Friday, June 24, 2011

நூல் வெளியீட்டு விழா - விடுதலைப் புலிகளுக்கு அப்பால்



ங்கிலத்தில் ராஜீவ் சர்மா எழுதி தமிழில் ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கும் “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடிகள் “ எனும் நூலை அண்மையில் (04-06-11) சவுக்கு இணையத் தளத்தின் பதிப்பகமான சவுக்கு வெளியீடு சென்னையில் வெளியிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன் நூலை வெளியிட, தோழர் கஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

சவுக்கு சங்கர் அறிமுகவுரை நிகழ்த்த , தோழர்கள் கஜேந்திரன், விடுதலை இராசேந்திரன், தியாகு ,வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் நூல் குறித்து உரை நிகழ்த்த, நூலாசிரியர் ராஜீவ் சர்மா, மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஏற்புரை நிகழ்த்தினர்.

தோழர் கஜேந்திரன் நூல் குறித்துப் பேசுகையில், “ இந்த நூலை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் நீங்கள் படித்தாக வேண்டும். கார்த்திக்கேயன் தலைமையில் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு திராவிட வழிப்பட்ட தமிழ்த்தேசிய அரசியலை முடக்கிவிடும் துடிப்பு இருந்ததை இந்நூலைப் படித்தப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். அரசியல் உணர்வுசார்ந்து சிறு உதவி செய்தால்கூட உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும் என்கிற விதமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கம் அந்தக் குழுவுக்கு இருந்திருப்பதையும் நான் உணர்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தி.க.வையும் தி.மு.க.வையும் சிக்க வைக்க ஜெயின் கமிசன் பிரயத்தனப் பட்டிருக்கிறது. பொதுத் தளத்தில் தி.மு.க.வால் நடிக்கக்கூட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதுகிறேன்.

பல்வேறு இதழ்கள், பல்வேறு ஆய்வாளர்களின் செய்திகளையெல்லாம் திரட்டி எந்தச் சார்புமின்றி முடிந்த அளவிற்கு உண்மைகளை வெளிக்கொணர்வதில் ராஜீவ் சர்மா வெற்றி பெற்றிருக்கிறார். விக்கி லீக்ஸைவிட சவுக்கு சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மிகச் சிக்கல் வாய்ந்த அறிவுசார்ந்த நூலை ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கிறார். திராவிடம் சார்ந்த தமிழ்தேசத்தின் மீதான பயங்கரவாதமாக இந்த கமிசன்களின் செயல்களை நான் பதிவு செய்கிறேன் ” என்று குறிப்பிட்டார்.

விடுதலை இராசேந்திரன் :

இந்த நூல் குறித்து அதிக அளவில் விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார் தோழர் விடுதலை இராசேந்திரன். “அதிகார மையங்களை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற சிறந்த இணையத் தளம் சவுக்கு ” என்று பேசத் தொடங்கினார். ராஜீவ் காந்தி கொலைக்கு சதித்திட்டம் எப்படி தீட்டப்பட்டது என்பதை 6-7 அத்தியாயங்களில் இந்நூல் விளக்குகிறது. காவல் துறையினரின் நாட்குறிப்பிலுள்ள செய்திகளாகவே அரசு ஆவணங்களிலிருந்தும் புலனாய்வுத்துறையின் குறிப்புகளிலிருந்தும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலையின்போது புலனாய்வுத்துஙையின் இயக்குனராக இருந்த விஜய்கரண் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். எனவே இந்நூலின் மீது சந்தேகம் எழுகிறது.

ராஜீவ் கொலைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடும் இந்நூல் சர்வதேச நிறுவனங்களின் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்கிறது . விடுதலைப் புலிகளைக் குறைசொல்லிக் கொணடிருக்ககும் அமைப்பினருக்கு இந்நூல் உதவி செய்வதாக இருக்கிறது. ராஜீவ் காந்திக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என ஆராய ஏற்படுத்தப்பட்ட வர்மா குழுவிற்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. உரிய பாதுகாப்பை இந்திய அரசும் தமிழக அரசும் வழங்கவில்லை என்று அந்த வர்மாகுழு அறிக்கை குறிப்பிடுகின்றது. எம்.கே. நாரயாணன் இந்திய உளவுத்துறை இயக்குனராக இருந்தபோதுதான் ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றது. ராஜீவ் காந்திக்குப் போதுமான பாதுகாப்பை வழங்க முடியாமல் போனதற்கு வெளியில் சொல்ல முடியாத காரணங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆதாரமாக அவரிடமிருந்த ஒரு வீடியோ படத்தை மறுநாளே பிரதமரிடமும் போட்டுக்காட்டியிருக்கிறார். ஆனால் கார்த்திக்கேயன் ஆணையத்திடம் அந்த வீடியோவை கொடுக்கவில்லை ஏன்?

ராஜீவ் காந்தியின் படுகொலையில் காங்கிரஸின் சதி பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் ஜெயின் ஆணையம். ஆனால் அந்த ஆணையத்திற்கு எந்தவிதமான கட்டமைப்பு வசதியும் செய்துத் தரப்படவில்லை. வர்மா ஆணையம் பற்றிய அரசு ஆணையை ஜெயின் ஆணையம கேட்டபோது அரசாங்கத்தின் பதிவேட்டில் காணாமல் பேய்விட்டது என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. பிறகு ஜோடிக்கப்பட்ட கோப்புகள் ஜெயின் கமிசனிடம் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான கோப்புகளை நரசிம்மராவ் அரசு ஜெயின் கமிசனிடம் ஒப்படைக்கவில்லை.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு நிறுவனங்களின் உறவுகளுடன் விடுதலைப் புலிகள் ராஜீவ் கொலையை நிறைவேற்றியுள்ளனர் என்கிறது இந்நூல். இந்தக் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் மீது வைத்த மோசமான குற்றச்சாட்டாகும். இதை மறுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இஸ்ரேலின் உளவு நிறுவனமாள மொசாட் ஓர் இனவாத அமைப்பாகும். சிவராசன் சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர். விடுதலைப் புலிகளின் அமைப்பில் அதற்கு அனுமதி கிடையாது.
சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவும் அவரது தோழர்களும் சென்றுகொண்டிருந்த கப்பலை எல்லைவரம்பு மீறி சுற்றிவளைத்த இந்திய உளவுத்துறையின் மீதான குற்றச்சாட்டை இந்நூல் மழுங்கடிக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. மாத்தையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றிப் பிரபாகரன் மீது மோசமான உள்நோக்கத்தைக் கற்பிக்கிறது இந்நூல். பிரேமதாஸாவைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று குற்றம் சாட்டுகிறது. இக்கருத்து எங்கும் நிரூபிக்கப்படாத ஒன்றாகும். உளவுத் துறையின் மோசமான செயல்களை இந்நூல் வெளிப்படுத்தவில்லை. ஆனால் புலிகள் அமைப்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இந்த நூலால் ராஜீவ் கொலைவழக்கிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பொருட்டே அல்ல. ஈழவிடுதலைக்காகச் செயல்படுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். ” என்று நூல் குறித்து பல செய்திகளையும் மறுப்புகளையும் முன்வைத்துப் பேசினார்.

தோழர் வழக்கறிஞர் புகழேந்தி :

ராதஜீவ்காந்தி படுகொலையில் முக்கியமான குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டார்கள். நளினி ஈழப் பெண்ணல்ல ; தமிழ்நாட்டுப் பெண். முருகனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதைத் தவிர ஈழ அரசியல் குறித்தோ விடுதலைப் புலிகள் குறித்தோ அவருக்கு ஒன்றும் தெரியாது. விடுதலைப் புலிகளுக்கு ராஜீவ் கொலையால் எந்தப் பலனும் இல்லை. பாதிப்புகள்தான் அதிகம்.

விடுதலைப் புலிகள் இந்தியாவை நட்பு நாடாக எண்ணியிருக்கக் கூடாது . இந்தியாவுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட விடுதலைப்புலிகள் நகர்த்தவில்லை என்றபோதும் இந்தியாவின் துரோகத்தால் அவர்கள் அழிக்கப் பட்டார்கள். இந்தியா செய்திருக்கும் இந்த துரோகம் என்றும் மறக்க முடியாதது.

ஜெனரல் டயரைப் பழி வாங்கியது சரியென்கிறோம்.. வாஞ்சிநாதன் பழி வாங்கியதையும் சரியென்கிறோம்.. ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்தியைப் பழி வாங்கியதில் என்ன தவறு? ராஜீவ் காந்தியின் கொலைக்காக நாம் இன்னும் எத்தனைக் காலம்தான் அழுவது? சிறையில் அடைப்பட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் போன்றோருக்காகவும் நம் மக்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம் ” என்றார்.

தோழர் தியாகு :

“ சிறைப்பட்டிருக்கிற தமிழர் எழுவரின் விடுதலைக்கு இந்நூலிலுள்ள தகவல்கள் பயன்படக்கூடும் . கிட்டுவும் அவரது தோழர்களும் சென்ற கப்பலை சர்வதேச கடல் பரப்பிலிருந்து இந்திய கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டுவர முயன்றபோது மாலுமிகளைத் தப்ப விட்டுவிட்டு கிட்டு உள்ளிட்ட தோழர்கள் கப்பலை வெடிக்கச் செய்து இறந்துபோயினர் . இது தொடர்பாக விசாகப்பட்டின நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. அந்தக் கப்பலில் வெடிமருந்தோ ஆயுதமோ கடத்தவில்லை என்று தீர்ப்பு வந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தத் தீர்ப்பைக்கூட இந்நூலாசிரியர் குறைகூறியிருக்கிறார். இது விடுதலைப் புலிகள் மீதான இவரது காழ்ப்புணர்வைக் காட்டுகிறது.

ராஜீவ் கொலையால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை . சோவுக்கும் சுப்பிரமணியசாமிக்கும் செத்துப்போன இந்தியத்தேசியம் உயிர்பெறவுமே ராஜீவின் கொலை பயன்பட்டது. ஈழத்தேசியத்திற்கு மட்டுமல்ல; தமிழ்த்தேசியத்திற்கும் இது பாதகமாக அமைந்தது . ராஜீவ் கொலைக்கு முன்பு பிரபாகரனைக் கைது செய்வதற்காக இந்திய இராணுவம் ஈழத்திற்குச் சென்றது முதலான இந்தியா ஈழத்தின் மீது எடுத்த அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து இந்நூலில் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. அரசியல் படுகொலை என்றால் அரசியல் காரணிகள் ஆராயப்பட வேண்டும். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் ஏதோ அடியாள்போல் நீங்கள் எண்ணிவிட வேண்டாம். வெளிநாட்டு உளவு நிறுவனங்களி்ன் கூட்டாளியாகவும் எண்ணிவிட வேண்டாம் . நம்முடைய வரலாற்றைப் படிப்பதற்கான எதிர்ஆசானாக இந்நூல் பயன்படும் ” என்றார்.

நூலாசிரியர் ராஜீவ் சர்மா ஆங்கிலத்தில் தன்னுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஏற்புரை வழங்கினார். முப்பது ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் நம் இனத்தின் வரலாற்றை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எனது எண்ணமே இந்நூலை மொழிபெயர்ப்பதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது என்றார்.
Top photo: Thadagam 
நன்றி்  www.thadagam.com

Monday, June 20, 2011

முன்னணி - அரசியல் சிற்றிதழ் அறிமுகம்

   பிரான்ஸிலிருந்து  “ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ” யின் சார்பாக வெளிவந்திருக்கும் இதழ் முன்னணி. விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனங்களைத் தாங்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சில கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இரு கவிதைகளை இங்குத் தருகிறேன்.

இவள் என்ன ஜாதி?
           - லண்டன் விஜி

நீயில்லாமல் நானில்லை என்றிருந்த
என் மாமன் மகன்கூட
எனை மனைவியாக்க மறுக்கிறான்!
நான் என் வீட்டாலும் நாட்டாலும்
புறக்கணிக்கப் பட்டவள்!
ஏனெனில்
நான் நம்பியதோர் இலட்சியத்திற்காக
போராடிய முன்னாள் பெண்போராளி!
                          ----------------

எண்ணை இருந்தால் ஈழம் மலரலாம்
                             - கங்கா

ந்திக் கடலில் பேரம் நடந்தது
எம் மக்கள்
நீந்தவும் முடியாது நிர்க்கதியாய்
கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர்
இப்ப மீளவும்
ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது
இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம்
எண்ணையைத் தோண்டிக் கண்டுபிடி தமிழா

அடித்துச் சொல்றாங்கள்
இதுதாண்டா உலகமயமாதல்
அமெரிக்கா பிரிட்டன் பிரான்சு மீட்பன்கள்
அணு ஆயுதம் இருக்கெண்டு பாய்வினம்
மக்களெல்லாம் சாகுதெண்டு அழுவினம்
மக்கள் கரிசனை பொங்கிக் குண்டாய் பொழிவினம்

எண்ணையிருந்தால் ஈழமெடுக்கலாம்
தேர்தல் நெருங்கினால்
அன்னை சோனியாவும் எமை ஆரத்தழுவும்
தம் கையை மீறினால் தான்
ராஜபக்சவும் கம்பி எண்ணலாமாம்...ம்
எல்லாம் வல்ல தேசங்கள் வகுத்த நியதியாம்

மக்கள் போரெழும் பூமியெல்லாம்
பூந்து நுழைந்தழித்துச் சீரழித்து
அடிவருடிப் பொம்மைகள் அமர்வதுவோ
வீழ்ந்ததுவோ மக்கள் எழுச்சி... இல்லை பார்
அடக்கப்பட்டோர் ஆர்த்தெழும் புயலாய்
அடங்காது
மக்கள் புரட்சி வெடித்துத்தான் ஓயும்....
                 -------------------




Saturday, June 18, 2011

நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம் - யுகபாரதி கவிதை

சூரிய கதிர் 16 - 30  2011 இதழ் படித்தேன். கவிஞர் யுகபாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர் பற்றி. நுட்பமான கவிதை. அரசியல்வாதிகளைப் பற்றி சினிமா கவிஞர்கள் வெளிப்படையாக எழுதமாட்டார்கள். யுகபாரதி எழுதியிருக்கிறார். அவரைப் பாராட்டுவோம்! இது சிறந்த அரசியல் கவிதை.


அவர்
நினைத்ததெல்லாம் நடந்த
காலத்தை
நினைத்துக் கொண்டிருக்கிறார்

எல்லாம் தெரிந்தே செய்த
அவருக்கு
இப்போது என்னசெய்வதென்றே
தெரியவில்லை

அவரால் சுயமாகச் சிந்திக்கவும்
முடியவில்லை

அவருக்கு அவரே
எதிரியானதைப்போல
அவ்வப்போது பேசத்
தொடங்குகிறார்

அவரைப் புகழ்ந்தவர்கள்
அவரைவிட்டு விலதுவதைத்
தாங்க முடியாமல் கதறுகிறார்

தூக்கத்தில் கைதுபயமும்
அவலை வாட்டத் துவங்கிவிட்டன

அவர் செய்த கேடுகளால்
அவர் ஒரு விசித்திர வலையில்
சிக்கிக் கொண்டிருக்கிறார்

அவர் உருவாக்கிய
சமஸ்தானத்து ராஜாக்கள்
வெவ்வேறு சூதின் காரணமாக
மக்களால்
விரட்டியடிக்கப்படுகிறார்கள்

அவருக்காக அவரே
உண்மையாக
அழ முடியாத சோகத்தில்
இருக்கிறார்

ஒரு இனம் தன் துரோகிக்குத்
தரும்
சகல கொடுமைகளையும் அவர்
அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்

எழுதியும் பேசியும் வளர்ந்தவர்
எழுதுபவர்களாலும்
பேசுபவர்களாலும்
உதாசீனப்படுத்தப்படுகிறார்

ஆண்மை மிக்க நம்முடைய
தலைவர்
முதல் தடவையாக அதற்காக
வருத்தப்படுகிறார்

கூடா நட்பு கேடாய்
முடியுமென்று
குரல் தளும்ப குமைகிறார்

அளவுக்கு மீறி பிள்ளைகளும்
அதிகாரமும் அவதி என்பதை
ஒத்துக்கொள்ள
துணிந்திருக்கிறார்

நம்முடையத் தலைவருக்கு
இது போதாத காலம்

தலைவர்கள் மன்னர்களாகத்
தங்களை
மாற்றிக்கொள்ள
எத்தனைக்கையில்
மக்கள் அவர்களுக்குப்
போதாத காலத்தை
புரிய வைக்கிறார்கள்.

