி நிற்கிற பயிர்மாதிரி. எதுவும் எதாலும் உயிர் வாழாமல் ஆனாலும் ஒரே கழனியில் இருப்பது போல சில கவிதைகளும் உண்டு. இதற்கு ஒரு உதாரணம் ‘அரிதாகவே நேர்கின்றன’எனத் தொடங்கும் கவிதை.

இரயில் பயணத்தில் நேரும் அனுபவத்தை, குறிப்பாக பிச்சைக்காரர்கள் பற்றிய கவிதைகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக இருப்பது அதன் சிறப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கவிதையில் ஒன்று ‘அவன் அமர்ந்திருக்கும் சிம்மாசனம் அப்படி’எனத்தொடங்கும் கவிதை. மனிதனின் கயமைத்தனத்தை, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெருமுயற்சியில் வெளிப்படும் கீழ்மையைப் பேசுகிற கவிதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்கிற அடித்தட்டு மக்களின் போர்முழக்கம் நமதாக இருக்கும்போது ஆளும் வர்க்கத்தின் நாற்காலி போட்டியை இக்கவிதை பேசுகிறது. சமூக நீதிக்கான செயல்பாடாக ஒன்று செயல்படும்போது, மற்றொன்று தனிமனித வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஒரு செயல்பாடு பொது நலம் சார்ந்து இயங்காதபோது, அது எத்தகையதாக கருதப்படுகிறது என்பதற்கு இக்கவிதை உணர்த்தும் செய்தி சான்று. இக்கவிதை ஒரு அலுவலக ஊழியனுக்கு ஒரு பொருள்தரும். அரசியல்வாதிக்கு ஒரு பொருள் தரும். இதுதான் இந்த கவிதையின் வெற்றி எனத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ‘வனத்தின் திசைகளில்’என்ற கவிதையில் கவிஞர் உள்வைத்த ரகசியத்தை வாசகன் விளங்கிக் கொள்ளாமல் போகிற ஆபத்தும் நேர்ந்திருக்கிறது. மறைமுகமாக பேசப்படும் கவிதையில் இரண்டும் நேரலாம் என்பதற்கான உதாரணங்கள் இவை.

நகரத்தின் சகல கொடூரங்களையும் சில கவிதையில் உணர்த்துகிறார் கவிஞர். பிச்சையிடாமல் பாவனை செய்யும் பயணியில் இருந்து, திருமணங்களில் பின்பற்றப்படும் போலி ஆடம்பரங்களில் இருந்து, வாகனவோட்டிகளைக் குறித்த அச்சத்தோடு உருளும் மிதிவண்டிப் பயணத்திலிருந்து, தாமதமானால் சிதையும் ஒரு நாளைக்கான உணவிலிருந்து நிறையவே நகரத்தின் கொடுமையை இவர் கவிதைகளின் வழியே உணரலாம். சீலகமில்லாத கிராம மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால் வினோதம் என்னவெனில் இந்த விஷயங்களுக்கு முரணாக ‘காக்கை குருவி’ எனத் தொடங்கும் கவிதை எழுதியிருக்கிறார். இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யம் ஒரு இடதுசாரி அரசியல் எழுத்தாளன், தனிமனித துரோகங்களுக்குப் புலம்பி இருப்பதும்.

வாழ்க்கை என்பது வினோதமானது. தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு குதூகலிப்பதற்கும், இறந்த தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு மௌனமாய் வயலுக்குப் போவதற்குமான பெருத்த இடைவெளி உண்டு. அந்த இடைவெளியில் இயங்குகிறது, இந்தக் கவிதை தொகுப்பு.

உதிரும் இலை
ஆசிரியர் : யாழினி முனுசாமி
மித்ரா வெளியீடு (டிசம்பர் - 2005),
32/9, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 24,
விலை : ரூ. 35/-  cell: 9841 374 809

