Saturday, May 7, 2011

தும்பிகள் மரணமுறும் காலம்
யாழினி முனுசாமி

இளம் தலைமுறைக் கவிஞர்களில் கிராமம் சார்ந்த வாழ்வியலைப் பதிவுசெய்பவர்களில் முன்னணியிலிருப்பவர் கவிஞர் பச்சியப்பன். அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளிலும் கிராமத்தின் இழப்புகள், சிதைவுகள். அதன் உருமாற்றம் குறித்த பதிவுகளே இடம்பெற்றிருப்பினும் இந்தக் கட்டுரை நூல் ஊடாகவும் முழுக்க முழுக்கக் கிராமத்தையே பேசுகிறார். வடதமிழகத்தின் - குறிப்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்களையும் அம்மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்களையும் அதிகம் தாங்கி வந்திருக்கும் கட்டுரை நூல் இது. அம்மக்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்வியலைக் காட்சிப் படுத்துகிறது இந்நூல், என்றாலும், அனைத்துக் கிராமங்களையும் இந்தக் கட்டுரை நூலின் வழியாகக் காணலாம்.

Pachiappan மீண்டெழுதலை நோக்கமாகக் கொண்டு, வாழ்ந்த கதைகளையும் இழந்த கதைகளையும் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகச் சொல்லிச் செல்கிறார் பச்சியப்பன். வாசக மனதைச் சுண்டியிழுக்கும் எழுத்து நுட்பத்தைக் கைவரப் பெற்றவர் என்பதை அவரது கவிதைகளுடன் அறிமுக முள்ளவர்கள் நன்கு அறிவர். இந்த உரைநடை நூலின் மூலமாகப் புதிய வாசகர்கள் பலர் அந்த அனுபவத்தை அடைவர் என்பதை உறுதியாக நம்பலாம்.

ஒரு நிகழ்வை நாம் நேரில் பார்க்கும்போது ஏற்படும் தாக்கத்தை விட அதைக் கலை வடிவில் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாகிவிடுகிறது. கிராமத்தை நாம் நேரில் பார்ப்பதற்கும் அதைப் பச்சியப்பனின் எழுத்தில் காண்பதற்குமான வேறுபாட்டில் அந்தத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

கட்டுரை நூலை ‘படைப்பு’ என்று சொல்லலாமா என்றால், இந்நூலைப் பொறுத்தமட்டில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்நூலின் நடை அப்படி. கதைக்கும் கட்டுரைக்குமான இடைப்பட்ட, கதைக்கு மிகவும் நெருக்கமான நடையில் இந்நூல் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரக் கூடும். இத்தகையக் கட்டுரைகளைக் ‘கதைக்கட்டுரை’ எனும் புதிய வகைமையாகக் கூடக் கொள்ளலாம். இருபத்தைந்து கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ‘இது கிராமத்து உன்னதங்களின் வீழ்ச்சி குறித்த மனப்பதிவு’ என இந்நூலை வெளியிட்டுள்ள பொன்னி பதிப்பகம் அறிமுகப்படுத்துகிறது.

காலங்காலமாகக் குடியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபட முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கிராமத்தின் ஆன்மா. குடிப்பது நம் மரபு எனக் குடியைப் போற்றும் அறிவாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், குடிக்குத் தன் கணவனையோ, மகனையோ, அப்பாவையோ, சகோதரனையோ பலி கொடுத்தவர்களுக்குத் தானே தெரியும் குடியின் மகத்துவம்? இன்றும் நம் தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பது இந்தக் குடிதானே? முதல் கட்டுரையே இந்தக் குடியின் கொடூரத்தைப் பற்றித்தான். குடியால் கலகலத்துச் சிதைந்துபோன ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை காணாமல்போன ஈச்சங்கூடைகளைப் பற்றியும் கூடைப் பின்னி பிழைப்பு நடத்தியவர்களைப் பற்றியும் பேசுகிறது. இப்படித்தான் எல்லாக் கட்டுரைகளும் கிராமத்தின் ஏதோவொன்றைப் பற்றிப் பேசுகின்றன. நிலத்தடி நீரைப் பற்றி, வரப்புச் சண்டையைப் பற்றி, இயற்கை உரத்தைப் பற்றி, மரங்கள் பற்றி...

