Monday, April 11, 2011

book review : ‘உதிரும் இலை ’- பச்சியப்பன்



அளவில் சிறியதெனினும், நேசத்திற்குரிய உள்ளங்கை பற்றி மலைவழியில் இறங்கி நடப்பதான அனுபவம் தருகிற தொகுப்பு. பிறந்த ஊரின் நினைவு வேலைபார்க்கும் இடத்தின் எதிரொலி, குழந்தை, தன்னியல்பில் மாறிப்போன அம்மா, கரிசன மனைவி, உதிர்ந்த இலை, கல்குவாரிமலை, அலறி வீழ்ந்த பறவை, ரயில் அனுபவங்கள், சாலையோரத்தில் வீழ்ந்து கிடந்த குடிகாரன், குடியால் நிர்க்கதியாய் விட்டுப்போன அப்பா, விலைபோகாத கருப்புமாடு என நீளும் விதவிதமான கவிதைப் பாடுபொருள்களைக் கொண்டது இத்தொகுப்பு.

Yazhini Munusamy's book 'Uthirum Ilai' நேரடியாகவும் சில கவிதைகள் பேசுகின்றன, மறைமுகமாகவும் இயங்குகின்றன சில புலம்பலும் உண்டு. நம்பிக்கையும் உண்டு. எடுத்தெரியவும் செய்கிறார் கொண்டாடவும் செய்கிறார். ஜனத்திரளுக்கான அரசியலும் பேசுகிறார். திண்ணையில் நடைபெறும் நாலாந்தர பேச்சுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். காதல் உண்டு, நட்பு உண்டு. நிர்க்கதியாய் விட்டுப்போய் பல்லிளிக்கும் மனிதர்களும் கவிதைகளில் உண்டு. கடந்து வந்த பாதையில் தென்பட்ட அனைத்தையும் எழுத்தாக்கும் கலை முனுசாமிக்கு கைவந்திருக்கிறது. நவீன கவிதை என்பது நவீன வாழ்வை எதிர்கொள்வது? அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்தொகுப்பில் உள்ள ‘இதோ என் நோக்கியா’கவிதையைச் சொல்லலாம்.

பழக்கப்படுத்தப்பட்ட ஆண் தன்மையை குற்றவுணர்ச்சிக் குள்ளாக்குகிற கவிதை ‘தூக்கம் தளும்பும் உன்னை’ எனத் தொடங்கும் கவிதை. பிரிதொரு மனிதரில் நின்று கொண்டு தன்னை விமர்சனம் செய்து கொள்ளுகிற உத்தியை இந்தக் கவிதையில் கையாண்டிருக்கிறார். இதனுடைய கவிதை மொழி ‘இச்சைமொழிப் பேசி ஆழ்ந்துறங்கி’என செதுக்கிய சொற்களாலும் ஆனது, “லன்ச்”சும் கட்டிக் கொடுத்து என்கிற பாலிதீன் உறைகளாலும் ஆனது.

மழைக்கால மாலை நேரத்தில் மேய்ச்சல் காட்டில் கட்டறுந்து ஓடும் இளம்கன்றின் துள்ளலென தன்போக்கை தானே தீர்மானித்து ஓடும் கவிதை நடையை கவிஞர் கொண்டிருக்கிறார். எனக்கு இப்படித்தான் சொல்லத் தெரியும் என்பது போல. இதற்கு எல்லா கவிதைகளும் உதாரணம்.

சிலைசெய்து கடைசியில் கண்ணைத் திறப்பது போன்ற உத்தி சில கவிதைகளில் உண்டு. கல்லூரியைப் பற்றி அழகாகச் சித்திரித்து விட்டு கடைசியில் ‘எப்போதும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள் முதல்வர்கள் ஒருபோதும் வயதாவதேயில்லை வகுப்பறைகளுக்கு மட்டும்’என்று அக்கவிதை முடிகிறது. அதேபோல மலையைப் பற்றி அதன் சிதைவு பற்றி சொல்லி விட்டு கடைசி வரியில் ‘எரிமலைகளை யாரும் நெருங்குவதில்லை’என்று மற்றொரு கவிதை முடிகிறது. இப்படி கடைசி வரியில் சாவியை வைக்கிற உத்தியை நிறைய கவிதையில் கையாண்டிருக்கிறார். அந்த வரிகளிலிருந்து தொடங்குகிற ஆழமான பொருண்மையைப் பொதிந்து வைத்திருக்கிற நுட்பமான பணியையும் செய்கிறார்.