matruppathai - யாழன் ஆதி

பூந்தோட்டம் வளர்த்த என்னை
பெருங்காட்டில் தள்ளிப் போகிறீர்கள்
ஞானம் பெற்றுத் திரும்புவேன்
அப்பெருங்காட்டிலிருந்து
வுத்தக் கூறின் தொன்மையுடன் மிளிரும் இந்தக்கவிதை, வாசகனுக்குப் பல சாளரங்களைத் திறக்கிறது. எளிமையான சொற்களாலான, பல்வேறு பரிமாணங்களைத் தரக் கூடிய இக்கவிதையை எழுதியவர் யாழினி முனுசாமி. வாழ்வின் அடர்ந்த இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சங்களை விழிகள் சுவைக்கும் ஒரு தலித் வாழ்வின் மனவெளியை அப்படியே பதிவு செய்வது, யாழினி முனுசாமியின் கைவண்ணம். அவருடைய முதல் தொகுப்பு "உதிரும் இலை.' கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கிய விமர்சகர், பதிப்பாளர் என்ற அடையாளங்களுடன் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணிபுரியும் இவர், "முரண்களரி' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.
கிராமத்து வாழ்விலிருந்து புலம் பெயர்ந்து, நகர வாழ்க்கைக்கு வரும் மக்களுக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கின்றன. கிராமத்திலிருந்ததைப் போன்ற அகன்ற வாசல்களோ, இயற்கை தரும் தூய்மையான காற்றோ நகரத்தில் இல்லை. ஆனால் மிக முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. அதைத் தன் கவிதையில் மிக லாவகமாகப் பதிவாக்குவார் யாழினி முனுசாமி. நகரத்தின் மீது பிறர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே வந்து, கடைசியில் ஊருக்கு வெளியே/எங்களை ஒதுக்கி வைத்திருக்கும்/உங்கள் கிராமங்களைவிட/அன்பானதாய் இருக்கிறது இந்நகரம்'' என்று முடிப்பார்.
செய்யாறு வட்டம் மோரணம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் யாழினி முனுசாமி. நாடகத்திற்குப் பெயர் பெற்ற ஊர் செய்யாறு. அங்கு நடந்த நாடகங்கள், கலைத்தன்மை மிளிரும் பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் திருவிழாக்காலங்களில் காணக் கிடைக்கும் இன்னபிற கலைவடிவங்களை இளம் வயதிலேயே மனதில் பதிய வைத்ததும், சிறு வயதில் அவருடைய பாட்டி சொன்ன கதைகள் அவருள் ஆழப்பதிந்ததும் கலைமேல் தனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று சொல்கிறார்.
தொண்ணூறுகளில் சென்னையில் முதுகலை படிக்க வந்தவர், நிறைய இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகப் பங்கேற்று வந்திருக்கிறார். சிற்றிதழ்களை வாசித்திருக்கிறார். அப்போது வெளிவந்த "பழையன கழிதலும்' என்ற சிவகாமியின் நாவல், அவரை நவீன இலக்கியத்தின் பக்கமும் தலித் இலக்கியத்தின் பக்கமும் திருப்பியிருக்கிறது. மார்க்சியவாதிகளுடனான நட்பும் வாசிப்பும் அவரை மார்க்சியத்தில் பற்றுடையவராக மாற்றி விட்டது.
கொள்கையில் நேர்மையாக இருக்கின்ற சிலரைத் தவிர, மேம்போக்காக மார்க்சியம் பேசுபவர்கள் சாதியவாதிகளாகவே இருக்கிறார்கள். தலித் தோழர், வன்னிய தோழர் என்று பிரித்துப் பேசுவார்கள். நாம் மார்க்சியவாதிகளாக இருந்தாலும் நம்மை அவர்கள் மார்க்சியவாதிகளாகப் பார்ப்பதில்லை. எப்படியாவது நம் சாதியை கண்டுபிடித்து விடுவார்கள். மதம் மாறினால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிப் போனால், அங்கே சாதி கிறித்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டு தலித் கிறித்துவர், நாடார் கிறித்துவர் என்று பிரிக்கிறது.  இருப்பினும் மார்க்சிய கொள்கையில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு'' என்கிறார் யாழினி முனுசாமி.
தலித்துகளிலும் இடஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு இடஒதுக்கீட்டின் வேலையையும் பெற்றுக் கொண்டு, இறுதியில் தன் மக்களையும் அவர்களின் வாழ்வியல் துன்பங்களையும் அப்படியே விட்டுவிட்டு, மூன்றாந்தரப் பார்ப்பனர்களாக மாறிவிடுகின்ற படித்த தலித்துகளை கவிதைக்கான செறிவோடும் அளவோடும் விமர்சிக்கிறார் யாழினி முனுசாமி.
ஒல்லியாய் இருந்தவன்/தொப்பைப் போட்டிருந்தான்/திருமணத்திற்குப் பிறகு/குடும்பத்துடன் ஒட்டுறவு குறைந்துவிட்டதாம்/நண்பர்களுடன் வைராக்கியமாம்/உயர்ந்து காட்டணுமாம்/தங்கியிருக்கும் வீட்டிற்கழைத்தவன்/அங்கவந்து சாதி பத்திப் பேசக்கூடாது என்றான்/குடும்பம் நண்பர்கள்/நலம் விசாரிப்பு முடிந்து/உபசரிக்கும்போது/காதுபடக் கிசுகிசுத்தான்/"அதைத்' தலமுழுகி/ரொம்ப நாளாச்சி/இப்பல்லாம் ஒன்லி மட்டன் சிக்கன்தான்.''