இன்னும் நிறைய சொல்லிச் செல்கிறார். அத்தனைக் கட்டுரைகளும் முந்தைய செழிப்பையும் இன்றைய அழிவையும் ஒப்பிட்டுச் சொல்லி வாசகர்களைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

“ வெட்டுக் குத்துனுதான் அலைவார்கள். ஆனால் ஆபத்து என்றால் ஒருத்தனுக்கு ஒருத்தன் கைகோத்துக் கொள்வார்கள். எதிரி கழனியென்றாலும் மாடுமேய பார்க்க மாட்டார்கள். ஓட்டிவிட்டுதான் மறுவேலை, குழந்தை அழுதால் சொல்லி விடுவார்கள்” (ப. 43) எனவும், “ ஆடோ மாடோ தன் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்க்கும் குடும்பங்கள் இருந்தன. விளைச்சலில் கூடு கட்டி இருந்தால் சுற்றியிருக்கும் கதிர்களை அறுக்காமல் விட்டுவிட்டு வருகிற மனசைக் கொண்டவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

உருட்டிவிட்டுப் போன பூனையை அடித்தால் பாவம்டா விட்டுர்றா என்பார்கள். அதனதன் வாழ்க்கையை அங்கிகரித்த பாசம் அவர்களுடைய தாக இருந்தது” (ப. 79) எனவும் கிராமத்து மனிதர்களின் இயல்புகளை அழகாகச் சொல்லிச் செல்கிறார். எருமையில் சவாரி செய்யும் சிறுவர்களும் ‘வாடா அண்ணா’ என்றழைக்கும் தம்பிகளும் சண்டைக்காகப் பிள்ளை பெற்று வளர்க்கும் பெற்றோர்களும் இந்நூல் நெருக உலவிக் கொண்டிருக்கின்றனர்.

கெடை, ஒணத்தி, சத்தமடித்தல், சுளுவு, மோழி, தரூசி, பெண்ணம்பெரிய, கமலைசால், தோட்டாவண்டி, சேடை, ந்தே... எனத் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிக்குரிய பல வட்டார வழக்குச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது. இது போன்ற வட்டாரச் சொற்களுக்கான பொருளை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். ஏனென்றால் ‘தும்பி’ என்பதே எல்லா மாவட்டத்துக்காரர்களுக்கும் புரியும் என்று சொல்ல முடியாது. தும்பியை ‘தட்டான்’ எனவும் ‘புட்டான்’ எனவும் வழங்குகின்றனர்.

‘மூழ்கி மரித்த கதை’, ‘நண்டு நாற்காலி ஏறுமா?’, ‘பொண்ணு பிடிச்சிருக்கா ராசா’, ‘இன்றிரவு நடத்தப்படும் நாடகம் யாதெனில்’, ‘மருந்து’ போன்ற கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். ‘தும்பிகள் மரணமுறும் காலம்’ என்பது கவிதை நூலுக்கான தலைப்பாக இருக்கிறது. ‘மரம்போல்வர் எம்மக்கள்’ எனும் கட்டுரைத் தலைப்பையே இந்நூலுக்கும் தலைப்பாக வைத்திருக்கலாம்.

கருத்து ரீதியாகச் சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. சிறுநிலவுடைமைச் சமூகப் பிரதிநிதியின் குரலாகப் பச்சியப்பன் குரல் ஒரு சில கட்டுரைகளில் ஒலிக்கிறது.

ஆட்டுக்கிடை மடக்குவதன் மூலம் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொண்டு, ‘கிடை’ மடக்கியவர்கள் கூலியாகக் குண்டான் நிறைய கூழ், சோறு, வெத்தலை, பொயலை, சுருட்டு, ஒரு ரூபாயோ காசு பெற்றுக் கொள்வதைச் சிலாகித்து எழுதுகிறார் (ப. 34). கூலி கேட்காமல் கூழ் குடித்துவிட்டுக் கொடுப்பதை வாங்கிக் கொண்டுபோனால் மகிழும் நிலக்கிழார் மனசு இதில் வெளிப்படுகிறது. வேறோர் இடத்திலோ கூலி கேட்டால் சலித்துக் கொள்கிறார்.