நன்றி...சூரிய கதிர்
கவிஞர் யுகபாரதி

Monday, June 13, 2011

தமிழ்நதி – மிகுபசி கொண்ட உடல்மொழி - குட்டி ரேவதி

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள

நன்றி...www.thamizhstudio.com  

தலைப்பின் பொருளை ஒற்றை அர்த்தத்தில் விளங்கிக்கொள்ளவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே! அல்லது அதன் பொருளை இயன்றவரை முழுமையும் விளக்க விரும்பும் என்னுடன் பயணிக்க வரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! தமிழ்நதி எனும் கவிஞரை முன்வைத்து, அகதியாயும் நாடோடியாயும் வாழப்பணிக்கப்படும் எழுத்துப்பெண்ணைப் புரிந்து கொள்வது தான் இங்கே நமது பணியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.
2007 – ல் முதன் முறையாக ‘இன்றொரு நாள் எனினும்’ என்ற தமிழ்நதியின் கவிதையில் மேற்குறிப்பிட்ட கவிதைப் பத்தியை வாசித்தது முதல் இன்றும் அது, புதியதோர் உணர்ச்சியின் தொனியாய் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அவ்வரிகள், வெறுமனே அம்மாவிடம் கேட்கும் அனுமதியாக மட்டுமே இல்லை, பாருங்கள்! பிடிவாதமான, ஆனால் தான் செய்யப்போகும், இதுவரை யாரும் செய்திராத புதியதொரு செயலைத் தான் செய்யப்போவதன் அறிவிப்பாகவும் இவ்வரிகள் இருக்கின்றன. இது ஓர் அபூர்வமான தொனி தான்! இம்மாதிரியான தொனிகள் முழுதும் சுயத்திலிருந்தும், தன் ஆளுமையிலிருந்தும் எழும்புபவை. இன்னொரு கவிதைகளில் இருந்து சுடமுடியாதவை! மேலும், இவ்வரிகளில் குறிப்பிடப்படும், ‘சிலீரென்றெழும் ஓசை’, அவ்வோசை யொத்த பிற ஓசைகளை நினைவுப்படுத்துவதுடன், அவ்வோசையை யுத்தநிலத்தில் கேட்ட ஓசையுடன் இணைத்து, களவுபோன உறக்கத்தையும் குழந்தைமையையும் அவர் நேரடியாகச்சொல்லாமல் சொல்வது இக்கவிதை வரிகளின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. எனக்குப் பிடித்தமான இக்கவிதைத்தொனியைப் பல வருடங்களுக்குப் பின்னும் இன்றும் என்னுள்ளிருந்து பத்திரமாகக் கண்டெடுக்கமுடிந்தது.
கவிதைகள் சார்ந்து நான் எப்பொழுதுமே வலியுறுத்துவது, வேறுபட்ட கருப்பொருள்களுக்கு ஏற்ற, வேறுபட்ட தொனிகளை உள்ளே வைத்திருக்கும் கவிதைகள் தாம் இதயத்தில் நுழையும். நுழைந்த வேகத்தில் வெளியேறாமல் உள்ளேயே கிடந்து, உள்ளத்தின் குகையில் இருட்டிலும் வெளிச்சத்திலும் உழன்று என்னென்னவோ செய்யும். பின், அத்தொனியை, அவரவர் வாழ்வில் கண்டடைவதற்கான வாயில்களை எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திறந்து கொண்டே இருக்கும். நல்ல கவிதை என்பதன் செயல்பாடு இதுவாக இருக்கும்!
தமிழ்நதியின் இரண்டு கவிதைத்தொகுப்புகளுமே வேறுபட்ட இரண்டு உலகைச் சித்திரிப்பனவாக இருக்கின்றன. முதல் தொகுப்பு, ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்று மனிதர்களற்ற நிலப்பிரதேசத்தில், அப்பகலைத் தனியே கடக்கவேண்டிய சூரியனின் நிலைக்கு அழுத்தம் கொடுக்கும் தொகுப்பென்றாலும், அகதியாக நாடோடிப் பெண்ணாக, அஞ்ஞாதவாசம் இருக்கும் பெண்ணின் தனி மனித உறவுகளையும் அதுவும் பால்நிலை மையமிட்ட இடத்திலிருந்து நோக்கி, அவதானித்துச் சொல்லும் கவிதைகளாக இருக்கின்றன. எனக்கு இவர் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்த இடத்து, ‘மொழி’ என்பது ஓர் ஆதிக்கக்குறியின் வடிவில் எழும்பி நிற்பதையும், அதைச் சிதைக்க சொற்களைத் தேடிய சுயப்பயணத்தில் இவரின் எழுத்து வேட்டை இருப்பதையும் உணரமுடிந்தது.
பல சமயங்களில் மொழியென்பது, நிலத்தின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நிறைய பேரரசுகளுக்கு உதவியிருக்கிறது. ஈழத்தைப் பொறுத்தவரை, மொழி கொண்டிருந்த நுண்ணரசியலைப் பேச இவ்வெளியும் காலமும் போதாது. என்றாலும், அம்மொழியின் வழியாகத் தான் விடுதலை என்பதை பெண்கள் விளக்கமுடியும் என்பதை தமிழ்நதியின் எழுத்து தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஈரத்தையும், நெகிழ்ச்சியையும், தொடர்ப்பாய்ச்சலையும் கொண்டிருப்பதால், அந்நிலத்தின் தீயை தன் சொற்களால் விளக்குவதாகவும் இருக்கிறது.
ஆண்மை
ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப்பிராணியாகிச்
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்
ஓடும் பேருந்தில்
திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர்பிடுங்க
கால்நடுவில் துருத்தியது
பிறிதொரு நாள்
வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது
பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில்
ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த
உன் கண்களை நினைத்தபடி
‘குறி’ தவறாது சுடுகிறேன்
இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள்
என் சின்னஞ்சிறுமியே!
ஆண்மையின் சுடுமூச்சு தன் உடலைத் தொடர்ந்து வரும் வேறுபட்ட தருணங்களை இக்கவிதையில் முன்வைத்திருக்கிறார். இதில், ’குறி’ தவறாது அவ்வாதிக்கக் குறியைச் சுடும் ஒரு தருணத்தை தனக்கானதாகவும் ஆக்கிக்கொள்கிறார். ஆணாதிக்க வேட்கைகள், பெண்கள் மீது திணிக்கப்படுவதினும் அது தொடர்ந்து வழங்கப்படுவதும், கைக்கெட்டுவதாய்க் காட்சிப்படுத்துவதுமென பொதுவெளியில் துருத்திக்கொண்டே தான் இருக்கிறது. வேறு எந்த விடுதலையானதொரு வாய்ப்பினையும் பெறமுடியாத நிலையில், தன் இதழ்க்கடையில் முளைக்கும் பற்களால் தனக்குள் இருக்கும் சின்னஞ்சிறுமிக்குத் தனக்குத்தானே துணிவேற்றிக் கொள்கிறார்!
பாலை நிலப்பெண்ணைப் போல வெப்ப மூச்செறியும் தனிமையைத் தன் பல கவிதைகளில் தமிழ்நதி முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். நமது சமூகத்தில், தனிமை என்பது கூட்டத்தின் மத்தியிலும், குடும்பத்தின் மத்தியிலும் இருக்கும் பெண்ணுக்குக் கூட அனுபவிக்கத் திணிக்கப்பட்டது. என்றாலும், பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு, தனிமை என்பது அங்கங்கள் எல்லாம் முறையாக மறைக்கப்பட்டும், அவசியங்கள் குறித்த அங்கங்கள் வெளிக்காட்டப்பட்டும் அவள் எப்பொழுதுமே அணிந்திருக்க வேண்டிய, ஓர் ஆடையாகத் தான் மாறியிருக்கிறது. இத்தனிமையை, எழுத்துப் பெண்கள் சொற்களால் நிரப்ப இயன்றவர்கள். வேறெந்த இரத்த உறவையும் விட சொற்களின் மீது நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டவர்கள்.
இச்சொற்கள், ஏற்கெனவே அகராதியில் கொடுக்கப்பட்ட அர்த்தங்களிலேயே இவர்களிடம் பொருள்பெறுவதில்லை. இவ்விவ்விடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொடூரமான விதிகளைப் பொருட்படுத்துவதில்லை. புதிய சொற்களுக்குக் கண்கள் திறக்கும் வேலையை இப்பெண்கள் தங்கள் தனிமைகளில் செய்து கொண்டிருக்கின்றனர். குவிக்கப்பட்ட சொற்களுக்கிடையே, தேடி ஏதும் கிடைக்காத தங்களுக்கான சொற்களை, தன் உடலுடன் கொள்ள வாய்த்த தொடர் உரையாடலில் கண்டடைகின்றனர். பின், அவற்றை அடுக்கியும் கலைத்தும் போட்டு தன் விடுதலையைப் பாடுகின்றனர்.
பெரும்பாலும் தமிழ்நதியின் கவிதைகள், கவித்துவம் நிறைந்த பாடல்களாகத்தான் தோன்றுகின்றன. நவீனக் கவிதையின் இறுக்கங்களைத் தளர்த்திக்கொண்ட, ஆனால், தரத்திலும் செறிவிலும் கொஞ்சமும் குன்றாத ஓர் உடல் மொழியின் கூக்குரல்களாகின்றன. தோன்றிய வரியிலிருந்து, பாடலைப் போலவே சீரான வேகத்தில் தொலைவிடம் சேரும் பறவையைப் போலவே சொற்களும் சிறகசைக்கும்.
சொற்களுடனான உறவு
அறைக்கதவைப்பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன
செப்புக்களிம்பு படிந்த
தொன்மத்தின் வாயில்களினூடே
புதைந்துபோன பெண்களின்
அழுகை மிதந்துவருகிறது
பேரிரைச்சலுடன் திறக்கின்றன
வரலாற்றின் கபாடங்கள்
கனவும் நினைவுமான
காதல்வரிகள்
மதுவில் தோய்த்தெடுத்த
கவிஞரின் உளறல்கள்
போர் விழுங்கிய தெருக்களில்
அலைகின்ற பாடல்கள்
வலி பொதிந்த சொற்களிலிருந்து
தப்பித்து ஓடிவிடலாம்
காமமும் காதலும் இணைந்த
கூடலின் உச்சம்
சொற்களுடனான உறவு
வலிந்து மறந்திருக்கிறேன்
சொற்களால் கைவிடப்பட்ட ஒரு மாலையில்
வெளியேறத் தவிக்கும் கதவின் வழியாக
உள்ளே வரவிருக்கும் தனிமையை
---------------------------------------------------------------------------
உடலின் விழிப்பு
சொற்களின் உடுக்கடிப்பில்
உடல் பூக்கிறது சணற்காடாய்
காலம் திரும்பிவருகிறது
கனவின் சுவடுகளில்
முன்னேற்பாடாய்
விலங்கின் கூரியபற்களைப்
பறவைகளின் சிறகுகளுக்குள் பதுக்குகிறோம்
அவரவர் மேன்மைகளைக் காட்சிப்படுத்துகிறோம்
மேலும் தாவர உண்ணிகளாய்
இயற்கை எழில் மற்றும் பிரமிள்
‘சக்கரவாளத்தை’யும்
பேசித்தொலைக்கிறோம்
வலித்து இமை சாத்தியபடி
நடக்குமெல்லையில்
மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன
கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொரு காலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்
சொற்கள் தீர்ந்துவிட்ட அப்பொழுதில்
காலம் தனதிடம் மீள்கிறது
காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே
பெண்ணுக்கு மட்டும் காதல் என்பது, வரையறைகளால் சுட்டமுடியாத உறவு தான். பாலுறவைத் தன் உடலுக்குத் தந்து விட்டாலே, அதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டாலே அது காதல் என்று ஆகிவிடாது. அது ஒரு மிகுபசி! யோனியின் வாயிலை மூடியும் திறந்தும் செயல்படுத்தும் உறவின் வெளிப்பாடு இல்லவே இல்லை அது! உடலையும் உணர்ச்சிகளையும் இணைக்கும், சொற்களைக் கண்டடையும் தீராத பயணம் தான் அது! யோனி என்பது அதற்கு ஒரு விளைநிலமாக மட்டுமே இருக்கமுடியும்! அல்லது சொற்களை உற்பத்தி செய்யும் ஓர் உலைக்களனாக இருக்கமுடியும்!
உடலை விழிப்புறச் செய்து, அதை ஒரு மிகுபசி கொண்ட உடலாய் ஆக்கிக்கொள்ளும் வேலையை பெண்கள் தமக்குத்தாமே தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம், பெண்கள் உடலைச் சவப்படுத்தி உறைந்துபோகும் நிர்ப்பந்தங்களைத் தொடர்ந்து திணிக்கும் போது, தன் உடலை விழிப்புறச் செய்வதற்குத் தேவையான உந்துதலை, முடக்கப்பட்ட இவ்வுடலிலுருந்து தானே பெறவேண்டும். அத்தகைய மிகுபசி, அவர் கவிதைகளெங்கும் கனன்று சொற்களை இரையாகப் புசிக்கும் உணர்வைத்தான் நாம் அடைகிறோம். ‘நரிக் கவிதை’ என்ற கவிதையில், இந்த உடல் விழிப்பு என்பது பெண்ணுடலை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றும் பரிணாமத்தைச் செய்வதை மிக எளிமையாகவும் நேரடியாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட, ’உடலின் விழிப்பு’ கவிதையும், கீழே தொடரும், ‘நரிக்கவிதையும்’ பெண்ணுடலை, தன்னுடலை அரசியல்படுத்த முயலும் ஒரு நாடோடிப் பெண்ணின் உணர்ச்சி நிலையையும், சொற்தெறிப்பையும் கொண்டிருக்கின்றன!
நரிக் கவிதை
நீங்கள் என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தீர்கள்
எழுதப்படாத அது
அரூபமாய் கழிப்பறையிலும் உடனிருந்தது.
கடந்தமாதம் எழுதியிருந்தால்
புணர்ந்து தீராத உடலின் ஞாபகத்தை
காதலின் வலியாய் உருமாற்றியிருக்கலாம்.
கடந்த வாரமெனில்
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் தேவதையின்
உதிர்ந்து போன சிறகினைப்பற்றி
ஒப்பாரி பாடியிருப்பேன்
சிலமாதங்கள் முன்புவரை
குருதியலை அடிக்கும் கடல்களை…
பசித்தழும் குழந்தைகளை..
எமது பெண்களின்
இறைச்சியைப் பங்குபோட்டவர்களைக்
குறித்து எழுதும் எண்ணமிருந்தது.
களைத்துப் போய்த் திரும்பி வந்த
இந்த மாலையிலிருந்து
புலிவேஷம் கட்டிய நரியொன்று
என்னுள் ஏறியமர்ந்திருக்கிறது
இந்த நரியைத் தரையிறக்காமல்
எழுதிவிட முடியுமா
ஒரு கவிதையை?
சமீப காலமாக, நிலத்துடனான பெண்களின் உறவு குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்குப் பெண்கள், தாம் காலூன்றும் நிலமாகக் கண்டறியும் வெளி எது எதுவென்று துருவித்துருவித் தேடுகின்றேன். பல பெண்களுக்கு, எழுதும் பெண்களுக்கே கூட உடல் ஒரு பிரதேசமாக மாறாமலேயே படபடப்புப் பெறுகின்றது. இன்னும் சிலருக்கு, யோனியின் உழப்பட்ட நிலத்தைக் குத்தகைக்கு அளிக்காத தீயாய் எரியும் வேட்கை!. சிலருக்கு, தேசம் என்ற தன் குடும்பம், சுற்றம் அவருடனான தன் உறவு, பால்யம், நினைவு வெளி என இதில் இடம்பெற்ற பெளதீக வெளிகளைத் தேடித்தேடித் திரியும் காற்றாடி மனம். இந்நிலையில், வேரறுக்கப்பட்ட தன் நிலத்தை எப்படி தனக்குள் வருவித்துக்கொள்வாள் என்பதற்குத் தான் அற்றைத்திங்கள் கவிதை பதிலளிக்கிறது.
தன் உணர்வைக் கூர்மைப்படுத்தி, செம்மையாக்கி வழங்கும் போதெல்லாம் அதற்கு நேர்மையாக இருக்க அத்தனை சிரமங்களையும் எடுக்கும் போதெல்லாம் உருவாகும் கவிதை என்பது தனிமனிதருக்காகவன்றி, பொதுவான உடைமையாகிறது. இப்படித்தான், தமிழ்நதி தன் நிலத்து மக்களுக்கான பொதுக்குரலாகிறார். இது, ஓர் அசாதாரண நிலையே. தன் நிலத்தில் வாழ அனுமதிக்கப்படாத மக்களுக்காகவெல்லாம் தன் குரல் எழும்பி நிற்க, அவர் என்றுமே தயங்காத படிமங்களும் நிகழ்வுகளும் இவர் கவிதைகளில் சூழ்ந்திருக்கின்றன! ’அடையாளமற்ற நிலை’ என்பது அடையாளங்களைத் தனக்குள் உருவேற்றிக்கொண்டோர் மத்தியில் எந்த அளவுக்கு அதிகாரமும் உரிமையுமற்ற நிலையாக இருக்கிறது என்பதை இக்கவிதையில் உணரமுடியும். காலங்காலமாகப் பெண்கள் நிராதராவாக தன் நிலத்தைப் பார்த்து ஏங்கி நின்று கண்ணீர் கசியும் நிலையையும், ‘அற்றைத் திங்கள்’ எனும் அடைமொழியால் அளிக்கிறார். எந்த ஒரு குடும்பத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமையை நிறைவேற்றாமல், முழுதுமாய் வேரைப்பிடுங்கி, வேறு தொட்டியிலோ, அல்லது வெட்டவெளியிலோ நடுவதால், அவர்கள் தங்கள் உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சமும் ஒவ்வாத தட்பவெப்பநிலையை அனுபவிக்க நேர்கிறது. இதே நிலை தான் தாய்நாட்டைப் பிரியநேர்ந்தவருக்கும்!