கவிதையின் பகடியும் அதன் மூலம் பதிவாகும் சமூக எதார்த்தமும் குறிப்பிடத்தக்கவை. ஆக்கங்களைத் தருபவராக மட்டுமின்றி, தன்னை ஒரு சிறந்த விமர்சகராகவும் தகவமைத்துக் கொண்டிருப்பது, யாழினி முனுசாமியின் அடையாளம். விமர்சனம் என்பது தனி அளவுகோலுடன் இயங்கக்கூடியது. அதற்கு சாதியும் ஒரு முக்கியமான அளவுகோல். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதும் சுஜாதாவுக்கு அனுப்பிவிட்டுதான் மறுவேலை பார்த்த கவிஞர்கள் நிறைய பேருண்டு. அவர் வாயால் அல்லது கையால் கவிதைகளை விமர்சித்துவிட மாட்டாரா என ஏங்கியவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இப்போது யாருக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை!
தீவிர இலக்கியத் தளத்தில் இயங்குபவர்களுக்கு வெங்கட் சாமிநாதன் சொல்லே "சொர்க்கம்'. நவீன கவிஞர்களுக்கு ஞானக் கூத்தன்தான் ஒட்டக்கூத்தன். இப்படி இவர்கள் பரப்பிய விமர்சன வெளியில் தனக்கென்று ஓரி டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யாழினி முனுசாமி. இவருடைய "தலித் இலக்கியமும் அரசியலும்' என்னும் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு, தலித் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றக் கூடியது. பதினாறு கட்டுரைகள் கொண்ட அந்த நூல், தலித் எழுத்தாளர்களின் அனைத்து வகைமைகள் குறித்தும் பேசுகிறது.
முன்னணி தலித் எழுத்தாளர்கள் என்று அறியப்பட்ட அனைவரது எழுத்துகளையும் அவர் சரியான விமர்சனப் பார்வை கொண்டு எழுதியிருப்பதாகவே வாசிப்பாளனுக்குத் தோன்றும். தலித் இலக்கியம் உருவாகும் தருணம், அதன் வேர் பிடிப்பு, அது பரப்பும் இலக்கிய ஆளுமை, தமிழ் இலக்கியத்தில் அதன் தேவை, தலித் இலக்கியம் நடத்தும் அரசியல் இவை அனைத்தும் அதில் அலசப்படுகின்றன.
யாழினி முனுசாமியின் இன்னொரு முகம் அவர் ஓர் ஆவணப்படக்காரர். அவருடைய "தொழுப்பேடு' ஆவணப்படத்தில், செய்யாறு வட்டத்திலுள்ள தொழுப்பேடு என்ற ஊரில் நடைபெற்ற சாதிய வன்கொடுமையினை ஆவணமாக்கியுள்ளார். 140 தலித் குடும்பங்களும் 500 சாதி இந்து குடும்பங்களும் அருகருகே வாழ்ந்திருக்கும் இடம்தான் தொழுப்பேடு. தலித்துகள் வாழ்கின்ற பகுதிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்து, இருட்டில் சாதி இந்துக்கள் புகுந்து தலித்துகளை தாக்குவார்களாம். இந்த நிகழ்ச்சி அடிக்கடி அங்கு நடக்கும். ஒவ்வொரு முறையும் திடீரென்று தாக்குதல் நடத்தப்படுவதால், என்ன செய்வதென்றே தெரியாமல் தலித்துகள் அடி வாங்குவார்களாம்!
பிறகு வேறு வழியே இல்லாமல் தாங்கள் வாழ்ந்திருந்த குடியிருப்புப் பகுதியில் தங்கள் வீடுகளையெல்லாம் விட்டுவிட்டு, கொஞ்சம் தொலைவிலிருந்த ஏரியில் சென்று குடியேறிவிட்டனர். முன்பிருந்த வீடுகள் எல்லாம் குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. அதை அப்படியே படம் பிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார் யாழினி முனுசாமி. இது மிக முக்கியமான பதிவாக இருப்பினும், பரவலாக கண்டு கொள்ளப்படவில்லை.
வலிகளிலிருந்து வரும் கவிதைகள் தன்னைப் பெரிதும் ஈர்ப்பதாகச் சொல்லும் முனுசாமி ஈழக் கவிதைகளை, பெண்ணியக் கவிதைகளை, போர்ச்சூழலிலிருந்து வரும் கவிதைகளைப் பெரிதும் விரும்பி வாசிக்கிறார். அந்தக் கவிதைகள் குறித்த விமர்சனங் களும் தொகுப்பும் நூலாக வெளிவந்திருக்கிறது. "பின்நவீனத்துவச் சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்' என்றநூல், அவருடைய சிறந்த விமர் சனங்கள் அடங்கிய தொகுப்பாகும்.
இலக்கியத்தில் பன்முகத்தன்மையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், "முரண்களரி' என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தன் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்னும் பேரவா அவர் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாக இருப்பதே அவரை இத்தகைய ஆளுமை கொண்டவராக மாற்றியிருக்கிறது.
தலித் இலக்கியம் தேங்கி விட்டது என்று சொல்பவர்கள் அதன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள் என்று சினந்தெழும் அவர், தலித் தளத்தில் எழுத வரும் புதியவர்களை மிகச் சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் எழுத்துகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
இன்னும் நிறைய தலித் சிற்றிதழ்கள் தொடங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும். தலித் இயக்கங்கள் தங்கள் தொண்டர்களை வெறும் தொண்டர்களாகவே வைத்திருக்கின்றன. அவர்களை வாசிப்பாளர்களாகவும் மாற்ற வேண்டும். நம்மைப் பற்றியும் இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை தலித் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமலேயே இருக்கும் "படித்த' தலித்துகள் அதிகம். இவ்வாறு செய்வதால் தலித் இலக்கியம் தலித்துகளிடையே மேலும் பரவலாக்கப்படும். தலித் அரசியலும் கோட்பாட்டளவில் இன்னும் கெட்டிப்படும் என்று உறுதியாகக் கூறும் யாழினி முனுசாமி, தலித் இலக்கிய உலகின் முக்கியப் புள்ளி.