“வெள்ளம் காய்ச்ச ஆலை ஆடுவது என்றால் நாய் படாத பாடு. மாட்டுக்குச் சோகை வேண்டும் என்பதற்காக நிறைய பேர் கருப்பு வெட்ட வருவார்கள். அவர்களை வைத்தே கழனியிலிருந்து கரும்பை ஆலைகரைக்குத் தூக்கிவந்து விடலாம். இது மாடுகள் நிறைந்திருந்த காலத்தில் நடந்தவை. இப்பொழுதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் கூலி.” (ப. 57), “சரி, கரும்பு வேண்டாம். வாழைக்கு வருவோம். குழி எடுக்கக் கூலி. கன்று தோண்டக் கூலி. கன்றுக்குக் கூலி (ப. 57) என விவசாயக் கூலிகளுக்குக் கூலி கொடுக்கச் சலித்துக் கொள்ளும் மனம் இதில் வெளிப்படுகிறது.

சோறு போடவும் கூழ் ஊத்தவும் எல்லோருக்கும் மனம் வரும். ஆனால் கூலி கொடுக்கத்தான் மனம் வராது போலும். விவசாய வேலைகளுக்குக் கூலி கொடுக்கவும் புலம்ப வேண்டும்; கிராமத்து ஆட்கள் வேலை தேடி நகரை அடைந்தாலும் ‘அய்யோ! கிராமம் காலியாகிவிடுகிறதே’ என்று புலம்ப வேண்டும். நல்ல கிராமப் பற்று!

சமீபத்தில் கடலூரில் நடந்த உழவுத் தொழிலாளர்கள் மாநில மாநாட்டில் தோழர் ஆர். நல்லகண்ணு குறிப்பிட்ட சில செய்திகளை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “நவீன வேளாண்மை தொடங்கப்பட்டு அறுவை இயந்திரம் வந்துவிட்டது. நிலம் இல்லாத உழவர்கள் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... தமிழ்நாட்டில் ஆறுகோடி மக்கள் தொகையில் ஒரு கோடி பேர் உழவுத் தொழிலாளர்கள். இவர்களில் பாதிபேர் ஆதிதிராவிடர்கள்” (தமிழ் ஓசை, 2. 9. 07) என்கிறார் நல்லகண்ணு.

அறுவை இயந்திரத்தால் விவசாயக் கூலிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அவர்களின் வாழ்வாதார உரிமை பறிக்கப்படுகிறது. ஆனால், பச்சியப்பனோ, “ஏக்கர் கணக்கில் என்றால் அறுவை இயந்திரம் கொண்டு அறுக்கலாம்” (ப. 58) என அறுவை இயந்திரத்தை வரவேற்கிறார். அறுவடைக்கு ஆள்வருவதில்லை என்பதைக் காரணமாகச் சொன்னால், ஏன் வருவதில்லை என்ற கேள்விதான் எழுகிறது. பச்சியப்பனின் மொழியில் சொல்வதென்றால், கூலிப் பிரச்சினையன்றி வேறு என்னவாக இருந்துவிட முடியும்?

இந்நூல் கிராமத்தைப் பற்றிப் பேசினாலும் கிராமத்துச் சிக்கல்களை அரசியல் புரிதலுடன், விரிவாகவும் நுட்பமாகவும் பேசவில்லை. வாசகர்களின் மேலோட்டமான உணர்வுகளைக் குறிவைத்து எழுதப்பட்டிருக்கின்றது. இந்திய சாதிய அமைப்பைக் கிராமங்கள் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் சமூகப் பேராசிரியர்கள். சாதியம் பற்றியோ தலித் மக்களின் கலையான ‘பறை’ யின் அழிவு பற்றியோ இந்நூலில் எவையும் பதிவுகள் இல்லை.