அற்றைத் திங்கள்
நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப்புன்னகையுமற்றுக்
கடந்து போகிற மனிதர்கள் வாழும்
அந்நியத்தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக்குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்த படி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது
தொப்பூள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே
இரவுகளில் பொழியும் துயரப்பனி
துயரப்பனி பொழியும் இரவுகளில்
எழுத்தின் மெழுகுவர்த்தியை
அறைக்குள் ஏற்றி வைக்கிறேன்
நிலையற்ற இருப்பினை நினைவுறுத்தியபடி
அலைகிறது சுடர்
வேரறுதலின் வலி குறித்த
வார்த்தைகள் தோய்ந்தன
பிறகு தீர்ந்தன
ஈரமற்ற காலம்
ஆண்டுகளை விழுங்கி
ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது
திருவெம்பாவாய் எங்குற்றாய்?
இரத்தம் கோலமிடும்
தெருக்களில் இன்னும் மாற்றமில்லை
காத்திருக்கிறோம்…
ஒரு வயலினில் குழைந்து பிறந்து
குரல்கள் இணைந்து இழையத் தொடர்ந்து
சற்றைக்கெல்லாம்
முரசினில் முழங்கி
நரம்புகளில் நடந்து செல்லவிருக்கும்
அந்தப்பாடலுக்காக…
காத்திருக்கிறோம்
சிவந்த நிறத்திலான கொடி
தன்செருக்கில் கிறங்கிக் கிறங்கி
காற்றினில் அலைவுற…
விடுவிக்கப்பட்ட தெருக்களில்
மிதந்து செல்ல…
காத்திருக்கிறோம்
அஞ்ஞாதவாசத்தில் எழுதிய கவிதைகளை
உயிரைச் சலவை செய்யும்
பின்னிரா நிலவில்
மெட்டமைத்துப்பாட…
காத்திருக்கிறோம்
இந்த இரவு
அதிசயமாக விடிந்துவிடலாம்
அதற்கிடையில்
துயரப்பனி கவிந்த இவ்வீட்டில்
அநாதையாய் இறக்காதிருப்பேனாக!
இரவு, பகல் குழம்பியதைப் போன்ற ஒரு மனநிலையை அகதியாய் இருக்கும் ஒரு பெண் பெறுவதாக உணர்கிறேன். தமிழ்நதி, ஈழ விடுதலையின் பெண்குரலாய்த் தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டவர். விடுதலை இயக்கங்களின் பெண் குரலாய் அதிலும், தீர்க்கமான அரசியல் தெளிவுடனும், செயல்பாட்டுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மிகச்சிலரே. அதற்குக் காரணம், எப்பொழுதுமே பெண்கள் தொடர்ந்த களப்பணியிலும் அதற்குண்டான அரசியல் பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பைத் தமக்குத்தாமே வழங்கிக் கொள்வதுமில்லை. அல்லது, அத்தகையதான தெளிவுமிக்க சொற்களால் தன் அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பது இல்லை. தமிழ்நதி, இந்தக் குறைபாடுகளை தமிழ்த்தளத்தில் முழுமையும் நீக்கியவர். தொடர்ந்து மக்கள் விடுதலைக்கான சொற்களை அரசியல் திறனுடன் வழங்குபவர். தேசம் கடந்து தேசம் போகும் அவரது நாடோடி மனம், அவருக்கு அளப்பறியா துணிவையும் அரசியல் கூர்மையையும் உடல் என்ற தேசத்தின் எல்லைகளைக் கடக்கும் சிறகுகளையும் தந்திருப்பதாக உணர்கிறேன்.
ஆதிரை என்றொரு அகதி
ஐந்து வயதான ஆதிரைக்கு
ஆழ்கடல் புதிது
எனினும்
புதிதாக மெளனம் பழகியிருந்தாள்
குற்றவாளிகளாய் படகேறிய கரையில்
கிளிஞ்சல்களினிடையில் கிடக்கலாம் கேள்விகள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டியிலும்
படகினின்று உயிர் தளம்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
‘கடல் ஒரு நீர்க்கல்லறை’ என்பதன்றி.
கழிப்பறை வரிசை…
கல் அரிசி….
சேலைத்திரை மறைவில்
புரியாத அசைவுகள்…
காவல் அதட்டல்..
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழ்நகரை ஒத்திருந்தாள்
சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?
என் சின்ன மயில் குஞ்சே!
போரோய்ந்து திரும்புமொருநாளில்
பூர்வீகம் பிரிய மறுத்து
தனியே தங்கிவிட்ட
என் தாய் மடியில் இளகக்கூடும்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்
“அம்மம்மா! அவையவள் ஏன் என்னை
‘அகதிப்பொண்ணு’ எண்டு கூப்பிட்டவை?”
பெருமூச்செறியும் தொனிகளுடன் விரியும் தமிழ்நதியின் கவிதைகள் நேரடியான அரசியல் பார்வைகளை நெகிழ்ச்சியான மொழியால் வனைந்து தருபவை என்பதால் ஈரம் கசியும் வரிகளை எந்த நேரமும் அவர்கவிதைகளில் நீங்கள் தாண்ட வேண்டியிருக்கலாம்! ஆனால், அந்த ஈரத்திற்காகத் துணிவை இழந்த ஒரு கோழை மனநிலையை நீங்கள் அடையாளம் காணவே முடியாது. ஏனென்றால், அது கீழே உள்ள அதே பிரகடனத்தோடு உங்கள் கண்முன் எந்தவொரு கணமும் தோன்றி நிற்கலாம்!
அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.
----------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சென்ற கட்டுரையில், தம் கருத்துகளைப் பதிவு செய்த கருணாநிதி, செல்வம் இருவரின் கருத்துகளையும் வாசித்தப்பின் உண்மையிலேயே குற்றவுணர்வில் தாக்குற்றேன். இயன்றவரை இனி இந்த இடறல் நேராதபடிக்குப் பார்த்துக் கொள்கிறேன், நண்பர்களே! மற்ற கருத்துரையாளர்களுக்கும் என் அன்பையும், மகிழ்ச்சியையும், நன்றியையும் இக்கட்டுரையின் வழியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------
சிறு குறிப்பு: தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. இவர், ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (2007) மற்றும் ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ (2009) ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வழங்கியுள்ளார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி வசிக்கிறார். கவிதை தவிர, பிற இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

Saturday, June 11, 2011

அனார் – குறிஞ்சியின் தலைவி - குட்டி ரேவதி

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 13

அனார் – குறிஞ்சியின் தலைவி

குட்டி ரேவதி  
நன்றி்....www.thamizhstudio.com
பெண்ணின் குருதியைச் சடங்கார்த்தங்களுடன் பார்க்கும் நிலத்திலிருந்து பெண்ணின் ஓடும் குருதியைத் தன் ஆண்மையின் வெற்றியாய்ப்பார்க்கும் நிலத்தின் மொழியைப் பற்றி எழுதுதலும் பேசுதலும் எவ்வளவுக்குச் சாத்தியம் என்னும் சந்தேகத்துடன் தான் அனாரின் கவிதைகளைப் பற்றி எழுதத்தொடங்குகிறேன். தன் மொழியை, மாதாமாதம் ஓடும் குருதியாக்கிப் பார்க்கவில்லையெனில், பெண் தன் உடலையே காய்கறிகளையும் மாமிசத்தையும் வெட்டிக்கிழிப்பது போல் தான் கிழித்துக்கொள்ள நேரும். உடலின் வேட்கை அவ்வளவு! தன்னுள் கிளரும் மனோவேகத்தையும் ஹார்மோன்களின் இனிய வாசனை நிரம்பிய பூக்களையும் நிரப்பிய குருதி வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும். மீண்டும் உடலை நிரப்பிக்கொள்ள இருக்கவே இருக்கிறது, மொழியின் பாடல்களோ குருதியின் உஷ்ணமோ! மொழியும் வேட்கையும் ஒன்று சேர முடியாத வாய்ப்புகளை எல்லாம், குருதி பாயும் நிலமாய் விரித்துக் கொண்டனர் கவிப்பெண்கள். ஆனால், அவள் அனுமதியின்றியே அவள் உடலிலிருந்து குருதியை சேற்றில் புரளும் ஆடையாக்கியவர்களுக்கு எப்படி மொழியைத் தருவது? சொற்களை அடுக்கி, எப்படி அதன் வெப்பத்தை உமிழ்வது? எப்படித் தன் உடலைக் காத்துக் கொள்வது? மூப்பும் பிணியுமான இயற்கையின் வாதைகளையும் மீறி தன் உடல் அனுபவிக்க நேர்ந்த வதைகளை மொழியின் வழியாகக் காத்துக்கொள்ளத் துணிந்ததன் பீறிடல் தான் இதுவென்று கொள்ளலாமா?

மேலும் சில இரத்தக்குறிப்புகள்
மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாகக் காண்பது போன்று
‘இரத்தம்’ கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது
வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக்கூடும்
கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத்தனமாக
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தைச் சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கெளரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறை படிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
என்றாலும், எப்பொழுதும் பெண்ணுக்கு இரத்தம் என்பது முதல் முறையாகக் காண நேர்ந்தது போல் தான் என்பது மானுடத்திற்கான பரிவு நிறைந்த இயல்பே. பலவகையான இரத்தக் குறிப்புகளை முன்வைத்து அவர் சாவின் தடயங்களைச் சென்று தொடுகிறார்.
வேட்கை என்பது தன்னுடல் பிறிதோர் உடலுடன் புணர்வதற்கான இச்சையை மட்டுமே சொல்வதன்று. பெண் உடலென்றாலே, பிறிதோர் உடலுடன் புணர்ந்தும், பிணைந்தும் இருக்கவேண்டுமென்ற அடிப்படையான நியதியையும் குலைப்பது. இதை, உடலை முற்றும் முழுதுமாய் ஒரு தனிப்பிரதியாக்கிக் களிப்பது என்று கொள்ளலாமா? ஆனால், பெண்ணின் வேட்கையும் வேட்கைக்கான முகவுரையும் எப்பொழுதும் பாலியல் சாயமேற்றப்பட்ட கறையுடையதாகப் பார்க்கப்பட்டிருப்பதை புரிந்துகொண்டால், இங்கு அனாரின் வேட்கையின் சொற்கள் வில்லேறிய அம்புகளாய்ப் பிறந்து வந்து நம்முடலில் பாய்வதன் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும்.
அனாரின் முதல் கவிதைத் தொகுப்பான, ‘ஓவியம் வரையாத தூரிகை’ சில சம்பிரதாயத் தெறிப்புகளைக் கொண்டே வெளிவந்தது. பெண்கள் தங்கள் மனவெளியில் புறச்சூழலால் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலியான பிம்பங்களை மொழிவழிக் கசடாக்கி வெளியேற்றுவது தான் தொடக்கக்கட்டப் பணியாக இருந்திருக்கிறது. இந்தவொரு நிகழ்விலிருந்து, எந்தவொரு படைப்பாளியுமே தப்பித்ததில்லை. இது பொதுவிதி. தன் சுயத்தை வடிவுறச்செய்யும் பணியை, தொடரும் தம் எழுத்தின் இயக்கங்களால் தான் சாத்தியப்படுத்திக்கொண்டனர் என்பதால் தன் உடலிலிருந்து முதல் தொகுப்பின் வழியாகக் கசடை வெளியேற்றுவது என்பதை உலகப்பொது மறை என்றும் கொள்ளலாம். அனார், தன் முதல் தொகுப்பை, ஆண் இனத்தை எதிர்வெளியாக்கி சில முறையிடல்களாலும் அடக்கமான எதிர்ப்புகளாலும் கடந்திருக்கிறார்.
வேர்களில் எடுத்தவலி
வண்டுகளோடு குலாவும்
பூக்களுக்குப் புரிவதில்லை
என்பது போன்ற, சொற்தெறிப்புகள் அவருக்கு அவரே சமாதானம் தரவும் ஊக்கம் கொடுக்கவும் உதவியிருக்கலாம்.
தாமரைக்குளத்துக் காதலி
உன் உள்ளங்கைகள் பொத்தும்
தாமரைப்பூவின் அளவு தான்
என் இதயம்
குளிரில் கொடுகும்
சிறு அணிற்பிள்ளை ஜீவன்
’சூ’ என விரசுப்பட்டு(ம்)
நெல்மணி களவாடி
உனக்கு ஊட்ட
வரப்பில் வட்டமடிக்கும்
சிட்டுக்குருவி நேசகி
உப்புமூட்டை பிள்ளையென
உன் முதுகுச் சவாரிக்கேங்கும்
கனவுகளுக்குச் சொந்தக்காரி
கொச்சுக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காகப் பொறுத்திருக்கும்
தனிமை எனது
தோளுரசிப் போகவும்
இறுக்கமாய் விரல் கோர்த்து
கரைகளை மிதிக்கவுமாய் ஆசை
மின்மினி வெளிச்சத்தில்
விருந்து வைக்க
தூங்காமல் விழித்திருக்கும்
தூக்கணாங் குருவி
நான் தான்
தூண்டிலில் மாட்டிய
மான் குட்டி
நான் தான்
நீ மயங்கி மூழ்கிய
உன் தாமரைக் குளத்துக் காதலி
இக்கவிதையில், வடிவம் பெறும் தாமரைக்குளத்துக்காதலி, தன் குற்றச்சாட்டுகளை தரையிறங்கி அறிவிக்கும் சிறு பறவைகளாகத்தான் இருக்கிறார். ஆனால் அடுத்த கவிதையில் அந்த வானத்துப்பறவைகளையே பணிக்கிறார் பாருங்கள்!
அரசி
உன் கனவுகளில்
நீ காண விரும்புகின்றபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
அடிபணிய அல்ல
கட்டளையிடப் பிறந்தவள்
ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு
குகைகளிலிருந்து தப்பிச்செல்லுங்கள்
ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு
பெரும்மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுகளை
வருடிவிடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன்
ஒருத்தி சொல்கிறாள்
‘என்னிடமிருந்து தீர்வற்ற புலம்பல் கசப்பு’
இன்னொருத்தி கூறுகின்றாள்
‘குரலில் இறக்க முடியாச் சுமை’
இருண்டு வரும் பொழுதுகளில் நேர்ந்த
துஷ்பிரயோகங்களைக் காட்டுகிறாள் எளிய சிறுமி
நான் என்னுடைய வாளைக் கூர் தீட்டுகின்றேன்
சுயபலம் பொருந்திய தேவதைகள்
விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை
வென்றெடுத்ததாய் கொண்டாடுகிறார்கள்
பாட்டம்பாட்டமாய்
பெண்கள் குலவையிடும் ஓசை
பெரும்பேரிகைகளாய் கேட்கின்றன
நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே
கைகளிரண்டையும்
மேலுயர்த்திக் கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்றபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி


இரண்டாவது கவிதையில் இவர் பயன்படுத்தியிருக்கும் தொனியின் பாய்ச்சல், அமானுஷ்யமான ஆழமும் அகலமும் கொண்ட மடுவைக் கடந்தது. தன் இருப்பை ஆணித்தரமாய் உறுதிசெய்யும் நெடிய தூண் போன்ற பிரமை இக்கவிதையின் பின்னே ஒளிந்திருக்கிறது. அகம், புறம் என்ற இருவகையான கவிதைப் பண்புகளையே சங்கப்பாடல்கள் நமக்குப் புகட்டியிருக்கின்றன. அகம் என்பது பெண் - ஆணின் காதல், இன்னபிற அந்தரங்க உறவுகளையும், புறம் என்பது ஆணின் போர்புறப்பாடுகளையும் வெற்றிகளையும் பறைசாற்றுவது. அகப்பாடல்கள், பெண்ணின் இருப்பு என்பது ஆணைச்சார்ந்ததாகவும், புறப்பாடல்கள், ஆணை மட்டுமே நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. ஆகவே, இவ்விடம், ‘சுயம்’ என்பதை ஒரு வகையாக, அதிலும் பெண்ணை முதன்மையாக, அடுத்து ஆணுக்கும் ஆகுவதாக நாம் கட்டமைக்கலாம், அனாரின் இந்தப் பாடல்கள் வழியாக என்று தோன்றுகிறது.
வேட்கை என்பது, தன் இச்சைகளைச் சொல்வதற்கான அவகாசத்தை மட்டுமே குறிப்பிடுவது அன்று. அது பெரும்பாலும், சமூகத்தின் அசந்தர்ப்பங்களையும், சந்தர்ப்பங்களையும் தனக்கு வாய்ப்பாக்கிக் கொள்பவர்களுக்குத் தன் வேட்கையை வெளிப்படுத்துவதும், அதை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகாரத்தை ஏதோ ஒரு வடிவில் தன் மொழியில், உடலில், பாலிமையாகச் சேமித்துவைத்திருப்பவர்களுக்குமானது. அது அவர்களுக்குச் சிரமமானதொரு செயலாக இருப்பதில்லை. ஆனால், தன் தனித்ததொரு வேட்கையை உலகின் பெண்களுக்கு எல்லாம் பொதுவாக்கி, அதிகாரக்கட்டமைப்புகளைக் குலைக்கும் கடப்பாறைகளாய் மொழியை இறக்கித் தகர்ப்பது என்பது உண்மையிலே ஒரு களப்பணியைப் போன்றே ஈடுபாடும் உழைப்பும் கோரும் செயல். இதற்கு, அதிகார இயங்கியலை நன்கு கற்றுணர்ந்த தெளிவும், மொழியின் அதிகார அமைப்புகளை ஆராயும் தெளிவும் வேண்டியதாயிருக்கிறது. அனாரின், நீரோடை போன்ற மொழியும், சிக்கலற்ற படிம அசைவுகளும், சொற்கள் உதிர்ந்து பொலபொலவென கொட்டாமல் அல்லது அறுந்து தொங்காமல், கவிதையின் அழகோடு சமைவதும், அதே போல ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதைக் கட்டிடத்தின் செங்கற்களை உதிர்த்து புதிய ஒழுங்கைத் தைப்பதும் என இவரது செயலாக்கம் விரிகிறது. இந்த அனுபவத்தை உணர, நான் இங்கே எடுத்துக்காட்டும் சில கவிதைகளோடு முடிந்து விடாமல், அவரது முழுத்தொகுதியையும் வாசிக்கும் அனுபவத்திற்கும் அவகாசத்திற்கும் உங்களை அனுமதிக்கும் போது தான் வாய்க்கும் என்று நம்புகிறேன்.
தணல் நதி
மழைக்கு முன்னதாக
தூது வரும் குளிர்ந்த காற்றலைகளாய்
மெருகுடன் நெகிழ்ந்தன தாபங்கள்
விசித்திரமாய்
விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்ற வை
எரிந்து போகட்டும் என் உயிர்க்காடு
கண்ணீராய் காய்த்துக் கொட்டும்
இமைக்கந்துகளில்
தீயும் இக்கனவின் துயர்கள்
மேகங்களை
ஓட்டிச் செல்கின்ற காற்றிலெல்லாம்
இன்று இதே கசப்பும்
கசகசப்பும்
இந்தப் பேரலைகள்
இரைந்து கொண்டே இருக்குமோ
கடக்கவே முடியாமல்
என் முன் தொங்குகின்றது
தணல் நதியாய் இரவு.
எனக்குக் கவிதை முகம்
எல்லா மயக்கங்களுடனும்
மெல்ல
அதிர்கிறது இசை
படிக்கட்டுகளில் வழிந்தோடும் நீர்ச்சொரியலாய்
வறண்ட சுண்ணாம்புப்
பாதைகளில் மேற்கிளம்பும்
வெண்புழுதியில் மணக்கிறது
அவன் குதிரைக் குளம்பொலி
சாம்ராஜ்யங்களின்
அசைக்கமுடியாதக் கற்றூண்களை
பிடுங்கி ஒரு கையிலும்
போர்களை வெற்றி கொண்ட
வாள் மறு கையிலுமாய்
அதோ வருகிறான் மாவீரன்
இருபுறமும் பசுமரங்கள் மூடியிருக்க
மூடுபனி தழுவி நிற்கும்
சிறுத்து ஒடுங்கிய பாதையில்
என் கனவின் உள் புகுந்து
தாவுகின்றன இரண்டு முயல்கள்
விடிந்தும் விடியாத
இக்காலைக் குளிரில்
முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்
கோள் மூட்டுகின்றது
பெயர் தெரியா ஒரு காட்டுப்பூச்சி
அதனாலென்ன
எனக்குத் தெரியும்
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்
இக்கவிதையில் தான் அனார், ஆணாதிக்க மனநிலையை வெல்லுகிறார். ‘எனக்குத்தெரியும் அவன் வாள் உறைக்குள் கனவை நிரப்புவது எப்படியென்று’ என்ற வரி வாள் உறைகள் மற்றும் கனவுகளின் முரணை நம் நினைவில் தீப்பிழம்பாய் எரியச்செய்கிறது. அதுமட்டுமன்றி, இவ்வரிகள் பெண்ணின் அடுத்தக்கட்ட இருப்பை நியாயப்படுத்துவது. ஆணின் சூழ்ச்சிகளை மெத்த அறிந்தப் பெண்ணின் மனநிலையை விரித்துக்காட்டும் வரிகளும் கூட. பொதுவாகவே இம்மாதிரியான கவிதைகளை எல்லா தற்காலப் பெண் கவிஞர்களின் மையக்கவிதையாகவும் நாம் காண முடிகிறது. ஆணின் உளவியலுக்கு பயிற்றுவிக்கப்படும் சூழ்ச்சிகளை, அறிதலைப் பெண் தன் விடுதலையின் முகாந்திரமாக்கும் கவிதைகள், சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் இணங்கிவிட்ட சமூகத்தின் பிற பெண்களிடமிருந்து தன்னை உயர்த்திக்கொண்ட, வலிமைப்படுத்திக் கொண்ட கவிப்பெண்களின் அடையாளத்தை இவ்வெழுத்தில் பெறமுடிகிறது.
’வித்தைகள் நிகழ்த்தும் கடல்’, ‘குறிஞ்சியின் தலைவி’, மற்றும் ‘எல்லை வேலிகள்’ ஆகிய கவிதைகள் பெண்ணின் வேட்கையை கத்தி போல நெஞ்சில் இறக்குபவை. இதுவரையிலுமான உலகச் செவ்விலக்கியங்களிலும் கூட பதிவாயிருக்கும் கதாபாத்திரங்களின் வேட்கையை, அதற்கான தேவையை, வெளிப்பாடு நிகழ்த்தும் சமூக அசைவைப் பேசுபொருளாக்காமலேயே இலக்கிய நுகர்ச்சி என்பது கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களின் பிரதிகள் தம் பாலியல் வேட்கையை, இச்சையை, தேவையை கவிதை எனும் உரத்த மொழியில் வெளிப்படுத்துவது என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இல்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேல், அனார் தன் வேட்கையை வெளிப்படுத்தும் அழகும் அர்த்தமும் சிதறாத மொழி, நேரடியாக வாசகர்களை கவிதையின் வெளிக்குள்ளேயே இழுத்துச்செல்லும். மூன்றாவது தொகுதியான, ‘உடல் பச்சை வானம்’ திணைவெளிகளை ஆளும் பெண்ணின் மனத்தை கவிதையாக்கியிருக்கிறது. குறிஞ்சி, மருதம், கடல் என வேறு வேறு நிலவெளிகளில் தன் குரலை உரக்கக் கூவுகிறது. அடர்த்தியான மொழியும், மேன்மையான கற்பனையும் நம்மை உய்விக்க உதவும். அருகிருக்கும் உடலைப் போற்றவும் உதவும். மூன்று கவிதைகளைத் தந்திருக்கிறேன், அதன் அடுத்தடுத்த தீவிரத்தை வாசகர்கள் பெறுவதற்காக.
வித்தைகள் நிகழ்த்தும் கடல்
மயங்கி மயங்கிப் பொங்கும் கடல்
மெளனமாகவும் உரத்தும் பாய்கின்றது
மிரண்டு தெறித்தோடும் குதிரைகளென
அலைகள் துரத்தி வருகின்றன
உயரப்பறக்கிறது நுரைப்பறவை
சம்மணமிட்டு உயிர் இரையும் பாற்கடலை
உன் கண்களால் திருப்பிவிட எத்தனிக்கிறாய்
மாபெரும் கடலை
கண்கள் சவாலுக்கு இழுக்கின்றன
நினைவு வரைபடங்களின் வழிகளில்
ஏதோ ஓர் புதிர் விரைகின்றது
எதுவுமே நிகழமுடியாத இருட்டில்
யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது
நீ பாறைகளில் தெறித்தாய்
பாசியைத் தழுவினாய்
முழுவதுமான இழப்பிலும்
முழுவதுமான வெற்றியிலும் கடல்
கொந்தளிப்பது போல
ஓடிப்போய் கரையில் நின்று
வியர்த்து வழியும் காற்றை
மாயப்பொடியாக்கித் தூவினாய்
சேகரித்து வந்த நூறு பிறைகளையும்
கடலுக்குள் வீசி எறிகின்றேன்
எல்லாம் மறைகின்றன
கண்ணில் படாத ஒரு சாகச நிழலில்
ஸ்தம்பித்துப் போயிருந்த கடலில்
சிறு துண்டை வெட்டி உன் வாயுள் வைக்கிறேன்
நீ ‘பூப் போல’ என்கிறாய்

………………….
உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகளை எழுப்பிஎழுப்பிக் கடல் ஆகினோம்

குறிஞ்சியின் தலைவி
இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் தோன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாக தகதகத்தது
இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்
பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாழ்ந்து பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக் கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம் கசியும் கறுவாச்செடி
கோப்பி பழங்களும் சிவந்திருந்தன
நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்
சுட்ட கிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி…கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச் சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்…. பெட்டிப்பாம்புகளும்…
காத்துக்கிடக்கின்றன
மாய ஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காக
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக் கதிர்களை கடித்துத் தின்கின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி… தீயிலிட்டு….
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்கு பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள் விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’
அவளது குரல்…. மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
’பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச் செய்பவன்…
இன்றென்னைத் தீண்டலாம்
எல்லை வேலிகள்
எங்களுக்கிடையில்
இந்து மகா சமுத்திரம் இருந்தது
வழிநடையில் முகில் குவியல்கள்
எண்ணங்களின் குகைகள்…
அடுக்குகளாய் தீயெரியும் ஒளிக்காடு…
சூரியன் ஆட்சி முற்றிய வானம்
சந்திரன் ஆக்கிரமித்த சுரங்கப்பாதைகள்
வல்லரசுகளின் படையணிகள்
எல்லாம் இருந்தன
மலைகளை எல்லை வேலிகளாக
நாட்டியுள்ளனர்
காடுகள் நகர்ந்தபடி
எங்களைச் சுற்றி வளைத்து வழிமறிக்கின்றன
ஆனபோதிலும்
நான் அன்றவனை மூன்று முறை முத்தமிட்டேன்.
‘எல்லை வேலிகள்’ கவிதையை வாசிக்கும் போது, இந்துமகா சமுத்திரம், முகில் குவியல்கள், குகைகள், ஒளிக்காடு, வானம், சுரங்கப்பாதைகள், காடுகள் எல்லாம் அசைச்சித்திரங்களாகின்றனவா என்று பாருங்கள்!
நிறைவாக, எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக, ‘மண்புழுவின் இரவு’ கவிதையைச் சொல்லுவேன். இந்த உலகின் எந்த ஓர் உயிரிலும் தொக்கி நின்று அதன் குரலாக முழுமையும் நின்று ஒலித்து சவால் விடுக்கும் அனாரின் திறன் என்னை இக்கவிதையில் என்னையும் மண்புழுவாக்கியது!

மண்புழுவின் இரவு
மழை ஈரம் காயாத தார்வீதி
நிரம்பிய மாலை
இருள் அடர்ந்து இறுகி பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன்
இருளின் இருளுக்குள்ளே
எவ்வளவு பிரகாசம் நீ
கூதல் காற்றுக் கற்றைகளில்
நாசியில் நன்னாரிவேர் மணக்க மணக்க
மிதந்து வருகின்றாய்
தூர அகன்ற வயல்களின் நடுவே
‘றபான்’ இசைக்கின்ற முதியவரின் கானலோவியம்
இரவை உடைக்கின்றது
மிருகங்களுக்குப் பயமூட்டுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோற் பொம்மைகள்
அளவற்ற பயத்தில் தாமே நடுங்கிக் கொண்டு நிற்கின்றன
அடிபெருத்த விருட்சங்கள்
தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை
இலைகளால் கீறும் காற்றை உராய்ந்து
கரும்புக்காட்டை நடுவகிடெனப் பிரிக்கும்
மணல்பாதையை எனக்கு முன் மஞ்சள்நிறப்பூனை
குறுக்கே பாய்ந்து கடக்கின்றது
நாடியில் அளவான மச்சமிருக்கும்
பெண்ணின் கீழ்உதடு பிறை நிலா
மிக அருகே பேரழகுடன் அந்நட்சத்திரம்
இந்தப்பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி
தூக்கி நடக்கின்றேன்
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்லை நூல் தெரியும் வரி


----------------------------------------------------------------------------------------------
சிறு குறிப்பு: அனார், கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இயற்பெயர், இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம். ’ஓவியம் வரையாத தூரிகை’ (2004), ‘எனக்குக் கவிதை முகம்’ (2007), ‘உடல் பச்சை வானம் (2009) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு இருக்கிறார்.

Friday, June 10, 2011

முத்தங்களால் உன்னை....

தூக்கம் தளும்பும் உன்னை
முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்

இச்சைமொழிபேசிப் புணர்ந்து ஆழ்ந்துறங்கி
தானாய் விழித்தெழும் என்முன்
அலாரம் வைத்தெழுந்து அரைத்தூக்கத்தில் தயாரித்த
காப்பியை நீட்டுகிறாய்

சிறுபொழுதினில் டிபன் செய்து
பரபரப்பாய் லன்ச்சும் கட்டிக்கொடுத்து விடுகிறாய்
உட்கார்ந்த இடத்திலேயே
கையலம்ப நீரெனக்கு
எல்லாம் முடித்து அவசர அவசரமாய்
அலுவலகம் கிளம்புகிறாய்

நகரநெரிசலில்
பேருந்து உரசலில்
அலுவலக 'இரட்டை அர்த்த ' வார்த்தைகளில்
உடலும் உள்ளமும் கசகசத்துத் திரும்புகிறாய்
மீண்டும் சமைத்து இரவுணவுமுடித்து ஓய்ந்துறங்குகையில்
விழித்துக்கொள்ளும் என் காமம்...

மறுவிடிகாலை அலாரம் வைத்தெழுந்து...
சிறுவுதவியும் செய்யாது
தப்பித்துக்கொள்கிறேன் நான்
முத்தங்களால் உன்னைக் குளிர்வித்து!
-------------------------------------------------------------------------------
நன்றி...குமுதம் - 08 -03 - 04 
(குறிப்பு - என் முதல் கவிதைத் தொகுப்பான உதிரும் இலை யிலிருந்து எடுக்கப்பட்டது.)

