Saturday, August 13, 2011

என் கவிதைகள்

உங்களை அறிந்துகொள்ளுங்கள் 


ஸ்டாலின் என்றதும்
உங்கள் நினைவு முதலடுக்கில்
வந்து நிற்பது யார் ?
1 ..............2 ..............3 ..............4 .............

எண் ஒன்றெனில்
நீங்கள் வெகுஜன அரசியலில் ஆர்வமுள்ளவர்
இரண்டெனில்
நீங்களொரு தீவிர வாசகர்
மூன்றெனில்
நீங்களொரு கம்யூனிஸ்ட்
அல்லது எதிர்ப்பாளர்
நான்கெனில்
நல்லது
நீங்கள் பாக்கியவான்
நீங்கள் நிம்மதியானவர்
நீங்கள் சுயநலவாதி
நீங்கள் வெகுளி
நீங்கள் ஞானசூன்யம்
எதுவாகவுமிருக்கலாம்.


* பொய்த்துவிடும் நம்பிக்கைகள் *
--------------------------------

இப்போதெல்லாம்
என் நம்பிக்கையைப்
பொய்த்துவிடுகிறாய்.
அனுப்ப மாட்டாய் என்றிருக்கும்
நேரத்தில்
பதில் குறுஞ்செய்தி
அனுப்பி விடுகிறாய்.
பத்துப் புறாக்களைப்
பறக்கவிட்டால்
இரு புறாக்களுக்காவது
பதில் கொடுத்தனுப்புகிறாய்.
முன்புபோல்
உனது நாவில்
கங்குகள் தெறிப்பதில்லை.
பேசவே மாட்டாய்
என்றிருக்கும் நேரத்தில்
அலைபேசியில் அழைத்து
எனை அந்தரத்தில்
மிதக்க விட்டுவிடுகிறாய்.
நம்ப முடியவில்லை என்னால்
என்னவாயிற்று உனக்கு?
நீயும் என்னை
நேசிக்கத் தொடங்கிவிட்டாயா என்ன?
ஒருகால்
என்னை நேசிக்கும் மனம்
இன்னும் உனக்குக் கைவரவில்லையெனில்
வெறுக்காமலாவதிரு.
வாழ்க்கையொரு
நீர்க்குமிழடி பெண்ணே!

* சிறு தூறலாய் *
-----------------

பெருமழையாய்
என் நிலத்தில்
நீ கவிய வேண்டாம்
சிறு தூறலாகவேணும்
வந்து போயேன்.
  
nadri: www.thadagam.com