nandri; dalitmurasu.
யாழன் ஆதி

Saturday, April 9, 2011

தெருக்கூத்துக் கலைஞர் கோவிந்தவாடி அகரம் து.ஜெயபாலன் நேர்காணல்




தமிழ்மண்ணின் தொன்மையான கலைகளுள் ஒன்று தெருக்கூத்து. வேறெந்த கலையைவிடவும் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள கலை தெருக்கூத்தாகும். படித்தவர் முதல் பாமரர் வரை சிறியோர் முதல் பெறியோர் வரை அனைவராலும் விரும்பப்படும் இந்தக் கலை ஒரு காலத்தில் தமிழ்மண்ணில் கோலோச்சியது உணமையென்றாலும் இன்றைய சூழலில் அதன் தாக்கம் குறைந்து கொண்டே வருவது போன்று ஒரு தோற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில் தெருக்கூத்துக் கலைஞர் து.ஜெயபாலன் ”தடாகம்” இணைய இதழின் வாசகர்களுடன் தன் கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

1. எப்பொழுதிலிருந்து நீங்கள் தெருக்கூத்தில் நடித்து வருகின்றீர்கள்? உங்களது தொடக்க கால அனுபவங்களைப் பற்றிக் கூறுங்களேன்?

சுமாராக பதினஞ்சு வயசுல நான் தெருக்கூத்துல நடிக்கத்தொடங்கினேன். முதன்முதல்ல பாண்டவர்களில் அர்ச்ச்சுன்னாக நடித்தேன். அப்பறம் சுந்தரி கல்யாணம் கூத்தில் அபிமன்யுவாக நடித்தேன். அதுக்கப்புறம் தொடர்ந்து குறவஞ்சி, துகில், அரவான் களபலி, சைந்தியன் கர்வபங்கம், அபிமன்யு சண்டை, கர்ணமோட்சம், ஆகிய கூத்துகளில் துரியோதனனாக நடித்தேன். ராஜசுய்யாகம் கூத்தில் முதலில் பீமனாகவும் இப்ப, மரகத மன்னனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

2. உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் எது?

அனக்கு விருப்பமான கதாப்பாத்திரம் கர்ணன். அதுக்கு அடுத்ததா அரவான் துரியாதனன்.

3. உங்களுடைய முதல் குரு யார்?
எங்க ஊரான கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த (காஞ்சிபுரம் மாவட்டம்) இராகவன் ஆசிரியர்தான் என் முதல் குருநாதர். பிறகு சுயமா பல நாடக்க கதாப் பாத்திரங்களை நானே ஆடக் கற்றுக் கொண்டேன்.

4. என்னென்ன கூத்தை அந்தக் காலத்தில் பார்த்திருக்கீங்க?

நெறைய பார்த்தோம் எல்லாத்தயும் சொல்ல முடியாதே!

5. ஞாபகத்துல இருக்கிறத சொல்லுங்க?

மகாபாரதக் கூத்து, இராமாயணக்கூத்து என்று ரெண்டுவிதமா நடக்கும்.

மகாபாரதக் கூத்து நிறைய இருக்கு

- பாண்டு வேட்டை,
- வில் வளைப்பு,
- சுபத்திரை திருக் கல்யாணம்,
- இராஜசுய யாகம்,
- பகடைத் துகில் (ரோபதை வஸ்திர பங்கம்),
- அர்ச்சுனன் தபநிலை,
- கீச்சகன் வதை,
- குறவஞ்சி,
- மின்ன்னோளி சிவ புஜை (அர்ச்சுனனின் 8-வது திருக் கல்யாணம்),
- கிருஷ்ணன் தூது,
- சைந்தியவன் கர்வ பங்கம்,
- அரவான் களபலி,
- இடும்பி பீமன் திருக்கல்யாணம்,
- சுந்தரி-அபிமன்பு திருக்கல்யாணம்,
- அபிமன்பு சண்டை (அபி மன்பு-அர்ச்சுனன்-அல்லி மகன்),
- சின்ன அர்ச்சுனன் சண்டை அல்லது புலியேந்திரன் தூது, மணிமாலன் சண்டை,
- பாதாள அரக்கன் அல்லது போகவதி அர்ச்சுனன் திருமணம், பதினெட்டாம் போர்,
- பாஞ்சாலி சபதம்,
- அளம்புஜா சூரன் அம்புஜவல்லி அர்ச்சுனன் திருமணம்“ தரும் அசுவமேத யாகம் அல்லது ப்பபுருவாகனன் சண்டைட்ட,
- உத்தர காண்டம் வஜ்ர காண்டம்

ஆகியவை மகாபாரதக் கூத்துக்களாகும்.

- வெங்கடேசப் பெருமாள் நாடகம்,
- தக்கன் வேள்வி (பார்வதி-சிவன் கல்யாணம்),
- அரணியன் விலாசம் அல்லது பக்த பிரகலாதா,
- இரண்ய அட்சுத சண்டை (வராக அவதாரம்),
- வாலி மோட்சம்,
- பாவாடை ராயன் பரமகேது,
- சோமுகாசூரன் சண்டை(மச்ச அவதாரச் சண்டை),
- மயில்ராவணன் சண்டை,
- சுந்தரகாண்டம் அல்லது அனுமான் தூது,
- போர் மன்னன் சங்கவதி திருமணம்.

ஆகியவை இராமாயணக் கூத்துக்களாகும்.

இந்தக் கூத்துகளெல்லாம் அக்காலத்தில் நடத்தப்பட்டன.

நான் முதன் முதல்ல பார்த்த கூத்து ”அர்ச்சுனன் தபநிலை” எங்கள் ஊரில் கூத்தைக் கத்துக்கிட்டு ஆடுவாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் கூத்துல நடிக்கணும் என்கிற ஆர்வம் ஏறபட்டது.

6. எதுவரை படிச்சிருக்கீங்க?

பள்ளிக்கூடம் பக்கம் கூடப் போனதில்லை. கேள்வி ஞானம்தான். அனுபவம்தான். செல்போன்ல பச்சை பட்டன், செகப்பு பட்டன் தெரியும் மற்றது எதுவும் தெரியாது. இதுல கேமரா, ரேடியோ எல்லாம் இருக்குதான் எதுவும் தெரியாது.

7. தெருக்கூத்துக்கான வரவேற்பு அநதக் காலத்திலயும் இந்தக் காலத்திலயும் எப்படி இருக்கு?

அந்தக் காலத்தில் நல்ல வரவேற்பு இருந்துச்சி. இப்பவும் வரவேற்பு இருக்கு. கொஞ்சம் குறைஞ்சிருக்கு அவ்வளவுதான். ஆனா, எப்பவும் தெருக் கூத்துக்கு மவுசு குறையவே குறையாது. வருசத்துக்கு 200 ராத்திரிக்கு மேல் கூத்து ஆடுறோம். பொதுவா மாசி மாதத்திலிருந்து புரட்டாசி மாதம் வரை தெருக்கூத்து நடக்கும்.