அதேபோல, நாற்று நடுவது மாதிரி தொடக்கமும் முடிவும் அர்த்தப்படுத்தி செய்யப்பட்டுருக்கிற கவிதைகளும் உண்டு. எல்லா மூளையிலும் ஒரே மாதிரியாக பச்சை கட்டி நிற்கிற பயிர்மாதிரி. எதுவும் எதாலும் உயிர் வாழாமல் ஆனாலும் ஒரே கழனியில் இருப்பது போல சில கவிதைகளும் உண்டு. இதற்கு ஒரு உதாரணம் ‘அரிதாகவே நேர்கின்றன’எனத் தொடங்கும் கவிதை.

இரயில் பயணத்தில் நேரும் அனுபவத்தை, குறிப்பாக பிச்சைக்காரர்கள் பற்றிய கவிதைகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக இருப்பது அதன் சிறப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கவிதையில் ஒன்று ‘அவன் அமர்ந்திருக்கும் சிம்மாசனம் அப்படி’எனத்தொடங்கும் கவிதை. மனிதனின் கயமைத்தனத்தை, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெருமுயற்சியில் வெளிப்படும் கீழ்மையைப் பேசுகிற கவிதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்கிற அடித்தட்டு மக்களின் போர்முழக்கம் நமதாக இருக்கும்போது ஆளும் வர்க்கத்தின் நாற்காலி போட்டியை இக்கவிதை பேசுகிறது. சமூக நீதிக்கான செயல்பாடாக ஒன்று செயல்படும்போது, மற்றொன்று தனிமனித வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஒரு செயல்பாடு பொது நலம் சார்ந்து இயங்காதபோது, அது எத்தகையதாக கருதப்படுகிறது என்பதற்கு இக்கவிதை உணர்த்தும் செய்தி சான்று. இக்கவிதை ஒரு அலுவலக ஊழியனுக்கு ஒரு பொருள்தரும். அரசியல்வாதிக்கு ஒரு பொருள் தரும். இதுதான் இந்த கவிதையின் வெற்றி எனத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ‘வனத்தின் திசைகளில்’என்ற கவிதையில் கவிஞர் உள்வைத்த ரகசியத்தை வாசகன் விளங்கிக் கொள்ளாமல் போகிற ஆபத்தும் நேர்ந்திருக்கிறது. மறைமுகமாக பேசப்படும் கவிதையில் இரண்டும் நேரலாம் என்பதற்கான உதாரணங்கள் இவை.

நகரத்தின் சகல கொடூரங்களையும் சில கவிதையில் உணர்த்துகிறார் கவிஞர். பிச்சையிடாமல் பாவனை செய்யும் பயணியில் இருந்து, திருமணங்களில் பின்பற்றப்படும் போலி ஆடம்பரங்களில் இருந்து, வாகனவோட்டிகளைக் குறித்த அச்சத்தோடு உருளும் மிதிவண்டிப் பயணத்திலிருந்து, தாமதமானால் சிதையும் ஒரு நாளைக்கான உணவிலிருந்து நிறையவே நகரத்தின் கொடுமையை இவர் கவிதைகளின் வழியே உணரலாம். சீலகமில்லாத கிராம மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால் வினோதம் என்னவெனில் இந்த விஷயங்களுக்கு முரணாக ‘காக்கை குருவி’ எனத் தொடங்கும் கவிதை எழுதியிருக்கிறார். இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யம் ஒரு இடதுசாரி அரசியல் எழுத்தாளன், தனிமனித துரோகங்களுக்குப் புலம்பி இருப்பதும்.