இது கிராமத்து இனிய அனுபவங்களை அசைபோட நினைப்பவர்களுக்கான புத்தகம். கிராமத்து வாசகர்களுக்கான புத்தகம். அந்த அளவில் இந்தப் புத்தகம் ஒரு வெற்றிகரமான புத்தகம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தும்பிகள் மரணமுறும் காலம்
ஆசிரியர் : இரா. பச்சியப்பன்,
வெளியீடு: பொன்னி பதிப்பகம்,
2/1758, சாரதி நகர்,
என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம்,
சென்னை - 91, விலை : ரூ. 60.
 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

Previous post
Next post

பம்பைக் கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்




தமிழர் பண்பாட்டில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. திருவிழாக்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழர்களின் தொன்மைக் கருவியான “பறை” க்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப் படும் இசைக் கருவி பம்பை. பம்பைக் கருவியின் சிறப்புகள் குறித்தும் இன்றைய நிலையில் பம்பைக் கலைஞர்களின் வாழ்நிலை குறித்தும், பம்பை கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்........

1.வணக்கம். பம்பையின் சிறப்பினைப் பற்றிக் கூறுங்களேன்.
வணக்கம். பம்பை ஒரு மிக சிறந்த கருவி. இந்தக் கருவி சைவக் கடவுள்களுக்கு வாசிக்கும் ஒரு அருமையான இசைக் கருவி. பெரும்பாலும் நிங்கள் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பம்பை அடிப்பதைப் பார்க்கலாம்.

2.மற்ற தோல் கருவிகளுக்கும்; பம்பைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மற்ற தோல் கருவிகள் நல்லது கெட்டது என எல்லாவற்றிற்கும் உப யோகப்படுத்துவார்கள் ஆனால் பம்பையைத் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். அது மட்டுமல்ல; மற்ற கருவிகளை எந்தத் தோலில் வேண்டுமானலும் செய்வார்கள். ஆனால் பம்பையை ஆட்டின் தோலில்தான் செய்வோம்.

3.பம்பையின் துணைக் கருவிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
முதலில் உடுக்கைதான். அதனுடைய துணைக் கருவிதான் பம்பையும்; சிலம்பும். இந்த மூன்றையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு அருமையான இசை தோன்றும். அந்த இசையில் இறைவனே மயங்கி மனிதர்கள் மேலே ஆடி வருவார்.

4.பம்பை ஆட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக்க் கூறுங்கள்?
இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டாகும்.

தீப்பந்தாட்டம்:-
வாயில் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கையில் திப்பந்தம் வைத்து ஊதுவர்.

தண்ணீர்க்குடம்:-
ஒரு குடம் நிறைய தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அந்தக் குடத்தில் ரூபாய் நோட்டை வைப்பர். அந்தக் குடத்தைத் தனது வாயினால் தூக்கி தண்ணீரைத் தன் மேல் ஊற்றிக் கொள்வோம். பிறகு அந்த ரூபாய் நோட்டை எடுத்துப்போம்.

சோடாபாட்டில்:-
சோடா பாட்டிலைத் திறக்காமல் வைப்பர். அதை நாங்கள் வாயினால் திறந்து சோடாவைக் குடிக்குவிட்டுப் பிறகு அதை மூடிவிடுவோம் ஆனால் அந்த பாட்டிலைத் திறக்கக் கையைப் பயன்படுத்தக் கூடாது. கஷ்டமாக இருக்கும்.

கண்ணினால் ஊசியை எடுப்போம்; நெற்றியினால் செங்கல்லை உடைப்போம். இவற்றை யெல்லாம் செய்யும்போது எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் தான் மக்கள் ஒசிப்பார்கள். வெறுமனே பம்பை மட்டும் அடித்துக் கொண்டு போனால் ஒசிக்க மாட்டார்கள்.

5.உங்களுக்கு பம்பை செய்யத் தெரியுமா?
எனக்கு முழுமையாக செய்யத் தெரியாது.

6.எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் பம்பை அடிக்கிறார்களா? இல்லை வேறுபாடுகள் உண்டா?
கண்டிப்பாக வேறுபாடுகள் இருக்குது. இத்தொழிலை பரம்பரையாக, புர்விகமாக செய்பவரின் இசை ஒரே மாதிரி தான் இருக்கும். இடையில் வந்தவர்களால் சிறு வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு மலையனுரில் அடிப்பவர்கள் மீனவர்கள், அவர்களின் இசை வேற மாதிரியாக இருக்கும். அவர்கள் அடிக்கும் விதம் வேறு மாதிரியானது.

