Friday, March 21, 2014

கவிதை நூல் மதிப்புரை - அகரமுதல்வனின் “ அத்தருணத்தில் பகைவீழ்த்தி ”




கடந்த ஆண்டு கவிஞர் அகரமுதல்வனின் “அத்தருணத்தில் பகைவீழ்த்தி” கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் பேச அழைத்திருந்தார். அப்போது என் இளைய மகள் நித்திலா வண்டியிலிருந்து விழுந்து கையை உடைத்துக்கொண்டாள். விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இரண்டுமாத சிகிச்சைக்குப் பிறகு சரியாகிவிட்டது. பிறகு அந்த நூல்குறித்து மதிப்புரை எழுதி அகரமுதல்வனுக்கு அனுப்பி வைத்தேன். ஈழத்தில் ஒரு பத்திரிகையில் வெளிவருகிறது அண்ணா என்று சொன்னார். ஒரு வருடத்திற்குமேல் ஆகிவிட்டது. வந்ததா... வருமா...வராதா என்று தெரியவில்லை. அவரது அடுத்த கவிதைநூலும் வெளிவந்துவிட்டது. இனியும் காத்திருக்க முடியவில்லை. எனவே இங்கு அதை வெளியிடுகிறேன். 
                                        - தோழமையுடன்
                                          யாழினி முனுசாமி
                                          21-03-2014 சென்னை       

 சபிக்கப்பட்ட ஒரு தரித்திர வாழ்வில் காலங்களை கடந்தபடியிருக்கிறேன்.
உலகத் திட்டமிடலில் ஊனமாக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டிருக்கும் எனது இனத்தின் வலியாகவும் ஏக்கமாகவும் விடுதலை வெறியோடும் எனது தாய்மொழியின் முழுப் பங்கோடு கவிதையெனும்  ஆயுதத்தை பிரசவிக்க விரும்புபவன் நான்  -
அகரமுதல்வனின் மேற்கண்ட வரிகள் அவர் யார் என்பதையும் கவிதை பற்றிய அவரது நிலைப்பாட்டையும் நமக்கு உணர்த்துகின்றன.  அகரமுதல்வனின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி அவரது இரண்டாவது கவிதைத்தொகுதி. மித்ர வெளியீடாக 2012 டிசம்பரில் முதல்பதிப்பு வெளிவந்திருக்கிறது. அவரது முதல் கவிதைத் தொகுதி தொடரும் நினைவுகள் ”.
ஈழ இலக்கியம் இன்று புலம்பெயர்ந்தோர் இலக்கியமாகவும் போர் இலக்கியமாகவும் பிற்போர் இலக்கியமாகவும் தொழிற்படுகின்றது. உண்மையில் ஈழத்தில் நடந்தது போரல்ல ... இனப்படுகொலையே. அந்தக் கொடூர இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அவ்வரிசையில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுதி இது. பேரளவில் இன்றைய ஈழத்துப் படைப்புகள் போரின் கொடூரமுகத்தை மட்டுமே காட்சிப்படுத்துபவைகளாக உள்ளன. அவற்றில் வலியும் வேதனையும் ஆற்றாமையும் கையறுநிலையும் துயரம் தோய்ந்த நிலையில் வெளிப்படுத்துகின்றன. மாறாக அகரமுதல்வனின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி கவிதைத்தொகுதி சிங்கள இனவாத அரசால் சிதைந்துகிடக்கின்ற ஈழத்தமிழ்மனங்கள் நம்பிக்கைகொள்ளும் வித்த்தில் படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனது எழுதுகோலின் வழியே ஏக்கங்களையும் துயரங்களையும் வன்மங்களையும் எதிரியால் கொல்லப்பட்ட உறவுகளையும் செருக்களத்தில் விதையானவர்களையும் நினைத்து அழுது அழுது அடையாளமில்லாமல் அழிவதில் உடன்பாடற்றவன் நான்.
கடந்து போன காலங்களில் எம்மை விலங்கிட்ட தோல்வியின் உயிர் பறிக்க நினைக்கும் மானமுள்ள தமிழின ஆத்மாவின் தேசப் பிரியமே அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்று தம் கவிதைகளைப் பற்றிக்  குறிப்பிடுகிறார் அகரமுதல்வன்.
தமிழ்ச்சூழலில் தன்னம்பிக்கை என்பது ஒரு வியாபாரத்தனமான கருத்தியலாக மாற்றப்பட்டிருக்கும் இந்நிலையில் ஈழத்து இளம் கவிதைப்போராளியான அகரமுதல்வன் கவிதைகள் ஏற்படுத்தும் நம்பிக்கைகள் நமக்குள் ஒரு விரிந்த பார்வையைத் தருகின்றன .