கதை சொல்லி - கல்கி (Kalki)


 
லிவி 
நன்றி - http://koodu.thamizhstudio.com
 


"Don’t know when
The dawn will be coming
I open all the doors
"
---------------------------------------------------------------------------------
மேற்சொன்ன‌ வ‌ரிக‌ள் க‌ல்கியின் வீட்டில் அவ‌ருடைய அழகிய புகைப்ப‌டத்துட‌ன் எழுத‌ப்ப‌ட்ட எமிலிடிக்கின்ஸனின் கவிதை வரிகள். கதை சொல்லிக்காக‌ க‌ல்கியின் கொட்டிவாக்க‌த்தில் உள்ள‌ அவ‌ர்வீட்டில் நுழைந்த‌வுட‌ன் வீட்டில் மாட்ட‌ப் ப‌ட்டிருந்த‌ ப‌ட‌ங்க‌ளும் வாச‌க‌ங்க‌ளும் பெரிதும் க‌வ‌ர‌த்தொட‌ங்கின‌. ஒரு புகைப்ப‌ட‌த்தில் க‌ல்கி அடியில் புத்த‌க‌ங்க‌ளுட‌ன் ப‌டுத்திருப்ப‌து போன்று ஒருபுகைப்ப‌டம் இருந்தது. மேலும் ஒரு புகைப்படம் க‌ல்கி அவ‌ர் தோழிக‌ளுட‌ன் வ‌ட்ட‌மாக‌ ப‌டுத்துக் கொண்டேமேலே பார்ப்பது போன்ற‌தொரு புகைப்ப‌ட‌ம். ச‌துர‌ புகைப்ப‌ட‌ச் சட்டக‌த்தின் வ‌ழி பாயும் வ‌ட்ட‌ம் உருக்கொணரும் உண‌ர்வு அலாதியான‌து. இன்னுமொரு புகைப்பட்ட சட்டத்தின் இருந்த வாசகம் இவை

" நான் திருநங்கை தான்
ஆனால் அது மட்டுமே
என் அடையாளம் அல்ல".
புற‌க்க‌ணிப்பு, கேலி, ஒடுக்குமுறை இவைகளை எதிர்க்கும் திற‌ம் கொண்ட‌ ம‌னித‌ர்க‌ள் வாழ்வின் இன்ன‌ல்க‌ளையும் தாண்டி வாழ்வையொரு கொண்டாட்ட‌மாக‌ மாற்ற‌த் தொட‌ங்கிவிடுவ‌ர். த‌ன‌க்கும் தான் சார்ந்த‌ ச‌க‌ ம‌னித‌னுக்கு வாழ்வின் உன்ன‌த‌த்தை ப‌கிர‌த் த‌ருவார்க‌ள். அன்பும் க‌ருணையும் விரவிக்கிட‌க்கும் நாளெல்லாம் வாழ்வும், ம‌து கொண்ட உச்ச‌மென‌ மன‌மும் குதுக‌ளிக்கும். ச‌மூக‌ப் போராளி, ந‌டிகை, உத‌வி இய‌க்குநர், திருந‌ங்கைக‌ளுக்கென‌ இணைய‌த‌ள‌ம், தெரு நாட‌கங்க‌ளென‌ க‌ல்கியின் ப‌ல‌ அவ‌தாரங்க‌ள்அவ‌ரைப் ப‌ற்றி நிரூபிப்ப‌வை. த‌ன் ச‌மூக‌ம் சார்ந்த‌வ‌ர்க‌ளுக்கு ஒரு ந‌ம்பிக்கையென‌வும் நெஞ்சுர‌ம் கொண்ட‌வராக‌வும் வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்.
கல்கி தன் பள்ளி நாட்களில் முதல் மாணவராக வந்திருக்கிறார். சங்க இலக்கியங்களில் திரு நங்கைகளைக் குறிப்பிடும் பேடி என்னும் வார்த்தை அறியாமையைத் தவிர வேறேன்ன!.
கல்கியின் சிறு பிராயத்திலே தன்னிடம் பெண்மைத் தன்மை மிளிர்வதை உணரத் தொடங்கிவிட்டார். தன்னுடைய பத்து வயதில் தன் சகோதரிகளுடன் சேர்ந்து நாடகங்களில் பங்கேற்கும் போது கூட நாட்டியக்காரி, இளவரசி, வியாபாரப் பெண்மணி என்றே தன் பாத்திரங்களை விரும்பி எடுத்திருக்கிறார். தன்னுடைய பதிமூன்றாவது வயதில் தன்னுடைய பெண்மைத்தனத்தையும் அதை மறைக்க இந்த உலகுடன் தான் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கவிதையாக எழுதி வைத்துள்ளார். அவை அவர் தாயாரின் கண்களில் படவே, கல்கியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
பின்னர் பள்ளி மேல் நிலை படிப்புக்காக ஆண்கள் பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்து விட்டிருக்கிறார்கள். சக மாணவர்கள் அவரை வார்த்தைகளாலும் செயலாலும் அவருடைய பெண்மைத் தனத்தை கிண்டல்செய்து சீண்டி இருக்கிறார்கள். இதில் ஆசிரியர்களும் அடக்கம். அந்த ரணங்களில் இருந்து தப்பிப்பதற்காக பள்ளியை மட்டம் அடித்து பூங்காக்களில் உலாவத் தொடங்கியிருகிறார். அங்கு தான் தன்னைப் போன்ற அப்சரா என்னும் திருநங்கையைச் சந்தித்திருகிறார். திருநங்கைகளின் குடும்பத்தில் தன்னை ஒருஅங்கமாக இணைத்துக் கொண்டார்.
நல்ல வேளையாக தான் பிறந்த குடும்பத்தில் இருந்து வெளியேறும் நிலை கல்கிக்கு ஏற்படவில்லை. தன்குடும்பத்தாரிடம் விலக்கிச் சொல்லி அவர்களை மனதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக மாற்றியுள்ளார்.
மதுரை காமராஜர் கல்லூரியில் ஊடகத் துறை சார்ந்த படிப்பை மேற்கொண்டார். தன்னைப் போன்ற பிற திருநங்கைகளில் வலியை எடுத்துக் கூறவதற்கே அந்த படிப்பை மேற்கொண்டுள்ளார். கல்லூரிநாட்களில் "சகோதரி" யென்னும் பத்திரிக்கையை திருநங்கைகளுக்காக ஆரம்பித்துள்ளார்.
பன்னாட்டு ஊடக மொன்றில் வேலைக்குச் சேர்ந்து ஆராய்ச்சி சம்மந்தமான ஆண்கள் குழு ஒன்றுக்கு தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். பின்னர் வேலையை விட்டு, 'சகோதரி' அமைப்பை திருநங்கைகளுக்காக ஆரம்பித்தார். ஆரோவில்லில் உள்ள நாடகக் குழுவிலும் பங்கெடுத்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களைச் சந்திப்பதுஅவர்களுடன் திருநங்களுக்கு எதிராக நிகழும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது மற்றும் திருநங்கைகளை சமமாக நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக அவர்களுடன் உரையாடுகிறார். 2008ம்ஆண்டு ஈழ‌த்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிராக திருநங்கைகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். அநீதிகள் நடக்கும் இடங்களில் எல்லாம் திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து அதை எதிர்க்கவேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளார் கல்கி.
திருநங்கைகளுக்காக தொடர்ந்து போரடி வருபவர் கல்கி. மெல்ல மெல்ல திருநங்கைகளைப் பற்றிய சமுதாயக் கண்ணோட்டம் மாறி வருவதைப் பார்க்கலாம். திருநங்கைகளுக்கென நலவாரியம் ஒன்றைஅமைத்திருக்கிறது தமிழக அரசு. அரசு கல்லூரிகள் பல்கலைக்கழ‌கங்களென சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக கருதுகிறார் கல்கி.
கல்கியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது "விடுதலை கலைக்குழு" என்னும் முற்றும் திருநங்கைகள் பணியாற்றும் கலைக் குழுவைப் பற்றிச் சொன்னார். இக் கலைக்குழுவில் திருநங்கைகளே இசை அமைத்தும், நடனங்களையும் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் கொச்சின் திரைப்பட விழா மற்றும் நேபாளத்தில் நடந்த சவுத் ஏசியன் கான்பரன்ஸ் பார் வைலன்ஸ் எகெய்ன்ஸ்ட் வுமன் (south asian conference for violence against women) நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்.
கல்கியின் வீட்டிற்கு அருகில் சிறு தோட்டம். கதைகளை பதிவு செய்யத் தொடங்கும் தேவையானஅமைதியை கிழித்துக் கொண்டு வெளியில் இருந்த காகக் கூட்டம் கரையத் தொடங்கியது. அவைகள் பாசைகள் விளங்குமாயின் காக்கைகளின் கதைகளையும் பதிவு செய்யலாம் தான். கதைகளுக்குள் நுழைந்த பின் காக்கைகளின் பாடல் நின்று போன‌து.
மொத்தம் ஐந்து கதைகளென இலக்கு வைத்து பதிவு செய்து கொண்டோம். கோடை வெய்யில் உருக்கி எடுத்துவிடும் போன்ற நிலையிலும் அழகாக கதைகளை பதிவு செய்து தந்தார் கல்கி.
பின்குறிப்பு: கல்கியின் வாழ்க்கை குறிப்புகள் அவருடைய இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.

Thursday, June 9, 2011

நூல் விமர்சனம் : வரும்வரை வானம் பார்த்திரு - மேரி வசந்தி



உறவுகளையும் உணர்வுகளையும் பேசும் கவிதைகள்

து பெண்கவிஞர்களின் காலம் என்று புலப்பட்டாலும் சமீபகாலமாக பெண்கவிஞர்களின் வருகை சொல்லிக் கொள்ளும்படியாக நிகழவில்லை என்றே சொல்லலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கவிஞர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இச்சூழலில் எழுத்துலகிற்கு “ வரும்வரை வானம் பார்த்திரு ” எனும் தன் முதல் கவிதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் ச. சதாசிவானந்த சௌந்தரநாயகி.

சொற்கள் , முயற்சி ...தொடங்கி திருமதி வரை சிறியதும் பெரியதுமாக எண்பத்தைந்து கவிதைகள் உள்ளன. திருமணத்திற்கு முன்னும் பின்னுமான தன் வாழ்வியல் அனுபவங்களை உணர்த்தும் விதமாக எளிய நடையில் வெளிப்பட்டுள்ளன இவரது கவிதைகள் . இழந்துவிட்ட அல்லது பிரிந்துபோன நட்புகள் , மறக்க நினைக்கும் காதல் , பிறந்த வீட்டின் பெருமித உணர்வுகள் , குழந்தை மீதான அன்பு , கணவன் கணவன் சார்ந்த உறவுகள் மீதான குறைகூறல் , பெண்களுக்கேயான வலிகள் , வீட்டிற்கும் அலுவலகத்திற்குமான அலைச்சல் , “கணவன் - முதலாளி என இரு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் அவலம் ” என எதார்த்த வெளியில் பயணிக்கின்றன கவிதைகள்.


குழந்தைகள் போல் மகிழ்ந்துபோக , இளவயது ஞாபகங்களை அசைபோட , உணவுகளை நிதானமாய் சுவைத்திட என எதற்குமே நேரம் ஒதுக்க இயலாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கை பற்றிப் பேசுகிறது “இல்லை ” எனும் கவிதை.

“ கால்கள் வாட / உன்னைப் பிரியும் காலைகள் / மனம் மலர மீண்டும் சந்திக்கும் மாலைகள் / சமையலறையோ குளியலறையோ / என்னை ஏந்திக் கொள்ளும் / சிறு பிரிவையும் பொறுக்காத உன் நொடிகள் / .....அயர்ந்த தூக்கத்திலும் / அனிச்சையாய் / என் இருப்பு தேடி / அருகே பயணிக்கும் உன் உடல் ” எனும் இனிமை கவிதை குழந்தையைப் பரிந்து அலுவலகம் செல்லும் பெண்களின் மனவுணர்வை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறது .

ஒரு கரு உருவாகி சில நாட்கள் மட்டுமே இருந்து கலைந்துபோனாலும் அதன் நினைவு அந்தத் தாய்க்கு உயிர்வுள்ளவரை இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாக பேசுகிறது மகனா மகளா ? எனும் கவிதை. வட்டக்கிணறு , ஊத்துக்கிணறு , ஓரக்கிணறு , தோட்டக் காட்டுக் கிணறு , வெள்ளையங் கிணறு ,கெராப் பள்ளத்துக் கிணறு , நத்தக் காட்டுக் கிணறு என கிணற்றில் இத்தனை வகைகளா என்று வியக்க வைக்கும் ஈரமாய் எனும் கவிதை பட்டென்று முடிந்துவிடுகிறது.

அழகியல் சார்ந்த மற்றுமொரு கவிதை வா...மழை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. “ இன்றாவது வா / என்னை உனதாக்கு / என் தாகம் தீர் / என்னை நனை முழுவதுமாய் / எங்காவது கடத்து மனதை / குடை மறந்தேன் / இன்றாவது வா .”

சின்ன விசயங்களில் கணக்குப் பார்த்துவிட்டு பெரிய அளவில் கோட்டைவிடுபவர்களைப் பற்றிப் பேசுகிறது துரும்பு கவிதை.
“ பிச்சைக்காரரிடம் / கணக்குப் பார்த்த ஐம்பது பைசா / ஆட்டோகாரரிடம் / கொடுக்காதுவிட்ட ஒரு ரூபாய் / காய்க்காரரிடம் / பேரம்பேசிய இரண்டு ரூபாய் / வெள்ளத்தில் துரும்பாய் / அடித்துக்கொண்டுபோனது / ஷேரில் போட்ட லட்சங்களாய். ”

பிறந்தகம் பற்றிய கவிதைகளும் அப்பா நட்பு காதல் பற்றிய கவிதைகளும் நேர்மறையாகவும் கணவர் மற்றும் அவர் சார்ந்த உறவுகள் பற்றிய கவிதைகள் எதிர்மறையாகவும் வெளிப்பட்டுள்ளன. கணவன் என்பவன் அல்லது ஆண் என்பவன் குறைசொல்லியே ஆகவேண்டியவன் என்கிற பெண்கவிஞர்களின் விதியை சிரம்மேற்கொண்டு இவரும் பின்பற்றியிருக்கிறார். ஒரு வித்தியாசம் இவரது கவிதைகளில் ஆணைப் பற்றிய பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டுக்கள் குறைவாகவுள்ளன. அப்பா என்கிற ஆணைப் பற்றிய கவிதைகள் பெருமிதவுணர்வோடு பேசுகின்றன. கணவன் சார்ந்த குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை பொருளாதாரம் பற்றியும் குறைந்த அளவில் உணர்வுகள் சார்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. கல்யாணம் பற்றிய பெரும்கனவு நினைவானபோது ஏற்பட்ட ஒரு பெண்ணின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இத்தகைய கவிதைகள் உள்ளன.

வாழ்க்கைப்“பட்ட” வீடு ,

“ சில சுவர்கள் / மேலும் உட்புறமாய்ச் சில / நிறைய துணிகள் / அழுக்கும் அழுக்கற்றவையுமாய் / ஒரு சோபா / .......ஒரு டி.வி./ உடைந்துபோன ரிமோட் / இவற்றோடு இன்னுமொன்றாய்/ நீயும் / என் வாழ்க்கை நிரப்பிகள். ”

கணவனின் வீடு “ பட்ட ” மரம்போல்...“ பட்ட” வீடு.! கணவன்... “உடைந்துபோன ரிமோட்டைப் போன்ற ” ஒரு பொருள்!

தான் செய்யும் தவறுகளுக்குக்கூட மனைவியை குறைகூறி பிழையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆண்களைப் பற்றிப் பேசுகிறது பேசு கவிதை . “ மிகச் சரியானவை உன் வார்த்தைகள் / மிகத் தவறானவை என் வார்த்தைகள் / என்பதான உன் தீர்ப்பை / பொறுமையின் எல்லைக்கப்பால் / சென்றேனும் / ஒத்துக்கொண்டேயாக வேண்டும் நான் .” இக்கவிதை வரிகள் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தும் சிறந்த வரிகளாக உள்ளன. செறிவான நடையில் இயல்பாக சென்றுகொண்டிருக்கும் கவிதையின் முடிவு நாடகத்தன்மையாக இருக்கிறது. திருமணத்திற்குப் பின் தன் சுயத்தை இழந்துவிடும் பெண்களின் மனத்தை வெளிப்படுத்துவதாக திருமதி கவிதை அமைகிறது .

