Thursday, October 20, 2011

பச்சைரத்தம் ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் நேர்காணல்: யாழினி முனுசாமி - கி.நடராசன்

“சட்டமெல்லாம் அவர்களுக்கு வெறும் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்”

மிகுந்த சிரமத்திற்கிடையே தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி பச்சைரத்தம் என்கிற மிக முக்கியமான ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் தவமுதல்வன. அந்த ஆவணப் படம் அவரை தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர்களின் வரிசையில் சேர்த்திருக்கிறது. அவருடன் ஒரு நேர்காணல்...


கே: பச்சை ரத்தத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?


படத்தைப் பொறுத்தவரை பாராட்டுகளும் கசப்பான அனுபவங்களும் நிறையவே உள்ளன. உள்ளுரில் ஆகா ஒஹாவெனப் பாராட்டிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவர்கள், சிந்தனையாளர்கள் என்கிற பல பட்டங்களோடு உலவுகிறவர்கள், தொண்டு நிறுவனங்களையெல்லாம் இதன் தயாரிப்புப் பணிக்காகச் சந்தித்தேன். வெளியிடவும் கேட்டேன். அவர்களுக்கு புராஜக்ட் வேலைகள், மக்கள் நலப்பணிகள் (!) இருந்ததால் ஒத்துழைப்பு இல்லாததை உணர்ந்தேன்.

சாதாரண மக்களைப் பொறுத்தவரை படம் அவர்களின் வேதனையை உள்ளபடியே வெளிப்படுத்துவதாக உள்ளன்போடு தெரிவித்தனர். பல குடுப்பங்களில் படம் பார்த்து பழைய நினைவுகள் கிளர்ந்து அழுத்ததாகவும் நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்தனர்.
கே: இந்தப் படத்தை எப்படித் திட்டமிட்டு எடுத்தீர்கள்?
படத்தில் வரும் எல்லா கருத்துக்களும் திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை நடத்தவில்லை. சிலவற்றை மட்டும் உறுதியாக தொகுத்துக் கொண்டேன்.
1. மலையக மக்களின் இலங்கை வரலாறு.
2. துரோக அரசியல் தலைமைகள்
3. இலங்கையிலும் தமிழகத்திலும் தேயிலைத் தோட்டப் பசுமைகளுக்குப் பின்னால் உறைந்திருக்கிற உழைப்பின் வரலாறு. ஊடகங்களில் காண்பிக்காத மக்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவது போன்றவைதான்.
பல காட்சிகள் படப்பிடிப்பு செல்லும் போதுதான் எடுக்க நேர்ந்தது.
கே: இந்த ஆவணப்படம் எடுக்கப்படுவதற்கான நோக்கம் என்ன?
படத்தின் மையமான கருத்து எதுவென்றால், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, உழைப்பாளிகளாக இருக்கிற.. தாயகம் திரும்பிய மக்களுக்கு ஒரு சராசரி மனிதனின் வாழ்வுகூட இன்றும் முழுமைபெறாமல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது...இந்த வரலாறு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்குத் தெரியாமல் இருப்பது... அதை வெளிப்படுத்துவது.
கே: மலையகத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கான காரணங்களாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
பூர்வீக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், பறைத் தமிழன் என்று சொல்லுவதற்கு முக்கிய காரணம், அவர்களிடையே ஊறிப்போயிருந்த சாதீயம்தான். மேலும் இங்கிருந்து போனவர்கள் பலர் வணிகர்களாக வளர்ந்தது... அவர்கள் நகர்ப்பகுதிகளில் குவிந்தது... இந்தியாதான் தன் உறவுக்கான மண் என நடந்து கொண்டது.. மலையகத்தவர்கள் பெரும்பாலும் தலித் மக்களாக இருந்தது போன்றவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்படக் காரணமாக இருந்தது. குறிப்பாகச் சொன்னால், பூர்வீக இலங்கைத் தமிழர்களின் தலைவர்கள் ஓரிருவரைத் தவிர மலையகத் தமிழர்களை அந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்கிற புரிதலை விரிவாகப் பேசி அந்தக் கருத்தை நிலைபெறச் செய்ய முயற்சிக்கவில்லை. கண்டுகொள்ளாத இந்தப் போக்குதான் தொடர்ந்தது.
கே : இந்த ஆவணப்படம் உருவானவிதம் பற்றிச் சொல்லுங்கள்...?
முன் அனுபவம் என்பதெல்லாம் ஓரிரு குறும்படங்களில் வேலை செய்திருக்கிறேன். வீடியோ கிராபராக திருமண வீடுகளுக்கு நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கச் சென்றிருக்கிறேன். ஆனால் குறுப்படங்களை நிறைய பார்ப்பது... அது தொடர்பான புத்தகங்களைப் படிப்பது, சிறுகதைகளை எழுதுவது எனப் பணிகளைச் செய்து கொண்டிருந்தேன்.
இதில் முதன்மையான பங்களிப்பு என்றால்... ஒருவர் இப்படத்தின் இணை இயக்குநராகப் பணி செய்த G.M சண்முகராஜ் அவர்களைச் சொல்வேன். எழுத்திலும் கருத்திலும் தொகுப்பதிலும் என்னோடு இரண்டு வருடங்கள் தான் சார்ந்த திரைப்பட வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுப்பூர்வமாக உழைத்தார். இன்னொருவர்... தொகுப்பாளர் திரு.செல்வா அவர்கள். படத்தின் மையக் கருத்துடன் ஒன்றிப்போய் பணமே வாங்கிங் கொள்ளாமல் பலமுறை படத்தொகுப்பை மாற்றியபோதும் எதுவும் சொல்லாமல் சரியான காட்சிகளைத் தொகுத்தும் அதற்கேற்ற இசையை சேர்த்தும் கொடுத்தார்.
படப்பிடிப்பைப் பொறுத்தவரை தனியொருவனாக நானே பெரும்பாலான காட்சிகளைப் படம் பிடித்துவிட்டேன்.
கே :  வரவேற்பும் அங்கிகாரமும் எப்படி இருக்கிறது..?