ADD HERE MORE CRITICISM…
போராட்டவுணர்வெழுச்சியைக் கிளர்த்தும் வரிகளை இங்கு வரிசையாகத் தருவதே இத்தொகுப்பை அடையாளப் படுத்தும் சிறந்த வழியாக இருக்கும் என்று கருதுகிறேன்.


எவையெல்லாம் இழந்தோமோ
அவையெல்லாம் மீட்கவேண்டும்

".....
பறிகொடுக்கப்பட்ட எனது இனிமைகளையும்
என்னூர் வளங்களையும்
எப்போது மீட்பேன்

எப்படியும் மீட்க வேண்டும்
உயிர்கொடுத்துதான் மீள வேண்டும்
எனது ஊர்
எனது வாழ்வு
எவையெல்லாம் இழந்தோமோ
அவையெல்லாம் மீக்க வேண்டும்
 ....“ (.22)

நான் வரிச்சாதி

“...
மீண்டும் மீண்டும்
பூக்கும் தமிழ்க்கருவில்
மீண்டும் மீண்டும்
தாக்குகிறது இனவெறி
விழவிழ எழுவதாய் எழுவோம்
...“   (ப.29)

”...
அழுதென்ன ஆகும்?
காலம் பார்த்துக் களம் புகுதல்
சாலச்சிறந்தது என்தாய் மண்ணுக்கே

நீளும் மவுன இடைவெளியில்
அந்நியரால்
கோவணத்தைப் பிடுங்கியும்
அம்மணத்துடன் குறிகளை அறுத்தெறிந்தும்
என் தாய்மண்ணில்
சந்ததி வாழ்விழக்குமெனில்
தயக்கம்கொள்வது
தமிழர்வழக்கமல்ல

...
...
நேற்றும் இன்றும்
விலங்கினை என் கரம் ஏற்பது
அடிமைவிலங்கினை உடைக்கவே தவிர
உன் அடிமைவிலங்காயிருக்கவல்ல.“ (ப.30)

அடுத்த பாடத்துக்கான ஏடுதொடக்கல்

“...
தோழா
பகைக்கு நன்கு தெரிந்த
உன் பாய்ச்சலை
உன் நகங்களை
உன் உறுமலை
தோல்வியென உலகறிவித்த
நிலத்தினிலிருந்து நகர்த்து
அதுதான் உன்
இனமானம் காக்கும்.” (ப.32)

முள்ளிவாய்க்காலின் பிந்தைய நாட்களுக்காய்

“...
பாவம்
வவாஅக்கா முள்ளிவாய்க்காலில்
எல்லாம் இழந்து - எதையும்
எடுக்காமல் உடுத்த துணியோடு
வந்தவர்களில் ஒருவர்

ஆனால்
கடைசி மகன் அடுத்த சந்ததியின்
இருத்தலை உறுதிபடுத்த ஏதோவொரு
பொக்கிஷத்தை எடுத்து வந்துள்ளான்
முள்ளிவாய்க்காலின் பிந்தைய நாட்களுக்காய்.“ (ப.35)

சுடுகாடு போகிறார்

“...
ஆனந்த அலைகளால்
திகைத்து நிற்கிறேன்
உணர்ச்சி தோய நான் எறிந்த வார்த்தைகளால்
மீட்கப்படுகிறது எனது நிலம்.
...“ (ப.39)

அத்தருணத்தில் பகைவீழ்த்தி

“...
வாழ்க்கையில் ஒரு அத்தியாமும்
வழிமுறையில் ஒரு கட்டமும்
முடிந்திருக்கிறதே தவிர
இப்போதும்
தீராமல் எரிந்துகொண்டுதானிருக்கிறது
வலியினதும் வேட்கையினதும்
அகல்விளக்கு
...”  (ப.41)

என் உலகு

“...
நான் தீர்மானித்திருந்த இலட்சியங்களை(ப்)
பொறாமையினால் பறிக்கப்பார்க்கின்றனர்
அதைத் தகர்த்து
வெல்வேனென்ற உறுயிலே
இயங்கிக்கொண்டிருக்கிறது
என் உலகு.” (ப.46)

உயிர்போதுதான் உத்தேசம்

“...
அடங்குபவர்கள் நாமல்ல பகைக்குத் தெரிவதில்லை
அடிமைநாமென்று அடிக்கடி சொல்வதுண்டு
எம்குடியழித்த பகைக்கு கொஞ்ச நாளுண்டு
பாடையேறும் பதவி வழங்கப் பருவமுண்டு