7.சென்ற தலை முறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் உள்ள ஒசனை எப்படி இருக்கிறது?
சென்ற தலைமுறையில் தான் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருந்த்து. முன்பு இருந்த ஒசனை வேறு, இப்போது இருக்கும் ஒசனை வேறு. அதனால் பம்பைக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டு தான் வருகிறது.

8.உங்களுடைய அடுத்த தலைமுறையினர் பம்பைக் கலையைப் பின்பற்றுவார்களா?
கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள். நான் என் சொல்றேன்னா, எனது தாத்தாவின் கலையை நான் பின்பற்றினேன். எனது கலையை எனது மகன் பின்பற்றுவான்.

9.பம்பையைக் கற்றுக் கொடுக்க ஏதேனும் பள்ளிகள் நிறுவனங்கள் இருக்கின்றனவா?
இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் எந்த நிறுவனமும் இல்லை. இனிவரும் காலங்களில் வரலாம் என நம்புகிறேன்.

10.பெண்கள் பம்பை அடிக்கிறார்களா?
இல்லை.

11.இனிவரும் காலங்களில் பெண்கள் பம்பை அடிக்க நேர்ந்தால் நிங்கள் ஏற்பீற்களா?
கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம்.

12.குறிப்பிட்ட சாதியினர் தான் பம்பை அடிக்க வேண்டுமா? அல்லது யார் வேண்டு மானாலும் அடிக்கலாமா?
முன்பு கோவில் புசாரி மட்டும் தான் பம்பை அடித்தனர். காலம் மாறும் போது இக்கலையின் மீது உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால், ஆனிசயால் வேறு சில இனத்தவரும் இக்கலையைக் கற்று இத்தொழிலை செய்கின்றனர்.

13.உங்கள் பிள்ளைகள் விரும்பினால் இந்தத் தொழில் செய்ய நிங்கள் அனுமதிப்பிர்களா?
அனுமதிப்பேன். அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்தால்; அவன் நல்வழியில் சென்றால் கண்டிப்பாக அனுமதிப்பேன். காலங்காலமாக இந்தக் கலை வாழவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பம்பைக் கலைஞர்களுக்கும் இந்தக் கலைக்கும் அங்கீகாரமும் மதிப்பும் கொடுத்து காக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்த்தின் கையில்தான் இருக்கிறது.

14.பம்பைக் கலைஞர்களுக்கும், பம்பை கலை வளர்ச்சிக்கும் தமிழக அரசு எத்தகைய திட்டங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறிர்கள்?
இக்கலை வளர எங்களுக்கு என்று ஒரு தனிச் சங்கம் அமைக்க வேண்டும். அதில் உறுப்பினராக எல்லாப் பம்பைக் கலைஞர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். பம்பைக் கலைஞர்களுக்கென்று தனி வாரியம் அரசு அமைக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசு இசைக் கல்லூரிகளிலாவது பம்பையை ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

15.ஆர்வமுடைய இளைஞர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால் பம்பை இசைக் கருவியை வாசிக்கக் கற்றுத் தருவீர்களா?
உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும் அதுவே இக்கலை மீது ஈடுபாட்டை உண்டாக்கும். நிங்கள் கற்றுக் கொள்ளத் தயராக இருந்தால் நான் சொல்லிக் கொடுக்கத் தயாராக இருக்கேன்.

16.எல்லா கோவில்களிலும் பம்பை அடிப்பீர்களா?
இந்து மதக் கடவுள் அனைவருக்கும் இதை வாசிப்போம். அம்மன்; சிவன்; முருகன்; காவல் தெய்வங்கள் போன்றவர்க்கு இசைப்போம். வைணவக் கோயில்களில் இசைக்க மாட்டோம்.

17.எத்தனைத் தலைமுறையாகப் பம்பை அடிக்கிறீர்கள்?
இது ஒரு நகைச்சுவையான கேள்வி, எங்களது பரம்பரை தொழிலே இது தான்.