வரவேற்பைப் பொறுத்தவரை கருத்தாளர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக தோழர் அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், எஸ்.வி ராஜதுரை, அஜயன்பாலா, ஒளிப்பதிவாளர் செழியன், மலையக எழுத்தாளர் மு.நித்யானந்தம், தோழர் தியாகு போன்றோர் நல்ல கருத்துக்களைச் சொன்னார்கள்.
தமிழக அளவில் கும்பகோணம், தஞ்சை, கோவை போன்ற இடங்களில்  திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் பார்த்த பலர் இலங்கையில் மலையக மக்கள் பற்றிய செய்திகள் வியப்பாக உள்ளதாக  அன்றாடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். படத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு குறுந்தகடு வெளியிடும் திட்டம் உள்ளது. தற்பொழுது வெளியிட்ட குறுந்தகடுகளின் நிதி உரிய முறையில் வராத காரணத்தால் பெரும் கடன் சுமையில் உள்ளேன். கடன் தீர்ந்த்தும் ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டத்தில் உள்ளேன்.
எங்கள் ஊரைப்  பொறுந்தவரை (நீலகிரி) வரவேற்பு சாதாரண மக்களிடம்தான் உள்ளது. இவர்கள் மத்தியில் “சமூகப்பணி“ செய்வதாகச் சொல்லும் பலருக்கும் “படம் பார்க்கவே நேரமில்லை“. குறைந்த பட்சம் ஐந்து  குறுந்தகடுகளை வாங்கிக் கொள்ளக்கூட நிதியில்லை. அவர்கள் “புரோஜெக்ட்” வேலைகளில் மூழ்கியுள்ளார்கள். கட்சிகளில் உள்ள ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் வாக்குச் சீட்டு அரசியலின் பிழைப்புவாதத்தில் உள்ளனர். இலங்கையில் மலையகத் தலைவர்கள் சிலர் செய்த அதே கருங்காலி வேலையை இந்த மக்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும், வாக்கு வங்கி இருப்பதாக பேரம்பேசி கட்சிகளிடம் பணம் வாங்குவது எனத்தொடர்கிறது அவர்கள் “சமூகப்பணி” . எனவே அவர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில், தேயிலைத் தோட்டங்களிலும் தொழிற்சங்கப் பணிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதற்கு மேற் சொன்னவைகள் காரணமாக உள்ளன. கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் கொடுக்கும் மரியாதை தொழிற்சங்கப்பணிகளுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. சில தேயிலைக் தோட்டங்களில் முதலாளிகளே நடத்தும் பெயரளவிற்கான தொழிற்சங்கங்கள் உள்ளன.
மற்ற தொழிலாளர்கள் வீட்டைச் சொந்தமாக வைத்துக் கொண்டு நிறுவனங்களில் வேலை செய்து உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். தேயிலைத் தோட்டங்களில் வீடே அவர்களுகளுடையது. முதலாளகளின் வீட்டிலிந்துகொண்டு உரிமைபேச  யாருக்குத் துணிவு வரும்? வீட்டை காலி செய்யும் நினைப்புதான் முதலில் வரும் உரிமை பற்றிப் பேசினால்.
கே : நில உச்சவரம்புச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே...அது அங்கு நடைமுறையில் இருக்கிறதா?
நில உச்சவரம்புச் சட்டத்தை டாட்டா, பிர்லாக்களுக்கு யார் நடைமுறைப் படுத்தச் சொல்வது....? அவர்களைப் போல ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட தேயிலை நிறுவனங்கள் இங்கே பல உள்ளன. புறம்போக்கு நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் எல்லாம் தோட்டங்களாக மாறியுள்ளன.
நில உச்சவரம்புச் சட்டம் நிலங்களை அவர்கள் பிரித்துக் கொண்டு தன் குடும்ப சொந்தக்காரர்களின் பெயரில் எழுதிக் கொள்வதற்குத்தான் பயன்பட்டிருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சத்தமின்றி எதையும் பட்டா பதியலாம்... தோட்டமாக்கலாம்.
தொழிலாளிகளாக உள்ள தாயகம் திரும்பிய மக்கள் தான் குடியிருக்க 10* 10 என ஒரு இடத்தில் குடிசை போட்டால்தான் போலீஸ் வருகிறது. அரசு அதிகாரிகள் வருகிறார்கள். வனத்துறை வருகிறது. சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.  பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை சட்டமெல்லாம் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்.
