Sunday, June 5, 2011

என் கவிதை - தேவதையல்ல பெண்கள்

பூமேவிய சொல்லாயுதங்களாய்
பூமியெங்கும் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன
கற்பிதங்கள்.
மனத்தைச் சிதைப்பதற்கென்றே படைக்கப் பட்டவை
அழகு, தெய்வம் ,தேவதை இன்ன பிறவும்.

உணர்வுகளால் சமைக்கப் பட்டது பெண்ணுடல்
தசையும் குருதியும் அதன் ஆதாரம்
வெண்ணுடல், வெள்ளுடை ,நட்சத்திரங்கள்
ஒளிவுமி்ழ் அணிகள்
தேவதைக்கானவை எனும்போதே
கொல்கிறாய் நேரெதிர் பெண்களை.

பூ நிலா நதி நாடு பூமி
எதனோடும் ஒப்புமைப் படுத்தி
அஃறிணையாக்காதீர்.

உனது எண்ணங்களால்
தேவதையாய்ச் சமைத்து 
சந்தையில் நிறுத்தி
உனது சூழ்ச்சிகளால் அலங்கரித்து
உனது ரசனைக்காக 
அவளுடலில் அழகுரசம் பூசுகிறாய்
இனியும் வேண்டாம் 
இவ்வன்முறை

தேவதையல்ல பெண்கள்.

 

No comments:

Post a Comment