18.எப்படி இந்தக் கலையில் ஆர்வம் வந்தது.?
இந்த ஆர்வம் பிறப்பிலிருந்துதே இருந்த்து. எனது தந்தை, தாத்தா போன்ற முன்னோர்களின் இசையைக் கேட்டு கேட்டு எனக்கும் ஆர்வம் தானாகவே வந்துவிட்டது.

19.வருமானம் எப்படி இருக்கிறது?
வருமானம் கிடைக்கிறது. ஆனால் அன்று கிடைப்பது அன்றே செலவாகிவிடும். மறு நாள் வேறு ஏதாவது வேலைக்குச் சென்றால் தான் எங்களது பிழைப்பு நடக்கும். அந்த அளவில்தான் இப்போதைக்கு இந்தத் தொழில் உள்ளது.

20.முழு நேரத் தொழிலாக இதைச் செய்ய முடியாதா?
செய்ய முடியாது. இத்தொழிக்கு என்று ஒரு சீசன் உண்டு, ஆடி, மாசி, சித்திரை போன்ற மாதங்களில் வேலை தொடர்சியாக இருக்கும். மற்ற மாதத்தில் ஒன்றோ இரண்டோ தான் வரும்.

கிராமங்கள் இருக்கும்; மக்கள் இருப்பார்கள்;
கோயில்கள் இருக்கும்; மதம் இருக்கும்;
வழிபாடும் இருக்கும்;
ஆனால்..........
இந்தக் கலை இருக்குமா?
காலந்தான் பதில்சொல்ல வேண்டும்
நன்றி. வணக்கம்
நேர்காணல் உதவி; சுகுமார்

nandri : thadagam.com
இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
யாழினி முனுசாமி

சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல்.

மனித குல வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் உலகந் தழுவிய வளர்ச்சியின் காரணமாக பல புதிய துறைகள் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, ஒப்பாய்வு, இலக்கிய ஒப்பீடு அல்லது ஒப்பிலக்கியம் என்றும் ஆய்வு முறையைத் தொடங்கி வைத்தவர் பேராசிரியர் சாட்விக் என்பர். பிரான்சு நாட்டின் சிந்தனை மரபில் தோன்றியது. இன்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளிலும் பரவி தனித்துறையாக நிலை பெற்றுள்ளது. இத்துறை ஆய்வுகள் தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வரிசையில் அ.அ. மணவாளன் ‘இலக்கிய ஒப்பாய்வு: காப்பியங்கள் எனும் ஒப்பாய்வு நூல் முக்கியமானது.

288 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ தொடங்கி, ‘தமிழ்க் காப்பிய மரபில் கவியோகி சுத்தானந்தரின் இடம்’ கட்டுரை வரை 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலிலிருக்கும் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ எனும் முதல் கட்டுரையில், காப்பிய இலக்கணம் குறித்தும் தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் குறித்தும் வடமொழி காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம், கிரேக்கக் காப்பியங்களான இலியதம் (LLiad) ஒடிசி (Odyssey) இலத்தின் காப்பியமான ‘ஈனிட்’ ஆகிய முதற்காப்பியங்களின் பாவிகம் (கருத்து, குறிக்கோள்) மற்றும் தலைமைப் பாத்திரங்களின் பண்பு பயன் குறித்தும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி பிறமொழி முதற்காப்பியங்களின் மையக் கருத்தை நம்மால் உய்த்துணர முடிகிறது. அக்காப்பியங்களைப் படிக்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனையே ஒப்பாய்வின் வெற்றியாகக் கொள்ள முடியும்.