8. தெருக்கூத்து உங்களுக்கு வேலையா, கலையா?

தொடக்கத்துல வருமானத்துக்கான வேலையா இதைப் பார்க்கல. கலையாகத்தான் பார்த்தேன் இன்றைய தேதியில் வெறும் கலையா ஆடமுடியல. வருமானமும் பார்த்துதான் ஆடவேண்டியுள்ளது.

9. வருமானம் எல்லாம் எப்படி இருக்கு?

ஒரு கூத்துல நடிச்சா குறைந்தது ஜந்நூறு ருபாய் கிடைக்கும் ஏதாவது ஒரு கூத்துர் கம்பனியில ஒரு வருசத்துக்கு ஒப்பந்தத்துல இருப்போம். 50 ஆயிரமோ 60 ஆயிரமோ முன்பணம் வாங்கிக்குவோம் அதை கொஞ்சம் கொஞ்சமாக கழிச்சிக்குவாங்க. ஒரு கம்பனி ஒப்பந்தத்துல இருக்கும் போது வேற கம்பனியில் ஆடக்கூடாது. என்ன ஆனாலும் அதே கம்பனியிலதான் இருக்கணும்.

10. ஒரு குழுவுல எத்தனைப் பேரு இருப்பீங்க?

நடிகர்கள் பத்து பேர் ஆர்மோனியம் ஒருவர், மிருதங்கம் ஒருவர், முகவீணை ஒருவர் என மொத்தம் 13 பேர் இரும்போம். நடிகர்களைவிட வாத்தியிக் கலைஞர்களுக்கு 50 ருபாய் கூடுதலாகக் கிடைக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

11. வெளி மாநிலங்களில் எல்லாம் கூத்து ஆடியிருக்கீங்களா?


கல்கத்தாவுக்கும் டெல்லிக்கும் கலைபண்பாட்டுத்துறை முலமாகப் போய் ஆடி இருக்கோம்.

12. மொழிப் பிரச்சினையை எப்படி சமாளிப்பிங்க?

எங்க போய் கூத்து ஆடினாலும் எங்களுடைய பேச்சுமொழியிலதான் பேசி நடிப்போம்.

13. அரசு உங்களுக்கு எந்தளவுக்கு உதவிகரமா இருக்கு?

அரசு எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் ஓரளவுக்கு உதவிகள் செய்யுது. கூத்துக்கலை அழியாமலிருக்க மேலும் உதவிகள் செய்யப்பட வேண்டும். இயல் இசை நாடக மன்றத்தினர் ஒர சில குழுக்களுக்கே திரும்பத் திரும்ப வாய்ப்புகள் தருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாய்ப்புபகள் வழங்கப்பட வேண்டும்.

14. காஞ்சிபுரத்தைச் சுற்றி எத்தனை சுமாரா 15 குமுக்கள் இருக்கு.

திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களையும் சேர்த்துப் பார்த்தா சுமாரா 50 குழுக்கள் இருக்கும்.

15. எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் கூத்து நடக்குமா?

எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி இடையாது, மேல சொன்ன மாவட்டங்கள்ல ஒரு மாதிரியாக இருக்கம். திணடிவனத்திலிருந்து மாறும். தஞ்சவுர் பக்கமெல்லாம் வெறமாதிரி இருக்கும் தெருக்கூத்துல சினிமா பாட்டு, சினிமா பாட்டு பாடினா ரசிகர்கள் பணம் குத்துவாங்க. அது கூடுதலி வருமானமதானே. ஏதோ கலையைக் காப்பாத்திக்கிட்டு இருக்கோம். சுத்தமா நல்ல முறையில கூத்த நடத்த முடியல. தஞ்சாவுர் பக்கம் எல்லாம் சினிமா கலப்பில்லாம சுத்தமா நடத்து வாங்க.

16. மேடை நாடகத்துக்கும் தெருக்கூத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு மேடை நாடகம் ஒரு வரும் இரண்டு வருடம் ஓடும். புகழ்பெற்று ஓடும். திடீர்னு காணாமப் போயிடும். ஆனா தெருக்கூத்து அப்படி கிடையாது. என்னைக்கும் அழியாது நாடக்க கதைகளுக்கு மூலம் கிடையாது தெருக்கூத்துக்கு மகாபாரதம், இராமாயணமது மூலம் உண்டு. அதனால் தெருக்கூத்து என்னிக்குமே அழியாது.


17. உங்கள் வீட்டில் வேறு யாறேனும் கூத்து நடிக்கிறாங்களா?

என்னுடைய மகனும் கூத்துக்கலைஞர்தான்.

18. இனறைய தேதியில கிராம்ம-நகரம் எங்கு கூத்துர்கு வரவேற்பு அதிகம் இருக்கு?

நகரம் சார்ந்த இடங்கள்ல கூத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நகர மக்கள் கூத்த நல்லா விரும்பிப் பார்க்கிறாங்க நல்ல மரியாதையும் கொடுக்கிறாங்க. சென்னையில் கோட்டுர்புரம், குரோம்பேட்டை, தாம் பரம் நுற்றியுள்ள பல இடங்கள்ல ஆடியிருக்கோம்.நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

19. தெருக்கூத்துக் கலையை இளைய தலை முறையலினருக்குச் சொல்லிக் கொடுக்க தெருக்கூத்துல் பள்ளிகள் இருக்கா?