கே : உங்களது பச்சை ரத்தம் அரசாங்கத்தின் கவனம் பெற்றிருப்பதாக உணர்கிறீர்களா?
ஆமாம். தற்போதைய அ.இ.அ.திமுக. அரசு கடந்த சட்டசபை விவாதத்தில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. திராவிடமணி (தி.மு.க) தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது பற்றிப் பேசியுள்ளார்.
யானை அடித்து இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக இதுவரை 25,000 கொடுக்கப்பட்டது. தற்பொழுது 2,50,000 (இரண்டரை லட்சம்) ரூபாயாக முதல்வர் அவர்கள் கொடுத்துள்ளார்கள். ஏதோ ஒருவகையில் இதை என் ஆவணப் படத்திற்கான எதிர்வினையாகக் கருதுகிறேன்.
கே : நீலகிரியில் வாழும் தாயகம் திரும்பிய மக்களைப் பற்றிய தங்கள் மதிப்பீடு?
நல்ல உழைப்பாளிகள். தொட்டால் துலங்கும் கரங்களுக்குச் சொந்தக் காரர்கள். படத்தில் சொல்லியிருப்பதுபோல இவர்களின்றி தேயிலைத் தோட்டங்களில் பசுமையில்லை.
ஆனால் காலம் காலமாகக் கல்வியறிவு இல்லாத காரணத்தால் நிலப்பிரபுத்துவ அமைப்பில் வாழ்ந்து பழகியதால் அதே அடிமை மனோபாவம்தான் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இம் மாவட்டம் முழுவதும் சுமார் 400 - க்கு மேற்பட்ட இடங்களில் காலனிகளை வாழ்கிறார்கள். பெரும்பாலான வீடுகளுக்குப் பட்டா இல்லை. போக்குவரத்து வசதி இல்லை. முறையான கல்விக்கூடங்கள் இல்லை. மருத்துவம் இல்லை. இதைப் பற்றிய கவலை அவர்களிடம் விழிப்புணர்வாக வெளிப்படுவதில்லை. ஊருக்கு ஊர் கோயில் கட்டுவது. அதற்கு வரி வசூலிப்பது.   அது தொடர்பான சண்டை சச்சரவுகள். பிறகு சபரிமலைக்கு ஆண்கள். மேல்மருவத்தூருக்கு பெண்கள் எனக் கோயில்களுக்கு பண்டிகைகளுக்குச் செலவு செய்தது போக மீதி மருத்துவமனைகளுக்குப் போய்விடுகிறது.
குடியிருக்க வீடில்லாதபோதும் கோயில் பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். புதிதாக வருகிற இளைஞர்களும் பெரும்பாலும் அதைநோக்கியே செல்வது வருத்தமளிக்கிறது. எனவே கல்வி அடிப்படையான விசயமாகவும் நல்ல தலைமைகளும் தேவைப்படுகிறது.
கே : இலங்கையிலுள்ள மலையக மக்களைப் பற்றி...
இனம், வர்க்கம், சாதி என்கிற மூன்று அடையாளங்களால் இம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. சாதியில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பால் தொழிலாளிகளாகவும் இருப்பதால்தான் இவர்கள் ஈழத் தமிழர்களைப்போல் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து போக முடியவில்லை. அவர்களைப்  பற்றிப் பேசவும்  பெரிய ஆட்களில்லை. மு. நித்யானந்தம், தெளிவத்தை, மாத்தனை சோமு போன்றவர்களைத் தவிர. ஈழப்பிச்சினையைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கு இவர்களைப் பற்றிப் பேசுவதால் எந்தப் பயன்பாடுகூட இருக்கப் போவதில்லை. எனவே பேசவில்லை. இங்கு அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், தியாகு, எஸ்.வி. ஆர்., சி.மகேந்திரன் போன்றவர்கள்தான் சிறப்பான பதிவுகளை தந்துள்ளனர்.
கே : உங்களது தனிப்பட்ட அனுபவம்....?
வேதனையானதுதான் என்றாலும் இதனால் ஏற்பட்ட கடன் சுமை பற்றியோ இதன் தயாரிப்பாளர் தனலெட்சுமி (என்மனைவி) கொழுந்து கிள்ளிய பணத்தில்தான் இப்படம் தயாரிக்க முடிந்தது என்பது பற்றியோ எனக்குக் கவலையில்லை. ஈழப் பிரச்சினையில் வாய்கிழிய வீராவேசமாகப் பேசுகிற பலருக்கு ஈழத்தின் பிரச்சினை பற்றிய முழுமையான வரலாற்றுப் பார்வையோ, மலையக மக்கள், பூர்வீக இலங்கைத் தமிழர்கள் பற்றிய புரிதலோ இல்லை. தொப்புள்கொடி உறவான மலையகத் தமிழர்கள் மட்டும் மறந்துவிடுகிறது அல்லது தெரியவில்லை. அவர்களுடைய தேடல் எல்லாம் “அண்ணன் வருவார்” … “அண்ணன் பார்த்துக் கொள்வார்”  …   “அவர் இருக்கிறா...?இல்லையா?” என்பதுதான்.