பெரும்பாலான கவிதைகளுக்கு கவிதை வரிகளையே தலைப்பாக வைத்தருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கவிதைக்குத் தலைப்பு கட்டாயமா என்ன ? சில கவிதைகளைச் செதுக்கியும் சில கவிதைகளைத் தவிர்த்துமிருந்தால் தொகுப்பு இன்னும் கூடுதல் கவனம்பெற ஏதுவாக அமைந்திருக்கும். கவிதைகள் நவீனத் தன்மையிலும் அட்டை வடிவமைப்பு மற்றும் நூல் வடிவமைப்பு தலைப்பு ஆகியவை வெகுசன ரசனைசார்ந்தும் அமைந்திருப்பது முரண்பாடாக உள்ளது. இப்படிச் சில குறைகளிருப்பினும் ஒரு நிறைவான தொகுப்பாகவே உள்ளது.

வரும்வரை வானம் பார்த்திரு
ஆசிரியர் - ச. சதாசிவானந்த சௌந்தரநாயகி
வெளியீடு - வனிதா பதிப்பகம்
எண் 11 நானா தெரு
பாண்டி பஜார்
தி்.நகர்
சென்னை 17
044- 42070663

Thadagam.com - Book Review - Varum Varai Vaanam Parthiru

Thadagam.com - Book Review - Varum Varai Vaanam Parthiru

Sunday, June 5, 2011

என் கவிதை - தேவதையல்ல பெண்கள்

பூமேவிய சொல்லாயுதங்களாய்
பூமியெங்கும் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன
கற்பிதங்கள்.
மனத்தைச் சிதைப்பதற்கென்றே படைக்கப் பட்டவை
அழகு, தெய்வம் ,தேவதை இன்ன பிறவும்.

உணர்வுகளால் சமைக்கப் பட்டது பெண்ணுடல்
தசையும் குருதியும் அதன் ஆதாரம்
வெண்ணுடல், வெள்ளுடை ,நட்சத்திரங்கள்
ஒளிவுமி்ழ் அணிகள்
தேவதைக்கானவை எனும்போதே
கொல்கிறாய் நேரெதிர் பெண்களை.

பூ நிலா நதி நாடு பூமி
எதனோடும் ஒப்புமைப் படுத்தி
அஃறிணையாக்காதீர்.

உனது எண்ணங்களால்
தேவதையாய்ச் சமைத்து 
சந்தையில் நிறுத்தி
உனது சூழ்ச்சிகளால் அலங்கரித்து
உனது ரசனைக்காக 
அவளுடலில் அழகுரசம் பூசுகிறாய்
இனியும் வேண்டாம் 
இவ்வன்முறை

தேவதையல்ல பெண்கள்.

 

Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர் - டி.அருள் எழிலன்

யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
"சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க. அப்பாதான் எல்லாம் பத்தாவதோட படிப்ப பாதில விட்டுட்டு எங்கப்பாவோட சம்பளப் பணத்தை எடுத்துக்கிட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். அது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டு திரும்ப வீட்டுக்குப் போயி சொல்லிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்திட்டேன். அப்ப எங்கப்பா சொன்னாரு... "படிபடின்னு சொல்றேன் படிக்க மாட்டேங்குற உனக்கு இப்ப தெரியாது, உன்னோட 30, 31வது வயசுல படிக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்படுவ" என்றார்.

தாமஸ் ஆஸ்பிட்டல்ல உடம்புக்கு முடியாம எங்கப்பா அட்மிட் ஆயிருந்தாரு. அப்போ நான்தான் கூட இருந்து பார்த்துக்கிட்டேன். அன்னிக்கி என்னோட 31வது பிறந்த நாள். எங்க அப்பாவாண்ட சொன்னேன்... "படிக்காம போயிட்டோமன்னு 30, 31வது வயசுல வருத்தப்படுவேன்னு சொன்னீங்களே... படிக்கலைங்கிறதுக்காக இப்பக்கூட நான் வருத்தப்படலப்பா" என்றேன். பெற்றோர்கள் நினைப்பது போல் இல்லை வாழ்க்கை. அது துரத்திக் கொண்டே இருக்கிறது என்று எதார்த்தம் புரிந்து பேசிக் கொண்டே போகும் டி.அருள் எழிலன், 'ராஜாங்கத்தின் முடிவு' எனும் குறும்படத்தை இயக்கியவர். இதழியல் துறையிலிருக்கும் அரிதான மனிதர்களில் ஒருவர் இவர். தன் உயர்வுக்காக சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடையே சமூகம் பற்றிய சிந்தனையை சுமந்து திரியும் இளைஞர். இயல்பான எளிய மனிதர். பாகிஸ்தான் எழுத்தாளர் 'சதத் ஹசன் மாண்டோ'வின் 'ராஜாங்கத்தின் முடிவு' சிறுகதையை குறும்படமாக்கியிருக்கிறார் டி.அருள் எழிலன்.

எதார்த்தத்தை மறந்து கனவுலகில் சஞ்சரிக்கும் இளைஞனைப் பற்றிய குறும்படம் இது. ஓர் அறைக்குள்ளேயே இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓர் இளைஞன், தொலைபேசி, தொலைபேசியின் மறுமுனையில் ஒலிக்கும் பெண்குரல். இவையே கதாபாத்திரங்கள்.

தாடி வைத்த இளைஞன் ரவிக்குமார், துவக்கம் முகம்மது பஷீரின் 'மரணத்தின் நிழலில்' புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றி அறிமுகம் செய்கிறது ஒரு பின்னணிக்குரல். "நிறைய படிப்பான், நல்லா ஊரு சுத்துவான், சம்பளத்துக்கு உத்தியோகம் பார்க்கிறது பிடிக்காது. நண்பர்கள் சாப்பாட்டுக்கு உதவி பண்றாங்க, சென்னைல இருக்கிற ஏதாவது ஒரு பிளாட்பாரத்துல தூங்கிக்குவான், இவனுக்கு கிடைக்காத ஒண்ணே ஒண்ணு... பொண்ணு"

தொலைபேசி ஒலிக்கிறது... மறுமுனையில் ஒரு பெண் பேசுகிறாள். முகம் காட்டாமல் குரல் மட்டும் கேட்கிறது. இருவருக்குமான உரையாடல் தொடர்கிறது. இவனது பெயர், பிடித்த பொழுதுபோக்கு, இவனது வாழ்க்கை என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இவனும் தனக்குப் பிடித் Minolta camera விலிருந்து தற்போது தங்கியிருக்கும் நண்பனின் அறை வரை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறான். மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. அவன் எதிர்பார்த்த மாதிரி அதே குரல். புட்டியை பற்ற வைத்து புகைத்தபடி பேசுகிறான். 'என் பேர கேட்கமாட்டிங்களா என்கிறது பெண்குரல்' 'தேவையில்ல வேணுண்ணா நீ பேசப் போற' இப்படியாக உரையாடல் வெகு சுவாரஸ்யமாய் போகிறது. 'மேகமே மேகமே
பால் நிலா தேயுதே' பாடலை தொலைபேசியில் பாடுகிறாள். பு*றகு அந்தக் குரலுக்காக இவன் காத்திருக்கத் தொடங்குகிறான். இதனிடையில் அவனது நண்பன், "டேய் ரவி, நான் 4 நாள்ல ஊருக்கு வந்துடுவேண்டா, வந்த வேல முடிஞ்சிடுச்சி" என்கிறான். இந்தத் தகவலை தொலைபேசி பெண்ணிடம் சொல்கிறான். அவளைச் சந்திக்க விரும்புகிறான். தன் ராஜாங்கம் முடியப் போவதை வருத்தத்துடன் சொல்கிறான். உடல் நிலை குன்றி இருமியபடி விரக்தியிலிருக்கிறான். வாயில் ரத்தம் ஒழுக பஷீரின் 'மரணத்தின் நிழலில்' புத்தகத்தின் மீது சாய்ந்துவிடுகிறான். சாய்ந்தவன் சாய்ந்தவன்தான் தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இத்துடன் இக்குறும்படம் முடிவடைகிறது.

டி.அருள் எழிலன்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை எனும் மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் எழிலன். இந்தியாடுடே வழங்கிய 'சிறந்த இளம் பத்திரிகையாளர்' விருதை பெற்றிருக்கும் இவர் தற்போது 'ஆனந்த விகடனில்' உதவி ஆசிரியர். வழக்கமான பத்திரிகையாளர்களை போலல்லாது மாறுபட்ட சிந்தனை உடையவர்.

இனி அவருடன்....

• இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

"எங்க வீட்டுல சுமார் ஆயிரம் புத்தகம் இருக்கு, நான் முதன்முதல்ல படிச்ச நாவல் 'தகழி' எழுதிய 'செம்மீன்', இரண்டாவதா படிச்சது மாக்சிம் கார்க்கியின் 'தாய்', அப்பா எப்பப்பார்த்தாலும் 'படி படி என்று வலுக்கட்டாயமா திணிச்சதால படிப்பு மேல ஒரு வெறுப்பு வந்துடுச்சி. நாகர்கோவில்ல பள்ளிக்கூடம் போகாம ஷபி****ப்ஹவுஸ்' ங்கிற இடத்துல ஒளிஞ்சுக்குவோம். அங்க இருந்த பாஸ்டர் சென்ரல் லைப்ரரியில் தான் இந்த 'ராஜாங்கத்தின் முடிவு' என்கிற கதையை படிச்சேன். அப்போ 8வது படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்பவே இந்தக் கதை மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சி."

• குறும்படம் என்பது சினிமாவில் நுழைவதற்கான கருவியா?

"குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை ஏனென்றால் கோடம்பாக்கத்தில் இதெல்லாம் செல்லாது. குறும்படத்தைப் பார்த்துவிட்டெல்லாம் யாரும் வாய்ப்பு தருவதில்லை."

• தமிழ்க் குறும்படங்களின் போக்கு குறித்து?

"தமிழ்க் கலாச்சாரம், இந்து கலாச்சாரம் எனும் 'மைண்டு செட்டப்' தான் படைப்புக்கு முதல் எதிரி. குறும்பட இயக்குநர்களும் பொது புத்தியிலிருந்துதான் செயல்படுகின்றனர். வேகுசில படங்கள் தான் சமூகம் சார்ந்து வெளிவருகின்றன. ஆர்வக் கோளாறின் காரணமாக நிறையபேர் குறும்படம் எடுக்கிறார்கள். எதை எடுத்தால் அரசாங்கம் ஊக்கப்படுத்துமோ அதை எடுக்கிறார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற செய்திப் படங்கள் எடுப்பது அரசு செய்ய வேண்டிய வேலை. அதற்குக் குறும்பட இயக்குநர்கள் தேவையில்லை. நுட்பமான விசயங்கள் குறும்படங்களில் குறைவாக இருக்கு"

• அப்படினா, குறும்படங்கள் எப்படி இருக்குணும்னு நினைக்கறீங்க?

"மனித உறவுகளுக்கிடையில் ஏற்படும் நெருடல்களும் பிரிவுகளும் ஒன்றையொன்று தாங்கிக் கொள்ள முடியாத துன்பத்தில் உழல்கின்றன. இத்தகைய உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு படைப்பாளி சமகால அரசியலிலிருந்து தப்பிக்க முடியாது. சமகால அரசியல் அதாவது, மறுகாலனிய ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமான குறும்படங்கள் வரவில்லை. மறுகாலனிய ஆதிக்கத்தை தோலுரித்துக் காட்டக்கூடிய குறும்படங்கள் தமிழில் வரவேண்டும்".

• NGO க்களின் ஆதரவுடன் குறும்படம் எடுப்பவர்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

"அமெரிக்காவின் காலனிய கொள்கையை நியாயப்படுத்தக் கூடிய பொருளாதார அடியாட்களாக NGO குழுக்கள் உள்ளன. இதற்காக அமெரிக்கா மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது. இந்த NGO குழுக்களின் குரல் இடதுசாரிகளின் குரலில் ஒலிக்கும். மக்கள் இடதுசாரி அமைப்புகளின் கீழ் அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த NGO குழுக்கள் பொருளாதார அடியாட்களாக செயல்படுகின்றனர். இவர்கள் போலி நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கிறார்கள். இவர்களைவிட மக்களுக்கு உண்மையாக உழைக்கக் கூடிய குழுக்கள் தமிழகத்தில் பல உள்ளன.

சுனாமிக்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1000 கோடிக்கு மேல் புழக்கத்தில் உள்ளது. அமெரிக்கா ஒரு புறம் விவசாயத்தை ஒழிக்கும், மறுபுறம் தங்கள் பூர்விக நிலத்திலிருந்து வெளியேறும் போது அவர்களுக்காக இந்த NGOக்களின் மூலம் குரலும் கொடுக்கும். இடதுசாரிப் பாதையில் மக்கள் அணிதிரண்டால்தான் அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தை முறியடிக்க முடியும். எனவே தான் சொல்கிறேன் NGO சார்ந்து இயங்கக் கூடிய இயக்குநர்கள் படைப்பு நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்".

• அப்படியெனில் இடதுசாரிகள் நல்ல குறும்படங்களை எடுக்க வேண்டியது தானே?

"தேர்தல் பாதையில் உள்ள பொதுவுடைமையாளர்கள் தேர்தல் ஏஜென்ட்டுகளாகத்தான் செயல்படமுடியும். அவர்களால் குறும்படங்களை எடுக்க முடியாது."

• நீங்கள் ஏன் ஷராஜாங்கத்தின் முடிவுடன் நிறுத்திவிட்டிர்கள்?


"என்னால் மற்றவர்களைப் போல NGO க்களுடன் இணைந்து செயல்பட முடியாது. தனி நபர்கள் உதவி செய்யும் போது மீண்டும் குறும்படங்கள் எடுப்பேன்."

• ஒரு படைப்பாளியாக, பத்திரிகையாளராக இந்திய தமிழ்ச் சமூகத்தின் மீதான உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?

இந்தியா நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. இந்துமதவாதம் மேலோங்கியுள்ளது. 'சாதிக் கட்சிகள் தேவையில்லை' என்று ஒரு கணக்கெடுப்பில் 95 வீதம் பேர் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் மூளையில் சாதியுள்ளது.

குறும்பட இயக்குநர் - மணிமேகலை நாகலிங்கம்

  யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
படைப்பு மனம் கொண்டவர்களுக்குச் செய்யும் வேலையும் வருமானமும் மட்டும் நிறைவளிப்பதில்லை படைப்பு வெளிப்பாட்டின் வாயிலாகவே மன நிறைவெய்துகின்றனர். கைப்பணம் செலவழித்தேனும் தன் கலையார்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் குணாதிசயம் படைத்தவர்கள் இந்தக் கலைஞர்கள். குடும்ப முன்னேற்றம் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை அவர்கள். அப்படித்தான், சென்னைத் துறைமுகத்தில் தொழிலாளியாகப் பணியாற்றிவரும் 'மணிமேகலை நாகலிங்கம்', 'ஹைக்கூ தரிசனம்' எனும் குறும்படத்தின் மூலம் தன்னை ஒரு குறும்பட இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு அவர் செலவழித்த தொகை... ஒரு லட்சத்திற்கும் மேல்.

குறும்படம் : ஹைக்கூ தரிசனம்

இக்குறும்படத்தில், மு.முருகேஷ், பா.உதயகண்ணன், வானவன், மணிமேகலை நாகலிங்கம் ஆகிய நான்கு கவிஞர்களின் 36 ஹைக்கூ கவிதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர் மணிமேகலை நாகலிங்கம் இயற்றிய ஹைக்கூ பற்றிய ஒரு பாடலும் தலைப்புப்பாடலாக ஒலிக்கிறது. நா.பூவரசி இக்குறும்படத்தை தயாரித்திருக்கிறார்.

அழகியலை அதிகம் தொடாமல் சமூகமும் அரசியலும் சார்ந்த ஹைக்கூ கவிதைகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



'அறிவியலில்

நூற்றுக்கு நூறு

நோட்டுக்குள் மயிலிறகு'

எனும் ஹைக்கூ முதலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

'அவளின் ஆயுள்

இறந்தும் தொடர்கிறது

நினைவாய் நான்'

எனும் ஹைக்கூ கவிதையுடன் இக்குறும்படம் முடிவடைகிறது.



36 கவிதைகளும் தனித்தனியாக 36 இடங்களில் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதையும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது இக்குறும்படத்தின் சிறப்பு.