வாழ்க்கை என்பது வினோதமானது. தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு குதூகலிப்பதற்கும், இறந்த தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு மௌனமாய் வயலுக்குப் போவதற்குமான பெருத்த இடைவெளி உண்டு. அந்த இடைவெளியில் இயங்குகிறது, இந்தக் கவிதை தொகுப்பு.

உதிரும் இலை
ஆசிரியர் : யாழினி முனுசாமி
மித்ரா வெளியீடு (டிசம்பர் - 2005),
32/9, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 24,
விலை : ரூ. 35/-  cell: 9841 374 809

matruppathai - யாழன் ஆதி

பூந்தோட்டம் வளர்த்த என்னை
பெருங்காட்டில் தள்ளிப் போகிறீர்கள்
ஞானம் பெற்றுத் திரும்புவேன்
அப்பெருங்காட்டிலிருந்து
வுத்தக் கூறின் தொன்மையுடன் மிளிரும் இந்தக்கவிதை, வாசகனுக்குப் பல சாளரங்களைத் திறக்கிறது. எளிமையான சொற்களாலான, பல்வேறு பரிமாணங்களைத் தரக் கூடிய இக்கவிதையை எழுதியவர் யாழினி முனுசாமி. வாழ்வின் அடர்ந்த இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சங்களை விழிகள் சுவைக்கும் ஒரு தலித் வாழ்வின் மனவெளியை அப்படியே பதிவு செய்வது, யாழினி முனுசாமியின் கைவண்ணம். அவருடைய முதல் தொகுப்பு "உதிரும் இலை.' கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கிய விமர்சகர், பதிப்பாளர் என்ற அடையாளங்களுடன் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணிபுரியும் இவர், "முரண்களரி' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.
கிராமத்து வாழ்விலிருந்து புலம் பெயர்ந்து, நகர வாழ்க்கைக்கு வரும் மக்களுக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கின்றன. கிராமத்திலிருந்ததைப் போன்ற அகன்ற வாசல்களோ, இயற்கை தரும் தூய்மையான காற்றோ நகரத்தில் இல்லை. ஆனால் மிக முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. அதைத் தன் கவிதையில் மிக லாவகமாகப் பதிவாக்குவார் யாழினி முனுசாமி. நகரத்தின் மீது பிறர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே வந்து, கடைசியில் ஊருக்கு வெளியே/எங்களை ஒதுக்கி வைத்திருக்கும்/உங்கள் கிராமங்களைவிட/அன்பானதாய் இருக்கிறது இந்நகரம்'' என்று முடிப்பார்.
செய்யாறு வட்டம் மோரணம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் யாழினி முனுசாமி. நாடகத்திற்குப் பெயர் பெற்ற ஊர் செய்யாறு. அங்கு நடந்த நாடகங்கள், கலைத்தன்மை மிளிரும் பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் திருவிழாக்காலங்களில் காணக் கிடைக்கும் இன்னபிற கலைவடிவங்களை இளம் வயதிலேயே மனதில் பதிய வைத்ததும், சிறு வயதில் அவருடைய பாட்டி சொன்ன கதைகள் அவருள் ஆழப்பதிந்ததும் கலைமேல் தனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று சொல்கிறார்.
தொண்ணூறுகளில் சென்னையில் முதுகலை படிக்க வந்தவர், நிறைய இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகப் பங்கேற்று வந்திருக்கிறார். சிற்றிதழ்களை வாசித்திருக்கிறார். அப்போது வெளிவந்த "பழையன கழிதலும்' என்ற சிவகாமியின் நாவல், அவரை நவீன இலக்கியத்தின் பக்கமும் தலித் இலக்கியத்தின் பக்கமும் திருப்பியிருக்கிறது. மார்க்சியவாதிகளுடனான நட்பும் வாசிப்பும் அவரை மார்க்சியத்தில் பற்றுடையவராக மாற்றி விட்டது.
