Saturday, December 31, 2011

வயதில் ஒன்று கூடும் நாள்- கவிதை- யாழினி முனுசாமி

இப்போதுதான் வந்ததுபோலிருக்கிறது
மதுவாலும் மகிழ்ச்சியாலும் இரவை நிரப்பி
அந்நிய மனிதர்களுடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்
கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட அந்த நாள்.
நண்பர் கொடுத்த நாட்குறிப்பேட்டில்
ஜனவரிகூட முழுதாய்த் தாண்டவில்லை
அலுவலகத்தில் தந்த அழகான நாட்குறிப்பேடோ
கவிதை நோட்டாய் அலமாரியில்
ஒருவருட திட்டங்கள்
டைரி எழுதுவதைப் போலவே
ஒரு மாதத்தோடு முடிவடைந்துவிடுகின்றன.
“இந்த ஆண்டாவது பி.எச்டி.முடித்துவிட வேண்டும்”
என நினைத்த ஒன்பதாவது ஆண்டிது.
வயதில் ஒன்று கூடுவதைத் தவிர
ஒன்றும் பெரிதாய் நடந்துவிடுவதில்லை
செக்குமாட்டு வாழ்வில்.
என்றாலும்
எதிர்பார்ப்புடன் வரவேற்கத்தான் செய்கிறோம் அந்த நாளை.