மனம் திறந்த விமர்சனங்களோ உரையாடல்களோ அதற்காக உணர்வாளர்களைப் பயிற்துவிப்பதோ பெரும்பாலான முன்னணியாளர்களிடம் இல்லை. இவர்கள் பின்னால் திரள்கிற உண்மையிலேயே உணர்வாளர்கள் பலர் வேதனையுடன் இருப்பதைக் காண முடிகிறது. இந்தப் போக்கு அவர்களை எதிர்காலத்தில் எதிலும் நம்பிக்கையற்றவர்களாகத்தான்  உருவாக்கும்.
கே : முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு இப்படத்தில் எதிரொலிக்கிறதா?
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு படத்தில் இல்லை. ஆனால் கடைசிக்கட்ட போரில் இறந்துபோனவர்கள்... இப்போது முள்வேலிகளுக்குப் பின்னால் இருப்பது பெரும்பாலும் மலையகத் தமிழர்கள் என்பதை எழுத்தால் மட்டுமே என்னால் பதிவு செய்ய முடிந்தது.
கே : குறிப்பிடும்படியான விமர்சனங்கள்.....?
பலர் தயக்கத்துடன் இது இப்போது தேவையில்லை என்றனர். ஆனால் பேசப்பட வேண்டியது என்றனர். ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக்க் கூறினர். அதற்காக இதைப் பேசாமல் இருக்க முடியாது. அப்போது பேசமுடியவில்லை. விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் இப்போதும் பேசத் தயங்கினால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை எனக்கூறினேன்.
விடுதலை என்பது மக்களுக்கானது. குறிப்பாக உழைக்கும் மக்களுக்கானது...... அதில் மலையக மக்களைப் பற்றிப் பேசாமல் இனிமேலும் மௌனம் சாதிப்பது இங்கே உள்ள தலைவர்களை சந்தேகப்படவைக்கும்.
கே : இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
சிலருக்குத் தனிப்பட்ட முறையில்  நன்றிகள் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இப்போதும் கொழுந்து கிள்ளி கடன்கட்டும் என் மனைவி... படத்தில் பின்னணிக்குரல் கொடுத்ததோடு நிதிக்காகவும் பலரிடம் சென்று நிதி திரட்டி முழு ஒத்துழைப்பையும் கொடுத்த விழுப்புரம் கவிஞர் ராமமூர்த்தி, கேமிரா கொடுத்து உதவிய புகைப்படக் கலைஞர் திரு. ஹரிசாந்தன், கவிஞர் யாழ்மதி போன்றோர்கள் எனது நன்றிக்குரியவர்கள்.
nandri: thadagam.com