வெவ்வேறு மொழிப் பண்பாட்டு காப்பியங்களின் கதைச் சுருக்கங்களும் தலைமைப் பாத்திரங்களின் குணநலன்களை ஒப்பிடும் வாசிப்பில் விறுவிறுப்பும் கூட்டுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இந்நூலுக்குப் பெரிதும் வழிகோலியிருக்கிறது. அவ்வகையில், கம்பராமாயணத்தை மில்டனின் ‘இழந்த சுவர்க்கம் மீண்ட சுவர்க்கம்’ காப்பியங்களுடன் ஒப்பாய்வு செய்திருப்பதை முக்கியமானதாகக் கூறலாம். கி.மு. (70-19)வில் வாழ்ந்த வெர்ஜில் இயற்றிய இலத்தின் மொழியின் ஆதி காவிய ஏனதம் (AENEID). இக்காப்பியத்தின் நாயகன் ஏனியஸ். இவனுடன் இராமனை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார். தனக்கு நேரடி எதிரியல்லாத வாலியை மறைந்திருந்து கொன்றதால் ஏற்பட்ட இக்கட்டான நிலைபோல ஏனியாஸீக்கும் ஏற்பட்டிருப்பதை விளக்குகிறார். ஒப்பற்ற ரோம் நகரை உருவாக்கும் ஏனியஸின் குறிக்கோளுக்கு உதவிய டர்னஸ் என்பவனை கொன்றுவிடும் இக்கட்டான சூழலை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார்.

‘சிலப்பதிகாரம் ஒரு பெண்ணிய நோக்கு’ கட்டுரையில் சிலப்பதிகார ஆணாதிக்கக் சொற்களை வெளிக்காட்டியிருக்கிறார்.

‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே / காசறு விரையே கரும்பே தேனே’ - எனவும் இன்னபிறவுமாய்க் கோவலன் கண்ணகியைப் பாராட்டுவது, பெண்ணை ஆணுக்குரிய நுகர்பொருளாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார். இப்படிச் சிலம்பை மறுவாசிப்பு செய்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள், அமெரிக்காவிலுள்ள இந்தியானா, கொலம்பியா பல்கலைக் கழகங்களில் நிகழ்ந்த கருத்தரங்குகள் ஆய்வரங்குகள், பணிப் பட்டறைகள் போன்றவற்றில் படித்தளித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கும், டாக்டர் அ.அ. மணவாளன் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் இலக்கியங்களிலும் புலமை உடையவர் என்பதால் தமிழ், வடமொழி, ஆங்கிலக் காப்பியங்களைத் திறம்பட ஒப்பாய்வு செய்ய முடிந்திருக்கிறது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் காணப்படும் மகாபாரதச் செய்திகளையும் ஆய்ந்திருக்கிறார். மகாபாரதப் போரில் இருசார் வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்த வள்ளல் என்று சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியதை பின்வரும்
‘ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் / பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!’ - எனும் புறநானூற்றுப் பாடல்வழி எடுத்துக் காட்டியுள்ளார். இப்படிச் சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல் இது.

இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
ஆசிரியர் : அ.அ. மணவாளன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098, விலை : ரூ. 100.00.


 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

புத்தக விமர்சனம் - குரலற்றவனின் குரல் ( தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதைகள் )


ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலம்



கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா - பாட்டிகளின வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரலர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ என்னவோ! நமக்கு ஓரளவிற்கு வாய்த்திருந்த்து ஆனால். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தாத்தாவோ பாட்டியோ தன் பேரப்பிள்ளைகளுக்கு. தான் சாதி ரீதியாக அனுபவித்த கொடுமைகளைக் கதைகளாகவேனும் சொல்லியிருப்பார்களா? இது நமக்கு மூத்த தலைமுறை வரையிலாக தொக்கி நின்ற கேள்வி. துன்பத்தைக் கதைகளாகக்கூட வெளிப்படுத்த முடியாத சூழலைத்தான் அற்றைச்சமூகம் அவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆயினும், தற்போது பெருகி வருகிற தலித்திய படைப்புகளும், சிந்தனைகளும் அனறைய தாத்தாக்களின் நிலை இன்றைய பேரர்களுக்கு இல்லை என்பதை ஓரளவிற்கு உணர்த்துகின்றன.