இருக்கு. பெருங்கட்டூரில் பிறந்து தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கும் அராஜ கோபால் என்பவர், காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் புஞ்சை அரசந்தாங்கல் எனும் ஊரில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்.

ஒரு யதார்த்தமான சாமான்யமானக் கலைஞனைச் சந்தித்த மனநிறைவுடன் விடை பெற்றோம்

nandri :
தடாகம்.காம்

Thursday, April 7, 2011

நூல் விமர்சனம் - கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு)


   தமிழினம் போற்றும் தமிழ்மனம் - யாழினி முனுசாமி
      ஒரு மனிதன் படைப்பாளியாகப் பரிமாணம் கொள்ளும் தருணம் உன்னதமானது. ஏனெனில், படைப்பாளியாக இருப்பதென்பது சமூக மனிதனாக இருப்பதாகும். இன்றைய சமூகம் என்னவாக இருக்கிறது என்பது கண்கூடு.
கண்முன் நடக்கும் எத்தகைய அநியாயம் குறித்தும் கவலைப்படவோ கவனங்கொள்ளவோ அவன் தயாராக இல்லை. விலங்குகளைப் போலவே புசித்து, புணர்ந்து, இனப்பெருக்கம் செய்து சந்ததியை வளர்ப்பதோடும் வளப்படுத்துவதோடும் அவன் கடமை முடிந்துவிடுவதாகக் கற்பிக்கப்படுகின்றான். ஆனால், உண்மையான படைப்பாளியால் அப்படி வாழ முடியாது. சமூகம் குறித்த அக்கறை உள்ளவனாக, சமூகத்தை மேம்படுத்தும்/மாற்றும் பேரவா உள்ளவனாகவே அவனால் தொழிற்பட முடியும். அப்படித் தொழிற்படுபவனே உண்மையான சமூகப் படைப்பாளியாவான். அத்தகைய ஒரு படைப்பாளியாக- கவிஞராகப் பரிமாணம் கொண்டிருக்கிறார் ஆய்வாளர் முனைவர் ஆ.மணவழகன். தமிழின் செழுமையான சங்க இலக்கியத்தில் திளைத்தூறி, ஆய்ந்து, ஆய்வாளராக நிலைபெற்று, கவிதைத்துறைக்கு வந்திருக்கிறார் என்றாலும், கவிதை இவருக்குப் புதியதல்ல. இணையதள வாசகர்களுக்குக் கவிதைவழி நன்கு அறிமுகமானவர் இவர்.
manavazhagan_bookஎதை எழுதவேண்டும் என்பதிலாகட்டும், எதை எழுதக்கூடாது என்பதிலாகட்டும் ஒவ்வொருவருக்கும் ஓர் அரசியல் உண்டு. அப்படி அரசியல் இருப்பதொன்றும் தேசத் துரோகமல்ல; இல்லாமல் இருப்பதுதான் தேசத் துரோகம். மணவழகன் என்கிற மனிதனின், தமிழ்ப் பேராசிரியனின், கவிஞனின் மனம் எத்தகையது எனும் கேள்விக்கு அவரது கவிதைகளின்வழி ஒரு வரியில் பதில் சொல்லவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்; ‘தமிழினம் போற்றும் தமிழ்மனம்’. இந்தக் கவிதைத் தொகுதியைப் படித்து முடிக்கையில் இதை உணரமுடிகிறது. அகம் சார்ந்த கவிதைகளானாலும் சரி, புறம் சார்ந்த கவிதைகளானாலும் சரி இந்தத் தமிழ் மனத்தையே வெளிப்படுத்துகின்றன.
தமிழினம் குறித்துப் பெருமைப்பட இனியொன்றுமில்லை. துரோகங்களாலும் வஞ்சகங்களாலும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் குறித்துப் பெருமைப்பட என்ன இருக்கிறது? தனிமனிதர்களும் தன்னலவாதிகளாகவும் இரட்டை வேடதாரிகளாகவும் இருக்கின்றனர். அதற்கு இலக்கியம் என்ன செய்யும்? பெரிய புரட்சியை உண்டாக்குமோ உண்டாக்காதோ தெரியாது. ஆனால், ஒன்றைச் செய்யும். தனிமனிதர்களின் ‘சிரித்தாளும் சூழ்ச்சி’யையும், அரசியல் வேடதாரிகளின் நாடகங்களையும் அம்பலப்படுத்தும். மனிதர்களை ஓரளவிற்கேனும் மேம்படுத்தும். மேலாக, எழுதப்பட்ட இனத்தை அடையாளப்படுத்தும். வீழ்த்தப்பட்டவர்களின் வீரத் தியாகத்தையும் வீழ்த்தியவர்களின் வஞ்சகத் துரோகத்தையும் வரலாறாகப் பதிவு செய்யும். அத்தகைய பதிவுகள் இந்தக் கவிதைத் தொகுதியில் நிறைய காணக்கிடைக்கின்றன.
இத்தொகுப்பிலுள்ள ‘தமிழ் அடையாளம்’ சார்ந்த கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ‘இந்தியத் தமிழனாக’ உணரும் தமிழகத் தமிழனை, ‘தமிழனாக’ உணர்வுபெற வைக்க இக்கவிதைகள் பயன்படக்கூடும். ‘திராவிடன்’, ‘இந்தியன்’ என்பதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதனை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறார்.
                       ‘கன்னடம்
தண்ணீர் தரட்டும்
நானும் திராவிடன்
இந்தியா
ஈழம் அமைத்துத் தரட்டும்
                       நானும் இந்தியன்
கானல்நீர் தாகம் தீர்க்காது
                       விட்டுவிடு
 நான் தமிழன்’