கொள்கையில் நேர்மையாக இருக்கின்ற சிலரைத் தவிர, மேம்போக்காக மார்க்சியம் பேசுபவர்கள் சாதியவாதிகளாகவே இருக்கிறார்கள். தலித் தோழர், வன்னிய தோழர் என்று பிரித்துப் பேசுவார்கள். நாம் மார்க்சியவாதிகளாக இருந்தாலும் நம்மை அவர்கள் மார்க்சியவாதிகளாகப் பார்ப்பதில்லை. எப்படியாவது நம் சாதியை கண்டுபிடித்து விடுவார்கள். மதம் மாறினால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிப் போனால், அங்கே சாதி கிறித்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டு தலித் கிறித்துவர், நாடார் கிறித்துவர் என்று பிரிக்கிறது.  இருப்பினும் மார்க்சிய கொள்கையில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு'' என்கிறார் யாழினி முனுசாமி.
தலித்துகளிலும் இடஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு இடஒதுக்கீட்டின் வேலையையும் பெற்றுக் கொண்டு, இறுதியில் தன் மக்களையும் அவர்களின் வாழ்வியல் துன்பங்களையும் அப்படியே விட்டுவிட்டு, மூன்றாந்தரப் பார்ப்பனர்களாக மாறிவிடுகின்ற படித்த தலித்துகளை கவிதைக்கான செறிவோடும் அளவோடும் விமர்சிக்கிறார் யாழினி முனுசாமி.
ஒல்லியாய் இருந்தவன்/தொப்பைப் போட்டிருந்தான்/திருமணத்திற்குப் பிறகு/குடும்பத்துடன் ஒட்டுறவு குறைந்துவிட்டதாம்/நண்பர்களுடன் வைராக்கியமாம்/உயர்ந்து காட்டணுமாம்/தங்கியிருக்கும் வீட்டிற்கழைத்தவன்/அங்கவந்து சாதி பத்திப் பேசக்கூடாது என்றான்/குடும்பம் நண்பர்கள்/நலம் விசாரிப்பு முடிந்து/உபசரிக்கும்போது/காதுபடக் கிசுகிசுத்தான்/"அதைத்' தலமுழுகி/ரொம்ப நாளாச்சி/இப்பல்லாம் ஒன்லி மட்டன் சிக்கன்தான்.''
கவிதையின் பகடியும் அதன் மூலம் பதிவாகும் சமூக எதார்த்தமும் குறிப்பிடத்தக்கவை. ஆக்கங்களைத் தருபவராக மட்டுமின்றி, தன்னை ஒரு சிறந்த விமர்சகராகவும் தகவமைத்துக் கொண்டிருப்பது, யாழினி முனுசாமியின் அடையாளம். விமர்சனம் என்பது தனி அளவுகோலுடன் இயங்கக்கூடியது. அதற்கு சாதியும் ஒரு முக்கியமான அளவுகோல். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதும் சுஜாதாவுக்கு அனுப்பிவிட்டுதான் மறுவேலை பார்த்த கவிஞர்கள் நிறைய பேருண்டு. அவர் வாயால் அல்லது கையால் கவிதைகளை விமர்சித்துவிட மாட்டாரா என ஏங்கியவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இப்போது யாருக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை!
தீவிர இலக்கியத் தளத்தில் இயங்குபவர்களுக்கு வெங்கட் சாமிநாதன் சொல்லே "சொர்க்கம்'. நவீன கவிஞர்களுக்கு ஞானக் கூத்தன்தான் ஒட்டக்கூத்தன். இப்படி இவர்கள் பரப்பிய விமர்சன வெளியில் தனக்கென்று ஓரி டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யாழினி முனுசாமி. இவருடைய "தலித் இலக்கியமும் அரசியலும்' என்னும் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு, தலித் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றக் கூடியது. பதினாறு கட்டுரைகள் கொண்ட அந்த நூல், தலித் எழுத்தாளர்களின் அனைத்து வகைமைகள் குறித்தும் பேசுகிறது.
முன்னணி தலித் எழுத்தாளர்கள் என்று அறியப்பட்ட அனைவரது எழுத்துகளையும் அவர் சரியான விமர்சனப் பார்வை கொண்டு எழுதியிருப்பதாகவே வாசிப்பாளனுக்குத் தோன்றும். தலித் இலக்கியம் உருவாகும் தருணம், அதன் வேர் பிடிப்பு, அது பரப்பும் இலக்கிய ஆளுமை, தமிழ் இலக்கியத்தில் அதன் தேவை, தலித் இலக்கியம் நடத்தும் அரசியல் இவை அனைத்தும் அதில் அலசப்படுகின்றன.