கேள்வி அனுபவத்திலிருந்து எழுதகிறேன் என்றில்லாமல், பட்ட பாடத்திலிருந்து படைப்புகள் உருவாகின்றன என்ற தலித்திய எழுத்தாளர்களின் இன்றைக்குமான வாக்குமூலங்கள் நாகரிக சமூகத்தின்(!) முகத்தில் உமிழ்வதாகத்தான் இருக்கிறது. பட்டனுபவம் நல்லவற்றிற்கு இருக்கலாம், சமூக அவலங்களுக்கு இருக்கக்கூடாது. ஆனாலும் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகக்கூட பேசப்பட முடியாத தங்கள் முன்னோர்களின் அவலங்களை, நிகழ்கால நடப்புகளை, பதிவுகளாக்கி படைப்புகளாகத் தரும் தற்காலச் சூழல் தலித்திய மறுமலர்ச்சியாகவே தோன்றுகிறது.

தலித்தியம் சார்ந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. தலித்திய ஆய்வுகளும் தம் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளன. என்.டி.ராஜ்குமார், அழகிய பெரியவன், விழி.ப. இதயவேந்தன, ரவிக்குமார், சிவகாசி போன்ற பலர் தங்கள் படைப்புகளில் தலித்தியத்தை ஆழமாகவே பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், தலித்திய படைப்புகள் ஏதேனும் ஒரு பொருண்மையில் தொகுப்பாக வெளிவந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக சிறுகதைகள். இச்சூழலில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறந்த தலித்திய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் யாழினி முனுசாமி. “குரலற்றவனின் குரல்” தேவையான, வரவேற்கத்தக்க சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 31 சிறுகதைகள் 31 எழுத்தாளர்களால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டு, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. கவிதைகளையோ சிறுகதைகளையோ தொகுப்பவர்கள் தங்களுகென்று ஓர் அரசியலைக் கொண்டிருப்பர். ஆனால், “சிறந்த தலித்திய சிறுகதைகள்” என்ற அரசியலை மட்டுமே கையாண்டு இத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர். படைப்பாளர்களுள் பலரை முன்பின் அறியாவிட்டாலும், கதைகளின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்பட்டிருப்பது தொகுப்பின் பலம். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமன்றி, இலங்கை, டென்மார்க், மலேசியா, ஜெர்மனி, மும்பை என நாட்டின், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இயங்கும் எழுத்தாதளர்களின் தலித்தியம் சார்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தொகுப்பின் பரந்த நோக்கினைக் காட்டுகிறது. கதைகளைப் படிக்கும்போது, உலகெங்கிலும் எது இருக்கிறதோ இல்லையோ சாதியக் கொடுமை என்ற அவலம் இருப்பதை வேதனையோடு உணர முடிகிறது.

மேல்நிலையாக்கத்தால் தன் அடையாளத்தை இழந்து உருமாறிப்போன சிறுதெய்வங்கள் பற்றிய பதிவை “அடையாளம்” சிறுகதை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மேல்நிலையாக்கம் என்பது தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமும் சந்தித்த சந்திக்கிற அடையாள அழிப்பு என்பதை உணர வேண்டும். இதேபோல, தேனீர் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கென இருந்த தனிக குவளை முறை, அதை எதிர்த்து நடந்த போராட்டம், பாரதி விரும்பிய சாதி ரீதியிலான சுதந்திரம், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் படிப்பைத் தொலைக்கும் பழங்குடியின மாணவர்கள், பல இன்னல்களுக்கு இடையில் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டு, படிப்பைப் பாதியில் இழக்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள், தேர்தல் கால சிக்கல்கள், உறவுசிலைச் சிக்கல்கள் போன்ற பல சமூக அவலங்களைத் தொகுப்பின் சிறுகதைகள் படம்பிடிக்கின்றன. ஒவ்வொரு சிறுகதைகள் ஒரு குறும்படக்கிற்கான கூறுகளோடு அமைந்துள்ளது சிறப்பு ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலத்தை அவனுடைய குரலிலேயே அச்சுபிசகாமல் பதிவு செய்திருக்கும் “குரலற்றவனின் குரல்” பல்கலைக்கழகங்களுக்குப் பாடமாக வைக்கும் எல்லா தகுதிகளோடும் வெளிவந்திருக்கிறது. சமூகச் சிந்தனையாளர்களும், தலித்திய ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வாங்கி படிக்கவேண்டிய, குறிப்பு நூலாகப் பாதுகாக்க வேண்டிய நல்ல தொகுப்பு.


நன்றி : தடாகம்.காம்