Friday, June 24, 2011

நூல் வெளியீட்டு விழா - விடுதலைப் புலிகளுக்கு அப்பால்



ங்கிலத்தில் ராஜீவ் சர்மா எழுதி தமிழில் ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கும் “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடிகள் “ எனும் நூலை அண்மையில் (04-06-11) சவுக்கு இணையத் தளத்தின் பதிப்பகமான சவுக்கு வெளியீடு சென்னையில் வெளியிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன் நூலை வெளியிட, தோழர் கஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

சவுக்கு சங்கர் அறிமுகவுரை நிகழ்த்த , தோழர்கள் கஜேந்திரன், விடுதலை இராசேந்திரன், தியாகு ,வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் நூல் குறித்து உரை நிகழ்த்த, நூலாசிரியர் ராஜீவ் சர்மா, மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஏற்புரை நிகழ்த்தினர்.

தோழர் கஜேந்திரன் நூல் குறித்துப் பேசுகையில், “ இந்த நூலை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் நீங்கள் படித்தாக வேண்டும். கார்த்திக்கேயன் தலைமையில் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு திராவிட வழிப்பட்ட தமிழ்த்தேசிய அரசியலை முடக்கிவிடும் துடிப்பு இருந்ததை இந்நூலைப் படித்தப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். அரசியல் உணர்வுசார்ந்து சிறு உதவி செய்தால்கூட உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும் என்கிற விதமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கம் அந்தக் குழுவுக்கு இருந்திருப்பதையும் நான் உணர்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தி.க.வையும் தி.மு.க.வையும் சிக்க வைக்க ஜெயின் கமிசன் பிரயத்தனப் பட்டிருக்கிறது. பொதுத் தளத்தில் தி.மு.க.வால் நடிக்கக்கூட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதுகிறேன்.

பல்வேறு இதழ்கள், பல்வேறு ஆய்வாளர்களின் செய்திகளையெல்லாம் திரட்டி எந்தச் சார்புமின்றி முடிந்த அளவிற்கு உண்மைகளை வெளிக்கொணர்வதில் ராஜீவ் சர்மா வெற்றி பெற்றிருக்கிறார். விக்கி லீக்ஸைவிட சவுக்கு சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மிகச் சிக்கல் வாய்ந்த அறிவுசார்ந்த நூலை ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கிறார். திராவிடம் சார்ந்த தமிழ்தேசத்தின் மீதான பயங்கரவாதமாக இந்த கமிசன்களின் செயல்களை நான் பதிவு செய்கிறேன் ” என்று குறிப்பிட்டார்.

விடுதலை இராசேந்திரன் :

இந்த நூல் குறித்து அதிக அளவில் விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார் தோழர் விடுதலை இராசேந்திரன். “அதிகார மையங்களை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற சிறந்த இணையத் தளம் சவுக்கு ” என்று பேசத் தொடங்கினார். ராஜீவ் காந்தி கொலைக்கு சதித்திட்டம் எப்படி தீட்டப்பட்டது என்பதை 6-7 அத்தியாயங்களில் இந்நூல் விளக்குகிறது. காவல் துறையினரின் நாட்குறிப்பிலுள்ள செய்திகளாகவே அரசு ஆவணங்களிலிருந்தும் புலனாய்வுத்துறையின் குறிப்புகளிலிருந்தும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலையின்போது புலனாய்வுத்துஙையின் இயக்குனராக இருந்த விஜய்கரண் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். எனவே இந்நூலின் மீது சந்தேகம் எழுகிறது.

ராஜீவ் கொலைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடும் இந்நூல் சர்வதேச நிறுவனங்களின் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்கிறது . விடுதலைப் புலிகளைக் குறைசொல்லிக் கொணடிருக்ககும் அமைப்பினருக்கு இந்நூல் உதவி செய்வதாக இருக்கிறது. ராஜீவ் காந்திக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என ஆராய ஏற்படுத்தப்பட்ட வர்மா குழுவிற்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. உரிய பாதுகாப்பை இந்திய அரசும் தமிழக அரசும் வழங்கவில்லை என்று அந்த வர்மாகுழு அறிக்கை குறிப்பிடுகின்றது. எம்.கே. நாரயாணன் இந்திய உளவுத்துறை இயக்குனராக இருந்தபோதுதான் ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றது. ராஜீவ் காந்திக்குப் போதுமான பாதுகாப்பை வழங்க முடியாமல் போனதற்கு வெளியில் சொல்ல முடியாத காரணங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆதாரமாக அவரிடமிருந்த ஒரு வீடியோ படத்தை மறுநாளே பிரதமரிடமும் போட்டுக்காட்டியிருக்கிறார். ஆனால் கார்த்திக்கேயன் ஆணையத்திடம் அந்த வீடியோவை கொடுக்கவில்லை ஏன்?