உண்மைதானே! ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தி மாணவன் தாக்கப்பட்டால் ‘இந்திய மாணவர்’ தாக்கப்பட்டார் என்று குரல் கொடுக்கிறார்கள், எழுதுகிறார்கள். பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக்கொல்லப்படும் சிங் சிப்பாய் ‘இந்திய சிப்பாய்’ ஆகிறார். ஆனால், இராமேஸ்வர மீனவர்கள் மட்டும் ‘தமிழக மீனவர்கள்’ ஆகிறார்கள். வெளிநாட்டில் வாழும் ‘சிங்’குகளின் ‘மயிர்’ பிரச்சினைக்காக (தாடி வைத்துக்கொள்ளுதல், தலைப்பாகை அணிதல்) குரல் கொடுக்கும் இந்தியப் பிரதமர் தமிழனின் உயிர் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லா கோவமும் சேர்ந்தால்தானே கவிதை.
                நடையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எளிமையும் நவீனமும் இவரது கவிதைகளின் தனித்துவ நடையாக இருக்கின்றது. ‘.... தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை’ என்ற ‘கவிமணி’யின் நடைக் கொள்கையைப் பின்பற்றி எழுதியிருக்கிறார். காதல் கவிதைகளைத் தவிர்த்த பிற கவிதைகளையே கவிஞரை அடையாளப்படுத்தும் கவிதைகளாகக் கொள்ளலாம். சொல்முறையிலும் காதல் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும், அறிவுறுத்தும் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் நவீனத்தன்மை கொண்ட கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் இயல்பாகவே அதனதன் தன்மைக்கேற்ற நடையில் அமைந்திருக்கின்றன.
                தமிழ்க் கவிதை மரபில் குழந்தை பற்றிய சித்திரிப்புகள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. தம்மக்களின் எச்செயலும் இன்பம் பயக்கக் கூடியதே. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் / சிறுகை அளாவிய கூழ்’ என்கிறார் திருவள்ளுவர். குழந்தைகள் பற்றிய கவிதைகளைப் படிக்கும்போது நம் மனம் பறக்கத் தொடங்கிவிடுகிறது. குழந்தைகளின் குதூகலம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ‘பெருமாள் திருமொழி’யில் குலசேகர ஆழ்வார் குழந்தைக் காட்சிகளை மிக அழகாகத் தீட்டியிருப்பார். மனத்தைக் கிளர்த்தும் குழந்தைமைச் செயல்களை ‘படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்’(புறம்.188) என்ற சங்கப் பாடலில் பாண்டியன் அறிவுடைநம்பி வியக்கிறார். பருகப் பருக வற்றாத அமிழ்தம் குழந்தைமை இன்பம் என்பதை இன்றும் வெளிவந்த வண்ணமிருக்கும் கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. கவிஞர் எழுதுகிறார்,
                                ‘உருக வைக்கும் / பனிக்கட்டி
                                என் மடியில் / எழில்மதி’
அறிவுடைநம்பியின் பாட்டைப் பிழிந்து வடிகட்டிக் கொடுத்திருப்பதைப்போல் அத்தனை ‘சில்லென்று’ இருக்கிறது இக்கவிதை. குழந்தைகளின் கிறுக்கல்களை நவீன ஓவியங்களாக இரசித்திருக்கிறோம். ஆனால், கசக்கி எறிந்த காகிதத்தையே கவிதையாகப் பார்க்கும் மனம் எழில்மதியின் அப்பாவிற்கு வாய்த்திருக்கிறது.
                சோழனின் பிறந்தநாளுக்காக நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எல்லோரும் இன்புற்றிருக்கும் இத்தருணத்தில் அரண்மனை அலங்காரத்தின் போது கூடிழந்த சிலந்திக்காக ‘சிலம்பி தன் கூடிழந்த வாறு’ என்று வருந்துகிறான் முத்தொள்ளாயிரப் புலவன். இவர் கவிதையிலும் முத்தொள்ளாயிரக் கவிஞனின் தாக்கம் வெளிப்படுகிறது.
                                ‘ஐயோ! / துடைத்து விடாதே
                                ஒட்டடை அல்ல
                                வீடு! / சுவரில் சிலந்தி’
இப்படியாக, சங்கக் கவிஞன், முத்தொள்ளாயிரக் கவிஞனின் நீட்சியாகவும் மண்சார்ந்த கவிஞர்களின் தொடர்ச்சியாகவும் திகழ்கிறார், கவிஞர் ஆ.மணவழகன்.
                பெருநெல்லியின் சுவையும், மலைக் கள்ளிமடையானின் தித்திப்பும் இவர் கவிதைகளில் உண்டு. புளிக்குழம்பு, ஆவிபறக்கும் கேழ்வரகின் உருண்டை, இளம் முருங்கைக்கீரைக் கூட்டு, புதுச்சோளச் சோற்றுக் கவளம், களிகம்பஞ்சோறு ஆகியவற்றின் மீதான ஏக்கம் கலந்த ஆசை இவரது கவிதைகளில் மணக்கின்றது.
எழுத்து என்பது வெறும் எழுத்தாக மட்டுமே இருப்பதில்லை. அது, படிப்பவரின் சிந்தனையைக் கட்டமைக்கிறது. அச்சிந்தனை வாழ்க்கையை வழிநடத்துகிறது. சமயங்களில் அதனால் உணர்வுக்கும் நடப்புக்கும் இடையே ஊசலாட்டம் ஏற்படுகின்றது. இந்த மனப் போராட்டத்தை வெளிப்படுத்துகிறது ‘நன்றாமோ தீது’ கவிதை. ‘வீடு சுமந்து அலைபவன்’, ‘வாழ்க்கை வணிகன்’, ‘கனவு சுமந்த கூடு’, ‘எம்மையும் மன்னியும்’, ‘யார் நீ’, ‘மே 2009’, ‘புதுமனை புகுவிழா’, ‘பொய்த்தேவு’, ‘பிறர்தர வாரா’ போன்ற பல கவிதைகள் குறிப்பிடத்தகுந்த கவிதைகளாகும்.