'எல்லோரும் சாப்பிட்டாச்சு

மனசு மட்டும் நிறைந்த

அம்மா'

எனும் கவிதைக்குப் பொறுத்தமாக வறுமை சூழ்ந்த ஒரு குடும்பமும் அக்குடும்பத்தின் அம்மாவின் மனசும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

கருவேள மரங்கள் அடர்ந்த பகுதியை திறந்தவெளி கழிவறையாகப் பயன்படுத்தும் கிராமத்து மனிதர்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.


'கருவேள மரங்கள்

அடர்ந்து வளரட்டும்

வேண்டும் கழிப்பறை'

எனும் கவிதைக்கு.

பல்வேறு நாளிதழ்களில் வந்த காவிரி பற்றிய செய்திகளும் அறிக்கைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

'நீரின்றி

செழித்து வளர்கிறது

காவிரி அரசியல்'

எனும் கவிதைக்கு.

இப்படியான கவிதைகள் இக்குறும்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அ.வெண்ணிலா, சொர்ணபாரதி, வே.எழிலரசு, அமிர்தம் சூர்யா, தமிழ்மணவாளன் போன்ற நவீன கவிஞர்களின் பங்களிப்பும் இக்குறும்படத்தில் உள்ளது.

சுமாரான கவிதைகளையும் நேரத்தையும் குறைத்திருந்தால் இதன் வீச்சு இன்றும் அதிகமாயிருக்கக்கூடும் என்றாலும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்ட கவிதைகளையும் காட்சிப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக இக்குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஹைக்கூ பற்றிய முதல் காட்சி ஆவணம் என்கிற வகையில் இக்குறும்படம் முக்கியமானதாகும்.

இயக்குநர் மணிமேகலை நாகலிங்கம்...

"ஓவியக்கவிஞரான மணிமேகலை நாகலிங்கம் எவ்விதமான செயலிலும் முனைப்போடு உழைப்பவர். அமெச்சூர் நாடக நடிகராக, கவிஞராக, ஓவியராக தன்னை வளர்த்துக் கொண்டவர், இப்போது ஐக்கூக் கவிதைகளைக் காட்சிப் படுத்தி குறும்பட இயக்குநராகவும் பரிணமித்திருக்கிறார்" எனக் 'கல்வெட்டு பேசுகிறது' சிற்றிதழ் இவரை அறிமுகம் செய்கிறது. ஓவியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர், ஹைக்கூ 'புகைப்படக் காட்சி' ஒன்றையும் சென்னையில் நடத்தியுள்ளார்.

'நினைவுகளோடு', 'நினைவில் நீ' எனும் இரு நூல்களைத் தொகுத்திருக்கிறார்.

இனி, அவருடன் ...

· ஹைக்கூ கவிதைகளை குறும்படமாக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது?

"அடிப்படையில் நானொரு நாடக நடிகர் ஒவ்வொரு நாடகக் கலைஞருக்குள்ளும் திரைப்பட கனவு இருக்கும். எனக்கும் அத்தகைய சினிமா கனவு இருந்தது. எந்தவொரு செயலுக்கும் ஒரு காரணம் மட்டும் இருக்க முடியாது. என்னுடைய சிறுகதையை குறும்படமாக்க நண்பர் கவின் அவர்களை அணுகினேன். அதில் அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 5 வரி கதை கேட்டுவிட்டு 50 ஆயிரம் ஆகும் என்றார், நான் 15 ஆயிரத் தான் பட்ஜெட் வைத்திருந்தேன். எனவே அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.

2002 இல் மு.முருகேஷ் நடத்திய 'ஹைக்கூ திருவிழா' நிகழ்ச்சியில் 'ஹைக்கூ ஓவியக்கண்காட்சி ' நடத்த எனக்கு வாய்ப்பளித்தார். அதன் தொடர்ச்சியாகவும் 'ஹைக்கூ தரிசனம் ' எனும் இக்குறும்படத்தை இயக்கினேன்".

· ஹைக்கூ தரிசனம் எடுக்கும் போது இருந்த உங்கள் மனநிலைக்கும் இப்போதைய புரிதலுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?

"ஹைக்கூ கவிதைகளை யாரும் குறும்படமாக்கவில்லை. எனவே, சமூக அக்கறையுள்ள ஹைக்கூ கவிதைகளைத் தேர்வு செய்து குறும்படமாக்கினேன். அப்போது ஆவணப் படங்களில் 'கிரியேட்டிவ்' இல்லை, அது தேவையற்றது என்ற நினைப்பிருந்தது. பாரதி கிருஷ்ணாவின் 'ராமய்யாவின் குடிசை' 'என்று தணியும்' ஆகிய ஆவணப் படங்களைப் பார்த்த பின் அதன் தேவையை உணர்ந்து கொண்டேன். குறைந்த செலவில் கூட நல்ல குறும்படம் எடுக்க முடியும் என்பதை ஆர்.ரவிக்குமாரின் 'எட்டா(ம்) வகுப்பு' படத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன் கண்ணீர் வரவைத்த குறும்படம் அது".



குறும்பட இயக்குநர் - ஆர்.ரவிக்குமார்

யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
திருப்பூரில் சிறிய அளவில் நூல் உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்துவரும் 24 வயதேயான ஆர்.ரவிக்குமார், தன் வேலைகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் குறும்படங்களை இயக்கிவருகிறார். சிறுவயதில் ஓவியத்தின் மீது ஆர்வம் செலுத்திய இவரின் கவனத்தை குறும்படத்தின் பக்கம் திசை மாற்றியது 'திருப்பூர் மத்திய அரிமா சங்கம்' நடத்திய குறும்பட விழாக்கள்.

திருப்பூரைக் களமாகக் கொண்டு சிறுவர் தொழிலாளர் மற்றும் வறுமையை அடிப்படைக் கருவாகக் கொண்டு 'லீவு','சுழல்', 'எட்டா(ம்) வகுப்பு' ஆகிய மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய குறும்படங்களில் முக்கியமானது, 'எட்டா(ம்) வகுப்பு'.

எட்டா(ம்) வகுப்பு :

பழைய பேப்பர் கடையில் வேலை செய்யும் சிறுவன், செல்வம். வறுமையின் கோரப்பிடியில் சிதைந்த இவன் குடும்பத்திற்கு இவன் உழைப்பு தேவைப்படுவதால் தன் பள்ளிப் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் முடித்துக்கொள்ள நேர்ந்தவன். அவ்வவ்போது பழைய பேப்பர் கடைக்கு வரும் பழைய புத்தகங்களில் எட்டாம் வகுப்பு புத்தகங்களை மட்டும் தேடிப் பிடித்து தன் படுக்கைக்குக் கீழே பாதுகாத்து வைக்கிறான். ஐந்தாம் வகுப்பைக்கூட தாண்டாத இவனுக்கு எதற்கு எட்டாம் வகுப்பு புத்தகங்கள் என்று யோசிப்பதற்குள் காட்சி 'பின்னோக்கு உத்தி'யில் (ஃபிளாஷ்பேக்) நகர்கிறது.

ட்ரை சைக்கிளில் (மூன்று சக்கர சைக்கிள்) செல்வம் பழைய பேப்பர்களை எடுத்து வரும் வழியில் தன்னுடன் படித்த பழைய நண்பன் 'பிரகாஷ்' என்பவனைச் சந்திக்கிறான். இப்போது அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். இருவரும் தம் குடும்பச் ழலைப் பேசியபடி செல்கிறார்கள். அவர்களின் உரையாடலில் இரு குடும்பத்து வறுமை ஊடாடுகிறது. நோயால் தன் அம்மா இறந்து போனதையும் அதனால் படிப்பு பாதியில் நின்று போனதையும் சோகத்துடன் சொல்கிறான்.

"எனக்கொரு வேலை பாருடா செல்வம். எங்க வீட்டுலயும் புத்தகம்கூட வாங்க முடியலடா" என்கிறான் பிரகாஷ்.

"என்னைப் போல நீயும் ஆகிடாதடா, பத்து வருசம் கழிச்சி நீ டாக்டர் பிரகாஷ் என்ஜினீயர் பிரகாஷ், அப்படித்தானே!" என்கிறான் செல்வம்.

"எனக்கு படிக்கனும்னுதான் ஆசை. ஆனா, எங்க வீட்டுல வேலைக்குப் போகச் சொல்றாங்க" என்கிறான் ஏக்கத்துடன் பிரகாஷ்.

சைக்கிள் சக்கரம் சுற்றுகிறது வாழ்க்கைச் சக்கரத்தைப் போல.

அந்த நண்பன் பிரகாஷ்க்காகத்தான் இவன் எட்டாம் வகுப்பு புத்தகங்களை தேடித் தேடி எடுத்து வைத்திருக்கிறான். பழைய பேப்பரில் கிடைத்த செருப்பைக்கூட எடுத்து வைத்திருந்து பிரகாஷ்க்குக் கொடுத்து உதவுகிறான் செல்வம். தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை நண்பனுக்குக் கொடுத்துவிட்டு வர சென்ற செல்வம், தன் நண்பன் பிரகாஷ் இரண்டு நாளாக பள்ளிக்கு வரவில்லை என்ற தகவலுடன் குழப்பத்துடன் திரும்புகின்றான்.

காட்சி மாறுகிறது பனியன் கம்பனி ஒன்றிலிருந்து பழைய அட்டைப் பெட்டிகளை எடுத்துவர தன் முதலாளியுடன் (அவரும் ஐந்தாவது படித்தவர் தான்) செல்கிறான் செல்வம். பனியன் கம்பனியின் வாசலில் கிடக்கும் செருப்புகளில் ஒரு ஜோடி செருப்பை மட்டும் உற்று உற்றுப் பார்க்கிறான் செல்வம். மெதுவாக உள்ளே எட்டிப்பார்க்கிறான். அங்கே சிறுவர்களோடு ஒருவனாக பிரகாஷ்ம் வேலை செய்து கொண்டிருக்கிறான். "எனக்கு படிக்கனும்னுதான் ஆசை. ஆனா, வீட்டுல வேலைக்குப் போகச் சொல்றாங்க" என்ற பிரகாஷ்ன் குரல் செல்வத்தின் காதில் மீண்டும் ஒளித்தது.

"என்னதான் இலவசப் புத்தகம், இலவசக் கல்வி கொடுத்தாலும் நம்ம வருமானம் வீட்டுக்குத் தேவையா இருக்கும்போது நம்மாள எப்படிடா படிக்க முடியும்?" என்று தனக்குத்தானே ஆறதல் சொல்லிக்கொண்டு ட்ரை சைக்கிளில் செல்கிறான்.

குடும்ப வறுமையின் காரணமாக அடிப்படை உரிமையான கல்வி கூட பலருக்கு கிட்டுவதில்லை என்பதை இப்படம் சோகம் இழையோட சித்திரிக்கிறது. கார்த்தி எனும் சிறுவன் செல்வமாக நன்றாக நடித்திருக்கிறான். பிரகாஷ்க நடித்திருக்கும் சிறுவன் நன்றாகவே நடித்திருக்கிறான். இசை, வசனம் - தாண்டவக்கோன். ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் - ஆர்.ரவிக்குமார்.

ஆர்.ரவிக்குமார் பேசுவார்,"

"நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோதே விடுமுறைக் காலங்களில் பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்வேன். அதுதானோ என்னவோ பின் நாட்களில் என் குறும்படங்களில் பிரதிபலித்தது. குறும்படம் எனும் தளத்திற்குள் நான் நுழைய முதற்காரணம், திருப்பூர் மத்திய அரிமா சங்கம் நடத்திய குறும்படத் திரையிடல் நிகழ்வுகள்தான். 'கனவு' சிற்றிதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தான் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அங்கு பார்த்த படங்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நாமும் குறும்படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக ஏற்பட்டது.

துபாய் சென்றுவந்த ஒரு நண்பரிடம் இருந்த கேமராவை எடுத்துக் கொண்டு ஏதோ படம் பிடித்தேன். நிறைவாக இல்லை. நண்பன் தே.ராம் ஒரு குறும்படம் இயக்கினான். அவனுடன் சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கற்றுக் கொண்டு 'லீவு' குறும்படத்தை இயக்கினேன். அதற்குப் பின்னர் ஒரு வருட இடைவெளியில் 'சுழல்', 'எட்டா(ம்) வகுப்பு' என்னும் குறும்படங்களை இயக்கினேன்.

குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் பற்றியே நான் குறும்படம் எடுத்ததற்கான காரணம் என் மனதின் சிதைவு என்றே எண்ணுகின்றேன்.

நான்காவது படத்தை 1 மணி நேரம் படமாக எடுக்கவுள்ளேன். த.மு.எ.ச. தோழர்கள் எனக்கு உதவி வருகிறார்கள். இத்துறையில் சாதித்து குறிப்பிட்ட இடம் பெற உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் தொழில் நிலை பெரிய வருமானம் தரும்படி இல்லை. என் தந்தையும் தாயும் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள். அதனால் தான் இந்த அளவுக்காவது ஆதரவளித்து வருகிறார்கள். தொழிலை நிலைப்படுத்திக்கொண்டு என் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வேன் என்கிறார், நம்பிக்கையுடன்.

குறும்பட இயக்குநர் - அருண்மொழி


ருண்மொழி - தமிழ்க் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது இவரது பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும்.

தற்போது 49 வயதாகும் அருண்மொழி, சிறந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் 'காணிநிலம்' எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. 1989இல் 'ஏர்முனை' எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது.

அருண்மொழியின் ஆவணப் படங்கள்...

நிலமோசடி : 1985இல் வெளிவந்த இந்த ஆவணப்படந்தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் விவரணப்படமாகும். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஆவணப்படம் இது ஜி.கே.மூப்பனாரின் 4600 ஏக்கர் நிலம் பினாமிகள் பெயரில் இருப்பதை இப்படம் அம்பலப்படுத்தியது. மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்ட வலம்புரிஜான் இப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். 55நிமிட படமிது.

பண்ணை வேலையார் 'சோடாமாணிக்கம்', காத்தமுத்து எம்.பி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் உண்டு. பொதுவுடை இயக்கத் தோழர்கள் பி.மாணிக்கம், சி.மகேந்திரன், ஆகியோரின் தூண்டுதலில் இப்படத்தை எடுத்துள்ளார் அருண்மொழி. கலை இலக்கியப் பெருமன்றம் இப்படத்தை தயாரித்தது. டெல்லி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

இசைவானில் இன்னொன்று...

இளையராஜாவைப் பற்றிய இந்த விவரணப்படம் 1992இல் எடுக்கப்பட்டது. 80 நிமிடப்படம். ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இதில் உள்ளன.

திருநங்கைகள் (அரவாணிகள்) பற்றிய விவரணப் படங்கள் :

வேறெந்த குறும்பட இயக்குநர்களை விடவும் திருநங்கைகள் பற்றி நிறைய பதிவு செய்திருப்பவர் அருண்மொழி.

மூன்றாவது இனம் :

2003 இல் வெளிவந்த இந்தப்படம் கோயம்புத்தூர் திருநங்கைகளைப் பற்றியது. முஸ்லீம்கள் வீட்டு விழாக்களில் திருநங்கைகள் கலந்து கொள்வது இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அருணா - 2004 இல் வெளிவந்தது. அருணா எனும் திருநங்கை NGO வில் பணிபுரிகிறார். திருநங்கைகள் பிச்சையெடுக்கக் கூடாது. விபச்சாரம் செய்யக் கூடாது, என்கிறார் இவர். இவரது விரிவான நேர்காணல் இப்படத்தில் உள்ளது. திருநங்கைகள் சமூகத்திற்குள் சாதி மதம் கிடையாது என்பதை இவரது நேர்காணல் உணர்த்துகிறது. இவரது வளர்ப்பு மகள் மதுரை திவ்யா (சரவணனாக இருந்து திவ்யாவானவர்) M.Phil படித்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

நூரியின் கதை : 2003இல் வெளிவந்தது. நூர்முகம்மதுவாக இருந்தவர் 'நூரி'யானார். அவரைப்பற்றிய ஆவணப்படம் இது. நூரியிடம் பிரீதம்சக்ரவர்த்தி பேட்டி காண்கிறார். பிறகு அவரே நூரியாகவும் இதில் நடித்துள்ளார். நூரி நிறைய பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானவர். பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். 15 திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். பிராமண சமூகத்தைச் சார்ந்த 'ஆஷா பாரதி' எனும் திருநங்கை, இஸ்லாம் சமூகத்தை சார்ந்த நூரியின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் சாதி, மதம் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

'இரண்டாம் பிறவி' (1998) 'கூடவாகம்' (2004), நிர்வான் (2006) ஆகிய விவரணப்படங்களிலும் திருநங்கைகளைப் பற்றியே எடுத்திருக்கிறார்.