ராஜீவ் காந்தியின் படுகொலையில் காங்கிரஸின் சதி பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் ஜெயின் ஆணையம். ஆனால் அந்த ஆணையத்திற்கு எந்தவிதமான கட்டமைப்பு வசதியும் செய்துத் தரப்படவில்லை. வர்மா ஆணையம் பற்றிய அரசு ஆணையை ஜெயின் ஆணையம கேட்டபோது அரசாங்கத்தின் பதிவேட்டில் காணாமல் பேய்விட்டது என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. பிறகு ஜோடிக்கப்பட்ட கோப்புகள் ஜெயின் கமிசனிடம் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான கோப்புகளை நரசிம்மராவ் அரசு ஜெயின் கமிசனிடம் ஒப்படைக்கவில்லை.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு நிறுவனங்களின் உறவுகளுடன் விடுதலைப் புலிகள் ராஜீவ் கொலையை நிறைவேற்றியுள்ளனர் என்கிறது இந்நூல். இந்தக் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் மீது வைத்த மோசமான குற்றச்சாட்டாகும். இதை மறுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இஸ்ரேலின் உளவு நிறுவனமாள மொசாட் ஓர் இனவாத அமைப்பாகும். சிவராசன் சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர். விடுதலைப் புலிகளின் அமைப்பில் அதற்கு அனுமதி கிடையாது.
சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவும் அவரது தோழர்களும் சென்றுகொண்டிருந்த கப்பலை எல்லைவரம்பு மீறி சுற்றிவளைத்த இந்திய உளவுத்துறையின் மீதான குற்றச்சாட்டை இந்நூல் மழுங்கடிக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. மாத்தையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றிப் பிரபாகரன் மீது மோசமான உள்நோக்கத்தைக் கற்பிக்கிறது இந்நூல். பிரேமதாஸாவைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று குற்றம் சாட்டுகிறது. இக்கருத்து எங்கும் நிரூபிக்கப்படாத ஒன்றாகும். உளவுத் துறையின் மோசமான செயல்களை இந்நூல் வெளிப்படுத்தவில்லை. ஆனால் புலிகள் அமைப்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இந்த நூலால் ராஜீவ் கொலைவழக்கிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பொருட்டே அல்ல. ஈழவிடுதலைக்காகச் செயல்படுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். ” என்று நூல் குறித்து பல செய்திகளையும் மறுப்புகளையும் முன்வைத்துப் பேசினார்.

தோழர் வழக்கறிஞர் புகழேந்தி :

ராதஜீவ்காந்தி படுகொலையில் முக்கியமான குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டார்கள். நளினி ஈழப் பெண்ணல்ல ; தமிழ்நாட்டுப் பெண். முருகனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதைத் தவிர ஈழ அரசியல் குறித்தோ விடுதலைப் புலிகள் குறித்தோ அவருக்கு ஒன்றும் தெரியாது. விடுதலைப் புலிகளுக்கு ராஜீவ் கொலையால் எந்தப் பலனும் இல்லை. பாதிப்புகள்தான் அதிகம்.

விடுதலைப் புலிகள் இந்தியாவை நட்பு நாடாக எண்ணியிருக்கக் கூடாது . இந்தியாவுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட விடுதலைப்புலிகள் நகர்த்தவில்லை என்றபோதும் இந்தியாவின் துரோகத்தால் அவர்கள் அழிக்கப் பட்டார்கள். இந்தியா செய்திருக்கும் இந்த துரோகம் என்றும் மறக்க முடியாதது.

ஜெனரல் டயரைப் பழி வாங்கியது சரியென்கிறோம்.. வாஞ்சிநாதன் பழி வாங்கியதையும் சரியென்கிறோம்.. ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்தியைப் பழி வாங்கியதில் என்ன தவறு? ராஜீவ் காந்தியின் கொலைக்காக நாம் இன்னும் எத்தனைக் காலம்தான் அழுவது? சிறையில் அடைப்பட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் போன்றோருக்காகவும் நம் மக்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம் ” என்றார்.

தோழர் தியாகு :

“ சிறைப்பட்டிருக்கிற தமிழர் எழுவரின் விடுதலைக்கு இந்நூலிலுள்ள தகவல்கள் பயன்படக்கூடும் . கிட்டுவும் அவரது தோழர்களும் சென்ற கப்பலை சர்வதேச கடல் பரப்பிலிருந்து இந்திய கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டுவர முயன்றபோது மாலுமிகளைத் தப்ப விட்டுவிட்டு கிட்டு உள்ளிட்ட தோழர்கள் கப்பலை வெடிக்கச் செய்து இறந்துபோயினர் . இது தொடர்பாக விசாகப்பட்டின நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. அந்தக் கப்பலில் வெடிமருந்தோ ஆயுதமோ கடத்தவில்லை என்று தீர்ப்பு வந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தத் தீர்ப்பைக்கூட இந்நூலாசிரியர் குறைகூறியிருக்கிறார். இது விடுதலைப் புலிகள் மீதான இவரது காழ்ப்புணர்வைக் காட்டுகிறது.

ராஜீவ் கொலையால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை . சோவுக்கும் சுப்பிரமணியசாமிக்கும் செத்துப்போன இந்தியத்தேசியம் உயிர்பெறவுமே ராஜீவின் கொலை பயன்பட்டது. ஈழத்தேசியத்திற்கு மட்டுமல்ல; தமிழ்த்தேசியத்திற்கும் இது பாதகமாக அமைந்தது . ராஜீவ் கொலைக்கு முன்பு பிரபாகரனைக் கைது செய்வதற்காக இந்திய இராணுவம் ஈழத்திற்குச் சென்றது முதலான இந்தியா ஈழத்தின் மீது எடுத்த அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து இந்நூலில் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. அரசியல் படுகொலை என்றால் அரசியல் காரணிகள் ஆராயப்பட வேண்டும். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் ஏதோ அடியாள்போல் நீங்கள் எண்ணிவிட வேண்டாம். வெளிநாட்டு உளவு நிறுவனங்களி்ன் கூட்டாளியாகவும் எண்ணிவிட வேண்டாம் . நம்முடைய வரலாற்றைப் படிப்பதற்கான எதிர்ஆசானாக இந்நூல் பயன்படும் ” என்றார்.

நூலாசிரியர் ராஜீவ் சர்மா ஆங்கிலத்தில் தன்னுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஏற்புரை வழங்கினார். முப்பது ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் நம் இனத்தின் வரலாற்றை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எனது எண்ணமே இந்நூலை மொழிபெயர்ப்பதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது என்றார்.
Top photo: Thadagam 
நன்றி்  www.thadagam.com