Saturday, June 18, 2011

நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம் - யுகபாரதி கவிதை

சூரிய கதிர் 16 - 30  2011 இதழ் படித்தேன். கவிஞர் யுகபாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர் பற்றி. நுட்பமான கவிதை. அரசியல்வாதிகளைப் பற்றி சினிமா கவிஞர்கள் வெளிப்படையாக எழுதமாட்டார்கள். யுகபாரதி எழுதியிருக்கிறார். அவரைப் பாராட்டுவோம்! இது சிறந்த அரசியல் கவிதை.


அவர்
நினைத்ததெல்லாம் நடந்த
காலத்தை
நினைத்துக் கொண்டிருக்கிறார்

எல்லாம் தெரிந்தே செய்த
அவருக்கு
இப்போது என்னசெய்வதென்றே
தெரியவில்லை

அவரால் சுயமாகச் சிந்திக்கவும்
முடியவில்லை

அவருக்கு அவரே
எதிரியானதைப்போல
அவ்வப்போது பேசத்
தொடங்குகிறார்

அவரைப் புகழ்ந்தவர்கள்
அவரைவிட்டு விலதுவதைத்
தாங்க முடியாமல் கதறுகிறார்

தூக்கத்தில் கைதுபயமும்
அவலை வாட்டத் துவங்கிவிட்டன

அவர் செய்த கேடுகளால்
அவர் ஒரு விசித்திர வலையில்
சிக்கிக் கொண்டிருக்கிறார்

அவர் உருவாக்கிய
சமஸ்தானத்து ராஜாக்கள்
வெவ்வேறு சூதின் காரணமாக
மக்களால்
விரட்டியடிக்கப்படுகிறார்கள்

அவருக்காக அவரே
உண்மையாக
அழ முடியாத சோகத்தில்
இருக்கிறார்

ஒரு இனம் தன் துரோகிக்குத்
தரும்
சகல கொடுமைகளையும் அவர்
அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்

எழுதியும் பேசியும் வளர்ந்தவர்
எழுதுபவர்களாலும்
பேசுபவர்களாலும்
உதாசீனப்படுத்தப்படுகிறார்

ஆண்மை மிக்க நம்முடைய
தலைவர்
முதல் தடவையாக அதற்காக
வருத்தப்படுகிறார்

கூடா நட்பு கேடாய்
முடியுமென்று
குரல் தளும்ப குமைகிறார்

அளவுக்கு மீறி பிள்ளைகளும்
அதிகாரமும் அவதி என்பதை
ஒத்துக்கொள்ள
துணிந்திருக்கிறார்

நம்முடையத் தலைவருக்கு
இது போதாத காலம்

தலைவர்கள் மன்னர்களாகத்
தங்களை
மாற்றிக்கொள்ள
எத்தனைக்கையில்
மக்கள் அவர்களுக்குப்
போதாத காலத்தை
புரிய வைக்கிறார்கள்.

நன்றி...சூரிய கதிர்
கவிஞர் யுகபாரதி

No comments:

Post a Comment