                அரசியல் கவிதைகளில் தோழனாக, கிராமியக் கவிதைகளில் மண்ணின் மைந்தனாக, நன்னெறி வலியுறுத்தும் கவிதைகளில் ஆசிரியனாக, பிற உயிர்க்காக வருந்தும் கவிதைகளில் ஜீவகாருண்யவாதியாக, காதல்-குழந்தை-நட்பு-அலுவலகம் சார்ந்த கவிதைகளில் சக மனிதனாகப் புலப்படுகிறார் கவிஞர். தூக்கணாங்குருவிக் கூட்டைப் பற்றி யாரேனும் இப்படி வியந்திருப்பார்களா தெரியவில்லை.
                                ‘ஆயிரம் தாஜ்மகால் / அதிசயம்
                                ஒற்றைச் சித்தனின் / உயிர்த்தவம்’
உண்மைதானே!
                ‘உள்ளம் செதுக்கும் உளிகள்’ கல்லூரிப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கவிதை.
                                ‘ஒழுக்கம் படி! / எதிர் நிற்போர்
உணர்வைப் படி!’
‘ஏழ்மை கீழ்மையல்ல
உண்மை / நாகரிகம் படி!’
இப்படியான சமூக ஒழுங்கமைப்புக்கான பாடங்களைப் படிக்க வலியுறுத்துகிறார். இது, மாணவர்களுக்கான கவிதை மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கான கவிதையும்கூட.
இவரது கவிதைகளில், ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கைப் பற்றிய விமர்சனக் கவிதைகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. அரசியல்வாதிகள், திரைத்துறையினர், பெருந்தொழிலதிபர்கள் போன்றோர் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும் அது ‘வாராக்கடன்’. ஆனால், ஒரு விவசாயியால் கடனைத் திருப்பிக்கட்ட இயலாமல்போனால் அவரது வீடு ‘ஜப்தி’ செய்யப்படும். இதுதான் இந்தியா!. ‘புதுமனை புகுவிழா’ கவிதை இந்த அவலத்தை, அநியாயத்தை வெளிப்படுத்துகின்றது.
‘பிறர்தர வாரா’ கவிதையில், குடிகாரர்களையும், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களையும் அழகான அனுபவக் கவிதையின் ஊடாக எச்சரிக்கின்றார் கவிஞர். மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் அரசாங்கத்தின் செயல்திட்டத்திலிருந்து விடுபடும் வழி மக்களிடமே உள்ளதை உணர்த்துகிறார். ஒப்புசாண் மலைமீது பீடி பற்றவைத்தது போன்ற கிராமத்து ‘திருவிளையாடல்’ முதல், 320, மூன்றாவது மாடியில், ‘குழந்தை மாதிரி சார்/ஒன்னுமே பண்ணாது’ என்று ‘இராணுவ ரம்மை/ சோடாவில் கலந்து’ குடித்த நகரத்துத் திருவிளையாடல்கள் வரை அத்தனையும் பட்டியலிட்டு, அவற்றில் ஒரு ’....ம்’ இல்லை என்று வாக்குமூலம் கொடுத்து (சில நண்பர்களையும் காட்டிக் கொடுத்து) ‘விட முடியலை’ என்பவர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார்.
                                ‘உன் மனைவி / விதவையாவது பற்றி
                                உன் குடும்பம் / நடுத்தெருவில் நிற்பது பற்றி
                                எந்த அரசுக்கும் / இங்குக் கவலையில்லை’
உண்மைதானே! எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. எத்தனை கோடி ‘கல்லா’ கட்டுகிறது என்பதுதான் அவர்களுக்கு முக்கியம்.       பாமர மக்கள் மட்டுமல்ல, ஊருக்கே அறிவுரை சொல்லும் அக்ரகாரத்து ஐயரின் மகன்கூடக் குடித்துவிட்டுச் சாக்கடையில் விழுந்துகிடக்கும் அளவுக்கு நம் செம்மொழித் தமிழ்த்திருநாட்டில் ‘மது’ ஜனநாயகப் படுத்தப்பட்டு இருக்கிறது.
                இத்தொகுதியில் பேசுவதற்குரிய கவிதைகள் இன்னும் நிறைய உள்ளன. பிரதியில் பயணிக்கையில் நீங்களே அதை உணர்வீர்கள். தமிழ்க் கவிதை மரபை அறிந்தவர் கவிதைத் துறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நல்ல கவிதை நடையும் சீரிய சமூகச் சிந்தனையும் இவருக்கு ஒருங்கே வாய்த்திருக்கின்றன. இவர் தொடர்ந்து சிரத்தையுடன் செயல்பட்டு நிலையானதொரு இடத்தைக் கவிதையிலும் பெறவேண்டும் என்பதே எம்போன்றோரின் அவாவாகும்.                              
கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு)
ஆ. மணவழகன் (
 tamilmano77@gmail.com)
அய்யனார் பதிப்பகம்
32, இராமகிருஷ்ணாபுரம்
2வது தெரு,
ஆதம்பாக்கம், சென்னை-88
விலை ரூ.50