யாழினி முனுசாமியின் இன்னொரு முகம் அவர் ஓர் ஆவணப்படக்காரர். அவருடைய "தொழுப்பேடு' ஆவணப்படத்தில், செய்யாறு வட்டத்திலுள்ள தொழுப்பேடு என்ற ஊரில் நடைபெற்ற சாதிய வன்கொடுமையினை ஆவணமாக்கியுள்ளார். 140 தலித் குடும்பங்களும் 500 சாதி இந்து குடும்பங்களும் அருகருகே வாழ்ந்திருக்கும் இடம்தான் தொழுப்பேடு. தலித்துகள் வாழ்கின்ற பகுதிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்து, இருட்டில் சாதி இந்துக்கள் புகுந்து தலித்துகளை தாக்குவார்களாம். இந்த நிகழ்ச்சி அடிக்கடி அங்கு நடக்கும். ஒவ்வொரு முறையும் திடீரென்று தாக்குதல் நடத்தப்படுவதால், என்ன செய்வதென்றே தெரியாமல் தலித்துகள் அடி வாங்குவார்களாம்!
பிறகு வேறு வழியே இல்லாமல் தாங்கள் வாழ்ந்திருந்த குடியிருப்புப் பகுதியில் தங்கள் வீடுகளையெல்லாம் விட்டுவிட்டு, கொஞ்சம் தொலைவிலிருந்த ஏரியில் சென்று குடியேறிவிட்டனர். முன்பிருந்த வீடுகள் எல்லாம் குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. அதை அப்படியே படம் பிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார் யாழினி முனுசாமி. இது மிக முக்கியமான பதிவாக இருப்பினும், பரவலாக கண்டு கொள்ளப்படவில்லை.
வலிகளிலிருந்து வரும் கவிதைகள் தன்னைப் பெரிதும் ஈர்ப்பதாகச் சொல்லும் முனுசாமி ஈழக் கவிதைகளை, பெண்ணியக் கவிதைகளை, போர்ச்சூழலிலிருந்து வரும் கவிதைகளைப் பெரிதும் விரும்பி வாசிக்கிறார். அந்தக் கவிதைகள் குறித்த விமர்சனங் களும் தொகுப்பும் நூலாக வெளிவந்திருக்கிறது. "பின்நவீனத்துவச் சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்' என்றநூல், அவருடைய சிறந்த விமர் சனங்கள் அடங்கிய தொகுப்பாகும்.
இலக்கியத்தில் பன்முகத்தன்மையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், "முரண்களரி' என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தன் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்னும் பேரவா அவர் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாக இருப்பதே அவரை இத்தகைய ஆளுமை கொண்டவராக மாற்றியிருக்கிறது.
தலித் இலக்கியம் தேங்கி விட்டது என்று சொல்பவர்கள் அதன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள் என்று சினந்தெழும் அவர், தலித் தளத்தில் எழுத வரும் புதியவர்களை மிகச் சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் எழுத்துகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
இன்னும் நிறைய தலித் சிற்றிதழ்கள் தொடங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும். தலித் இயக்கங்கள் தங்கள் தொண்டர்களை வெறும் தொண்டர்களாகவே வைத்திருக்கின்றன. அவர்களை வாசிப்பாளர்களாகவும் மாற்ற வேண்டும். நம்மைப் பற்றியும் இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை தலித் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமலேயே இருக்கும் "படித்த' தலித்துகள் அதிகம். இவ்வாறு செய்வதால் தலித் இலக்கியம் தலித்துகளிடையே மேலும் பரவலாக்கப்படும். தலித் அரசியலும் கோட்பாட்டளவில் இன்னும் கெட்டிப்படும் என்று உறுதியாகக் கூறும் யாழினி முனுசாமி, தலித் இலக்கிய உலகின் முக்கியப் புள்ளி.

nandri; dalitmurasu.
யாழன் ஆதி