பெண்கள் பூப்பெய்தும்போது தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்படுவதைப் பற்றி 'தோழி' எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

Beware of commissions :

1998 இல் திருநெல்வேலியில் தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டும் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். இதனை அம்பலப்படுத்தியது. ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நதியின் மரணம்' ஆவணப்படம் இப்படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்டது நீதிபதி மோகன் கமிஷன், அந்த கமிஷன் கொடுத்த முரணான பொய்யான செய்திகளை அம்பலப் படுத்தும் ஆவணப்படம் Beware of commissions.

வங்கிகளிலும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றியும் 'விடியல் வரும்' (45 நி) எனும் குறும்படத்தை 2005 இல் இயக்கியுள்ளார். அத்துடன் 'Key Maker ' , சிறுதுளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வல்லிக் கண்ணன் இன்குலாப், ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

இனி அவருடன்...

திரைப்படத் துறையிலிருந்து குறும்படத்துறைக்கு வந்ததேன்?

"ஏதேனும் ஓரிடத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தாக்கம் தான் காரணம். அத்துடன் விவரணப் படங்களில் பிரச்சினைகளை ஆழமாக சொல்ல முடியும். திரைப்படத்திற்கு ஆவதைப் போல் பெரிய செலவெல்லாம் கிடையாது".

குறும்படம் - விவரணப்படம் - திரைப்படம் குறித்து?

"ஒரு சிறுகதையைப் போன்றது குறும்படம், கட்டுரையைப் போன்றது விவரணப்படம். தொடர் கதையைப் போன்றது திரைப்படம். குறும்பட இயக்கம் சனநாயகப் பூர்வமாகி விட்டதால் பெண்களும் இத்துறையில் எளிதாக ஈடுபடமுடிகிறது".

உங்களுக்குப் பிடித்த குறும்பட இயக்குநர்கள்?

"பி.லெனின், அம்ஷன் குமார், ஆர்.வி.ரமணி, லீனா மணிமேகலை, பிரசன்னா ராமசாமி, ஆனந்த்பட்வர்த்தன், அரூர் கோபாலகிருஷ்ணன்".

இன்னும் சிறந்த குறும்படங்கள் ஃவிவரணப்படங்கள் வெளிவர உங்கள் ஆலோசனை என்ன?

"சிறந்த ஆவணப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் தமிழக அரசு பரிசுகள் தரலாம். இயல் இசை நாடக மன்றம் போல் இதற்கென்று தனியாக ஓர் அமைப்பை ஏற்படுத்தலாம் நல்ல பதிவுகள் வரும். வெகுஜன மக்களின் எழுச்சிமிக்கல் போராட்டங்களைப் பதிவு செய்து எதிர்கால் சமூதாயத்திற்குக் காட்டவேண்டி லத்தீன் அமெரிக்கா, பொலிவியா, சிலி, வியட்நாம் போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்ற டாக்குமெண்டரி இயக்கங்களைப் போல இந்தியாவில் நிகழவில்லை. அதுபோன்ற இயக்கங்கள் இந்தியாவிலும் உருவாகவேண்டும்" என்று கூறும் அருண்மொழி, தொடர்ந்து ஆவணப்படங்களை இயக்கும் முயற்சியிலிருக்கிறார்.
nandri: www.andhimazhai.com
- யாழினி முனுசாமி

குறும்பட இயக்குநர் - முருக சிவகுமார்



லை இலக்கியவாதிகளிடையேயும் புதிய தலைமுறை இளைஞர்களிடையையேயும் இன்று ஆதிக்கம் செலுத்தி வரும் கலை, குறும்படமாகும். குறைவான செலவில் ஒரு குறும்படத்தை எடுத்துவிடக்கூடிய வாய்ப்பு கூடியிருப்பதும் அதற்கொரு காரணமாகும். எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் தூய அழகியல் சார்ந்தும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்தும் பேசும் இரு போக்குகள் காணப்படுவது போல் குறும்படத்துறையிலும் இவ்விரு போக்குகள் நிலவுகின்றன. பெரும்பாலும் அழகியல் சார்ந்தவற்றைக் குறும்படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணப்படங்களும் பேசுகின்றன. உண்மையை உண்மையாக வெளிப்படுத்த இவ்வடிவம் கைக்கொடுக்கிறது.

'ஒரு நதியின் மரணம்' எனும் ஆவணப்படத்தின் மூலம் தாமிரபரணி படுகொலையை வெளியுலகிற்குக் கொண்டுவந்து ஆவணப் படத்தின் வலிமையை தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் ஆர்.ஆர்.சீனிவாசன். அவ்வரிசையில் தமிழில் ஒரு சில முக்கியமான ஆவணப்படங்கள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. அப்படி ஒரு ஆவணப்படத்தின் மூலம் கவனம் பெற்றிருப்பவர் முருகசிவகுமார். அந்த ஆவணப்படம் - 'விடுதீ '.

கிராமப்புறங்களிலிலுந்து வந்து சென்னையில் அரசு ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நரகச் சூழலைச் சித்தரிக்கும் ஆவணப்படம் இது. சில விருதுகளையும் பரவலான வரவேற்பையும் பெற்றது இப்படம்.

'விடுதீ ' ஆவணப்படம்... (நிமிடம்:29 ஆண்டு 2005)

சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நரக நிலையை பேசும் படம் 'விடுதீ' .

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னைக்கும் படிக்க வரும் ஏழ்மையான தலித் மாணவர்கள் பலருக்கு அடைக்கலம் தருபவை இராயபுரம், வில்லிவாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் விடுதிகள். இவ்விடுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி மாணவர்கள் படும் இன்னல்களை அவர்களின் வாயிலாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இத்தகைய விடுதிகளில் கொடுக்கப்படும் உணவுகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. தண்ணீர் கூட சுகாதார மற்றதாய் இருக்கிறது. இதனால் பலருக்கு டைபாய்டு, அல்சர் போன்ற வியாதிகள் வருவதாக விரக்தியுடன் பேட்டியளிக்கின்றனர் மாணவர்கள். பாசி படிந்த கழிவறைகள், கழிவறைக்கு அருகிலேயே மாணவர்களின் அறை, வெட்டவெளிகுளியல், உடல்களை அடைத்து வைத்ததைப் போல் ஒரே அறையில் பலர், ஈக்கள் மொய்க்கும் குப்பைத் தொட்டி, சுத்தம் செய்யப்படாத சுற்றுப்புறம் என 'விடுதீ' யின் காட்சிகள் விரிந்து செல்கின்றன.

இத்தகைய சூழலில் படிப்பது சாத்தியமா எனும் கேள்வியை எழுப்புகிறது இவ்விரணப் படம்.

"சாப்பாட்டில் கை வைக்கும் போது சுண்ணாம்பில் கை வைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார் ஒரு மாணவர்". "சாப்பிடணும்னு தோணும் ஆனா சாப்பிட முடியாது" என்கிறார், விடுதி மாணவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் முருகசிவகுமார், மாணவர்களில் சிலர் நல்ல உணவுக்காக திருமண மண்டபங்களில் சர்வர் வேலை செய்வதையும் இப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. விடுதிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் கெஸ்ட்டாக தங்கும் சூழ்நிலையில் அனைவருக்கும் பரிமாறப்பட்ட பிறகே மீதமுள்ள உணவு இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் கிடைக்காமல் போய் விடுவதை ஒரு மாணவி குறிப்பிடும்போது பார்வையாளர்களை ஒரு வித சோகம் அழுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருடைய நேர்காணல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.யு.ளு., இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜி.செல்வா, இந்தியா டுடே ராதிகா, துடி பாரதி பிரபு ஆகியோரது நேர் காணல்களும் இடம் பெற்றுள்ளன.

"ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இது போதாது, உணவுக்கான முழுத்தொகையும் வழங்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்துதாஸ் காந்தியும், "அரசே தலித்மாணவர்கள் மீது செலுத்தும் வன்முறை இது" என்று பாரதிபிரபுவும், "பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள் நன்றாகப் பரமாரிக்கப் படுகின்றன. ஆனால், தலித் மாணவர் விடுதிகள் மோசமாக இருக்கின்றன அரசே இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது" என்று ராதிகாவும் இப்படத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

"தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி 500 கோடி ரூபாயை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது அதிகாரிகளின் சாதி மனோபாவத்தை காட்டுகிறது. விடுதிகளின் இத்தகைய அவலநிலை மாற, போராட்டம் தான் தீர்வு கொடுக்கும். மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்." என்கிறார் ஜ ப்.செல்வா. "மாணவர்கள் ஒன்றிணைவது எப்போது? இப்பிரச்சினையை உணர்ந்த உங்கள் பங்கு என்ன? போராட்டம் எப்போது?" எனும் கேள்விகளுடன் முடிகிறது 'விடுதீ' .

சக மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் முருகசிவகுமாரின் பணி பாராட்டுக்குரியதாகும்.

இயக்குநர் முருகசிவகுமார் பற்றி ...

தற்போது 26 வயதாகும் முருகசிவகுமார் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முனைவர் ஜார்ஜ் அவர்களிடம் நவீன நாடக வரலாறு எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வரும் இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இனி அவருடன் :

இப்படி ஒரு ஆவணப்படத்தை இயக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?


"விடுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் முதல் காரணம். சென்னை புதுக்கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியப் படித்த போது இராயபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இடம் கிடைக்காமல் விருந்தினராக (கெஸ்ட்) தங்கியிருக்க நேர்ந்தது. ஐந்து பேருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கூடுதலாக பதினைந்து பேர் சேர்ந்து இருபது பேர் தங்கியிருந்தோம். எல்லா அறைகளிலும் இப்படித்தான் மிகுந்த நெருக்கடியுடன் தங்கியிருப்பார்கள். காலையில் டாய்லெட் செல்ல வரிசையில் காத்துகிடக்க வேண்டும். டாய்லெட்டின் உள்ளே இருப்பவனை சீக்கிரம் வரச் சொல்லி வெளியே காத்திருப்பவர்கள் கதவை தட்டுவார்கள். குளிப்பதற்கும் இப்படித்தான் நெருக்கடி. ஐந்து பேருக்கான உணவையே இருபது பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் தட்டு தூக்குகிறவனுக்கு தான் உணவு கிடைக்கும் என்கிற நிலை. சிலருக்கு உணவு கிடைக்காது இரண்டு மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் பல மாணவர்கள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சர்வர் வேலைக்கு செல்வார்கள். உணவுக்கு உணவும் கிடைக்கும் கை செலவுக்கு காசும் கிடைக்கும். இத்தகைய சூழலில் படித்தால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும். அரசு வேலைக்கு மற்ற மாணவர்களுடன் எப்படி போட்டி போட முடியும். இந்தக் கொடுமையை வெளி உலகிற்கு உணர்த்த வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த ஆவணப்படத்தை இயக்கினேன்."

இத்தகைய சூழலிலிருந்து உங்களால் எப்படிப் பணம் செலவு செய்து படம் எடுக்க முடிந்தது?

"சென்னையில் திபீகா என்றொரு நிறுவனம் அதன் குறும்பட விழாக்களிலும் திரையிடல் நிகழ்வுகளிலும் பல குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றி ஜெயச்சந்திரன் எனும் நண்பரின் தூண்டுதலாலும் உதவியாலும் தான் இப்படம் எடுக்க முடிந்தது. கேமரா, எடிட்டிங் பணம் என எல்லாவிதத்திலும் உதவினார். அவரின்றி இப்படம் எடுத்திருக்க இயலாது. நானும் என் சக மாணவர்களும் அனுபவித்த இன்னல்களும் வேதனைகளும் இப்படத்திற்கு உயிர் தந்தது".

ஆவணப் படத்துறை நோக்கி வந்த உங்கள் பாதை குறித்து?

"நான் தருமபுரி மாவட்டத்துக்காரன். திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ.தமிழிலக்கியம் படித்தபோது, வறுமையின் காரணமாக பேராசிரியரும் கவிஞருமான வே.நெடுஞ்செழியன் வீட்டில் தங்கிப் படித்தேன். அவரது வழிகாட்டுதலில்தான் என் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. 'சுட்டுவிரல்' எனும் தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தினார். அதில் வெளியான என் சிறுகதை ஒன்றைப் படித்து விட்டு மிகவும் பாராட்டினார். அவர் நடத்திய நாடகத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் சென்னைக்கு இலக்கியத்திலும் நாடகத்திலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன். இலக்கியக் கூட்டங்களுக்கு அலைந்தேன். பாரதிபிரபுவின் 'கனல்' கலைக் குழவில் சேர்ந்து பல மேடைகளில் 'வர்ணாசிரமம்' நாடகத்தில் நடித்தேன். அதன்பிறகு குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உந்துதலே என்னையும் ஆவணப் படத்திற்கு அழைத்து வந்து சேர்த்தது. எனது இந்தப் பயணத்தில் அக்கறை கொண்டவர்களாக பாரதிபிரபு, அரங்க மல்லிகா, ஞாநி, கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஜெயசந்திரன் ஆகியோரை இனம்கண்டு மனதில் பதித்து வைத்திருக்கிறேன்.

அரசு விடுதியில் இருந்து கொண்டு உங்களால் எப்படி இந்த ஆவணப்படத்தை எடுக்க முடிந்தது?

"பல சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்து தான் இந்த ஆவணப் படத்தை எடுக்க முடிந்தது. பாதிக்கப்படும் மாணவர்களே பேசவும் பேட்டிதரவும் தயங்கினார்கள், பயந்தார்கள். மாணவர்கள், சமையல்காரர்கள், வார்டன் என எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டியிருந்தது. நந்தனம் விடுதியின் வார்டன் கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார், போராடித்தான் திரும்பப் பெற்றேன்".

உங்களைப் பாதித்த குறும்படங்கள், குறும்பட இயக்குநர்கள்?

"ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நரியின் மரணம்' 'Untouchable Country' என்னை மிகவும் பாதித்த படங்கள். சவால்களை எதிர்கொண்டு சமூகப் பிரச்சினைகளை எடுக்கும் ஆர்.ஆர்.சீனிவாசன் எனக்குப் பிடித்தமானவர். அம்ஷன் குமார், பி.லெனின், டி.அருள் எழிலன் ஆகியோரும் பிடிக்கும்.

இன்றைய தமிழ்க் குறும்பட சூழல் குறித்து?

"வணிகத் திரைப் படங்களில் சொல்லப்படாதவற்றை இதில் சொல்ல முடியும். நாடகத்துறையில் சமூக மாற்றத்திற்கான அரங்கை 'மாற்று அரங்கு ' என்பார்கள். அதன் தரை வடிவம் தான் ஆவணப்படம். அத்தகைய வலிமை வாய்ந்த குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான 'விசிட்டிங் கார்டு ' ஆகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் குறும்படங்களில் மக்கள் விரோதக் கருத்துக்களையும் திணிக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பேசும் குறும்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும்."

உங்களின் அடுத்த திட்டம்?

" நிலா முற்றம் எனும் என் கவிதையைக் குறும்படமாக்கவுள்ளேன். விடுதீ க்கு ஜெயச்சந்திரன் உதவியதைப் போல் யாராவது உதவினால் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச விரும்புகிறேன். பொருளாதாரச் சூழல் தான் என்னை அந்நியமாக வைத்துள்ளது."

'விடுதீ' க்குப் பிறகு விடுதிகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டனவா? இப்பிரச்சினைகள் தீர வழி என்ன?

"மிஸோராம் ஆளுநர் ஏ.பத்மனாபன் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை தலைமைச் செயலருக்கும் இந்த ஆவணப்படம் தனியாகத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகு சில விடுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்கள் தாம் இங்கு தங்கிப் படிக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சரியாகப் படிக்க விடாமல் வீட்டுக்கே திருப்பி அனுப்புகின்றன இந்த விடுதிகள். இந்த மோசமான சூழலில் படிப்பதால் தலித் மாணவர்களால் பிற மாணவர்களுடன் வேலை வாய்ப்பில் போட்டி போட முடியவில்லை. திறமையான மாணவர்கள் பலர் இந்த விடுதிகளில் இருக்கிறார்கள். கிராமத்திலிருந்து படிக்க வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் நல்ல விடுதிகளில் தங்கிப் படிக்க அரசு தான் வழிசெய்ய வேண்டும்."

நம்பிக்கையை சுமந்த மனசுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் முருக சிவகுமார்.
nandri : www.andhimazhai.com
- யாழினி முனுசாமி