இவர்கள் நீ்ட்டும் துப்பாக்கி
எம்முணர்வைத் துருப்பிடிக்கச்செய்திடுமாம்
அடாப் பாவமே
இவர்கள் உலகின் மறதிக்காரர்கள்
எங்கள் கைகள் என்ன
எலிமருந்து செய்தனவா இதுவரை நாளும்
...” ( ப.54)

தீதின்று வெடியான தீரர்கள்

“....
சோராமல் விழித்திருப்போம் - தேசத்தேரை
மறவாமல் வடம் பிடிப்போம் கனவுதனை
வெல்லாமல் ஓயமாட்டோம்
ஊரிலொரு விடியல் காணாமல் தூங்கமாட்டோம்
..” ( ப.59)

வடிந்துவரும் குருதியில்
வடியாமலிருக்கும் தேசத்தின் கனவு

”...
மாதவிடாய்
நாட்களிலும் வலிதரும்
யோனித்திரவத்தை
பொருட்படுத்தாமல்
சோர்வடையாமல்
பகைதின்ற தன் குழந்தைகளின்
கனவுகளை வென்றுகொள்ள
வலம்வருகிறாள்
விடுதலைக்கன்னி விரைவில்
ஒருநாள் எண்ணி.” (ப. 75)

என் உடலெரியும் தாய்நாடு

“....
அகலாத வடுக்கள் மூட்டிய தீயால் தினம்
கண்ணீர்வடிக்கிறது என்இதயம்
அணையாத கொள்கை ஊன்றிய வேரால்
திடமாக உள்ளேன் வரலாறு எழுத
...” (ப. 78)

மண்ணுக்காய் வீழ்ந்தோம்

“...
காலம் எமக்கெனபிறக்கும் என்பதே
எனக்குள் இன்னும்
இராமலிருக்கும் சாகாவரச் சிந்தனை
...”(ப. 82)

“...
விடுதலைச்சட்டை அணிய
விரைவில்
காலம்உன் கதவுதட்டும்
நீ தயாராகு,” (ப. 83)

சாவுகளுக்கு அஞ்சுவோர்
சாதித்துவிட முடியாது

“...
ஆயிரம் வலிகள் அனர்த்தும் தருணத்திலும்
அழுவது தீர்வன்று...” ( ப.85)

வீழும் உயிர் வீழாத வேட்கை

” கனத்த மௌனங்களில் ஒளிந்துகிடக்கும்
பெரும் துக்கமென
எனக்குள் ஒளிந்திருக்கும்
பாரிய இழப்புகள்
ஓர் உயிரில்லாதவனைப்போல
என்னை உறைய வைப்பதில்லை

திரவம் நிரம்பிய குவளையாய்
என்னை நிரப்பியிருக்கும் இலட்சியநெறி
காற்றில்பட்டு கரைவதுமல்ல
சேற்றில் புதைவதுமல்ல
....
...

வீழும் உயிர்
வீழாத வேட்கை
வாழும் நாளெல்லாம்
தேசம் மீட்க
ஓயாத பெரும்பணியென
சிக்கிய ஒரு புறாவாய் எழுந்து
பறக்க முனைகிறேன்
வானம் எமக்கென இப்போது” (ப. 93)

இழந்த மண்

“...
என் எழுதுகோல்
கவிதை எழுதுகிறது
இப்போது இலையுதிர்காலம்தான்
வாசந்தகாலத்திற்காய்.” (ப்.102)


நம்பிக்கையூட்டலையும் போராட்டவுணரவெழுச்சியைக் கிளர்த்தலையுமே
முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது இத்தொகுதி. அதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. என்றாலும் மக்களின்  - போராளிகளின் நெருக்கடியான காலத்து வேறுபட்ட மனநிலைகளைப் போதிய அளவு பதிவுசெய்யப் படவில்லை. அடுத்தக் கட்டப் போராட்டத்திற்காக வழிமுறைகள் எவையென்றும் இக்கவிதைகள் முன்வைக்கவில்லை. என்றாலும்கூட இது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு படைப்பாக்கமாகும். எனெனில்...இது- சமரால் சிதைந்துகிடக்கும் மனங்களைச் சமன்செய்யும் கவிதைகள். பலவீனமாக்கப்பட்டவர்களை பலவான்களாக்கும் கவிதைகள். அதிர்ச்சியினாலும் இயலாமையினாலும் கையறுநிலையில் வீழ்ந்துகிடப்பவர்களை வீறுகொண்டு எழுச்செய்யும் கவிதைகள். தமிழீழ விடுதலை ஒன்றையே இலட்சியமாகக் கொண்ட இலட்சியக் கவிதைகள். மொழிநடையிலும் வடிவொழுங்கிலும் கூடுதல் சிரத்தை எடுத்திருந்தால் கனம் கூடியிருக்கும் என்று தோன்றுகிறது.
                                          ------------------